Thursday, May 03, 2007

Male supremacy

"Male supremacy has kept woman down. It has not knocked her out". – by: Clare Boothe Luce

அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பார்கள். எங்கள் சமுதாயக் கட்டமைப்பும், நோக்கும் பாறாங்கல்லைத் தூக்கித் தலையில் போட்டாலும் மாற்றங்களைக் காணுமா என்ற கேள்விக் குறிதான் தற்போது எனக்குள் எஞ்சி நிற்கின்றது. சிலவாரங்களுக்கு முன்பு ரொறொன்டோவில் நடந்த இரட்டைக் கொலைகளுக்காக ஒரு கட்டுரையை எழுதியிருந்தேன்.

சாடுதல்கள் அற்று நடுநிலையாக எமது மக்களின் உளவியல் தாக்கங்கள்தான் இப்படியான தற்கொலை, கொலைகளுக்குக் காரணம் என்பதாய் பலரின் பார்வைகள் இருந்ததும், இந்த உளவியல் தாக்கங்களை எமது மக்கள் அடையாளம் கண்டு தக்க நேரத்தில் அதற்கான மருத்துவத்தையும், ஆலோசனைகளையும் பெற்றுக்கொண்டால் இவற்றிலிருந்து விடுபட முடியும் என்ற மருத்துவ ஆராய்சியாளர்கள் ஆலோசகர்களின் உரைகளைக் கேட்டதாலும், படித்ததாலும் இப்படியான உயிரிழப்புகளிலிருந்து எம் மக்களுக்கு நிவாரணம் கிடைத்து விடும் என்ற நம்பிக்கை எனக்குள் எழுந்திருந்தது. மாறாக ஒரு சம்பவத்தின் பின்னர் அரைத்து அலசும் கும்பல்களின் வாயில் இருந்து வந்த தகவல்களை அண்மையில் செவிமடுத்ததால் இருந்த நம்பிக்கை எல்லாம் போய், முன்னேற்றப் பாதையை விடுத்து எமது சமூகம் எப்போதோ அழிந்து புதைந்து போயிருக்கும் எமது கலாச்சாரங்களை சிறப்பு என்று வெளியே இழுத்து விட்டுவிடுமே என்று பயமாக இருக்கின்றது. கொலைசெய்யப்பட்ட இளம் பெண், குழந்தைகளின் தாய், தாய் தந்தையரின் மகள், சகோதரங்களின் அன்புச் சகோதரி, உற்றார் உறவுகளின் தோழி இவையனைத்தையும் விடுத்து, தனக்குள்ளான கனவுகளைச் சுமக்கும் ஒரு சாதாரண மனுசி. எம்மக்கள் சிலரின் தீர்ப்பு செய்த குற்றத்திற்கான தண்டனை என்பதே. கணவன் கடுமையான உழைப்பாளி, மென்மையான குணம் கொண்டவன், அன்பானவன். அவனுக்கு வாழ்வில் கிடைத்த பெரிய ஏமாற்றம்தான் இந்த கொலைக்குக் காரணம் என்று கூசாமல் கொலைசெய்த கணவனுக்காக குரல் கொடுக்கும் ஒரு சாரார்.
ஒருவனுக்கு ஒருத்தி என்றும், சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவது திருமணம் என்றும் இந்திய நாடக வசனங்களைக் கேட்டுக் கேட்டுப் பழகிப் போனவர்களுக்கு, இருவருக்கிடையிலான அலைவரிசை என்பது புரியப் போவதில்லை. உறவுக்குள் விரிசல் ஏற்படின் அதனைப் புரிந்து கொண்டு குடும்பம் பிளவு படக்கூடாது என்று இருவருமே விரும்பின் அதற்கான ஆலோசனைகளைப் பெறுவதற்குப் பல ஆலோசனை நிலையங்கள் இருக்கின்றன. அதைக் கூடப் பெறுவதற்கு எம்மக்களுக்குத் தயக்கம். தமது திருமணம் ஆட்டம் காண்கின்றது என்பதை மற்றவர் அறியக் கூடாது என்ற எண்ணம்தான் இவர்களுக்குப் பெரிதாக இருக்கின்றது. இப்படியாகப் பிறருக்கான வாழ்ந்து முடிவில் உளவியல் தாக்கத்தின் உச்சத்தில் கொலை தற்கொலை என்று தள்ளப்பட்டு ஒட்டு மொத்தமாக எல்லாவற்றையுமே அழித்துக் கொள்கின்றார்கள்.இதில் பெரிய நகைச்சுவை என்னவெனின் சட்டத்தைப் பற்றிய குறைந்த பட்ச அறிவு கூட இல்லாமல் ஒருவர், மனைவி செய்த பெரீய்யய தவறுக்காக கணவன் கோவம் கொண்டு கொலை செய்து விட்டானாம் எனவே அவனுக்கு அதிகம் தண்டனை கிடைக்காது என்பதுதான். இவர்கள் எல்லாம் இந்தியா சென்று பஞ்சாயத்துப் பண்ணத்தான் லாயக்கு.
அண்மையில் பெண்கள் அமைப்புகளில் தாக்கங்களுக்கு உள்ளாகும் பெண்களின் பதிவு கணிசமான அளவு உயர்ந்துள்ளது. உப்புசப்பற்ற விடையங்களுக்கும், முக்கியமாக சந்தேகம் எனும் நோய்க்குமே பெண்கள், ஆண்களால் மிக்கக் கடுமையாகத் தாக்கப்படுகின்றார்கள். அமைப்புகளுக்கு வந்து மனம் திறந்து தமது கவலைகளைக் கூறி கண்ணீர் விட்டுச் செல்ல இவர்களால் முடிகின்றது. அடுத்த படியாக அதற்கான தீர்வு எனும் போது தமது சமூகம், குடும்பவாழ்வு, குழந்தைகள் என்ற தயக்கம் தான் இவர்களை ஆட்கொள்கின்றது. தொடர்ந்து பலதரப்பட்ட வன்முறைகளுக்கு முகம் கொடுக்கும் பெண்கள், உளவியல் தாக்கங்களுக்குத் தள்ளப்பட்டு, முடிவில் தவறான முடிவையே நாடுகின்றார்கள். இதனைப் பற்றி எனது மக்களுக்கோ குறிப்பாக இந்த நிலைக்குப் பெண்களைத் தள்ளும் ஆண்களுக்கோ எந்தக் கவலையும் இல்லை.
தமது குடும்ப கௌரவம், கலாச்சாரம் என்று வரட்டுப் பிடி பிடித்துத் தொங்குகின்றார்கள். இப்படியே போனால் மனைவியின் கற்பை நிரூபிக்க தீ மிதிக்கச் சொன்னாலும் சொல்வார்களோ என்று சந்தேகமாக உள்ளது.
செப்டெம்பர் மாதம் 21ம் திகதி வெளியான உலக சுகாதார அமைப்பின் கணிப்பின்படி 2020 ஆண்டு "யூனிபோல டிப்பிறஷன்” எனும் மனஅழுத்த நோய், மேற்குலக நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தும் இரண்டாவது முக்கிய நோயாகக் கணிக்கப்பட்டுள்ளது. இந்நோயினால் ஆண்களை விடப் பெண்களே அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகின்றது. தற்போது உலகளாவிய அளவில் 121 மில்லியன் மக்கள் மனஅழுத்தம், உளவியல் தொடர்பான நோயினால் பீடிக்கப்பட்டிருக்கின்றார்கள். கடந்த ஒரு வருடத்திற்குள் 6சதவீதம் பெண்களும், 3சதவீதம் ஆண்களும் இவ்வகை நோயினால் ஒன்றாரியோ நகரத்தில் பாதிப்பிற்குள்ளாகி இருக்கின்றார்கள். அனேகர் 15-25 வயதுக்குள்ளான பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆய்வாளர்கள் தரவுகளை வெளியிட்ட வண்ணம் இருக்கின்றார்கள். பாதிப்பிற்குள்ளாவோர் எங்கே எப்படி உதவிகளைப் பெறலாம் என்று தொலைக்காட்சிகள், பத்திரிகைகள், சுவரொட்டிகள் சுட்டிக்காட்டிய வண்ணம் இருக்கின்றன. இருந்தும் உதவி பெறுவோரின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருக்கின்றது. இதற்கான காரணம் அடையாளம் காணப்படாமை என்பது ஆய்வாளர்களின் கருத்தாக இருப்பினும், எமது மக்கள் எனும் போது அறியாமை, போலி கௌரவம் என்பதே உண்மையாக உள்ளது.

No comments: