Friday, September 16, 2005

Water

The scriptures say that a widow has three options:

Marry your husband younger brother, burn with your dead husband or lead a life of self-denial.


பல வருட போராட்டத்தின் பின்னர் ரொறொண்டோ சர்வதேச திரைப்படவிழாவின் திறப்பு விழா சிறப்புத் திரைப்படமாக தீபா மேத்தாவின் வோர்டர் திரைபடம் வெளிவந்திருக்கின்றது. மண்டபம் நிறைந்த மூன்று காட்சிகளிலும் பார்வையாளர்களின் மனம் நிறைந்த கரகோசத்தைப் பெற்று தீபா மேத்தாவின் நீண்ட நாள் கனவு நிறைவேறியிருக்கின்றது.

திரைப்படம் வெளிவரு முன்பே பலத்த சர்ச்சைகளுக்குள்ளாகியதால் வோர்டர் திரைப்படம் 38களில் இந்து விதவைப் பெண்களின் வாழ்க்கையைச் சுற்றிய கதை என்று பரவலாக எல்லோராலும் அறியப்பட்டிருந்ததால் பார்வையாளர்களின் எதிர்பார்ப்பும் அதைச் சார்ந்தே இருந்திருக்கும்.
சில கேள்விகளை மனதில் விட்டுச் சென்றிருந்தாலும் தீபா மேத்தாவின் வோர்டர் திரைப்படம் அவரது திரைப்படங்களுள் சிறந்த ஒன்றாக கணிக்கப்படக் கூடியது.

பால்ய விவாகம் செய்த சிறுமி ஒருத்தியின் கணவன் இறக்க அவள் விதவையாக அறிவிக்கப்பட்டு உருவ மாற்றத்தோடு வாரநாசியில் இயங்கிக்கொண்டிருக்கும் விதவை ஆச்சிரமத்தில் தந்தையால் கொண்டு வந்து விடப்படுவதோடு திரைப்படம் ஆரம்பமாகின்றது.

மேற்சட்டையின்றி, வெள்ளைச்சேலை, மழித்த தலை, இறுகிய முகம் என்று பல வயதுகளில் கணவனை இழந்த பெண்கள் பாசி படிந்த அந்த ஆச்சிரமத்திற்குள் பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றார்கள். இவர்களின் வாழ்க்கையில் இந்தச் சிறுமியின் வரவால் மாற்றங்கள் ஏற்படுகின்றது.
கேள்விகள் அற்று கணவனை இழந்தால் இப்படித்தான் வாழ வேண்டும் என்று பழகிக் கொண்டவர்கள் மத்தியில் முகமறியா தனது கணவனை சிறுவயதில் இழந்து ஆச்சிரமத்தில் வாழ்ந்து வரும் இளம் பெண் (லீசா ரேய்) தலை மழிக்க மறுத்து பிறர் அறியாத வண்ணம் நாய்க் குட்டி ஒன்றைத் தனக்குத் துணையாக்கி சின்னதாகத் தன்னாலான எதிர்ப்பை தெரிவிக்கின்றாள்.
சாஸ்திரத்தில் எழுதி வைக்கப்பட்டதைக் கேள்வி கேட்டல் தகாது என்ற தயக்கத்தில் ஜடமாக வாழ்ந்து வரும் பெண் சகுந்தலா (சீமா பிஸ்வாஸ்), ஏழு வயதில் நடைபெற்ற தனது திருமணத்தின் போது சுவைத்த லட்டின் நினைவுடனே இனிப்புப் பண்டங்களுக்கா ஏங்கும் பொக்கை வாய் மூத்த விதவையும் அவரின் இறப்பும்,
இவர்கள் அனைவரையும் தனது கைக்குள் வைத்து ஆட்டிப்படைக்கும் தலைவியாக பருத்த உடம்பும், மழித்த தலையுமாக இன்னுமோர் கணவனை இழந்த மூதாட்டி இப்படியாக இறுகிய பாத்திரங்களுடன் அசைகின்றது வோட்டர்.

தனது திரைப்படங்களில் விட்டுக்குடுப்புக்களைச் செய்தோ, அல்லது விரும்பியோ கண்ணுக்குக் குளிர்ச்சியான காட்சிகளை இணைக்கும் தீபா மேத்தா எந்த விட்டுக் கொடுப்பும் இன்றி பாசி படர்ந்த கட்டிடமும் தலைமழித்த வெள்ளைச் சேலைப் பெண்களும் என்று வோட்டரை ஓடவிட்டிருக்கின்றார்.
38களில் கணவனை இழந்த பெண்கள் மிகக் குரூரமாக நடாத்தப்பட்டிருக்கின்றார்கள் என்று சொல்ல நினைத்த இயக்குனர் அதைத் திறம்படச் செய்தாரா என்பது சந்தேகமே. அத்தோடு திரைப்படம் அந்தக்காலம் என்பதால் தற்போது அந்த நிலை மாறி விட்டது என்று அர்த்தமல்ல. இன்றும் இந்தியா மட்டிலுமல்ல புலம்பெயர்ந்த நாடுகளிலும் வாழும் ஆசியப் பெண்களில் பலர் கணவனை இழந்ததால் புறக்கணிக்கப்படுவது இடம்பெறவே செய்கின்றது.
கணவனை இழந்த பெண்களின் உயர்ந்த பட்ச அவலநிலையை தீபா மேத்தா படமாக்கியிருப்பது பாராட்டத்தக்கது, இருந்தும் திரைப்படம் சில கேள்விகளை எனக்குள் விட்டுச் சென்றுள்ளது.
வீட்டு வாடகை, சாப்பாட்டிற்கான பணத்தைப் பெற பெண்களை கோயில்களுக்கு அனுப்பி பிச்சை எடுக்க வைக்கும் தலைவி, அதே நேரம் ஊர் பெரியர் ஒருவரிடமும் பெண்களை அனுப்பி அதன் மூலம் பணம் சம்பாதிக்க முனைவதாகக் காட்டப்படும் போது இப் பெண்கள் கருத்தரிப்பதற்கான வாய்ப்புக்கள் சம்பவங்கள் பற்றி எந்த இடத்திலும் காட்டப்படவில்லை.
இது விபச்சார விடுதியில்லை விதவைகள் ஆச்சிரமம் என்று குரல் எழுப்பும் பெண்ணே எந்த எதிர்ப்பும் இன்றி ஊர் பெரியவரிடம் சென்று வருவதும், பின்னர் தான் காதலிக்கும் இளைஞன் அந்தப் பெரியவரின் மகன் என்று அறிந்த போது திருமணம் செய்ய மறுத்துத் தற்கொலை செய்து கொள்வதும் செயற்கையாகத் தனித்து நிற்கும் காட்சிகள்.

ஊர் பெரியவரின் மகனான காந்தீய வாதியாக வரும் நாயகன் ஜோன் ஏப்றகாம் கணவனை இழந்த ஒரு அழகிய இளம் பெண்ணை மணக்க முன்வருகின்றார், ஆனால் அவள் இறந்த போது பெரிதாக அலட்டிக்கொள்ளில்லை. தந்தை மேலிருந்த நம்பிக்கை, மதிப்பு அழிகின்றது. ஊரை விட்டுப் போகின்றார். தீவிர சிந்தனை கொண்ட இளைஞன் ஒருவனை வெறும் சுயநலவாதியாகச் சித்தரிப்பதோடு நிறுத்திக்கொண்டு விட்டார் இயக்குனர்.
சாஸ்திரங்களுக்குக் கட்டுப்பட்டிருந்த சகுந்தலா, நாயகி ஒருவனைக் காதலிக்கின்றாள் திருமணம் செய்ய முடிவெடுத்துவிட்டாள் என்ற போது திடுக்கிடுவதும், அவளை ஆச்சிரமத்தலைவி பூட்டி வைத்த போது மௌனமாக இருப்பதும், பின்னர் தான் தொண்டு செய்யும் சமய தலைவரின் மூலம் விதவைகள் மறுமணம் பற்றிய காந்தியின் உரையைக் கேட்டுத் தெரிந்து கொண்டு கதவைத் திறந்து நாயகியை வெளியே அனுப்பி வைப்பதும், சாஸ்த்திரங்களும் சம்பிரதாயங்களும் எப்படி எல்லாம் பெண்களைச் சிந்திக்க விடாமல் பண்ணிவிடுகின்றன என்பதைக் காட்டுகின்றது.
பெண் விடுதலைக்கும், சாதீய ஒழிப்பிற்கும் பெரியார், க.அயோத்திதாசர், அம்பேத்கர் போன்றோர் குரல் கொடுத்த அளவிற்கு காந்தியின் குரல் ஓங்கி ஒலித்ததா என்பதில் கேள்வியிருப்பினும் திரைப்படம் என்ற வந்து விட்டால் இந்திய மக்களின் விடுதலைக்கும் பெண்கள், தலித்துகளின் விடுதலைக்கும் போராடியவர் என்று காந்தியதைத் தவிர வேறு எவரும் காட்டப்படுவதில்லை என்றாகிவிட்டது.
திரைப்படத்தின் உச்சக்கட்டமாக சிறுமியை ஊர் பெரியவரிம் மூதாட்டி அனுப்பிவிட்டாள் என்று தெரியவந்தபோது சகுந்தலா வெகுண்டு எழுவதும், துவண்டு போய்த் திரும்பிய சிறுமியைத் தூக்கிக்கொண்டு ஆச்சிரமத்தை விட்டு ஓடுவதும், ஊர் ரெயில் நிலையத்தில் உரை நிகழ்த்தி விட்டுத் திரும்பும் காந்தியிடம் இந்தச் சிறுமியையும் அழைத்துக் கொண்டு போங்கள் என்று கதறி அவளை ரெயிலில் ஏற்ற முயன்று தோற்று இறுதியில் காந்தியுடன் ஊர் திரும்பிய நாயகன் சிறுமியை இழுத்து ரயலில் ஏற்றித் தன்னோடு அழைத்துச் செல்வதும் பார்வையாளர்களின் மனதில் நோவை உண்டாக்கிய காட்சிகள்.

விதவைகள் ஆச்சிரமத்தில் வயது போன மூதாட்டிகளின் உருட்டல், அதட்டலைத் தவிர பெரிதாகக் கட்டுப்பாடுகள் இருப்பதாகக் காட்டப்படவில்லை. ஒரு பெண் விரும்பினால் வெளியே போக முடியும் மீண்டும் திருமணம் செய்து கொள்ள முடியும் என்று மிகவும் இலகுவாகக் காட்டப்படுகின்றது. 38களில் மிகக் கடுமையான கட்டுப்பாடுகள் கணவனை இழந்த பெண்களுக்கு இருந்திருக்கின்றது என்பதை அந்தக் காலப்பதிவுகள் காட்டுகின்றன. இத்திரைப்படத்தை இயக்குவதற்காக 2000ஆம் ஆண்டு வாரநாசி சென்ற இயக்குனர் படப்பிடிப்பிற்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கண்டன ஊர்வலங்கள், அச்சுறுத்தல்கள், எச்சரிக்ககைகளுக்குப் பயந்து படப்பிடிப்பை நிறுத்தியது இன்றும் இந்த அவலநிலை பெண்களுக்கு இருக்கின்றது என்பதைக் காட்டுகின்றது. இது வோட்டர் மூலம் இன்னும் ஆழமாகப் பெண்களின் பாதிப்புக்களைக் காட்டியிருக்கலாமோ என்று எண்ணத் தொன்றுகின்றது.

திரைப்படம் முற்ற முழுதாக இலங்கையில் படப்பிடிப்பு செய்யப்பட்டிருக்கின்றது. இந்தியப் பாதிப்பை அதிகம் தரும் இப்படியான ஒரு அழகிய இடம் இலங்கையில் இருக்கின்றதா?