Sunday, September 06, 2009

A Good Indian Wife


A Good Indian Wife - by Anne Cherain


'Tis my opinion every man cheats in his own way, and he is only honest who is not discovered ~

Susannah Centlivre


அண்மையில் நான் வாசித்த பல இந்தியப் பெண் எழுத்தாளர்களின் ஆங்கில நாவல்கள், பேச்சுத் திருமணத்தைத் தளமாக் கொண்டு அமைந்திருந்தன. இந்தியப் பெண் எழுத்தாளர்களின் நாவல்களைத் தெரியும் போது அவை தற்செயலாகவே இக்கருப்பொருளுக்குள் சுழன்று கொண்டிருப்பதைக் காணக்கூடியதாகவிருக்கின்றது. போராட்டத்தைத் தவிர்த்து ஈழப்போராளிகளின் படைப்புக்களை அண்மைக்காலங்களில் எப்படிக் காண இயலாதோ அதே போல், அண்மைக் காலங்களில் நான் தெரிவு செய்த இந்தியப் பெண் எழுத்தாளர்களின் படைப்பும், ஒரு பெண்ணின் பார்வையில் இருந்து பேச்சுத் திருமணத்தை எதிர்கொள்ளும் நடுத்தர வர்க்கப் பெண்களின் சவால்களை விடுத்து அமைந்திருக்கவில்லை. இன்றும் உங்கள் நாட்டில் பேச்சுத் திருமணங்கள் இடம்பெறுகின்றனவா எனக் கண்களை விழித்து கேட்டாள் எனது பிரேசில் நண்பி. எமது நாட்டில் மட்டுமல்ல கனடாவில் வாழும் எமது சமூகத்திலும் இது தொடர்கின்றது என்பதை அவள் நம்பத்தயாராகவில்லை. மாதம் ஒரு நாவலைத் தெரிவு செய்து வாசித்துக் கலந்துரையாடுவதென்று சில நண்பிகள் சேர்ந்து முடிவெடுத்துத் தெரிந்த இந்த மாதப்புனைவு ஆன் செரெனின் “A Good Indian Wife ” இந்திய நண்பியின் தெரிவு இது. அடுத்த மாத எனது தெரிவில் One & Only ஷோபாசக்தியின் “கொரில்லா” வை அறிமுகப்படுத்தலாம் என்றிருக்கின்றேன்.

வாசிப்பும் பகிர்வும் - “A Good Indian Wife ” சுதந்திரத்தை மட்டுமே சுவாசிக்க விரும்பி குடும்ப வாழ்வை நிராகரிக்கும் சுனில், பெயரைச் சுருக்கி நீல் ஆக்கிய இந்திய, அமெரிக்கவாச (ஸான் பிரான்சிஸ்கோ) சிறந்த மருத்துவர். ஸ்போட்ஸ் கார், அன்ரிக் தளபாடங்கள், சொந்த ஜெட் கொண்ட அழகான சுகபோகி. அவன் வேலைசெய்யும் மருத்துவமனை வரவேற்பாளர்களில் ஒருத்தியான கரோலினை அவள் அழகிற்காகவும், குறும்புக்காகவும் மாய்ந்து காதலிக்கும் நீல், தனது கல்வித் தகைமைக்கு கரோலின் நிரகற்றவள் என்பதனால் திருமணம் என்ற பேச்சுக்கே இடம்கொடுக்காமல் கரோலினுடனான தனது உறவை மறைத்தே வைத்திருக்கின்றான். இருந்தும் இவ்வுறவு அங்குமிங்குமாகக் கசிந்ததை அவனால் தடுக்க முடியவில்லை. புகழ்பெற்ற அழகான, பணக்காற நீலை இவைகளுக்காக மட்டுமே காதலிக்கும் கரோலினின் முழு எண்ணமும் அவனைக் கணவனாக்கிக் கொள்வதே. இறுக்கமான கலாச்சாரத்தைக் கொண்ட இந்தியக் குடும்பத்தில் பிறந்த சுனிலுக்கு குடும்பகௌரவம், பெற்றோர்கள், சமூகம் என்பதும் முக்கியமாகவே இருக்கின்றன. கே.பாலச்சந்தரின் “47 நாட்கள்” திரைப்படத்தை நினைவிற்குக் கொண்டு வரும் இந்நாவல், கடந்த பல வருடங்களாக இந்திய சமூகத்தில் பெண்களுக்கு இழைக்கப்பட்டு வரும் கொடுமைகளின் ஒரு துளியை எடுத்துச் சொல்கின்றது. மேற்குலக நாடுகளுக்கு குடிபுகுந்து மாற்றுக்கலாச்சாரத்திற்குள் தம்மை தொலைத்து இரு கலாச்சாரத்தின் தாக்கங்களோடு ஒரு காலை அங்கும், ஒரு காலை இங்குமாக வைத்து வதைபடுபர் பலர், குறிப்பாக ஆண்கள், தமது சந்தோஷத்தைப் பார்ப்பதா குடும்பகௌவத்தைப் பார்ப்பதா என்று தடுமாறிய நிலையில் பெற்றோரின் விருப்பை எதிர்க்க முடியாது அவர்களின் விருப்பிற்காக ஒரு பெண்ணைத் திருமணம் செய்வதும், பின்னர் அவளை நிர்க்கதியாக இந்தியாவில் விட்டு விட்டுப் பறந்து வந்து தமது காதலியுடனான குதூகல வாழ்வைத் தொடருவதும், மேற்குலக நாடுகளில் தொடரும் ஒன்று. கனடாவைத் தளமாகக் கொண்டு அலி கசீமீ எனும் இயக்குனர் ‘Run away Groom’ ; எனும் விவரணப்படத்தை எடுத்திருக்கின்றார். பல பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நேர்காணலை உள்ளடக்கிய இப்படைப்பு Hot Doc விழாவில் திரையிடப்பட்டு சிறந்த விவரணத்திரைப்படத்திற்கான விருதையும் பெற்றிருக்கின்றது.

A Good Indian Wife" புனைவு ஏற்கனவே அறியப்பட்ட கருப்பொருளைத் தளமாகக் கொண்டாலும், புனைவாளரின் கதை சொல்லும் திறமை நுணுக்கம் என்பன வாசகர்களை பாத்திரங்களோடு ஊடுருவிச் செல்ல வைக்கின்றது. ஆயிரம் பொய் சொல்லி ஒரு திருமணத்தைச் செய்யலாம். சுனிலின் தாய் ஒரு பொய்யை மட்டும் சொல்லி சுனிலை உடனடியாக இந்தியாவிற்கு அழைத்து விடுகின்றாள். சுனிலை சிறுவயதிலிருந்து வளர்த்த தாத்தா மரணப்படுக்கையில் இருக்கின்றார் என்ற செய்தி சுனிலை உடனேயே இந்தியாவிற்குப் பறக்க வைக்கின்றது. உயிருடன் தாத்தாவை ஒருமுறையாகவது பார்த்து விடவேண்டும் என்ற தவிப்போடு இந்தியாவில் காலடி எடுத்த வைத்த சுனிலை சிரித்த முகத்தோடு வரவேற்கின்றார் தாத்தா. குடும்பத்தின் அன்பு வலையிலிருந்து அவனால் அறுத்துக் கொண்டு ஓடிவிட முடியவில்லை. குழம்பிப் போன சுனில் தாத்தாவின் கையைப் பிடித்துத் தன்னை இந்த இக்கட்டிலிருந்து காப்பாற்றுமாறு கேட்கின்றான். தாயார் சேர்த்து வைத்திருக்கும் பெண்கள் பட்டியலிலிருந்து சுனில் இலகுவில் நிராகரிப்பதற்கான அனைத்துத் தகைமைகளையும் கொண்ட லைலாவை பெற்றோரைச் சமாதானப் படுத்துவதற்காக பெண்பார்க்கச் சம்மதிக்க வைக்கின்றார் தாத்தா. ஒரேயொரு பெண்ணை மட்டும் பார்ப்பேன் பிடிக்காவிட்டால் உடனேயே பறந்து போய்விடுவேன் என்ற நிபந்தனையோடு லைலாவைப் பெண்பாரக்கச் செல்கின்றான். விளைவு அவளைத் திருமணம் செய்து, அவனோடேயே ஸான் பிரான்ஸிஸ்கோவிற்கு அழைத்து வருவதில் வந்து முடிகின்றது. லைலா படித்த, அழகிய நடுத்தரவர்க்கத்தைச் சேர்ந்த முதிர்கன்னி. அதிஸ்டவசமாகத் தனக்குக் கிடைத்த வாழ்க்கையில் சந்தோஷத்தில் மிதந்தவளுக்கு புதிய நாடும், புதிய கணவனும் ஏமாற்றத்தையே கொடுக்கின்றன. வீட்டில் மனைவி, வெளியில் காதலி, இரட்டை வாழ்வு வாழும் சுனிலில் நடத்தை லைலாவிற்குச் சந்தேகத்தைக் கொடுக்க அனைத்தையும் முறித்து கொள்ள நினைக்கும் அவளை பெற்றோர், குடும்பகௌரவம் என்பன தடுத்து நிறுத்துகின்றன. லைலாவை அமெரிக்க வாழ்க்கைக்குப் பழக்கப்படுத்தி விட்டு மெல்ல மெல்ல அவளிடமிருந்து விலகி, கரோலினிடமே அடைக்கலம் புகநினைக்கும் சுனிலை தனது முற்போக்கு, இலக்கிய சிந்தனைகளால் திகைக்க வைக்கின்றாள் லைலா. மருத்துவத்துறையில் மட்டும் புகழ்பெற்றுத் திமிருடன் அலைந்த அவனுக்கு உலகின் இன்னொரு பக்கத்தின் அறிமுகம் லைலாவால் கிடைக்கின்றது. இலக்கிய ஆசிரியையாகப் பணியாற்றிய அனுபவம் லைலாவை சுனிலின் நண்பர்களுடன் சரளமாகவும், அறிவுபூர்வமாகவும் உரையாடி இலகுவில் நெருக்கதை உண்டாக்க வைக்கின்றது. கரோலினிடமிருந்த மோகம் சிறிது சிறிதாகக் கரைந்து போக லைலாவுடன் நெருங்கி வருகின்றான் சுனில். லைலைவை நன்கு அறிந்த அவனது தாத்தா திட்டமிட்டே இத்திருமணத்தைச் செய்துவைத்தார் என்ற உண்மையை அவர் மரணப்படுக்கையில் சுனிலுக்குக் கூறுகின்றார். சுனில் புன்னகைக்கின்றான். புனைவு இத்தோடு நிறைவு பெற்றாலும், அடிக்குறிப்பாக புனைவாளர் சிறிய தத்துவம் ஒன்றையும் விட்டுச் சென்றிருக்கி;ன்றார்.
“Once a liar always a liar” என்று கோடிட்டு, குடும்பவாழ்வை விரும்பாத நீல் மீண்டும் தனது சுதந்திரமான குதூகல வாழ்விற்கு ஏங்கி கரோலினுடன் தனது தொடர்வை நீடிக்கலாம். கரோலின் சம்மதிக்காவிடத்தில் அவன் இன்னுனொரு கரோலினை நாடிச்செல்வது தவிர்க்க முடியாதது.