Friday, February 11, 2005

Shadows of Time


2004ம் ஆண்டு ரொறொன்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட இன்னுமொரு இந்தியத் திரைப்படம் "Shadows of Time". இது ஜேர்மன் இயக்குனரான Florian Gallenberger
ஆல் இயக்கப்பட்ட திரைப்படம்.
Florian Gallenberger
மெக்சிக்கோவைத் தளமாக வைத்து எடுத்த குறுந்திரைப்படமான "Quiero Ser" க்கு 2001ம் ஆண்டு Academy Award ஐ வென்றவர்.
தனது முழுநீளத் திரைப்படத்திற்கான உலகின் மறுபக்கம் சென்று இந்தியாவைத் தளமாக வைத்து "Shadows of Time" ஐத் தந்துள்ளார் இயக்குனர்.
பழைய நினைவுகளை மீட்டிப்பார்ப்பது என்பது (முக்கயமாக "X" காதலர்களை) தற்போது திரையுலகில் ஒரு trend ஆக வந்து விட்டது. "Shadows of Time" இலும் திரைப்படம் தொடங்கும் போது வயது முதிர்ந்த பணக்காறர் ஒருவர் தனது பென்ஸ் காரில் ஒரு கிராமத்திற்கு வந்து அங்கே உள்ள செயலிழந்து பாழடைந்து போயிருக்கும் "காப்பெற்" தொழிற்சாலை ஒன்றினுள் செல்கின்றார். அவரது flash back இல் தொழிற்சாலையினுள் சிறுவர்கள் எப்படியெல்லாம் துன்பத்திற்குள்ளாகின்றார்கள் என்பதாய் திரைப்படம் ஆரம்பமாகின்றது.
அதன் பின்னர் தொடரும் திரைப்படத்தில் இந்தியாவின் இடம் பெறும் இன்னொரு மனதை உலுக்கும் சிறுவர் கைத்தொழிலைக் கருவாகக் கொண்டு திரைப்படம் நகர்கின்றது. திரைப்படத்தின் நாயகள் ரவி. முகத்தில் எப்போது கரியோடு வசீகரமாக கண்களை அங்கே இங்கே ஓட விட்டுத் துடிதுடிப்பாக இயங்குகின்றான். அங்கே வேலைபார்க்கும் சிறுமிகளுக்கு இடம் பெறும் அங்கிரமங்களைக் கண்டு மனம் நோக சுருண்டு போகின்றான் ரவி. வயது வந்த முதலாளிகள் தமக்கு வேண்டிய நேரத்தில் தொழிற்சாலைக்கு வந்து தமக்குப் பிடித்த ஒரு சிறுமியைக் காட்டி விட்டுப் போனால் அன்று இரவு அச்சிறுமி அந்த முதலாளியின் வீட்டிற்கு தொழிற்சாலை அதிகாரியால் அனுப்பப்படுவாள்.
இப்படியானத் தொழிற்சாலைகளில் சிறுவர்களுக்கு நடக்கும் அக்கிரமங்களுடன் திரைப்படம் நகர்ந்து செல்லத் திரையரங்க மொளனாக உறைந்து விட்டது.
இப்போது திரைக்கதைக்குள் புகுந்து கொள்கின்றாள் மாஷா எனும் சிறுமி. அவளை அவளது தந்தை அழைத்து வந்து 50 ரூபாய்க்கு விற்று விட்டு முதலாளி அவளைப் பற்றிக் கேட்ட போது சொன்ன சொல்லுக் கேட்பாள் பிரச்சனை இருக்காது என்றவாறு முதுகில் ஓங்கி ஒரு அறை விட மாஷா மௌனமாக இருந்தது அவள் அந்தத் தொழிற்சாலை அதிகாரியால் வாங்கப்படுவதற்கான தகுதியாகக் கருதப்பட்டது. மாஷாவும் ரவியும் நண்பர்களாகின்றார்கள். சாப்பாடு பகிர்வது பாட்டுப்பாடி ஆடி மகிழ்வது என்று அந்த அழுக்கான தொழிற்சாலைக்குள்ளும் அந்தச் சிறுவர்களின் களிப்பை மனம் நிறையும் வண்ணம் காட்டியிருக்கின்றார்கள். மாஷாவைப் பார்த்து ஒரு முதலாளி ஆசை கொள்கின்றான் அன்று இரவு மாஷா அவனது வீட்டிற்கு அனுப்பப்படல் வேண்டும் இதைத் தெரிந்து கொண்ட ரவி தான் அது வரை சேர்த்து வைத்த பணத்தையெல்லாம் அதிகாரியிடம் கொடுத்து அவளை விட்டு விடுமாறு கேட்கின்றான் மனம் இரங்கிய அதிகாரி மாஷாவை அங்கிருந்து சென்று விடுமாறு கூற செய்வதறியாது நின்ற மாஷாவின் கழுத்தில் ரவி அடையாளத்திற்காக தனது ஒரு சிறிய மாலையை அணிவித்து நம்பிக்கையும் அழித்து ஒரு குறிப்பிட்ட கோயிலைக் கூறி நீ எங்கு சென்றாலும் ஒவ்வொரு பௌணமி அன்றும் அங்கு வா நான் எப்போது இங்கிருந்து வருகின்றேனோ அப்போது அங்கு வந்து சந்திக்கின்றேன் என்று வாக்களிக்கின்றான்.
சிறுவர்களாக இருக்கும் வரைக்கும் திரைப்படம் ஒரு காத்திரமான கதை சொல்லும் கலைப்படமாக நகர்ந்து சென்து பின்னர் வழமை போல் இந்திய ஞனரஞ்சகமாக மாறி பார்வையாளர்களை ஏக்கத்திற்குள் தள்ளி விட்டது.
இந்தியாவில் அனாதையாக விடப்பட்ட பெண் எங்கு செல்வாள்? விபச்சார விடுதிக்கு.
நாட்கள் ஓட மாஷாவின் நினைவோடு கடினமாக உழைத்துத் தொழிலும் கற்றுச் சிறிது பணத்தோடு இளைஞனாக வெளியேறுகின்றான் ரவி. சொன்னபடி கோயிலுக்குச் செல்கின்றான். வழமையான திரைப்படங்கள் போல் மாஷாவும் வருகின்றாள் ஆனால் அவர்கள் சந்திக்கவில்லை.
ரவி ஒரு "காப்பெற்" விற்கும் வயோதிபரிடம் வேலைக்குச் சேர்கின்றான். அவருக்கு ஒரு மகள் அவளிற்கு ரவிமேல் காதல் ரவி தனது "காப்பெற்" அனுவத்தின் மூலம் அந்த வயோதிபரின் வியாபாரத்தை வெளிநாட்டிற்குச் சந்தைப் படுத்த வியாபாரம் கூடு பிடிக்கின்றது. வயோதிபர் இறக்கும் தறுவாயில் மறக்காமல் மகளின் கையை ரவியிடம் பிடித்துக் கொடுத்து இறந்து போகின்றார்.
விபச்சார விடுத்திக்கு வரும் ஒரு பணக்காறனிற்கு மாஷா மேல் காதல். தொடுக்கத்தில் அவனது காதலை மறுக்கும் மாஷா ரவியை ஒரு பெண்ணோடு கோயிலில் கண்ட பின்னர் மணந்து கொள்கின்றாள்.

ஒரு விருந்து உபசாரத்தில் ரவியும் மாஷாவும் சந்தித்துக் கொள்கின்றார்கள். இருவருக்குள்ளும் அமுங்கியிருந்த காதல் வெளியேறுகின்றது. திருட்டுத்தனமாகச் சந்தித்து உறவு கொள்கின்றார்கள். மாஷா கற்பவதியாகின்றாள். தன்னுடன் வந்துவிடுமாறு மாஷா கேட்க இரு குழந்தைகளுக்குத் தாயான தனது மனைவிக்குத் துரோகம் செய்ய முடியாமல் அவன் மறுக்கின்றான். மாஷாவும் கணவனும் பிரிகின்றார்கள். மாஷா தனக்குத் தெரிந்த உலகமான விபச்சாரத்திற்கே மீண்டும் செல்கின்றாள். தனது மகனிற்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்துடன் மாஷாவைத் தேடிச் சென்று பணம் கொடுக்கின்றான் ரவி. அவள் அதனைத் தூக்கி எறிகின்றாள்.
இறுதியில் வயது முதிர்ந்த ரவி தனது கடைசிக் காலத்தில் மாஷா நிச்சயமாக அந்தத் தொழிற்சாலை அருகில் தான் எங்காவது கழிப்பாள் என்ற நம்பிக்கையுடன்தான் அங்கு வந்திருப்பதாகக் காட்டப்பட்டு தொழிற்சாலையின் வெளியே ஒரு சிறுமி விளையாடிக் கொண்டிருப்பதைக் காட்டுகின்றார்கள். வயது முதிர்ந்தவர் அருகில் செல்ல சிறுமி திரும்பிப் பார்க்கின்றாள். அது சிறுமியாக தொழிற்சாலையில் வேலை பார்த்த மாஷா. தனது குருட்டுப் பாட்டிக்கும் அந்த முதியவருக்கும் தேனீர் கொடுத்து விட்டு முதியவர் சென்ற பின் பாட்டியிடம் கேட்கின்றாள் “அது யார் பாட்டி?” என்று அவள் புன்னகையோடு சொல்கின்றாள்; “ரவி” என்று. திரைப்படம் நிறைவு பெறுகின்றது.
ஹப்பாடா ஒரு மாதிரித் திரைக்கதை முடிந்து விட்டது.
பலத்த கை தட்டல்களுடன் திரைப்படம் பார்வையாளர்களால் வரவேற்கப்பட்டது. QA இல் ஒரு இந்திய இளம் பெண்ணால் கேட்கப்பட்ட கேள்வி மிக அருமையாக ஆரம்பிக்கப்பட்ட திரைப்படம் எதற்காகக் காதல் திரைப்படமாகப் பரணமித்துப் போனது என்று. பதில் தந்த இயக்குனர் கூறினார். இந்தியாவின் இருண்ட பக்கங்களைக் காட்டுவது என் எண்ணமல்ல. சிறுவர் தொழில் இந்தியாவில் இருப்பது தெரியும் அதனைக் காட்ட வேண்டும் என்று எண்ணினேன். ஆனால் அதை முழுப்படைப்பிற்குள்ளும் கொண்டு வரும் எண்ணம் எனக்கில்லை என்று.
சிறுவன் ரவியும் சிறுமி மாஷாவும் நடிப்பிற்காக மிகுந்த பாராட்டைப் பெற்றார்கள். மூன்று மாதங்களாக 6,000 குழந்தைகளைப் பார்த்துத் தெரிவு செய்தேன் என்றார் பெருமையுடன் இயக்குனர்.
தனது சிறந்த நடிப்பாலும் எல்லோரையும் கவரக்கூடியதாக தனது தோற்றத்தாலும் Prashant Narayanan, திரையரங்கிற்கு வரும் போது பார்வையாளர்கள் எழுந்து நின்று கை தட்டி வரவேற்றார்கள். எனது பார்வையில் கதாநாயகன் தோற்றம் அற்ற நல்ல ஒரு கலைஞனிற்குரிய தோற்றத்தில் இருந்தார் நடிகன்.
மிகத் தரமான திரைப்படம் என்று சொல்ல முடியாவிட்டாலும் "Shadows of Time" பார்த்ததற்காக நான் வருந்தவில்லை.

1 comment:

Kangs(கங்கா) - Kangeyan Passoubady said...

கதையை நீங்கள் வர்ணித்த விதம், திரைப் படம் பார்த்ததைப் போல இருந்தது. இங்கு வரும்போது பார்க்க வேண்டும்