Tuesday, February 01, 2005

கனவு மெய்படல் வேண்டும்

கனவு மெய்படல் வேண்டும்”


ஜானகி விஸ்வநாதனின் இரண்டாவது படம். தனது முதல் படமான “குட்டி”க்குப் பல விருதுகளை பெற்றவர் ஜானகி. கனவு மெய்படல் வேண்டும் திரைப்படத்திற்காக அதில் நடித்த ரம்யா கிறிஷ்ணனிற்கு விருது கிடைக்கும் என்று நம்புவதாக அவர் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கின்றார்.

“கனவு மெய்படல் வேண்டும்” திரைப்படம் “குட்டி“யைப் போல் சோகமான முடிவில்லாது, வழமை போல் சீர்கெட்டுப் போய் இருக்கும் ஒரு இந்தியக் கிராமத்தை படித்த முற்போக்குச் சிந்தனை உள்ள ஒருவன் சிரமப்பட்டு சீர் திருத்தி எடுப்பதாகத் பல இந்தியர்களின் கனவை படமாக்கி உள்ளார் ஜானகி விஸ்வநாதன். தேவதாசிகளால் வாழும் மங்களபுரம் எனும் கிராமதில் வசிக்கும் ரம்யா கிறிஷ்ணன், யாருக்கோ ஒரு மகனைப் பெற்று(மோகனசுந்தரம்), அவன் மேல் அன்பைப் பொழிந்து வளர்கின்றார். பட்டணம் சென்று சினிமாவில் சேர்ந்தால் இப்படி அடிமை வாழ்க்கை வாழாது பணம் சம்பாதித்து மகனின் கல்விக்கு உதவலாம் என்ற சாதாரண இந்தியக் கனவில் பட்டணம் செல்வதுடன் திரையில் காணாமல் போகின்றார் ரம்யா கிறிஷ்ணன்.

தாய் வருவார் வருவார் என்று காத்திருந்த மகன், தாயாரைக் காணது மனம் உடைந்து அவளைத் தேடி ரயில் ஏறி, டிக்கெட் இல்லாமல் பயணித்ததால் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பப்பட்டு??? பின்னர் அவனுக்கு கல்வியில் இருந்த ஆர்வம், சீர்திருத்தப் பள்ளியின் வோடனின் துணையுடன் பள்ளி சென்று, முதல் மாணவனாய் ஒரு சிறந்த மருத்துவனாகி, தனது சக மாணவியான ஹேமாவைத் திருமணம் செய்வதென்று வேகமாகத் திரைக்கதை நகர்கின்றது.
மோகனசுந்தரத்தின் குடும்பப் பின்னணி தெரிந்திருந்தும் அவனது திறமை நற்குணம் போன்வற்றால் தமது மருமகனாக மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கின்றார்கள் ஹேமாவின் பெற்றோர். ஹேமா கருத்தரிக்கின்றாள்.
எமது மனத்தில் மோகனசுந்தரம் தாயாரை மறந்து விட்டானா? தான் பிறந்து வளர்ந்த ஊரை மறந்து விட்டானா? என்ற கேள்வி எழும் வேளை, அவனது மருந்துவ நண்பன் மங்களபுரத்திற்கு இலவசச் சிகிச்சை செய்வதற்காக செல்வதை அறிந்து அவர்களுடன் தானும் புறப்படுகின்றான் மோகனசுந்தரம். கதையில் வரப்போகும் திருப்பம் எமக்குள்ளும் பரபரப்பைத் தருகின்றது.
மங்களபுரத்து பஸ் நிலையத்திலேயே அந்தக் கிராமம் இன்னும் மாறாமல் இயங்கி வருகின்து என்பதற்கு அடையாளமாக, பஸ் தரிப்பில் பல சிறுவர்கள் இளைஞர்கள் பெண்களின் புகைப்படங்களை வருவோருக்குக் காட்டிக் பேரம்பேசியவண்ணம் இருக்கின்றார்கள். தனது வீட்டையும் அங்கு வாழ்வபர்களையும் அடையாளம் காண்கின்றான் மோகனசுந்தரம். தாயாரைப் பற்றிய எந்தத் தகவலும் இன்றி ஊர் போய்ச் சேருகின்றான். இருந்தும் அவன் மனம் மங்களபுரத்தையே சுற்றிச் சுற்றி வருகின்றது.


ஹேமா அமெரிக்கா போய் அங்கு வாழலாம் என்று ஆசைப்பட, அதை மறுத்த மோகனசுந்தரம் சென்னையில் ஒரு மருத்துவ மனையில் தற்செயலாகத் தனது தாயாரைச் சந்திக்கின்றான். அவளைத் தன்னுடன் வைத்திருப்பதற்காக அழைத்து வந்த போது வீட்டில் பூகம்பம் வெடிக்கின்றது. கணவன் மேல் கோபம் கொண்ட ஹேமா அவனை விவாகரத்துச் செய்து விடுகின்றாள்.
அவன் தாயாரையும் அழைத்துக் கொண்டு மங்களபுரத்திற்கே சென்றுவிடுகின்றான். அதன் பின்னர் ஊரின் பல பெரிவர்களை எதிர்த்து நின்று மங்களபுரப் பெண்களுக்கு கைத்தொழில் செய்யக் கற்றுக்கொடுத்து அவர்களை தேவதாசி வாழ்க்கையில் இருந்து விடுபடச் செய்கின்றான்.
அவனது சேவையைப் பாராட்டி அவனுக்கு விருது கிடைக்கின்றது. அவனுக்கு விருது கிடைத்ததற்காக பத்திரிகையின் சார்பில் அவனைப் பேட்டி எடுக்க வந்தது தனது மகள் என்று அறிந்து நெகிழ்ந்து போகின்றான் மோகனரங்கம். மகள் தொடக்கத்தில் தந்தையைப் புரிந்து கொள்ளாமல், அவன் இறந்த பின்பு, தந்தையின் சேவையைத் தான் தொடரப்போவதாக அறிவிப்பதுடன் திரைப்படம் நிறைவிற்கு வருகிறது.
“தாழம்பூவே வாடா” என்ற அருமையான பாடலை ரம்யா கிறிஷ்ணன் பாடியுள்ளார்.
மங்களபுரத்தின் அழகும் தேவதாசிகளின் அழகையும் கமெரா கச்சிதமாகப் படம் பிடித்திருக்கிறது.
இந்தியாவில் இன்னும் எத்தனை கிராமங்களில் பெண்களைப் பற்றிய கதைகள் அமிழ்ந்து போய்க் கிடக்கின்றன என்று என் மனம் அடித்துக் கொள்கிறது.

No comments: