Thursday, February 24, 2005

பெண்

1.

இறுக்கங்கள் தளர
இதயத்தின் அடியிலிருந்து வந்தது அது.

உன் முகத்திலும் இறுக்கமில்லை
எனக்கு அதில் சங்கோஜமுமில்லை

விழிகளின் கலப்பில்
சின்னதாய் அதிர்வுகள்.

நெருடல்களும் இருவருக்குமாய்.

என் பிரசவத்தில் உதிர்த்தது
உன் உதிரமே!

உன் புன்னகையின் செயற்கைத் தனம்
என்னிடத்தில் இருப்பது
உனக்குப் புரிவது எனக்கும் தெரியும்.

பதில் காணாக் கடந்து விட்டோம்
காத தூரத்தை
பரீட்சை வேண்டாம்

எனக்கான உச்சத்ததை நானும்
உனக்கான உச்சத்தை நீயும்
எங்கேனும் அடைந்து விட்டு
ஒரே படுக்கையில் தூங்குவோம்
வேறுவேறாய்.

2.

உங்களிடம் திறப்பு உள்ளது.
நான் பூட்டை உடைத்து வெளியே வருகின்றேன்.

உங்கள் குற்றச்சாட்டுக்களை
நான் சிலுவையாய் சுமக்கின்றேன்.

நீங்கள் உலகத்தின் அழகை ரசிக்கிறீர்கள்.
நான் அவலங்களை அடையாளம் காட்டுகின்றேன்.

நீங்கள் மழைத்துளியில் நிறைவைக் காண்கிறீர்கள்
நான் கடலுடன் போராடுகின்றேன்..

அனைத்து மூச்சுக்காற்றின் தீண்டலிலும்
விரகம் தணிப்பவர் நீங்கள்.
கலவிக்கான பிரத்தியேக தெரிவு
என்னிடம் உள்ளது.

நீங்கள் நிரந்தரத்தில் மகிழ்கின்றீர்கள்
நான் நித்தியத்திற்காய் ஏங்குகின்றேன்.

அது உங்கள் வழி
இது என் வழி
நீங்கள் என் எதிரியல்ல..

3.

இரைந்து ஓய்கிறது கொடூர காற்று.
ஈரலிப்பற்ற நிலங்களில் இறுகிப்போய் கிடக்கும்
பனிப்படலம் வெடித்துப் பிளக்கும்
ஓலமற்று
பிளக்கும் வாய்களுக்குள் புகமுயல்வாய் நீ.
இறுகும் மலை முகடுகள்.
சீரற்ற நீடோட்டத்தில்
திளைக்க முயல்கிறோம்
நானும் நீயும்.
தூவானமாய்த் தெளிக்கும்
சிறு துளியின் பின்னும் ஓய்வற்றிருக்கும்
உன் இயக்கம்
நிணம் உலர
வரண்ட உடல்கள் சிதறும் ஓரமாய்

No comments: