Tuesday, February 01, 2005

“கொறில்லா”


சோபாசக்தியின் கொறில்லா கையில் கிடைத்தும் வேறு பல நாவல்கள் கையிருப்பில் இருந்ததால் ஒரு வித அசட்டையுடன் “கொறில்லா”வைப் படிப்பதைப் பிற்போட்டுக் கொண்டு வந்தேன். இதற்குப் பல காரணங்கள் உள்ளன. அரசியல் பின்னணியைத் தளமாகக் கொண்டு வடிக்கபட்ட பல எழுத்துக்கள் என்னை அதிகம் கவராமல் போனதும், இல்லாவிடின் வேண்டுமென்றான தீவிரமும் பிடிவாதமும், எழுந்தமானமுமாகத் தாக்கும் தன்மையில் வரட்சி மிக்க படைப்புக்களை மட்டும் பல எம்மவர்கள் சிறந்த எழுத்தாக நினைத்துத் தொடர்ந்து படைத்து வருவதும். காரணங்களாக இருக்கலாம்.
இலக்கிய உலகில் எனக்கான சில இலக்கிய நண்பர்களின் தெரிவுகளின் படி, அவர்கள் குறிப்பிட்டுச் சொல்லும் (எப்போதுமே நான் பின்னால் நிற்பதாலும், என்னைக் கவர்ந்த எழுத்தாளர்களைத் தவிர்த்து) நாவல்களைப் படிப்பது என் வழக்கம் அந்த வகையில் ஒரு இலக்கியச் சந்திபின் போது “சோபாசக்தியின் கொறில்லாப் படித்தீர்களா? நன்றாக இருக்கிறது” என்ற அவர்களின் விமர்சனத்தைத் தாண்டியும் என்னுள் படிக்கவேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டாமல் வெறுமனே அடுக்கி வைக்கப்பட்ட ஒன்றாக இருந்தது.
“ம்” வந்து விட்டது. அது பற்றி விமர்சனங்களும் வரத் தொடங்கி விட்டது. அனேக ஈழத்து இலக்கியவாதிகளாலும் படிக்கப்பட்டு விமர்சனம் செய்யப்படும் ஒரு படைப்பாளின் படைப்பில் எனக்கு ஆர்வம் வராமல் போனதையும் மீறிப் படித்தேன்.
பிரான்ஸில் அகதி கோரிக்கை செய்யும் ஒரு இளைஞன் பற்றிய அறிமுகத்துடன் படைப்பு ஆரம்பமானதால் மீண்டும் கவர்ச்சியற்று, “பெண்டிங்கில்” கிடக்கும் வேறு ஒன்றை எடுக்கும் ஆர்வம் எனக்குள் எழுந்தும்;, மனதை ஒருங்கமைத்து சோபாசக்தியின் “கொறில்லா” படித்தே ஆகவேண்டும் என்று தொடர்ந்தும் படித்து முடித்தும் விட்டேன்.
தற்போது எனக்குத் தெரிந்த சிலருக்கு “கொறில்லா” படித்தீர்களா நன்றாக இருக்கிறது என்று சொல்லித் திரிகின்றேன்.

பிடித்ததற்கான சில காரணங்கள்:
மிகமிக எளிமையான எள்ளல் கூடிய கிராமிய (நான் பாவித்து தற்போது வழக்கில் இல்லாத சொற்பதங்கள்) எழுத்து நடை.
எனக்கு முற்று முழுவதும் பரீச்சயம் இல்லாத தளங்களை என்னால் அனுபவிக்கக் கூடியதாகவும் என்னை அந்தத் தளங்களுக்கு இழுத்துச் செல்லக் கூடிதுமாக கதை கூறி சொல்லியிருப்பதும்.
உண்மைச் சம்பவங்களை ஒரு குறிப்பேடு போல் ஆண்டு உண்மைப் பெயர்கள் இடம் போன்றவற்றால் கீழ் குறிப்பாக இணைத்தமையும்.
பிரான்ஸ் ஈழஎழுத்தாளர்கள் எனும் போது காரணமின்றி தூஷண வார்த்தைகளை எழுத்துக்குள் இணைக்கும் தன்மை இருப்பதாக எனக்குள் இருந்த எண்ணத்தை உடைத்தமையும்.
இக்காரணங்களாலும் சலிப்பின்றிப் படிக்கும் எழுத்தோட்டம், கையில் உளைவின்றி பிடித்துப் படிக்கக் கூடியதாக கச்சிதமாக நாவலில் அளவு இருந்தமையும் என்பேன்.

பின்குறிப்பு :
நடைபெற்ற சம்பவங்களாக கதை சொல்லி குறிப்பிட்டிருந்த சம்பவங்களில் சில கதை சொல்லி உண்மைக்குப் புறம்பாக மாற்றி அமைத்திருக்கின்றார் என்ற விமர்சனம் சிலரிடம் இருந்து வந்தது. இது மிகவும் கொடூரமாக ஒரு விமர்சனம். என்னைப் போன்று போராட்ட கால அனுபவங்கள் அதிகமில்லாத, பதிவுகளால் மட்டும் உண்மையையும் அனுபவங்களையும் பெற முடியும் என்ற நிலையில் இருப்போருக்கு உண்மைக்குப் புறம்பானதை பதிவாக்கிப் பொய்த் தகவல்களை ஒரு படைப்பாளி தன் படைப்பின் மூலம் நம்ப வைக்கிறார் என்றால் அதை விட துரோகம் ஒன்று இருக்க முடியாது.

சோபாசக்தி அதைத்தான் தனது படைப்புகள் மூலம் செய்கின்றார் என்பது உண்மை எனின் அதற்கான தகுந்த ஆதாரங்கள் இருக்குமெனின் இலக்கியவாதிகள் அவரின் படைப்புக்களை முற்றுமுழுதாக நிராகரிப்பதைத் தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாது.

2 comments:

ROSAVASANTH said...

I voted a + for this post. But I am sorry to say this. It was a mistake and it got clicked. This is just for your information.

கறுப்பி said...

thanks anyway Rosavasanth