வடபுலத்திலிருந்து விடுதலைப்புலிகள் அமைப்பினால் விரட்டியடிக்கப்பட்ட முஸ்லீம் மக்களிற்காகக் குரல் கொடுக்கும் வகையில் 12ம் திகதி ஸ்காபுரோவில் இடம்பெற்ற நிகழ்வின் தொகுப்பும் - குறிப்பும்.
நிகழ்வைத் தொகுத்து வழங்கிய கருமையத்தின் முக்கிய அங்கத்தவர்களில் ஒருவரான தர்ஷன், நல்ல ஒரு இலக்கிய வாசகர், விமர்சகர், அண்மையில் நாடகங்களிலும் நடித்து வருகின்றார். முஸ்லீம் மக்களின் வாழ்வின் அவலத்தை நினைவு கூறும் விதமாக கவிதை ஒன்றைப் படித்து நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். தொடர்ந்து பதினைந்து வருடத்திற்கு முன்பு இடம்பெற்ற ஒரு சம்பவத்தை, எதற்காக இப்போது தூக்கிப் பிடித்து நிகழ்வு வைக்கின்றார்கள் என்ற சில பொதுமக்களின் புறுபுறுப்பிற்கும், முழக்கம் பத்திரிகை வெளியிடப்பட்ட அலசலுக்கும் பதில் சொல்லும் வகையில், ஐம்பது வருடத்திற்கு முன்பு ஜேர்மனிய சர்வாதிகார ஆட்சியில் நாசிகளால் அழிக்கப்பட்ட லட்சக்கணக்கான யூதர்களை எப்போதும் உலகம் நினைவு கூறும், அதே போல் பதினைந்து வருடத்திற்கு முன்பு தமது சொந்தமண்ணிலிருந்து தூக்கி எறியப்பட்ட முஸ்லீம் மக்களை மனிதாபிமானம் உள்ள எந்த மனிதனும் நினைவு கூறுவான் என்றும் கூறினார்.
குறிப்பு – முஸ்லீம் மக்கள் தாம் பிறந்து வளர்ந்த மண்ணிலிருந்து தூக்கியெறியப்பட்டு பதின்நான்கு வருடங்கள் ஆகிவிட்டன. அவர்கள் புத்தளத்தில் தம்மால் முயன்றவரை சந்தோஷமாக வாழத்தொடங்கிவிட்டார்கள் இனி எதற்காக இதனை தூக்கிப் பிடித்து திடீரென்று நிகழ்வு நடத்துகின்றார்கள். முழக்கம் பத்திரிகையின் அங்கலாய்ப்பு இது.
இந்தப் பத்திரிகையின் ஆசிரியர் தனது சொந்தநாட்டிலிருந்து துரத்தியடிக்கப்பட்டு கிட்டத்தட்ட இதே காலஅளவு இருக்கலாம். இன்றும் தனது பத்திரிகையில் தமிழ்காக்கப் பெரிதும் போராடிக்கொண்டிருக்கின்றார். தமிழீழம் கிட்ட வேண்டும் என்பது பற்றி மிகவும் சிரத்தையுடன் செய்திகள் வெளியிட்டு வருகின்றார். கனடாவில் தன்னால் முயன்றவரை சந்தோஷமாக வாழ்ந்து வரும் இவர் போன்றவர்கள், இனியாவது ஈழம், மொழி, மண் என்ற பேச்சை விடுத்து கனேடியச் செய்திகளில் கவனம் செலுத்துதல் சாலச்சிறந்தது.
சரி இத்தனை வருடம் மௌனம் சாதித்து விட்டு எதற்கு பதினைந்து வருடத்தின் பின்னர் திடீரென்று? இந்தக் கேள்வி எனக்குள்ளும் எழுந்ததுதான்.
நிகழ்வில் உரையாற்றிய கற்சுறா முஸ்லீம் மக்களின் அவலங்கள் கணிசமான அளவில் பதியபடவில்லை என்றும், அன்று முஸ்லீம் மக்களின் அவலத்தைத் தனது எழுத்தில் கொண்டு வந்த வ.ஐ.ச ஜெயபாலன், இன்று அதற்கு எதிர்மாறான கருத்துக்களை எழுத்தில் வைக்கின்றார் என்று ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டினார். தொடர்ந்து ஒட்டாமடி அரபாத், இளையஅப்துல்லா, றாஷ்மி, சோலைக்கிளி போன்ற சில எழுத்தாளர்களும், தாயகம், சரிநிகர், தேடல், எக்சில், போன்ற சில சஞ்சிகைகளும் மட்டுமே முஸ்லீம் மக்களின் அவலங்களுக்காகக் குரல் கொடுத்திருக்கின்றார்கள என்றும் கூறினார்.
கனேடியச் சூழலிலிருந்து கொண்டு, ஈழத்தில் இடம்பெற்று வரும் அராஜகமான போராட்டித்திற்கு எதிர்குரல் காட்டியவர்கள் பலர். இவர்களில் சிலர் காலப்போக்கில் “கொள்கை மாற்றம்” கொண்டும், இன்னும் சிலர் விரக்தியின் பேரிலும், இன்னும் சிலர் வேறுநாட்டங்களினால் விலகி தாமும் ஏதோ செய்வதாய் ஜாலம் காட்டிக்கொண்டும் இருக்கின்றார்கள். இருந்தும் தனது சிறுகதைகள், கவிதைகள், கவிதா நிகழ்வு, நாடகம் போன்றவற்றால் அன்று தொடக்கம் இன்று வரை மனிதக்கொலைக்கு எதிராகவும், முஸ்லீம் மக்களின் அவலத்துக்காகவும் குரல் கொடுத்து வரும் எழுத்தாளர் சக்கரவர்தியை எப்படி கற்சுரா குறிப்பிட மறந்தார்? எழுத்தாளர் சக்கரவர்தி ஒரு தனி மனிதனாக அன்று எக்சிலில் தொடங்கி இன்று கருமையத்தின் முக்கிய உறுப்பினராக இருந்து கொண்டும் தனது கொள்கையில் எந்த மாற்றமும் இன்றி, விட்டுக்கொடுப்பு இன்றி மனிதக்கொலைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்து வருபவர். எனவே பதினைந்து வருடத்தின் பின்னர் திடீரென்று ஏன்? என்று சக்கரவர்தியை பார்த்துக் கேட்டுவிட முடியாது.
முன்னாள் காங்கிரஸ், தமிழரசுக்கட்சிகளின் உறுப்பினர், இடதுசாரியும் என்று தன்னை அறிமுகம் செய்து கொண்ட அடுத்த பேச்சாளர் நடராஜான் படுகொலை செய்யப்பட்ட கோப்பாய் கல்லூரி அதிபர் நடராஜா சிவகாட்சம் அவர்களையும், யாழ்மத்தியகல்லூரி அதிபர் இராஜதுரை அவர்களையும் நினைவு கூர்ந்தார். அதிபர் இராஜதுரை தனது மாணவன் என்றும் அழிந்து நிலையில் இருந்து யாழ்மத்தியகல்லூரியைக் கட்டி எழுப்பி யாழ்ப்பாணத்து மாணவர்களுக்கு கல்வியை வழங்க முனைந்த ஒரு நல்ல மனிதரைக் கொன்றதன் காணரம் என்ன? என்று குரல் தழுதழுக்கக் கேள்வி எழுப்பினார். இரண்டு அதிபர்களின் படுகொலையின் பின்னர் ஊடகங்கள், அதிபர் நடராஜாவிற்குக் கொடுத்த கவனத்தை அதிபர் இராஜதுரைக்குக் கொடுக்கவில்லை இதற்கு சாதியம் ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் கூறினார். தொடர்ந்த இவர் உரையில் என் தலைவர் ஆனந்தசங்கரி என்று விழித்த போது கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. டக்ளஸ் தேவானந்தா, கருணா, ஆனந்தசங்கரி போன்றோரை அழிக்கும் வரை விடுதலைப்புலிகள் ஓயமாட்டார்கள் என்றும், எமது நாடு அழிந்து விட்டது, யாழ்ப்பாணத்தில் உயிர்பு இல்லை, இனி ஒரு போர் சூழல் வரப்போவதில்லை, விடுதலைப்புலிகள் இயக்கம் இதனை முற்றாக உணர்ந்து கொண்டு விட்டதால் மிகவும் அவசரமாகப் புலம்பெயர்ந்த தமழிர்களிடம் அடுத்த போர் வரப்போகின்றது என்ற பொய்யான தகவலைக் கூறி பணம் சேகரித்துத் தம் பைகளை நிறப்பிக் கொள்கின்றார்கள் என்றும் கூறினார்.
கன்னிகா திருமாவளவன் பேசுகையில் இனத்துவேசம் நாம் அறிந்த வகையில் நிறம் மதம் மொழி சமுதாயம் நாடு என்று பலவகையாக பரவிக்கிடக்கின்றது, நாம் அறியாத வகையில் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் சாதிய வெறி இருக்கின்றது. எம்மை அறியாமலேயே இனத்துவேசர்களா நாம் வாழ்ந்து வருகின்றோம், அன்றாட வாழ்க்கையில் எமது பேச்சு வாழ்க்கை முறையிலேயே நாம் இதனை அவதானிக்கலாம் என்றும் கூறினார்.
பலர் தம்மை சிறந்த முற்போக்கிகளாகப் பிரகடணம் செய்யப் பிரயோகிக்கும் வார்த்தையில் முக்கியமானது “நான் சாதி பார்ப்பவன் அல்ல” இவ்வரிகளை ஒரு தலித் பாவிக்க முடியுமா? இவ்வரிகளைக் கொண்டு தன் உயர்சாதியை மறைமுகமாக நிலை நாட்டுகின்றான் யாழ்ப்பாணத்து முற்போக்குத் தமிழன். நான் சாதி பார்ப்பவன் அல்ல, நான் நல்ல முற்போக்குவாதி, நல்ல மனம்கொண்ட பிரஜை. ஆகா!
"நம்மொழி" ஆசிரியர் பாஸ்கரன் முஸ்லீம் மக்களிற்கு ஏற்பட்ட அநியாயங்களை தனது பேச்சில் எடுத்துக்கூறித் தமிழனாய் வாழ்வதற்காகத் தான் தலை குனிந்து நிற்பதாகக் கூறினார்.
ப.அ ஜெயகரன் தேடல் சஞ்சிகையில் முஸ்லீம் மக்களின் இடம்பெயர்வு தொடர்பாக வெளிவந்த கவிதை ஒன்றை படித்துக் காட்டினார்.
கருமையம் அமைப்பின் சார்பாக முஸ்லீம் மக்களின் அவலத்தை முன்நிறுத்தி “கைநாட்டு” எனும் சஞ்சிகை வெளியிடப்பட்டது.
தொடர்ந்த நிகழ்வாக காத்தான்குடியில் இடம்பெற்ற முஸ்லீம் மக்களின் படுகொலையைக் காட்டும் விவரணப்படம் பார்வைக்காகப் போடப்பட்டது.
சக்கரவர்தியின் ஆக்கத்தில் “ஞானதாண்டம்” எனும் குறுநாடகம் இறுதி நிகழ்வாக இடம்பெற்று பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றது.
இறுதியாக நிகழ்வு பற்றிய விமர்சனங்கள் வாதங்களுடன் நிகழ்வு நிறைவிற்கு வந்தது.
Sunday, November 13, 2005
Subscribe to:
Posts (Atom)