Tuesday, May 01, 2007

சாயவனம் கந்தசாமி

ஒருவர் அவர் வாழ்க்கை முறை எப்படியிருப்பினும், பிறருக்குத் தன்னை அடையாளம் காட்டும் போது தனக்கு ஒத்த கூட்டத்திற்குப் பொருத்தமானவராகவே அடையாளப்படுத்திக் கொள்வார். சமூகநலவாதி, அரசியல்வாதி, முற்போக்குவாதி, பெண்ணியவாதி, இலக்கியவாதி என்று பல வடிவங்களில் தனது வட்டத்திற்கு ஏற்றபடி தன்னை உருமாற்றிக் கொண்டு, அதற்கேற்ப தனது கதையையும் மாற்றிக் கொள்பவரான இருந்தால்தான் அவரால் வாழ்வைக் கொண்டு நடத்த முடியும். இவை எல்லாம் வெளித்தோற்றத்திற்காகப் போடும் வேசம் எனினும் கட்டாயமாகிப் போன ஒன்றாகவே உள்ளது.சிலமாதங்களின் முன்னர் கனடா வந்திருந்த எழுத்தாளர் “சாயவனம்” கந்தசாமியுடன் ஒரு இலக்கியச் சந்திப்பு இடம்பெற்றிருந்தது. அதற்கு நானும் சென்றிருந்தேன். “வைகறை” பத்திரிகையில் வெளிவந்திருந்த அவரது நேர்காணல் அவர் மேல் எந்த வித மரியாதையையும் எனக்கு வழங்கவில்லை. மாறாக இப்படியாக ஒரு பிற்போக்குத்தனமான பேட்டியைக் கொடுக்கும் ஒரு இலக்கியவாதி எப்படி சாகித்திய அகாதெமி விருதைப் பெறும் நாவலை எழுதினார் என்ற கேள்வியே எஞ்சியிருந்தது. இருந்தும் சந்திப்பின் நேரம் அவரின் உரை அவர் மேல் எனக்கு ஒரு மதிப்பை உண்டு பண்ணலாம் என்ற நம்பிக்கையில் சென்றிருந்தேன். இருந்தும் மீண்டும் எனக்கு ஏமாற்றத்தை அவரது உரை வழங்கியிருந்தது. கொடுத்த தலைப்பை விட்டு எதையோ நீண்ட நேரமாகப் பேசி முடித்தவர் தொடர்ந்து வந்த கேள்விகளுக்கும் பொருத்தமற்ற தனமாக பதிலளித்த வண்ணமிருந்தார். ஒரு நல்ல இலக்கியவாதிக்கான எந்த ஒரு அடையாளத்தையும் நான் அவரிடம் காணவில்லை. இருந்தும் மிகவும் புகழ் பெற்ற “சாயவனம்” நாவலில் அவரின் எழுத்தை நான் பார்த்து விடவேண்டும் என்று முயன்றும் நாவல் எனக்குக் கிட்டவில்லை. கடந்த வாரம் தற்செயலாக அவரின் “அவன் ஆனது” நாவல் கிடைக்கப்பெற்று இருமுறைகள் வைப்பதற்கு மனமின்றி வாசித்து முடித்தேன். நாவலின் தரம் சா.கந்தசாமியா இப்படி எழுதினார் என்று என்னை வியக்க வைத்தது. இப்படி ஒரு தரமான நாவலை எழுத முடிந்த எழுத்தாளருக்கு ஏன் நாகரீகமாக பேச முடியவில்லை. ஒரு படைப்பாளிக்கு அவனின் மனதில் இருக்கும் கருத்தே படைப்பாக வெளிப்படும். அப்படியிருக்கும் போது படைப்பில் இவ்வளவு சிந்தனைத் தெளிவைக் கொண்ட இந்த எழுத்தாளரால் ஏன் கூட்டத்தில் முறையாக உரையாட முடியவில்லை என்பது எனக்கு இன்னும் புரியாமல் உள்ளது. இனி அவரின் “அவன் ஆனது” நாவலைப் பற்றிச் சிறிது பார்த்தோமானால், கடினமான வார்த்தை பிரயோகங்களைக் காட்டி வாசகரைப் பிரமிக்கவும், சிரமப்படுத்தவும் முயலும் பல முற்போக்கு இலக்கியவாதிகள் மத்தியில் எளிய எழுத்து நடையில் ஒரு மனேதத்துவ நாவலைப்; படைத்துள்ளார் சாயவனம் கந்தசாமி. ஒவ்வொரு மனிதனும் ஏதோவகையில் மனநிலை பாதிக்கப்படுபவனாகவே இருக்கின்றான் என்பதை அன்றாடம் நாம் காணும் மனிதர்களில் இருந்து அடையாளப்படுத்தியிருக்கின்றார். ஒவ்வொருவரும் தம்மை தமது வாழ்வை முழுமையாப் பார்த்த படி மற்றையோரை ஏன் இப்பிடி இருக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பிய வண்ணமே இருக்கின்றார்கள். இந்தச் சுழற்சியின் எழுத்து வடிவம் தான் “அவன் ஆனது” நாவல். ஜானகிராமனும், ஜெயகாந்தனும் ஆர்ப்பாட்டமாகவே கலாச்சார உடைப்புக்களை எழுதிப் பெயர் பெற்றிருக்கின்றார்கள், ஆனால் அதிகம் அலட்டிக்கொள்ளாமல் “ரோஸ்மேரி” என்ற ஒரு பெண்பாத்திரத்தைப் படைத்து பெண்களுக்கான அத்தனை அடைப்புக்களையும் ஆர்ப்பாட்டம் இல்லாமல் உடைத்தெறிந்திருக்கின்றார்.


“சாயவனம்” கந்தசாமி ஒரு எழுத்தாளராகவும், ஓவியராகவும், சிற்பிகள் பற்றிய விவரணப் படம் எடுப்பவராகவும் பெயர் பெற்றிருக்கின்றார். இருந்தும் என்னுள் எஞ்சியிருக்கும் கேள்வி எதுவெனில் ஒரு தரமான இலக்கியவாதியாக ஏன் சா.கந்தசாமியால் பொதுக்கூட்டம் ஒன்றில் பேச முடியவில்லை?. அவர் தனது எழுத்தில் வேஷம் போடுகின்றாரா என்றால், இவ்வளவு தூரம் மனித மனங்களை ஆராய்து எழுத்தில் கொண்டு வரும் ஒரு எழுத்தாளன் நிச்சயமாகத் சிந்தனைத் தெளிவுடையவனாகவே இருப்பான். எனவே சா.கந்தசாமியுடனான சந்திப்பை ஒரு கெட்ட கனவாக மறந்து அவரின் படைப்புக்ளைத் தேடி வாசிப்போம்.

1 comment:

Anonymous said...

A racist can be an excellent scientist.Many conservative brahmins are excellent scientists because they dont get confused between science and their personal faith.They know where science begins and ends in their lives
A person with progressive views may not be able to write a 'good' story where as
a conservative or a bigot can produce 'excellent' fiction.
The personality of the author
need not be reflected in the fiction or viceversa.Kandaamy
may well be a conservative or
too traditional and he
is able to produce a 'progressive'
work.There is no contradiction here. You forget basics and get confused between authors personality with the authors
work.Writing is also question of craftmanship and talent.