Sunday, May 06, 2007

Vanaja

Director: Rajnesh Domalpalli
Principal Cast:: Mamatha Bhukya, Urmila Dammannagari, Ramachandriah Marikanti, Krishnamma Gundimalla, Karan Singh



ஆணோ பெண்ணோ சிறுவர் பிராயத்தைக் கடந்து பதின்ம வயதில் கால் வைக்கும் போது உடல் உள மாற்றங்களால் பல வித உணர்வு போராட்டங்களுக்குத் தள்ளப்படுவது வழமை. வளர்ச்சியடைந்த நாடுகளில் இவ்வயதினருக்கு அவர்கள் உடல், உணர்வு மாற்றங்கள் பற்றிப் பாடத்திட்டத்திலேயே அடக்கி விடுகின்றார்கள். கலாச்சாரக் கட்டுப்பாடு நிறைந்த நாடுகளில் பிள்ளைகளுக்கு இந்த மாற்றம் பற்றி எடுத்துரைக்கும் பொறுப்பு பெற்றோரிடம் விடப்படுகின்றது. ஆனால் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் பிள்ளைகளுக்கு அதிலும் தலித்தாகப் பிறந்து, ஒதுக்கபட்ட நிலையில் தனது அன்றாட உணவுக்காக எங்காவது வேலை செய்து, எதையாவது உண்ண வேண்டிய நிலையில் இருக்கும் குழந்தைகளுக்கு உடல் மாற்றங்கள் உணர்வுகள் என்பன அவர்களுக்கு ஏற்படும் பாலியல் விபத்துக்கள் மூலமே அறிந்து கொள்ளக் கூடிய ஒன்றாக இருக்கின்றது.



ரொறொண்டோ சர்வதேச திரைப்படவிழாவில் நான் பார்த்துப் பிரமித்த இன்னுமொரு இந்தியத் திரைப்படம் “வனஜா”. கொலம்பியா பல்கலைக்கழகத்தில் திரைப்படத்துறையில் கல்வி பயிலும் ராஜேஸ் டுமால்பாலியின் முதல் படைப்பாகிய “வனஜா” ஒரு பதினைந்து வயது சிறுமியை மையமாகக் கொண்டு படைக்கப்பட்டிருக்கின்றது. பதின்ம வயதில் ஏற்படும் உடல், உணர்வு மாற்றங்களாலும், அது அவள் வாழ்வில் பெண், தலித், அந்தஸ்த்து என்பவற்றோடு பின்னிப் பிணைந்து எப்படி அவள் வாழ்வை மாற்றி அமைக்கின்றது என்பதை மம்தா எனும் தலித் சிறுமியின் அபார நடிப்பின் மூலம் பார்வையாளர்களை வியக்க வைத்திருக்கின்றார் இயக்குனர். ஆந்திரப் பிரதேசத்தில் வாழும் ஒரு ராஜ குடும்பத்துப் பெண்ணின் வீட்டில் வேலைக்கு சேர்ந்து கொள்ளும் தலித் பெண்ணான பதினைந்து வயது வனஜா அந்தக் குடும்பத்தினரால் எப்படி நடத்தப்படுகின்றாள் என்பதே கதையின் கரு. முதலாளி அம்மாள் வனஜாவை அன்பாக நடத்துகின்றார். இந்த அன்பு நிலை என்பது ஒரு எல்லையைத் தாண்டாத வண்ணம் அவர்களின் வாழ்க்கை முறை அமைந்து விடும் அவலம். வேலைக்காறி என்றால் நிலத்தில் சாக்கைப் போட்டுப் படுப்பது, பழயதை உண்பது உடுப்பது என்பது எழுதப்படாத சட்டம். இதற்கு மேல் இருபக்கத்தினரும் எதையும் எதிர்பார்ப்பதில்லை. வனஜா குச்சிப்புடி நடனத்தில் ஆர்வம் உள்ளவள் என்று கண்ட முதலாளி அம்மா அவளுக்கு நடனம் கற்றுத் தருக்கின்றார். அதிஉச்சமாக இதைத்தான் அவர்களால் செய்ய முடிகின்றது. அமெரிக்காவிலிருந்து வந்த முதலாளி அம்மாளின் மகன் சேகர் குளிக்கும் போது அவன் வெற்றுடலை ஒளிந்திருந்து பார்க்கும் வனஜா, கடிதக்காறப் பெடியனை தனியாக அழைத்து அவனுடன் குழைந்து கதைத்துச் சிரிக்கும் வனஜா, இந்த இடங்களில் சிறுமி மம்தாவின் முகபாவம், நடிப்பு மிகவும் தத்ரூபமாக வியக்கும்படி அமைந்திருக்கின்றது.
சேகரால் பலாத்காரத்துக்குள்ளான வனஜா கற்பம் தரித்துப் பெற்ற குழந்தை ராஜவம்சத்தைச் சேர்ந்து என்பதால் குழந்தையை முதலாளி அம்மாள் தன்னுடன் வைத்திருப்பதும், தனக்கு அந்த வீட்டில் ஒரு அந்தஸ்தான இடம் கிடைக்குமா என்று ஏங்கும் வனஜாவை, வெறும் வேலைக்காறியாக மட்டும் அந்த வீட்டில் உலவ விட்டிருப்பதும், முதலாளி அம்மாளுக்கு வனஜா மேல் அன்பு, பாசம் வைக்க முடிகின்றது, ஆனால் அவரால் எந்த ஒரு நிலையிலும் அவளை தன் வீட்;டுப் பெண்ணாக நினைக்க முடியவில்லை, இப்படியே போனால் தான் சேகரின் வெறும் பாலியல் பொம்மையாகவும், வேலைக்காறியாகவும் மட்டுமே அந்த வீட்டில் வாழ்நாள் முழுக்க வாழ்ந்து இறக்க நேரிடும் என்பதை உணர்ந்த வனஜா, தனது குடிசைக்குத் திரும்பச் சென்று எப்படியாவது தனது குழந்தையை மீட்டுத் தன்னுடன் கொண்டு வந்து விட வேண்டும் என்ற தவிப்போடும், நம்பிக்கையோடும் காத்திருப்பதோடு திரைப்படம் நிறைவு பெறுகின்றது.

திரைப்பட இறுதியில் பார்வையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த இயக்குனர், இத்திரைப்படம் ஆந்திராவில் ஒரு கிராமத்தில் படமாக்கப்பட்டது என்றும் இதில் நடித்த பலருக்கு இத்திரைப்படமே முதல் நடிப்பு அனுபவம், முக்கியமாக சிறுமி மம்தாவிற்கு என்றும், சிறுமியின் நடிப்புத் திறனை அடையாளப்படுத்தியதோடு, இரண்டு மாதங்களில் மிக ஆர்வமாக குச்சிப்புடியை கற்றுக் கொண்டார் என்றும் கூறினார். ஞனரஞ்சகத் திரைப்படங்களைத் தான் வெறுப்பதாகவும், தனது அடுத்த திரைப்படமும் இந்தியக் குக்கிராம மக்களை அடிப்படையாகக் கொண்டிருக்கும் என்பதையும் தெரிவித்தார்.

No comments: