Saturday, April 08, 2006

Rohinton Mistry




மைக்கல் ஒண்டாச்சி, சியாம் செல்லத்துரை இவர்களின் வரிசையில் றொஹின்ரன் மிஸ்ரியும் எம்மோடு நெருக்கமுடைய கலாச்சார வழி வந்த இன்னுமொரு சிறந்த எழுத்தாளராய் கனடாவில் இருந்து தரமான நாவல்களை எழுதித் தடம் பதித்துள்ளார். சியாம் செல்லத்துரையின் நாவல்கள் கொழும்பைத் தளமாகக் கொண்டது போல் றொஹின்ரன் மிஸ்ரியின் சிறுகதைகள் நாவல்கள் அனேகமானவை மும்பையைத் தளமாகக் கொண்டு அமைந்திருக்கின்றன.

றொஹின்ரன் 1957ஆம் ஆண்டு மும்பையில் ஒரு பாசி குடும்பத்தில் பிறந்தவர். அனைத்து இந்தியர்களின் கனவு, இலட்சியம் போல் உயர்தரக் கல்வியின் பின்னர் வெளிநாடு சென்று வேலை எடுத்து தங்கிவிடுவது என்ற அடைப்புக்குறிக்குள் தனது வாழ்க்கையையும் அடைத்து அதன் காரணமாகக் கனடா வந்தவர். (Quoted in Mehfil, November 1996)

1975இல் கனடாவிற்கு குடிபெயர்ந்து ரொறொண்டோ வங்கி ஒன்றில் வர்த்தகத்துறையின் வேலைக்கமர்ந்த றொஹின்ரன் 1983இல் தனது முதலாவது சிறுகதையான ‘One Sunday’ யை வெளியிட்டு Canadian Hart House Literary Contest பரிசையும் பெற்றார். 85இல் மீண்டும் 'Auspicious Occasion' எனும் சிறுகதைக்குப் பரிசைப் பெற்றதோடு மட்டுமல்லாமல் கனேடி அரசாங்கத்திடமிருந்து கிடைத்த பண உதவி றொஹின்ரனை முழு நேர எழுத்தாறராக மாற்றியது. இவரது முதல் சிறுகதைத் தொகுப்பான ‘Tales from Firozsha Baag’ எனும் தொகுதியை பென்குயின் பதிப்பகம் வெளியிட்டது.

றோஹின்ரன் மிஸ்ரியின் மூன்று நாவல்களான ‘Such a Long Journey’ (1991),
‘A Fine Balance’ (1996), ‘Family Matters’ (2002), மிகுந்த வரவேற்பை வாசகர்களிடமிருந்து பெற்று Booker Prize for Fiction, Man Booker Prize for Fiction போன்ற பரிசுகளையும் பெற்றுத்தந்துள்ளன. அண்மையின் வெளியான மிகச்சிறந்த நாவல் என இவரது ‘A Fine Balance’ அடையாளம் காணப்பட்டிருக்கின்றது.

மிஸ்ரியின் சிறுகதைகள் நாவல்கள் அனைத்துமே முக்கியமாக மும்பையில் வசிக்கும் பாசி குடும்பத்தின் துன்பங்கள், மூடநம்பிக்கைகள் போன்றவற்றைத் தளமாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கின்றன.

‘Such a Long Journey’ - இந்நாவல் 1971ஆம் ஆண்டு இந்திராகாந்தியின் ஆட்சிக்குக் கீழ் இந்தியா போர் மூலம் பங்களாதேஸ் ஆகப் பிரிவு கண்ட காலத்தை அடித்தளமாகக் கொண்டு மும்பைபில் வசிக்கும் குப்தா எனும் ஒரு வங்கி ஊழியரின் வாழ்க்கையைத் தாங்கி நகர்கின்றது. ஒரு நடுத்தர வங்கி ஊழியன், அவரது மூடநம்பிக்கைகளைக் கொண்ட மனைவி, திறமை இருந்தும் ஒரு சாதாரண தந்தையின் கனவுகளை நிறைவேற்ற விரும்பாத தனித்துவத்தை விரும்பும் மகன், அடிக்கடி நோயின் விழும் மகள்; என்று குப்தாவின் குடும்பத்தை கருவாகக் கொண்டு நாவல் நகர்ந்தாலும், இந்திராகாந்தியின் ஆட்சியின் அக்கிரமச் செயலால் பாதிக்கபட்டு இறக்கும் ஒரு ஓய்வு பெற்ற இராணவ வீரர், மூளை பாதிக்கப்பட்ட இளைஞன் அவனது உணர்வுகள், குப்தாவோடு பணிபுரியும் நண்பர்கள் என்று பலரது அடையாளங்களைத் காட்டி நிற்கின்றது இந்த நாவல்.

‘A Fine Balance’ - இந்நாவல் அண்மையில் வாசித்த மிகச்சிறந்த நாவல் என்று கூறும் தரத்தோடு இருக்கின்றது. 1975இல் இந்தியாவில் ‘அவசரகால ஆட்சி’ பிரகடனப்படுத்தப்பட்ட போது மும்பையில் வசித்த நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த டயானா எனும் பெண்ணினின் வாழ்வை மையப்படுத்தி அவரது சிறு பிராயத்தில் தொடங்கி முதுமை வரையின் நாவல் நீள்கின்றது. பெண்கள் மேலான ஆண்மையின் அடக்குமுறை அதை எதிர்த்து நிற்கும் டயானாவின் திறமை, பொருளாதார நெருக்கடி, டயானா சந்திக்கும் மனிதர்கள் என்று தன் எழுத்தால் வாசகர்களை பாத்திரங்களுக்குள் கொண்டு சென்றுள்ளார் மிஸ்ரி.
நகர சுத்திகரிப்புத்திட்டம், குடும்பக்கட்டுப்பாடு என்ற பெயரில் வீதியோரப் பிச்சைக்காறர்களையும், பாமர மக்களையும் அரசாங்கம் நடாத்தும் முறை மிகவும் நெகிழ்சி தரும் வகையில் எழுத்தப்பட்டிருக்கின்றது.

இந்திராகாந்தியின் அரசியல் காலகட்டத்தில் இந்திய மக்கள் அவர் மேல் கொண்டிருந்த வெறுப்பை மிகத் துல்லியமாகவும் துணிவோடும் தந்திருக்கின்றார் மிஸ்ரி.
மூன்று வருடங்கள் திருமணத்தின் பின்னர் கணவனை ஒரு விபத்தில் இழந்த டயானா, ஆணாதிக்கவாதியான தனது அண்ணனுடன் தங்க நேர்ந்து விடுமோ என்று அஞ்சி, வாழ்வை ஒரு போராட்டம் நிறைந்த சவாலாக எதிர் கொண்டு முன்னேறும் போது டயானாவின் வீட்டின் அறையில் வாடகைக்கு வந்து சேரும் மொனீக் எனும் பல்கலைக்கழக மாணவன், டயானாவின் தையல் வேலைக்கு என வந்து சேரும் ஐவர், ஓம் எனும் கிராமத்தைச் சேர்ந்த தலித் ஆண்கள் இவர்களுடனான டயானாவின் உறவு என கதை நீண்டு செல்கின்றது.

ராஜ்கௌதமனின் ‘சிலுவைராஜ் சரித்திரம்’, ‘காலச்சுமை’, ஜெயமோகனின் ‘ஏழாம் உலகம்’, எஸ். ராமகிறிஷ்ணனின் ‘நெடுங்குருதி’ போன்ற பல தரமான இந்தியத் தமிழ் நாவல்களின் வரும் சம்பவங்கள் இந்த “A Fine Balance” ஐப் படிக்கும் போது நினைவில் வந்து சென்றது. காரணம் மேற்கூறிய அனைத்து நாவல்களும் இந்திய மக்களின் மூடநம்பிக்கைகள், வாழ்க்கை முறை, போராட்டங்கள், துன்பங்கள் போன்றவற்றை மிக துல்லியமாக எழுத்தில் கொண்டு வந்திருக்கின்றன.


மனித போராட்டத்தை எடுத்துச் செல்லும் படைப்புக்கள் மக்களுக்கு நம்பிக்கை தரும் வகையில் தமது முடிவைக் கொண்டிருக்க வேண்டும் என்று பல வாசகர்கள் சொல்லக் கேட்டிருக்கின்றேன். ஆனல் ஒரு தரமான படைப்பு சமகால சமூகத்தைப் பிரதிபலிப்பதாக இருக்கும் தருணத்தில் மனித போராட்டத்தை அது எடுத்துக்காட்டும், சமகால சமூகம் நம்பிக்கை தருவதாக இருப்பின் முடிவும் அப்படி அமையலாம். ஆனால் படைப்பாளியின் பார்வையில் சமூகம் அதனைப் பிரதிபலிக்கத் தவறும் போது படைப்பின் முடிவும் நம்பிக்கை அற்றதாகவே அமைந்து விடுகின்றது. மிஸ்ரியின் இந்த நாவலில் வாழ்வோடு போராடும் அத்தனை கதாபாத்திரங்களும் தோற்றுப் போகின்றன. பிரமாண்டமாய் வளர்ந்து விட்ட அராஜக உலகின் முன், வெறுமனே மனிதாபிமானத்தோடு, சுதந்திரமாக வாழ முயல்வது எப்படிச் சாத்தியம்? நெஞ்சை நெகிழ வைத்துக் கண்களைப் பனிக்க வைக்கும் காத்திரமாக ஒரு படைப்பு இந்த “A Fine Balance” தரமான ஒரு நாவலை படிக்க ஏங்கும் வாசகர்களுக்கு றொஹின்ரன் மிஸ்ரியின் “A Fine Balance” நிச்சயமாகப் பரிந்துரைப்பேன்.

5 comments:

இளங்கோ-டிசே said...

நல்லதொரு பதிவு கறுப்பி. மீண்டும் வலைப்பதிவுகளில் உங்களைக் காண்பது உவப்பைத் தருக்கிறது.

Jayaprakash Sampath said...

welcome back..

Muthu said...

கறுப்பி,
வாங்க நல்லாயிருக்கீங்களா?. ரொம்ப நாளாப் பாக்கவே முடியலை.

dondu(#11168674346665545885) said...

Hello pretty young lady,

Very glad to see your writing again. I was in Bombay from January 1971 to July 1974. I will definitely be ineterested to read the book on Bangladesh war. By the same token, I remember the emergency period as if it was yesterday. Hence my often saying "recently in 1975" and so on.

Regards,
Dondu N.Raghavan

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

இதுக்குத்தான், ஒருநாளேனும் தமிழ்மணம் பாராமல் இருக்க வேண்டாம் என்டு சொல்றது. நீங்க வந்ததே தெரியல்ல!!! :O)

இந்தப் புத்தகம் எனக்கு வருசத் துவக்கத்தில வாசிக்கக் கிடைச்சது. நல்லதொரு வாசிப்பு அனுபவம், ஆனா எல்லாக் கதாபாத்திரங்களுக்கும் என்ன முடிவென்டு சொல்லித்தான் ஆகோணும் என்டு முடிச்சிருக்கிறதை வலியத் திணிக்கப்பட்ட மாதிரி உணர்ந்தன். மற்றும் படி இயல்பா இருந்தது என்டுறதில எனக்குப் பிடிச்சிருந்தது.

பதிவுக்கு நன்றி.