Tuesday, November 15, 2005

பெண்கள் - மூன்று திரைப்படங்கள்

அண்மையில் கலாச்சாரம் என்பது எப்படி அதிஉச்ச பாதிப்பைப் பெண்கள் வாழ்வில் ஏற்படுத்தி வந்திருக்கின்றது என்பதைக் காட்டுமுகமாக எடுக்கப்பட்ட மூன்று திரைப்படங்களைப் பார்த்தேன்.

“வோர்டர்” 30களில்; கணவனை இழந்த பெண்களின் வாழ்க்கை முறையைச் சித்தரிக்கும் படம். முக்கியமாக இத்திரைப்படத்தில் பால்யமணம்; செய்து கணவனை இழந்த பெண் குழந்தைகள் ஆச்சிரமத்தில் தமது மீதி வாழ்வைக் கழிக்க வேண்டிய கட்டாயம் என்பது இந்துக்களின் கலாச்சாரத்தில் கடுமையாக இருந்திருக்கின்றது என்பதை எடுத்துக் காட்டுகின்றது.
“மாக்டெலீனா சிஸ்டேஸ்” திரைப்படத்தில் கடந்த காலங்களில் அயர்லாந்து மக்களின் வாழ்க்கை முறையில் தவறிழைக்கும் பெண்களைச் சீர்திருத்தும் முகமாக எப்படிக் கத்தோலிக்க ஆச்சிரமங்கள் இயங்கிக்கொண்டிருந்திருக்கின்றன என்பதை எடுத்துக் காட்டுவதாக அமைந்திருக்கின்றது.
“மாத்ரபூமி” இதுவும் இந்தியாவைத் தளமாக் கொண்டு கள்ளிப்பால் கொடுத்துப் பெண் சிசுக்களை முற்றாக அழிக்கப்பட்டால், பின் வரும் சமுதாயம் அதனை எப்படி எதிர் கொண்டிருக்கும் என்று ஒரு அதீத கற்பனையை ஓட விட்டுப் படமாக்கியுள்ளார் இயக்குனர் மானிஷ் ஜஹா.

தீபா மேத்தா சர்ச்சைகளைக் கொடுக்கும் திரைக்கதைக்குள் அழகியலைப் புகுத்தி எல்லா மட்ட பார்வையாளர்களையும் திருப்திப்படுத்தும் உத்தியைக் கையாளுபவர். வோர்டரில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கும் லீசா ரேயின் அழகு, திரைப்படக் கதையின் முக்கியத்திற்குத் தேவையற்ற ஒன்றாகும். அவரது அழகும், காதல் காட்சிகளும், திரைக்கதையின் முக்கியத்திலிருந்து பார்வையாளர்கள் விடுவித்துக் கொண்டு அழகியலை ரசிக்கும் நிலைக்குத் தள்ளிச் செல்கின்றது. இது பெண்களுக்கு அன்று இழைக்கப்பட்ட கொடுமைகளை மனதில் பதிக்காமல் ஒரு திரைப்படம் பார்த்த பாதிப்பையே பார்வையாளர்களுக்கு ஏற்படுத்துகின்றது.
அதேவேளை “மாத்ரபூமி” பெண்களுக்கு கலாச்சாரம் என்ற பெயரில் இழைக்கப்படும் கொடுமைகளைப் பார்வையாளர்களின் மனதில் பதிய விட வேண்டும் என்ற ஆர்வம் அக்கறையுடனோ இல்லாவிட்டால் வேறு ஏதும் வியாபார உள்நோக்கத்துடனோ, பெண்ணுக்கு இழைக்கப் படக்கூடிய அதி உச்ச வன்முறைகளைப் படமாக்கி, பார்வையாளர்களுக்கு இரக்கத்திற்குப் பதிலாக ஒருவித சலிப்பையும், அருவருப்பையுமே விட்டுச் செல்கின்றது. திரைக்கதை பல விடைகளற்ற கேள்விகளுடன் தொக்கி நிற்கின்றது. கள்ளிப்பால் சிசுவதைத் தீவிரமாக் கையாளும் கிராமங்கள் சிலவற்றில் காலப்போக்கில் பெண்களே அழிந்து போய் விடும் நிலையில் எப்படி ஆண் சமுதாயம் இதனை எதிர்கொள்கின்றது என்பதே “மாத்ரபூமியின்” கரு. புல யதார்த்த முரண்பாடுகளோடு பெண் என்பவள் வெறும் வேலைக்காறியாகவும் போகப் பொருளாகவுமே பார்க்கப்படுகின்றாள் என்பதை தன்னால் முடிந்த அளவிற்கு வக்கிரமாகப் படமாக்கியுள்ளார் இயக்குனர்.

ஹோலிவூட்டைத் தவிர்த்து அனேக வேற்றுமொழித்திரைப்படங்கள் இயல்பாகக் கதை சொல்லத் தெரிந்தவை. அந்த வகையில் அயர்லாந்தில் பெண்களுக்கு ஏற்பட்ட கொடுமைகளை “மாக்டெலீனா சிஸ்டேஸ்” எனும் திரைப்படம் ஆர்ப்பாட்டமற்று மனதைத் தொடும் வகையில் காட்டியுள்ளது. இத்திரைப்படம் பாலியல்வன்புணர்விற்கு ஆளான இளம்பெண், திருமணத்திற்கு முன்பு குழந்தை பெற்ற ஒரு பெண், ஆண்களைக் கவரும் அழகிய பள்ளிமாணவி ஒருத்தி ஆகியோரின் வாழ்க்கையைச் சுற்றி, இவர்கள் மூவரும் சமூகத்திற்கு ஒவ்வாதவர்களா அவர்கள் குடும்பங்களாலேயே கணிக்கப்பட்டு மாக்டெலீனா கத்தோலிக்க ஆச்சிரமத்திற்கு அனுப்பப்படுவதாகவும், அங்கே அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள, அவமானங்கள் போன்றவற்றையும் கத்தோலிக்க சபையில் தொண்டு செய்யும் போதகர்கள், சிஸ்டர்மார் போன்றோரின் குரூரமான மனோபாவங்கள் போலித்தன்மைகள் போன்றவற்றை அடையாளம் காட்டுவதாக அமைந்திருக்கின்றது. வழமைபோல் ஹொலிவூட் அழகிய நடிகைகள் அழகற்றவர்களாகத் தோன்றாமல் பாத்திரப் பொருத்தம் மிகக் கச்சிதமாக அமைந்துள்ளது.

சமூக நோக்குள்ள கலைஞர்கள் தமது படைப்புக்களில் சமூகச்சீர்கேட்டை எடுத்துக்காட்டும் போது அழகியலுக்கு முக்கியத்துவம் கொடுத்து படைப்பின் முழு நோக்கத்தையும் திசை திருப்பி விடுகின்றார்கள். இது அனேகமாக தெற்காசியப்படைப்புக்களிலேயே காணக்கூடியதாக உள்ளது. முதியோர், குழந்தைகள், பெண்கள் இவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் படைப்பாக்கப்படும் போது பார்வையாளர்களை அது உளவியல் ரீதியாக மிகவும் தாக்குகின்றது என்பதை படைப்பாளிகள் நன்றாக அறிந்து வைத்திருக்கின்றார்கள். இது அவர்களுக்குப் பணம் பண்ணுவதற்கு ஒரு சிறந்த மூலதனமாகவும் அமைந்து விடுகின்றது. தீபா மேத்தா அதற்குள் அழகியலையும் இணைத்துவிடுகின்றார்.

3 comments:

-/பெயரிலி. said...

பட அறிமுகங்களுக்கு நன்றி

~Nandalala~ said...

“வோர்டர்”? => Water? :)

கறுப்பி said...

thanks Peyarily (*_*)

yes Nandalala "Water" வோர்டர் (*_*)