Wednesday, March 30, 2005

புரிய முனைதல்

மூர்க்கமாய் திணிக்கப்பட்ட
நம்பிக்கைகளுடன்
சுருண்டு கிடந்த எனை
சிறகு விரித்து புள்ளினமாக்கி விட்டீர்கள்.

தேடலை தூண்டி விட்டு
வினாக்களை விழுங்கி
அராஜகத்தின் நிழலையும்
நிராகரிக்க கற்றுத் தந்தீர்கள்.

குனிந்த தலையை
நிமிர வைத்துப் பாராட்டி
ஆழ்கடலின் மௌனத்திற்கு இழுத்துச் சென்று
பேசவும் கற்றுத் தந்தீர்கள்

பரந்து!
விரித்த சிறகுடன்
மேலே பறந்து தூரமாய் மறைந்து
புள்ளியைக் காண முனைகையில்
மீண்டும் இழுத்து வந்து
மாராப்பு விலகுது
இழுத்து மூடு என்று
மூளியாக்கி
சிறகைத்
கத்தரிக்கின்றீர்கள்.

Tuesday, March 29, 2005

i am Sam

ஒரு குழந்தைக்குத் தந்தையாக இருப்பதற்கு வேண்டிய தகுதி என்ன என்று கேட்பின் பல பதில்கள் வரும். "i am Sam" திரைப்படத்தில் வரும் தந்தை சாம்மிற்கு(Sean Penn) பாசத்தைத் தவிர வேறு தகுதிகள் இல்லை. பிறந்த அடுத்த நிமிடமே தாயினால் புறக்கணிக்கப்பட்ட தனது மகள் லூசியை (Dakota Fanning) பாசத்தைக் கொட்டி வளர்க்கும் 40 வயது autistic தந்தையிடம், லூசிக்கு 7 வயது ஆன போது, உன் மகளுக்குத் தந்தையாக இருக்கும் தகுதி உனக்கல்லை என்று கூறி லூசியை சமூகபாதுகாப்பாளர்கள், தத்தெடுக்கும் ஒரு பெற்றோரிடம் கொடுத்து விடுகின்றார்கள்.

லூசியைத் தன்னிடமிருந்து பிரித்ததற்கான முழுமையான காரணத்தைக் கூடப் புரிந்து கொள்ள முடியாத நிலையில் சாம் நல்ல ஒரு லோயரை வைத்து வாதாடி லூசியைத் திருப்பிப் பெற்றுக்கொள்ள முடியும் என்ற அறிவுரைகளைக் கேட்டுத் தன்னால் பொருளாதார ரீதியாக முடியுமா என்று கூடச் சிந்திக்காமல் மிகப்பிரபல்யமான ஒரு பெண் வக்கீலிடம் (Michelle Pfeiffer) சென்று "எனக்காக வாதாடி என் மகளைப் பெற்றுத் தா" என்று கேட்டு முதலில் அவளால் உதாசீனம் செய்யப்பட்டாலும், தன்னுடன் வேலை செய்பவர்களுக்குக் தான் கருணை உள்ளம் உள்ளவள் என்று நிரூபிப்பதற்காக இலவசமாக வாதாடச் சம்மதித்து வாதாடி தோற்றுப் போகின்றாள். லூசி தத்துப் பெற்றோரிடம் வளர்கின்றாள். சாம் இற்கும் லூசிக்குமான உண்மையான பாசத்தைப் புரிந்து கொண்ட தத்துப் பெற்றோர் லூசியைத் தந்தையிடமே ஒப்படைக்கின்றார்கள்.


மனதைத் தொடும் வகையில் கதை இருப்பினும் சாம் ஆக நடித்த Sean Penn உம் (இப்பத்திற்காக ஒஸ்கா சிறந்த நடிகருக்கா நொமினேட் செய்யப்பட்டவர்) லூசியாக நடித்த Dakota Fanning மிக மிகச் சிறப்பாக நடித்திருப்பினும் திரைப்படம் ஒரு தொலைக்காட்சி நாடகத்தைப் போல் அமைந்திருந்ததால் “Rain Man” ஐப் போலவோ “Beautiful Mind” ஐப் போலவோ பெயர் எடுக்கவில்லை.

தற்போது கனடாவில் பல ஈழத்துக் குழந்தைகள் Autism ஆலும் Down Syndrome ஆலும் பாதிக்கப்பட்டு வருகின்றார்கள். இதற்குக் காரணம் தெரியவில்லை. குழந்தை பிறந்து ஒன்று அல்லது இரண்டு வயதிற்குப் பின்னர்தான் அவர்கள் autistic குழந்தைகள் என்பதைக் கண்டுபிடிக்கின்றார்கள். Down Syndrome போலல்லாது autistic குழந்தைகள் பார்வைக்கு மிகவும் சாதரணமாக இருப்பதால் தாயின் வயிற்றில் இருக்கும் போது ஸ்கானிங் முறையால் இவை கண்டு பிடிக்கப்படுவதில்லை. autistic குழந்தைகள் சாதாரண குழந்தைகளில் இருந்து சில வேறுபாடுகளைக் கொண்டிருக்கின்றன. உதாரணமாக உரத்துப் பேசுதல், உரத்துச் சிரித்தல், மற்றவர்களுடன் பழகும் முறை தெரியாது இருத்தல், அல்லது தனித்து எல்லாவற்றையும் செய்ய விரும்புதல் சு10து,வாது,வஞ்சகம் போன்றவை தெரியாமல் (இந்த உலகில் வாழ மிக முக்கியமான தகுதிகளான) இருத்தல். இதனால் பலரிடம் தொடர்ந்து ஏமாற்றப்படலும், தாம் ஏமாற்றப்பட்டிருக்கின்றோம் என்பதும் தெரியாமல் இருத்தல். இக்குழந்தைகளுக்கு அனேகமாக பாடசாலைகளில் தனிக்கவனம் வேண்டி தனியாகப் பாடம் எடுக்கின்றார்கள். இவர்களில் சிலர் படிப்பில் (முக்கியமாகக் கணிதத்தில்) மிகவும் சிறந்து காணப்பட்டாலும் குழுவாகச் சேர்ந்து வேலை செய்யும் பக்குவம் இவர்களுக்கு இல்லாததால் சாதாரண கல்வி முறையை இவர்கள் பூர்த்தி செய்ய முடியாத நிலையும் இருக்கின்றது.

கமலஹாசன் இன்னும் "I am Sam" ஐப் பார்க்கவில்லைப் போலும் பார்த்திருந்தால் நிச்சயமாகத் திரைப்படமாக்கியிருப்பார். கமல் எடுக்காவிட்டாலும் பரவாயில்லை எனக்கு வசதி வரும் போது எடுக்கும் எண்ணம் இருக்கின்றது. எனக்குப் பிடித்த திரைப்படங்களில் "I am Sam"
உம் ஒன்று.

Director - Jessie Nelson
Cast - Sean Penn, Michelle Pfeiffer, Dakota Fanning, Dianne Wiest

பஞ்சி

நான் ஒரு இந்திய நண்பருடன் தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்தேன். நான் அவருடன் கதைக்கும் போது (பேசும் போது) முடிந்தவரை எனக்குத் தெரிந்த இந்தியத் தமிழில் உரையாடுவது வழக்கம். அவர் எப்போதும் என்னை அது செய்யுங்கள், இது செய்யுங்கள் என்று "என்கரோஜ்" பண்ணும் ரகம். அன்றும் அது செய்யுங்கள், இது செய்யுங்கள் வழ வழ தான். எனக்கு விசராக வந்தது (பிராந்து??) நான் சொன்னேன் இப்பவெல்லாம் எனக்கு ஒரே "பஞ்சி" எண்டு. மறுமுனை மௌனமாகி விட்டது. பின்னர் அவர் கேட்டார் “பஞ்சி” எண்டால் என்ன?. உடனே என் மனத்தளத்தில் இந்தியத் திரைப்பட டயலாக்கை எடுத்து ஓட விட்டு பஞ்சிக்கு இந்தியத் தமிழ் பிடித்து “சோம்பல்” என்று சொன்னேன். சிறிது நேரத்தின் பின்னர் கேட்டார் “விசர்” எண்டால் என்ன என்று? நான் அவரிடம் கேட்டேன் என்னுடைய காசில் வாய் ஓயாமல் நான் கதைத்துக் கொண்டிருக்கின்றேன். நான் கதைத்ததில் உங்களுக்கு எவ்வளவு விளங்கியது? அவர் நீங்கள் பேசுவது புரிகின்றது ஆனால் எனக்குத் தெரியாத எம்மக்களிடத்தில் புளக்கத்தில் இல்லாத பல தமிழ் சொற்கள் வந்து போகின்றன அதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம்தான் என்றார். நான் விசர் எண்டு விட்டு வைத்து விட்டேன்.

நான் இந்தியா சென்றிருந்த போது சாலிக்கிராமத்தில் ஏ.வி எம் ஸ்ரூடியோக்கு அருகில் மூலிகை முறையால் முகத்தைச் சுத்தம் செய்யும் (பேர்ஷல்) இடம் ஒன்று இருந்தது. கனேடியக் காசுடன் ஒப்பிடும் போது மிகவும் குறைவாக இருந்தது எனவே செய்வதற்காக உள்ளே சென்றேன். பல பெண்கள் இருந்தார்கள். எனக்குச் செய்த பெண் கனேடிய வாழ்க்கை அனுபவங்கள் என்று கதை கேட்டவண்ணம் தனது வேலையைத் தொடர்ந்தார் நான் கொஞ்சம் வேகமான வழ வழக்காறி. கண்ணை மூடி அனுபவித்த படியே என் அனுபவங்களை எடுத்து விட்டுக்கொண்டிருந்தேன். அவர் மௌனமாக இருந்தார். சிறிது நேரத்தின் பின்னர் அந்தப் பெண் என் கண்களுக்கு குளிர்மைக்காக வேண்டிய பொருளை வைத்துவிட்டு வெளியில் போய் மற்றைய பெண்களிடம் அந்தப் பெண் சிங்களத்தில் ஏதேதோ பேசுது தனக்கு ஒன்றும் புரியவில்லை என்றார் எனக்கு ஐயோடா என்றிருந்தது. அவர் திரும்பி வந்த போது நான் கூறினேன் எனக்குச் சிங்களத்தில் ஒரு வார்த்தை கூடத் தெரியாது என்று. அவர் ஓ.. என்று விட்டு இதுதான் யாழ்ப்பாணத்துத் தமிழா? இலங்கையரின் தமிழ்தான் சுத்தமான தமிழ் என்கின்றார்களே.. எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அப்படியாயின் நாங்கள் பேசுவது என்ன தமிழா வேறு ஏதுமா என்று கேட்டார். நான் சொன்னேன் நீங்கள் பேசியது எல்லாமே எனக்குப் புரிந்தது எனவே அது தமிழ்தான். இலங்கையருக்கு இந்தியத்தமிழோடு நல்ல பரிச்சயம் இருக்கிறது. காரணம் திரைப்படங்கள் சஞ்சிகைகள். தங்களுக்கு இலங்கைத் தமிழோடு அப்படியான உறவு இல்லை அதுதான் காரணம் என்றேன். அவர் சிரித்துக் கொண்டார்.

தொடர்ந்து எழுதப் பஞ்சியாக இருக்கிறது..

Thursday, March 24, 2005

படைப்புக்களும் பாதிப்புக்களும்..

பாதிப்பு இல்லாத படைப்புக்களே இல்லை. எந்த ஒரு கலைஞரும் தனக்கு ஆர்வமுள்ள துறையில் அதிக நேரம் செலவிட்டு அதனை ஊடுவிப்போகும் போது அங்கே தரமான படைப்புக்களால் அவனையும் அறியாமல் பாதிப்புக்கள் ஏற்பட்டு விடுகின்றன. சிறந்த ஆங்கில இயக்குனரான Steven Spielberg தனது ஒரு பேட்டியில் போது ஒரு படத்தை இயக்கத் தொடங்கு முன்னர் தான் தன்னைக் கவர்ந்த சில இயக்குனர்களின் படங்களை எடுத்துப் பலமுறை பார்ப்பதாகக் கூறியிருக்கின்றார். அதன் மொழி பெயர்ப்பு copy அடிப்பது என்பதல்ல ஒரு நல்ல படைப்பை நாம் அதிகம் படிக்கும் போதோ ஆராயும் போதோ அதன் பாதிப்பினூடான ஒரு புதிய படைப்பைத் தர முடியும் என்பதே. கனடாவில் வாழும் கவிஞர் செழியன் ஒருமுறை தனக்கு ஒரு நல்ல கவிதையைப் படித்துவிட்டால் தன் மனதில் ஒரு நல்ல கவிதைக்கான கரு வந்து ஒட்டிக்கொள்கின்றது, தன்னால் ஒரு நல்ல கவிதையை அப்போது படைக்க முடிகின்றது என்றும் கூறினார். சிலர் புகழ்பெற்ற கவிதைகளையோ, சிறுகதைகளையோ படிக்கும் போது அதில் வரும் நல்ல சொற்களையும் வசன நடைகளையும் கோடிட்டு விட்டுப் பின்னர் தமது படைப்புக்களுக்குள் அவற்றைப் புகுத்திக் கொள்வார்கள். இதுதான் தவிர்க்கப்பட வேண்டுமே தவிர பாதிப்புக்களை அல்ல.
அடுத்து - ஒருகாலமும் சொல்லப்படாத கருவை எடுத்துத்தான் படைப்புக்கள் படைக்கப்படல் வேண்டும் எனின் படைப்பாளிகள் உலகத்து அத்தனை படைப்புக்களிலும் பரீச்சயம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். இது நடைமுறைச் சாத்தியமாகாது. சொல்லப்படாத கருவென்று ஒன்று இல்லை. சொல்லும் முறையில் புதுமை இருக்க வேண்டும். புதிய யுக்திகள் பாவிக்கப்படல் வேண்டும். இசையை எடுத்துக் கொண்டால் ஏ.ஆர் ரகுமான், தேவா போன்றோர் பல மேற்கத்தையப் பாடல்களைக் copy அடிக்கின்றார்கள் என்ற குற்றச்சாட்டு இருக்கின்றது. ஈரானிய மொழிப்பாடலையும், ஜப்பானியப் பாடல்களையும் நாம் எங்கே கேட்கப்போகின்றோம். அது தமிழ்பாடலுக்கான இசையாக்கப்பட்டு எமக்குச் சந்தோஷத்தை அளிக்கும் பட்சத்தில் அதனை வரவேற்பதில் தவறு ஏதுமில்லை.
ஓட்டுமொத்தமாக எல்லாப் படைப்பாளிகளையும், படைப்புக்களையும் தூக்கி எறிவது என்பது காலஓட்டத்துக்கு ஒவ்வாத பகுத்தறிவற்ற அறியாமையே ஆகும்.

குடும்பம் ஒரு கரடகம் -1

அடக்குமுறைக்குள் பெண்கள் தமது தனித்தன்மையை இழந்து அடிபட்டுப் போகாமல் சுதந்திரமாக வாழ பல வழிகள் இருப்பதாகப் பலர் (எம்மவர்கள் - அதாவது இறுக்கமான கலாச்சாரத்திற்குள்ளிருந்து வந்தவர்கள்) சொல்லிச் செல்கின்றார்கள். குடும்ப அமைப்பு சீராக இருக்கப் புரிந்துணர்வு, விட்டுக் கொடுத்தல் தேவை என்றும் வழி முறைகளையும் சொல்லிச் செல்கின்றார்கள்.
நான் பார்த்தவை, படித்தவை, கேட்டவை என்பவற்றிலிருந்து என் சில கருத்துக்களை இங்கே சொல்ல விரும்பிகின்றேன். (இந்த சமாளிபிகேஷன் விளையாட்டு எனக்குப் பிடிக்காது. ஒப்பீட்டளவில் பாதிக்கப்படும் வீதத்திலிருந்துதான் நாம் கருத்துக்களைச் சொல்ல வேண்டும். எங்கோ ஒரு பெண் ஆணை அடக்குகிறாள் என்று விட்டு அந்த ஆணுக்கு வக்காளத்து வாங்கத் தேவையில்லை)
பெண்கள் சுதந்திரமாக வாழப் பல வழிகள் இருக்கின்றன என்று விட்டு பெண்கள் தனியாக வாழலாம் என்று ஒரு கருத்து வைக்கப்பட்டது. –
இதைச் சற்று ஆராய்ந்து பார்த்தால் - நான் கண்டது. ஒன்று காதல் தோல்வி (காதலித்தவள் என்பதால் திருமணங்கள் பொருந்தி வராமை - இந்த நிலை ஊரில்தான் இருக்கின்றது. தற்போதைய நிலமை தெரியவில்லை முன்பு இருந்தது) வரதட்சணையின்னை (வறுமை) அடுத்து தமது அந்தஸ்த்திற்கு ஏற்ற மாப்பிள்ளை கிடைக்கவில்லை என்று திருமணப்பேச்சை இழுத்தடித்து பெண்ணிற்கு வயது ஏறிப்போய் திருமணமாகாமல் இருந்தல் போன்ற காரணங்களால் பல பெண்கள் தனித்து விடப்பட்டுள்ளார்கள். இது இவர்கள் தாம் தனித்து வாழ வேண்டும் என்று எடுத்துக் கொண்ட முடிவல்ல. எனது சமூகத்தின் சீரழிவால் ஏற்பட்ட நிலமை.
இப்படிப்பட்ட பல பெண்களை எனக்குத் தெரியும். என் கேள்வி இவர்களது பாலியல் தேவைகள் எப்படி எமது சமூகம் பார்க்கின்றது. திருமணம் ஆகாதவர்கள் எனவே இவர்களுக்கு அந்தத் தேவையில்லை என்பதுதான் எனது சமூகப்பார்வையாக உள்ளது. தவறி இவர்கள் யாருடனாவது உறவுகொள்ள நேடிட்டு அது வெளியே தெரியவரும் பட்சத்தில் அவர்கள் ஒதுக்கப்படுகின்றார்கள். இப்படி ஒரு பெண்ணிற்கு ஏற்பட்டு அவர் பின்னர் மனப்பிறழ்விற்கு ஆளான கதை உள்ளது.
திருமணமாகிப் பின்னர் ஒத்துவராததால் பிரிந்த பெண்களை எடுத்துப் பார்ப்போம். கனடாவில் இப்படிப் பல பெண்கள் எனக்குத் தெரிந்து இருக்கின்றார்கள். சிலர் மீண்டும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டுள்ளார்கள். சிலர் பல ஆண்டுகளாகத் தனியே இருக்கின்றார்கள். எனக்குத் தெரிந்த ஒரு பெண்ணின் கதையை இங்கே தருகின்றேன். திருமணமாகி ஒரு குழந்தை கணவனைப் பிரிந்து பல ஆண்டுகளாகத் தனியே வாழ்கின்றாள். (அவளுக்குப் பல ஆண்களுடன் தொடர்பு இருப்பது எனக்குத் தெரியும்). ஒருநாள் தனியே இருக்கும் பெண்கள் பற்றிய கலந்துரையாடல் ஒன்றில் அந்தப் பெண் பேசுகையில் தனக்கு ஆண் துணை தேவையில்லை, எனது குழந்தையை நானே வளர்ப்பேன் என்று மிகவும் திடமாகக் கூறினார். சந்தோஷமாக இருந்தது. ஆனால் ஒருவர் எழுப்பிய கேள்வி தாங்கள் இன்னும் இளமையாகத்தான் இருக்கின்றீர்கள் தங்களுக்கென்று ஒரு துணை வேண்டுமென்ற எண்ணம் எழவில்லையா? அந்தப் பெண் கூறினார் நான் கலைக்காக எனது வாழ்வை அர்பணித்து விட்டேன் அது போன்ற எண்ணங்கள் எனக்கு வருவதில்லை என்று. இந்தப் பதில் எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. இவர் தனித்து இருக்கும் பெண்களுக்கு என்ன கூற வருகின்றார்? ஒரு பெண் தனது பாலியல் தேவையைப் பூர்த்தி செய்வது தவறு என்பது போன்ற அவர் கருத்து. மிகவும் வேசமாகவும் தன்னை மற்றவர்கள் மத்தியில் மிகவும் தூய்மை?? என்பது போலும் போலியாக அவர் கூறிய கருத்து? இதைத் தான் எமது சமூகம் உருவாக்கி விட்டிருக்கின்றது. துணிந்து ஒரு பெண் தனது கருத்தைக் கூறின் அவர் முத்திரை குத்தப்படுவாள். புறக்கணிக்கப்படுவாள். எனவே வேசம் போடு என்று மிகவும் அழகாகப் பெண்களுக்குக் கற்றுக்கொடுத்திருக்கின்றது.
எம்மோடு அழிந்த போகட்டும் இந்த வேஷம் போடும் வாழ்க்கை எமது சந்ததியாவது உண்மையாக வாழ்ந்து முடிக்கட்டும். எமது மூடநம்பிக்கைகளையும், கட்டுப்பாடுகளையும் அவர்களுள் திணிக்காமல் விடுவோம்.

தொடரும்..

Wednesday, March 23, 2005

Bride and Prejudice


Jane Austen இன் நாவலான Pride and Prejudice ஐத் தழுவி Bride and Prejudice எடுக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு சிறந்த இயக்குனராக இருந்தாலும் ஒரு முன்னணி நடிகையையோ, நடிகைரையோ திரைப்படத்தில் நடிக்க வைக்கும் போது திரைக்கதையை அவர்களுக்குச் சார்பாக மாற்றி அமைத்துவிடுகின்றார்கள். அந்தத் தவறைச் செய்ய Gurinder Chadha வும் மறக்கவில்லை. உலக அழகியும் முன்னணி நடிகையுமான ஐஸ்வர்யா ராய் தனது படத்தில் நடிக்கின்றார் என்றவுடன் அழகிற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்துத் ஒரு அழகாக நகைச்சுவை கலந்த திரைப்படத்தைத் தந்திருக்கின்றார். Pride and Prejudice பார்க்கும் போது ஏற்பட்ட எந்தவித மனத்தாக்கமும் Bride and Prejudice ஐப் பார்க்கும் போது ஏற்படவில்லை. இந்தியாவிலும்,இங்கிலாந்திலும்,அமெரிக்காவிலும் என்று அழகாகப் பெண்களை முக்கியமாக ராயை அலையவிட்டிருக்கின்றார். மசாலா இந்தியத் திரைப்படத்தின் போமுலாவில் சில பாடல் காட்சிகளும்,ஒரு சண்டையும்,கொஞ்சம் கொமெடியும் என்று போர் அடிக்காத திரைப்படம. பொப்கோனைக் கொறித்தபடியே ஒரு நாள் பொழுதைப் போக்கலாம்.

அடுத்தடுத்து நான்கு பெண்களைப் பெற்றுவிட்டு அவர்களுக்கு தான் நினைத்தபடி சீதணம் கொடுத்து பெரிய இடத்தில் கலியாணம் கட்டி வைக்க முடியாமல் போய் விடும் என்று பயந்து வெளிநாட்டிலிருந்து வரும் இளைஞர்களின் பார்வையில் தனது மகள்களை நிறுத்தி வைக்கும் தாயின் கரெக்டர் நகைச்சுவையாக இல்லை.. பாத்துப் பாத்து அலுத்து விட்ட விடையம் குமட்டிக்கொண்டுதான் வருகின்றது.

சும்மா சாட்டுப் போல் சில இடங்களில் சிந்திக்கத் தெரிந்த பெண்ணாக ராயைச் சித்தரித்து அவரை விட்டு மேல்மட்ட அமெரிக்கர்களை ஏளனம் செய்வது, இந்தியாவின் சிறப்பை எடுத்துரைப்பது போன்று காட்சிகள் யதார்த்தமாக இல்லை. ராயை அழகு பொம்மையாய் சித்தரிப்பதைத் தான் அழகாகச் செய்துள்ளார்கள். பிரமாண்டமான பட நிறுவனங்களின் பண உதவியுடன் எடுக்கப்பட்ட Bride and Prejudice வசு10லில் வெற்றியைத் தந்ததா தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை முற்றமுழுதான ஒரு தோல்விப்படம். கலர் பாக்க விரும்புவோர் பாக்கலாம்.

Friday, March 18, 2005

பிளாஸ்டிக்...

விண்ணென்று விறைத்ததுபோல் அசையாதிருந்தேன் கட்டிலில். எட்டி எட்டிப் பார்த்துச் சென்றன என் செல்வங்கள். ராகம் போட்டு வாய் பிளந்து பால் வடிய சிரித்துக் கொண்டிருந்தது இன்னுமொன்று பக்கத்தில். என் கடுப்பு எவ்வளவு நேரம். சிதைந்து விடும் விரைவில். இதுதானே என் சுபாவம். எல்லை என்பதாய் ஏதோ வரும். பின்னர் புஸ்ஸென்று மறைந்து விடும். இன்றும் சில மணிநேரம் சிந்திக்கக் கிடைத்தால் ஏதும் செய்து விடுவேனோ என்று அஞ்சியே காலங்கள் கரைந்து கொண்டிருந்தன. இன்றும் அதுபோல் தான்.
பட்டு வேட்டி அவன் உடுத்தாயிற்று.. பட்டில் என் செல்வங்களும் பழபழத்தன. இனி பட்டுடுத்தி பிளாஸ்டிக் பொட்டு பூ வைத்து நானும் புறப்பட வேண்டும். இது எழுதாத எழுத்து. குளிரோ வெய்யிலோ வார இறுதியில் முதுகு கனக்கும் பாரத்துடன் நீண்ட பயணம் போல் கழிந்து கொண்டிருந்தது. பையைத் திறந்து பார்த்தேன். பால் போத்தல், போத்தல்சாப்பாடு, டயப்பர், வீணீர் துடைக்கும் துண்டு, சு10ப்பி, மாற்றுடுப்பு, கம்பளி என்று கச்சிதமாய் எல்லாம் இருந்தது. நிமிர்ந்து பார்த்தேன் நிறைவாய்ச் சிரித்தான். எப்படிக் குறைகாண. மை நிரம்பிய கண்களுடன் தொடர்ந்தேன் அவனை. தூக்கிப்பிடித்த பட்டுப்பாவாடையுடன் ஓடிச்சென்று காருக்குள் தம்மைப் புகுத்திக்கொள்ளும் என்ர பெட்டைகளின் சிரிப்பை விட என்ன வேணும் எனக்கு. என் முகத்திலும் புன்னகை.
வியர்வை முகத்திலிருந்து வழிந்து கழுத்தால் எதையோ தேடி உள்ளே சென்றது. வாள், வாள் என்று கத்திமுடித்து விம்மலுடன் நித்திரையாய் போயிருந்தான் என் மகன். பட்டிண்கள் கழன்ற மேற்சட்டையுடன் ஓடித்திருந்துகொண்டிருந்த என் பெட்டைகள், குத்துவிளக்கடியில் வரும்போது மட்டும் தானாகவே தலைதிருப்பிக் கண்காணித்துக்கொண்டிருந்தான் நண்பர்களுடன் அரட்டையடித்துக்கொண்டிருந்த என் கணவன். வயிறு முணுமுணுத்தது இன்னும் பொம்பிள்ளையே மணவறைக்கு வரவில்லை.. குடிக்கவாவது ஏதாவது தரலாமே. பச்சை உடம்புக்காரி. என்ர பெட்டைகளுக்கு சொந்தங்கள் இல்லாத இடத்திலதான் மாப்பிள்ளை எடுக்கவேணும். எல்லாமே போலியாயிருந்தது. அந்த எல்லை வந்துவிடுமோ என்று அஞ்சி மகனை அணைத்தபடி மேலோட்டமாய் பார்வையை ஓடவிட்டேன்.. பட்டுக்களின் நிறங்கள் இப்போதெல்லாம் எனக்குப் பயத்தைக் கொடுத்தன. ஓடிய பார்வையில் பலமுகங்கள். தெரிந்தவை தெரியாதவை எல்லாமே எனக்குப் பிடிக்காததாய். ஏனிந்த தண்டனை எனக்கு. அலுப்பு வாசல் வரை வந்தபோது அவன் கண்களை நான் சந்தித்தேன். பார்வை அவனைக் கடந்தபோது அவன் பார்வை என்னில் உற்று நிப்பது தெரிந்தது. குனிந்து பார்த்தேன் சீலை சரியாகவே இருந்தது. திரும்பிப்பார்த்தேன் சுவர்தான் தெரிந்தது. அவன் புன்னகைத்தான். என்னை நோக்கி நடக்கத்தொடங்கினான். நான் எதேட்சையாய் முகத்தை வைத்துக்கொண்டு பக்கத்தில் இருந்தவளிடம் எதையோ கேட்டு வைத்தேன் அவள் என்னை வினோதமாகப் பார்த்தாள். நான் சிரித்தேன். அவன் கால்கள் என் கண்களுக்குள் தெரிந்தது. கறுப்பு சப்பாத்து, கறுப்பு பாண்ஸ், கோட் கச்சிதமாய் இருந்தது.
வேட்டியுடன் இன்னும் அழகாய் இருப்பான். நான் பேசாமல் இருந்தேன். அவன் சிரித்தான் பின்னர் கேட்டான் “நீ.. நீங்கள் மேகலாதானே..”? நான் திடுக்கிட்டு என் கணவனைப் பார்த்தேன் அவன் ஆழமாக எதையோ நண்பர்களுடன் வாதித்துக்கொண்டிருந்தான்.. அனேகமாக இலங்கை அரசியலாய் இருக்கலாம். இனி அவன் என்னைத் திரும்பிப்பார்க்கக் பல மணிநேரங்களாகும். பெட்டைகளும் மூலையில் இருந்து வேறு குழந்தைகளுடன் நுள்ளுப்பிராண்டி கிள்ளுப்பிராண்டி விளையாடிக்கொண்டிருந்தன. எல்லாக் குழந்தைகளுக்கும் அந்த விளையாட்டுத் தெரிந்திருந்தது எனக்கு அதிசயமாய் இருந்தது. எல்லா வீட்டிலும் அப்பம்மா இருக்குப்போல.. நான் ஆழ்ந்த நித்திரையில் இருந்த மகனை சும்மா ஆட்டினேன். ஊரிலும் கனடாவில் நான் போன பாடசாலைகள் வேலைத்தளங்கள் திருமணங்கள் சாவீடுகள் என்று ஒரு முறை நினைவிற்குக் கொண்டு வர முயன்றேன்.. இந்தக் கருப்புக் கோட்டுக்காரனின் முகம் தட்டுப்படவில்லை. அவன் சிரித்தான்.
“என்ன நான் கேட்டதுக்குப் பதிலைக் காணேலை”
பக்கத்தில் இருந்தவள் தன் கற்பை பாதுகாக்க எண்ணி எழுந்து சென்று விட அவன் இருந்து கொண்டான். ஒரு விதமான விலையுயர்ந்த மணம் அவனிடமிருந்து வெளிவந்தது. நிச்சயமாக எனக்கு அவனைத்தெரிய நியாயம் இல்லை. என் சீலையில் பொட்டில் மேக்கப்பில் கவனம் எடுக்காததற்காய் இப்போது வருந்தினேன். பசியால் உறுமும் பச்சை வயிறு. வுhய் திறந்தால் மணக்குமோ என்ற அச்சம் எனக்கு. என்ன என்பதாய் புருவம் உயர்த்தினேன். அழகான அளவான அந்தச் சிரிப்புடன் மீண்டும் கேட்டான்
“நீங்கள் மேகலா தானே”
அளவாக நானும் வாய் திறந்து
“ஓம் நீங்கள் ஆர் என்ர கஸ்பண்ட பிரண்டோ அவரும் இஞ்ச வந்திருக்கிறார்”
அகலமாக உடலுடன் நெற்றியில் குங்குமம் கையில் குழந்தை என்று இருந்து கொண்டு எதற்காக அவசரமாக எனக்குக் கலியாணம் முடிந்து விட்டதையும் கணவன் அங்கே வந்திருப்பதையும் சொல்ல முயல்கிறேன். ஆசைக்கு அளவே இல்லை..
அவன் கண்கள் ஒரு முறை மிளிர்ந்து அடங்கியது எனக்குப் பயத்தைக் கொடுத்தது. அவன் சிரித்தான் இப்போது வாய் திறந்து பற்கள் தெரிந்தன. டெண்ரிஸ்ஸிடம் ஒழுங்காப் போறான் போல.. டெண்ரல் பெனிபிட் இல்லாத என்ர மனுசன்ர வேலை மேல் எனக்கு கோபம் வந்தது.
“நீங்கள் தின்னவேலி மசுக்குட்டி மாஸ்டரின்ர மகள்தானே..”
அவன் தோற்றத்திற்கும் வார்த்தைகளுக்கம் ஒத்துவராமல் இருந்தது எனக்குப் பிடித்திருந்தது. நான் சிரித்தேன்.. அந்தஸ்த்து இடைவெளி குறைந்து விட்டிருந்தது.
“நீங்கள்.. எங்கேயோ பாத்தமாதிரி இருக்கு ஆனால் ஞாபகந்தான் வரேலை..”
சும்மா பொய் சொன்னேன். “என்ன.. நீங்கள் என்னை மறந்திட்டீங்கள்..”
பொய்க் கோபத்துடன் அவன் சிணுங்கினான்.. கணவன் இன்னும் ஆக்ரோசமாகக் கதைத்துக்கொண்டிருந்தார். பெட்டைகள் குப்புறக்கவிண்டிருந்து எதோ கதைத்துக்கொண்டிருந்தார்கள். என் அடிவயிற்றில் ஒரு வித நாதம் எழுந்தது. அவன் சிணுங்கலில் உரிமை தெரிந்தது. நான் பாடசாலையில் ஒருத்தனையும் காதலிக்க அனுமதிக்கப்பட்டதில்லை.. கள்ளமாக மனதுக்குள் காதலித்தது கௌரியின் அண்ணனை மட்டும்தான். இது அவனில்லை.. கனடாவில் அப்பிடி இப்பிடி ஒருநாள் சலனங்கள் வந்திருந்தாலும் இந்தளவிற்கு கச்சிதமானவனை நான் கனவில் கூட நினைத்தில்லை..
“இன்னும் உங்களுக்கு நினைவுக்கு வரேலை போல என்ன..”
அவன் குனிந்து தன் முகத்தை எனக்கு அருகில் கொண்டு வந்தான். நான் முகத்தை இழுத்துக்கொண்டேன். அவன் தன் கன்னத்தைத் தடவியபடியே “மசுக்குட்டி மாஸ்டரின்ர அடி இன்னும் எனக்கு விண்விண் எண்ட மாதிரி இருக்கு” என்றான். அவன் கன்னங்கள் சிவந்து போக கண்களில் எதுவோ தெரிந்தது.. நான் எல்லாவற்றையும் ஒரு கணம் மறந்து அவன் கண்களைப் பார்த்தேன். அவனை இப்போது அடையாளம் தெரிந்தது. எனக்கு வோஸ்ரூமுக்கு போக வேணும் போல் இருந்தது அடக்கிக்கொண்டேன் சுகமாக இருந்தது. “சங்கரா?” சின்னதாக ஒரு குழறலுடன் கேட்டேன். அவன் சிலோ மோஸனில் “ஓம்” என்று தலையசைத்தான். என் உள்ளங்கைகள் குளிர மகன் அசைந்தான். ஒரு பெரிய வட்டத்திற்குள் விழுவது போலிருந்தது எனக்கு.. என்னை நிதானப்படுத்த முயன்று முயன்று தோற்றுத்தோற்று கடைசியில் கேட்டேன்
“எப்பிடி இருக்கிறீங்கள்.. உங்கட அப்பா அம்மா குடும்பம் எல்லாம் எங்க..” அவன் தலையசைத்து ஒரு விதமாகச் சிரித்த படியே
“எல்லாரும் இஞ்சதான் இருக்கீனம்.. ரேணு கலியாணம் கட்டி லண்டனில இருக்கிறாள்..” “உனக்குக் கலியாணம் முடிஞ்சுதா?”
மனதுக்குள் நான் கேட்க.. “நான் இன்னும் கலியாணம் கட்டேலை..” என்றான் அவன். மேளச்சத்தம் அளவுக்கு அதிகமாய் இருப்பதுபோல் பட்டது.. அவன் கலியாணம் கட்டாதது எனக்கு ஏனோ சந்தோஷத்தைத் தந்தது. அவன் என் மகனின் விரல்களைத் தடவி விட என் உடல் புல்லரித்தது.

வீடு அமைதியாக இருந்தது.. அமைதியென்றால் இது மயான அமைதி பெரிய இழப்பின் பின்னர் வரும் அமைதி.. ஆனால் இங்கு இழப்பு இனிமேல்தான்.. அக்காவின் விசும்பல் சத்தமின்றி சுவர்களில் மோதியவண்ணம் இருந்தது ஆச்சி இருமல்களை விழுங்கிக்கொண்டிருந்தாள். அம்மா சுவரில் சாய்ந்து ஏமாற்றியவன் வருகைக்காய் காத்திருக்கும் கதாநாயகிபோல் காட்சியளித்தாள்.. நான் அழுவதற்கு என்னைத்தயார் செய்த நிலையில் குப்புறப்படுத்திருந்து பென்சிலால் சத்தமின்றிச்சித்திரம் வரைந்து கொண்டிருந்தேன்..
மசுக்குட்டி மாஸ்டர் வீடு அடிக்கடி இப்படிக்காட்சியளிக்கும்.. இதற்கெல்லாம் காரணம் இந்த வீட்டிலிருக்கும் பெண்கள்.. அது என்னில் தொடங்கி ஆச்சிவரை வயது வேறுபாடின்றி இருக்கும்.. பெண்கள் தவறு செய்யப்பிறந்தவர்கள்.. தவறு செய்தவண்ணமே இருப்பார்கள்.. ஆண்களுக்கு மானம் போகும்.. தவறை தட்டி நிமிர்த்தி நேர்த்தியாக்கி ஒருவாறு பெண்களைக் காப்பாற்றி வருகின்றார்கள்.. பெண்கள் தவறு செய்து தவறு செய்து ஆண்களின் கருணையால் ஏதோ அழிந்து போகாமல் இன்னும் வாழ்ந்த வண்ணமிருக்கின்றார்கள்..
எனது அக்காள் எனப்படும் பதினெட்டு வயது மங்கை மகா தவறை செய்துவிட்டாள்.. எனது குடும்பத்திற்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச மானத்தையும் தன் நடத்தையால் கெடுக்கப்பார்க்கின்றாள்.. இனி வீட்டுத்தலைவன் வரவேண்டும்.. அவளைத்தட்டி நிமிர்த்தி தவறை உணரப்பண்ணி வீட்டுமானத்தைக் காப்பாற்ற வேண்டும்.. அதற்காகத்தான் இந்தக் காத்திருப்பு.. தன்னோடு படிப்பவன் பாடப்புத்தகம் கேட்டான் குடுத்தேன்.. எனக்கும் அவனுக்கும் வேறு விதமாக ஒன்றுமில்லை அக்காள் விம்மல்களுக்கிடையில் சொல்லிச்சொல்லிக் களைத்துவிட்டாள்.. பாடப்புத்தகம் ஒரு பெடியனுக்குக் குடுத்தது முதல் தவறு அதுவும் இளித்தபடியே குடுத்தது மகா தவறு.. பாடப்புத்தகத்துக்குள் அக்காள் மறைத்து வைத்த காதல் கடிதத்தைப் பெற்று வர மசுக்குட்டி மாஸ்டர் பெடியன் வீட்டிற்குப் போய் விட்டார்.. கடிதம் இருக்குதோ இல்லையோ அக்காள் நிச்சயம் தட்டி நிமிர்த்தப்படுவாள்.. காரணம் பெண்கள் எப்போதுமே தவறு செய்யப்பிறப்பவர்கள் ஆண்கள் அவர்களைத் தட்டி நிமிர்த்தி வாழப்பழகிக்கொடுப்பவர்கள்.. சட்டியில் மீன் குழம்பு காய்ந்து போயிருந்தது.. எனக்கு வயிறு அழுதது.. இனிமேல் இரவுக்குச் சாப்பிட்டால்தான்..

இன்றும் சங்கர் வந்தான்.. அவன் வருவான்.. ஒவ்வொருநாளும் வருவான்.. இல்லாவிடில் நான் அவன் வீட்டிற்குப்போவேன்.. இது எப்படியோ எழுதாத எழுத்தாகிவிட்டது.. முற்றத்து நாவல்பழம் பொறுக்கி வாழைக்குத்தண்ணி கட்டி குட்டிச்சோறு கறியாக்கி மூலைக்கடை போய் சில்லறையாய் பொருட்கள் வாங்கி வந்து.. நானும் சங்கரும் பாடசாலை தவிர்ந்த நேரங்களில் ஒன்றாகக்கழிப்போம்.. அவன் வீடு கோயிலுக்குப்போனால் நானும் அவர்களுடன்.. என் வீடு கீரிமலை போனால் அவன் எங்களுடன்.. இரு வீட்டு உறவும் எங்களால் பிணைந்திருந்தது.. நான் இன்னும் பெருசாகாததால் இன்னமும் மூலைக்குள் குந்தத் தொடங்காததால் மசுக்குட்டி மாஸ்டரின் கவனம் என்மேல் திரும்பியிருக்கவில்லை..
ஆச்சி வினோதமான ஒரு போஸில் படுத்திருந்தாள். தலைமயிர் கலைந்து தலையணைய மூட மெல்லிய சு10ரிய ஒளி முகத்தை சிவப்பாக்கியிருந்தது. நான் குந்தியிருந்து அவளைக் கூர்ந்து பார்த்தேன். பின்னர் மெல்லத்தொட்டுப் பார்த்தேன். பயத்துடன் கைகளை மெல்லத் தூக்கிப்பார்க்க ஆச்சி இருமினாள். உயிரோடதான் இருக்கிறாள்.. எனக்கு யாருடனாவது கதைக்க வேண்டும் போலிருந்தது.. அக்காள் இப்போதெல்லாம் என்னுடன் அவ்வளவாகக் கதைப்பதில்லை.. அவள் கண்கள் சோபை இழந்தவையாய் எனக்கு அச்சம் தருகின்றன.. அம்மா கேள்விகளுக்குப் பதில் சொல்லத் தெரியாதவள்.. நான் கேள்வி கேட்பதே தவறு என்பது அவள் எண்ணம்.. அதிலும் என் கேள்வி சைக்கில் மிதித்து சந்தைக்குச் சென்றிவிட்ட மசுக்குட்டி மாஸ்டரின் காதில் எப்படியும் விழுந்து விடும் என்பதாய்க் கண்களை அலையவிட்டுத் தவிப்பாள்..
சங்கரின் வீடு வெறுமையாய்க்கிடந்தது.. நான் யாருக்கும் சொல்லாமல் முள்ளுக்கம்மி பிரித்து உடல் நுழைத்து அவன் வீட்டுக்கதவை கை சிவக்கத்தட்டிப் பார்த்துவிட்டேன்.. தோட்டத்துக் குருவிகள் சத்தமும் தூரத்தில் நாய்களில் குரைத்தலையும் தவிர எனக்காய் எந்த ஓசையும் அற்று அடங்கிப்போயிருந்தது அந்த வீடு.. நானில்லாது முதல்முதலாய் சங்கர் வீடு எங்கோ சென்றுவிட்டிருந்து.. இனி இது வெறும் கட்டிடம்.. இங்கே இனிமேல் எனக்கும் சிரிப்புகளுக்கும் இடமில்லை.. பழுத்த பலா இலைகள் காய்ந்து முற்றம் பாழாப்போயிருந்தது.. மாமரத்து ஊஞ்சலின் ஓரத்தில் சங்கரின் பழைய சேட் இன்னமும் அவிழ்க்;காமல் கிடந்தது..

முள்ளுக்கம்பிக் கீறல்களுக்கு துப்பல் போட்டுத் துடைத்துவிட்டாள் ஆச்சி.. “கொப்பனுக்குத் தெரிந்தால் கொண்டு போட்டிருவான்..” தலையை இழுத்துப்பின்னிய படியே பொரிந்து தள்ளினாள்.. கண்ணாடியில் என் கண்களின் சோபையைத் தேடினேன்.. என் கேள்விக்கு ஆச்சியிடம் தான் பதில் கிடைக்கும்.. தலைமயிர் நுனியை கிழித்த துணியால் இறுக மடித்துக்கட்டிய படியே “அந்த ராஸ்கலுக்கு இந்த வயசில இப்பிடிப் புத்திபோனால் கொப்பன் கொண்டுதானே போடுவான்” ஆச்சியின் பூடகப் பேச்சு விளங்காமல் இருந்து..
“எந்த ராஸ்கல் ஆச்சி.. அப்பா ஏன் சங்கருக்கு அடிச்சவர்.. என்னை ஏன் இழுத்துத் தள்ளினவர்.. சங்கரின்ர அப்பாவையும் அம்மாவையும் என் அப்பா பேசினவர்.. சங்கர் ஆக்கள் எங்கை போட்டீனம் ஆச்சி”
ஆச்சி என்னை வினோதமாகப் பார்த்தாள்.. “நீயும் விட்டிருப்பாய் ஆர் கண்டது” எனக்கு ஆச்சியைப் பிடிக்காமல் போயிற்று.. அப்பா,அம்மா,அக்கா, ஆச்சி ஒண்டுமே எனக்குப் பிடிக்காமல் போயிற்று.
சோபை இழந்த கண்களுடன் வாழ நானும் பழகிக்கொள்ள.. அமைதி - பூகம்பம்இ அமைதி - பூகம்பம் என்பதாய் மசுக்குட்டி மாஸ்டரின் வீடு வாழப்பழகிக் கொண்டது.. என் உடல் மாற்றம் கண்டு மூலைக்குள் இருந்து.. அக்காள் தாலி பெற்றுப் பின்னர் பிள்ளை பெற்று.. நான் தாலி பெற்று பின்னர் பிள்ளை பெற்று.. இப்போது கடல் கடந்து மசுக்குட்டி மாஸ்டரின் பார்வையிலிருந்து தூரமாய்.. ஒரு சின்ன மசுக்குட்டி மாஸ்டருடன் அமைதி -பூகம்பம் வடிவில் தொடர்கிறது என் வாழ்வு..

மணவறையின் ஆரார்த்தி எடுத்துக்கொண்டிருந்தார்கள்.. சங்கர் மௌனமாக இருந்தான்.. அவன் கன்னங்களை தடவிவிடலாம் போலிருந்தது.. சங்கர் என் முகம் பார்த்தான் “ உனக்கு எப்பிடியோ தெரியேலை.. ஆனால் உன்ர அப்பா நடந்து கொண்ட முறை சரியான கேவலமானது.. சின்ன வயசுதான் எனக்கு இருந்தும் அந்தக்காயம் ஆறக் கனகாலம் எடுத்துது..” சங்கரின் முகம் இறுகிப்போயிருந்தது.. சங்கர் என்னிலும் விட மூன்று வயது மூத்தவன் கன்னத்தில் மட்டுமல்ல மசுக்குட்டி மாஸ்டரின் நடத்தை மனதிலும் காயத்ததை அவனுக்கேற்படுத்தியிருந்தது இப்போது எனக்குப் புரிந்தது.
நான் இழந்தது நல்ல ஒரு நண்பனை.. நாள் முழுதும் விளையாடும் ஒரு நண்பனை.. அதனால் எனக்குள் நண்பனை இழந்த காயம் மட்டுந்தான் ஏற்பட்டிருந்தது.. அதற்கு மேல் புரியும் வயது வர சங்கரை நான் மறந்து போயிருந்தேன்.. புதிய நண்பிகள் உறவுகள் என்று என் வாழ்வு மாறிப்போயிருந்தது..
நான் அவன் முகம் பார்த்து “அண்டைக்கு நடந்ததுக்கு இப்ப நான் உங்களிட்ட மன்னிப்புக்கேட்கிறன்” ஏதோ பொருந்தாதது போலிருந்தாலும் அதை விட எனக்கு வேறு வழி அப்போது எனக்குத் தெரியவில்லை.. அவன் சிரித்தான்.. நான் மயங்கினேன்.. மசுக்குட்டி மாஸ்டரின் நடத்தை என்னில் பல தாக்கங்களை ஏற்படுத்தியது எனக்குப் புரிந்தது.. என் கணவனையும் பெட்டைகளையும் சந்திக்கவேண்டும் என்றான்.. நான் மௌனமாக தலை குனிந்திருந்தேன்.. தான் சாப்பாட்டிற்கு நிற்கவில்லை போகவேணும் என்று விட்டு எழுந்தான்.. அப்போதும் நான் பேசாமல் இருந்தேன்.. “சரி நான் போட்டு வாறன்” என் மகனின் கையிலும் என் முதுகிலும் அழுத்தி அவன் விடை பெற என் தொண்டை அடைத்தது..
குட்டிச் சோறு காய்ச்சி விளையாடும் போது கண்ணுக்குள் தெறித்த தூசு ஊதாமல் வாயில் அவன் முத்தமிட்டிருக்கலாமோ என்று எண்ணத் தோன்றியது.. ஈரம் ஊற நான் எழுந்து சாப்பிடப்போனேன்..

Thursday, March 17, 2005

நடி(க்கிற)கை வாழ்க்கை

நாராயணனின் சிலுக்கு சிமிதா புராணம் படித்தபோது யாரோ நெஞ்சில் ஓங்கி உதைந்தது போல் உணர்ந்தேன். (பலருக்கும் இப்படி உணர்ந்திருப்பார்கள்- ஆண்கள் குற்ற உணர்வால் - பெண்கள் பாதிக்கப்பட நேர்ந்ததால்).
இந்திய தமிழ் சினிமாவில் தமக்கென்று ஒரு இடம் பிடிப்பதென்றால் எவ்வளவு சிரமம் என்று வந்து முகம் காட்டிவிட்டுப் போவோரின் எண்ணிக்கையில் இருந்து தெரிகின்றது. இருக்க – சில்க்- இன்றும் பலரின் நினைவில் நிற்கும் படியாகத் தனது பெயரைத் தக்கவைத்து விட்டுச் சென்றுள்ளார். நிச்சயமாக இது அவருக்குப் பெருமையே. நடிக்க வந்த எந்த ஒரு நடிகையும் சினிமா உலகைப் பற்றி குறைசொல்லாமல் இருந்ததில்லை. (சுகாசினி தவிர – குடும்பமே சினிமாவிற்குள் இருப்பதால் பாதுகாப்பு இயல்பாகவே கிடைத்திருக்கும்) இருப்பினும் அதிஸ்டம் இருப்பின் பெயர்,புகழ்,பணம் இலகுவாகக் கிடைக்கக் கூடிய ஒரு தளம் இது. சில்க் மற்றைய கவர்ச்சி நடிகைகளைப் போலல்லாது பல முன்னணி இயக்குனர்களின் திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர். கவர்ச்சி நடிகைகளில் இப்படியா வரவேற்று வேறு ஒருவருக்கும் கிடைத்ததில்லை.

சோபா,பாடாபட்,விஜி, மோனல் என்று தற்கொலை செய்து கொண்ட நடிகைகளுள் சில்க் மட்டுமே கவர்ச்சி நடிகை, எனவே கவர்ச்சி நடிகைகளுக்குத்தான் சினிமா உலகம் சிரமம் கொடுக்கின்றது என்றில்லை. சினிமா உலகத்திற்குள் பல கனவுகளுடன் நுழையும் எல்லாப் பெண்களுக்குமே இந்த உலகம் சிரமத்தைத்தான் கொடுக்கின்றது. இதற்கு முதல் காரணம் வறுமை. தம் வாழ்க்கையை கொஞ்சம் அட்ஜெஸ்ட் செய்தால் வறுமையைப் போக்கலாம் என்ற நிலைக்குத் தள்ளப்படுகின்றார்கள். (இதையெல்லாம் நடிகர் சங்கம் எங்கே கண்டு கொள்ளப்போகின்றது) முன்னணி,பின்ணனி என்றில்லாமல் எல்லா நடிகைகளுமே இயக்குனரில் இருந்து அவருக்கு வேண்டப்பட்டவர்களின் கைகளில் விளையாட்டுப் பொம்மையாகி வருகின்றார்கள் என்று நடிகை ரம்பாவின் பேட்டி ஒன்றில் படித்ததாய் ஞாபகம்.

அண்மையில் என் நண்பன் நடிகை "த்ரிஸா" விற்கு நடந்த பாத்ரூம் கொடுமையைப் பற்றிக் கூறி அந்த வீடியோ மிக எளிதில் இணையத்தளத்தில் பார்க்கக் கூடியதாக இருப்பதாகக் கவலைப்பட்டான். த்ரிஸா மனம் உடைந்து போகாமல் அதனைக் கையாண்ட விதம் எனக்கு அவர்மேல் மிகுந்த மதிப்பை உண்டாக்கியிருக்கின்றது. (உடைய வேண்டும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு அவர் கொடுத்த செருப்படி இது) இவரைப் போல் மனவலிமை எல்லாப் பெண்களுக்கும் இருந்தால் ஆண்களின் வாலாட்டல்களை எளிதாக நறுக்கிவிட முடியும்.

இந்திய தமிழ் சினிமா உலகை விட்டு கொஞ்சம் கடல்தாண்டி புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் கலைஉலகம் பற்றிப் பார்ப்போம்.

முன்பு போலல்லாது மேடை நாடகங்களில் பல தமிழ்ப் பெண்கள் தாமாகவே நடிக்க முன்வருகின்றார்கள். இது பாராட்டப்பட வேண்டிய விடையம்.. கடந்த 7 வருடங்களாக கறுப்பியும் ஒவ்வொரு வருடமும் ஒரு மேடை நாடகத்தில் நடித்துத் தான் வருகின்றாள். எனது தெரிவிற்கேற்ப முற்போக்கு மாறுபட்ட சிந்தனைகள் கொண்டு சமூகச் சீரழிவுகளை முன்நிலைப்படுத்தும் ஆரோக்கியமான நாடகங்களில் நடித்து வருவது எனக்குப் பெருமையாகவே இருக்கின்றது. இதற்கு முக்கிய காரணம் நாடக அமைப்பில் இருந்து இயங்கும் ஆண்களும் பெண்களும் என்று கூறலாம். முக்கியமாக ஆண்கள் தயங்கி நிற்கும் பெண்களுக்கு நம்பிக்கை தரும் வண்ணம் நடந்து கொள்ளும் முறை. ("சட்டையை இழுத்து விடுங்கள் விலகி நிற்கின்றது" என்று சொல்லக்கூடிய அளவிற்கு பெண்களை மதிப்பவர்கள்) இருப்பினும் களை போல் ஒருசிலர் வந்து போவதைத் தடுக்கமுடியாமல் இருக்கின்றது.

முற்போக்கானபெண்கள்,பெண்ணியம் கதைப்பவர்கள், ஆண்களுடன் சரளாமாகப் பழகி தண்ணி அடித்து fun அடிப்பவர்கள் (சுதந்திரமாக தமக்குப் பிடித்த எதையும் செய்பவர்கள்) எனும் பதத்தைப் சிலரால் புரிந்து கொள்ளமுடியாமல் இருக்கின்றது. அவர்கள் கண்களுக்கு இந்தப் பெண்கள் வெளியில் வந்தவர்கள். இவர்கள் எதையும் செய்வார்கள். (செய்கின்றார்கள்) எனவே நானும் ஒரு முயற்சியைப் போட்டுப் பார்ப்போம் பாணியில் தமக்கே உரித்த ஆண் தனத்துடன் பெண்களை அணுகும் "புல்லுருவி"களும் இருக்கத்தான் செய்கின்றார்கள். இவர்களை அடையாளம் கண்டு துவண்டு விடாமல் தூக்கி எறியும் மனபலம் பலருக்கு இருப்பதில்லை. உடனே பிரச்சனை எதற்கென்று விலகிக் கொள்கின்றார்கள். பெண்கள் ஆண்களின் காமம் பிடித்த கண்களால் அழையப்படுவது தவிர்க்க முடியாதது. அதை அசட்டை செய்து தூசுபோல் தட்டிவிட்டால்?

நாகரீகமாக ஒரு பெண்ணை அணுகி எனக்கு உன்னைப் பிடித்திருக்கிறது என்று துணிவாகச் சொல்லும் ஆண்களை எப்போதும் நான் மதிக்கின்றேன். அதை விடுத்து ராமர் வேஷம் போட்ட படியே எப்போது எது விலகும் கொஞ்சம் கடைக்கண்ணால் பார்த்து என் வேட்கையைத் தீர்த்துக் கொள்ளலாம் என்று அலையும் "நாயுண்ணி" கள் தான் என்னைக் கோவத்தின் உச்சத்திற்குத் தள்ளுபவர்கள்.

நெஞ்சைப் பார்த்துக் கதைப்பவனின் முகத்தை உயர்த்தி எனக்கு முகம் இருக்கு முகத்தைப் பார்த்துக் கதை என்று பெண்கள் சொல்ல வேண்டும். சொல்வார்களா?

Tuesday, March 15, 2005

கவனம் மிதிவெடி

உலகில் வாழும் அனைத்து மனிதர்களும் ஏதோ ஒருவகையில் மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள்தான். தாம் முழுமையான மனிதன் என்று ஒருவரும் தம்மைப் பிரகடனப்படுத்த முடியாது. என் பார்வையில் தற்போதைய ஹொட் நியூசில் மைக்கல் ஜக்சன் அதி உயர்ந்த மனநோயாளியாக எனக்குப் படுகின்றார். (பிய்ந்து போன மூக்கும் வெளுறிய முகமும்). ஆனால் உலகத்து மக்களுக்கு அவர் ஒரு சிறந்த பாடகர் பலருக்கு நல்ல மனிதர் (சிலருக்குக் கெட்ட- அதை விடுங்கள்) இதே போல் உலகெங்கும் பணம் புகழால் திக்குமுக்காடி மனநோயால் பாதிக்கப்பட்டுப் போனவர்களும் இருக்கின்றார்கள். அதே சமயம் அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திக்கும் நபர்கள். அவர்கள் நடத்தைகள் ஏன் இவர்கள் இப்படியாக நடக்கின்றார்கள் என்று எம்மைச் சிந்திக்க வைக்க (அவர்களில் ஒருவர் இவர் ஏன் இப்படியான நடக்கின்றார் என்று என்னைப் பார்க்க) இதுதான் எமது யதார்த்த உலகம்.
இந்த மனநோயாளிகளில் பலவிதமானவர்களை (என்னைத் தவிர்த்து) இனம் காண்கையில்

1 தம்மை எப்போதுமே உயர்வில் வைத்துப் பார்த்தபடி ஆனால் அது மற்றவர்களுக்குப் புரிந்து விடக்கூடாது என்பதில் மிகவும் சிரத்தை கொண்டு (மற்றவர்களுக்கு இது எளிதில் புரிந்து விடும் என்பது தெரியாத பரிதாப நிலையில்) தம் ஒத்த மூத்த வயதினரையும் “செல்லம்” “குஞ்சு” என்று அழைத்து தமது மிக உயர்ந்த அறிவைக் கெட்டித்தனத்தை பிறருடன் பகிர்ந்து கொள்ளப் புகட்ட விளையும் ஒரு நல்ல சிந்தனைவாதியாத் தன்னைப் பிரகடனப்படுத்தி மற்றவர்களைச் சங்கடத்துக்குள் தொடர்ந்து தள்ளிவருவது அவருக்குத் தெரிந்தும் தெரியாதது போல் பாவனையில் - கடவுளே எவ்வளவு காலத்திற்குத் தான் இப்படியாக நடிக்க முடியும்.

2. இன்னும் மிகவும் நேர்த்தியாக இருமுகங்களைக் காட்டும் வல்லுனர்கள். இவர்களின் மிகத்திறமை என்று நான் வியந்தது எந்த ஒரு பொது இடத்திலும் இவர்கள் உணர்ச்சிவசப்படமாட்டார்கள். சிரித்த முகத்துடன் சாந்தமாக ஒருவனின் அருகில் சென்று கெட்டவார்த்தையில் திட்டி விட்டு அவனுக்குக் கோபத்தை வரவழைத்து விட்டு தாம் மீண்டும் அந்தச் சிரித்த புன்முறுவலுடன் நிற்க பேச்சுக் கேட்டவன் கோபத்தில் உணர்ச்சிவசப்பட்டு கெட்ட வார்த்தையைக் கொட்டிக் கெட்ட பெயரை வாங்கிக் கொண்டு சபையின் முன் அவமானப்பட்டு நிற்க. அவன் சாந்தமாக சபையை விட்டு நகர்வான்.

3 மனநோயின் உச்சக்கட்டமாக (எமக்குள்) தன்னை முற்போக்குவாதியாக வெளியுலகிற்குப் பிரகடனப்படுத்தியபடியே மீண்டும் மிகச் சாந்தமாக முற்போக்கிற்கென்று மிகக்கவனமாகத் தெரிவுகளைச் செய்து மக்களைப் பிரேமைப்படுத்தி.. தன் மற்றைய முகத்தினுள் அடக்கி வைத்திருக்கும் அத்தனை வக்கிரங்களையும் எழுத்திலோ வேறு வகையிலோ புனைபெயர் கொண்டு வடித்துத் தீர்த்தல் - உதாரணத்திற்கு நான் கறுப்பு என்று எனக்கு தாழ்வுமனப்பான்மை இருக்கும் பட்சத்தில் நான் வெள்ளைச்சி என்ற பெயரில் ஒரு தளத்தை உருவாக்கி (வாசகர்கள் நிச்சயமாக என்னை அடையாளம் காணமாட்டார்கள் என்று கோழைத்தனமாக நம்பி) என்னை ஒரு வெள்ளைத்தோல் கொண்ட அழகியாக ஆண்கள் மத்தியில் ஒருவகை பிரமிப்பை உண்டு பண்ணி மன பாலியல் வக்கிரங்கள் அனைத்தையும் வடிகாலாக்கி என் உணர்வுகளுக்கு ஒருவகை விருந்தளித்து வருவது. படங்களின் தெரிவும் அப்படியே இருக்கும். இப்படியானவர்களுக்கு ஐ.கியூ ரொம்பவும் உயர்வாக உள்ளது. இதனால் பலர் இவர்கள் வலையில் மிக இலகுவாக விழுந்து விடுவர். அதே நேரம் இவர்கள் உணருவதில்லை. இவர்களிலும் ஐ.கியூ கூடிய மக்கள் உலகில் வாழுகின்றார்கள் அவர்கள் மிக இலகுவில் இவர்களை அடையாளமும் கண்டு பரிதாபமும் கொள்ளுகின்றார்கள் என்று.
இந்த மேற்கூறியவர்களின் மிக உச்சக் கோழைத்தனம் என்னவெனில் மற்றவர்களை ஸ்டுப்பிட் என்று நம்புதல். புரியவில்லையா புரியாது. அதுதான் எனக்கும் வேண்டும்

Friday, March 11, 2005

வண்ணாத்திக்குளம்

குறுநாவல் விமர்சனக் கூட்டமும் விமர்சனமும்


ஒஸ்ரேலியாவில் வசிக்கும் மிருக வைத்தியர் டொக்டர் நடேசனின் படைப்பான “வண்ணாத்திக்குளம்” குறுநாவல் வெளியீடும் விமர்சனக் கூட்டமும் தை மாதம் 2ம் திகதி ஸ்புரோவில் இடம் பெற்றது. ஆறு மணிக்குத் தொடங்கிய விழாவிற்கு நான் சென்றது 20நிமிடங்கள் தாமதித்தே. அப்போது இந் நிகழ்வைத் தலைமை தாங்கி நாடாத்திய அ.கந்தசாமி அவர்கள் “வண்ணாத்திக்குளம்” பற்றி தனது சிறிய விமர்சனத்தை வழங்கிக்கொண்டிருந்தார். தொடர்ந்து திரு.ராஜேந்திரா, டி.பி.எஸ் ஜெயராஜ், காலம் செல்வம், தேன்மொழி ஆகியோர் தமது விமர்சனங்களை வைத்த பின்னர் நடேசன் அவர்கள் நன்றி உரை வழங்கி அதன் பின்னர் வாசகர்களின் விமர்சனங்கள் கேள்வி பதில் என்று நிகழ்வு நிறைவு பெற்றது. இந்நிகழ்வில் எழுத்தாளர் நடேசனின் இன்னுமொரு படைப்பான “வாழும் சுவடு”களும் விற்பனைக்கு வந்தது. வாசகர்களால் வாங்கப்படும் இவ்விரு படைப்புகளுக்குமாகச் சேரும் பணம் சுனாமி அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட எம்மக்களுக்குப் போய் சேரும் என்றும் அறிவிக்கப் பட்டது.

“வண்ணாத்திக்குளம்” குறுநாவல் 80-83ம் ஆண்டுகளில் எமது நாட்டைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. இந்த குறுநாவல் காதலைச் சொல்கிறதா? இல்லை அரசியலைச் சொல்கிறதா? என்று விமர்சகர்கள் கொஞ்சம் தடுமாறினார்கள். எதைச் சொல்ல வருகிறது என்பதை கதை சொல்லி வாசகர்களுக்கு அடையாளப்படுத்தும் தேவை என்ன என்பது எனக்குப் புரியவில்லை. காதலும் அரசியலும் எல்லோர் வாழ்க்கையிலும் பின்னிப் பிணைந்த ஒன்று முக்கியமாக எமது நாட்டில் அரசியலின் பாதிப்பு என்பது எல்லா மக்களுக்கும் பொதுவாகிப்போய் விட்ட ஒரு விடையம். எனவே எந்தப்படைப்பாயினும் அரசியல் காதல் என்பதிலிருந்து எந்த ஒரு படைப்பாளியும் தப்பிவிட முடியாது.

வண்ணாத்திக்குளம் சு10ரியன் எனும் ஒரு தமிழ் இளைஞனின் ஒரு குறிப்பிட்ட காலத்தைக் குறித்து நிற்கின்றது. கதை சொல்லி கனமான ஒரு கருவை எடுத்து, கனமான பல தளங்களை இணைத்து ஒரு கனமற்ற குறுநாவலை வாசகர்களுக்குப் படைத்துள்ளார் என்பது எனது சுருக்கமான விமர்சனம். எந்த ஒரு விடையத்தையும் கதை சொல்லி ஆழமாகப் பார்க்கவில்லை. தனது மனதிற்குள் ஆழமாக வடிவமைத்து விட்டு எழுதும் போது மேலோட்டமாக வடித்துவிட்டாரோ என்ற அச்சம் எனக்குள்.. அதே வேளை தான் மனதுக்குள் வடித்த அந்த ஆழமாக கதைவடிவம் வாசகர்கள் படிக்கும் போது அவர்களைச் சேர்ந்து விடும் என்று அவர் கணித்திருக்கவும் கூடும் என்று எண்ணுகின்றேன்.

கதை சொல்லி சேகுவேரா என்று பொதுவாக அழைக்கப்பட்ட ஜே.வீ.பி யினரின் அரசியல் கொள்கை, நோக்கு என்பவற்றையும் அவர்கள் தமிழ் சிங்கள மக்களால் எப்படிப் பார்க்கப் படுகின்றார்கள் என்பது பற்றியும் எழுத்தில் வடித்ததிலும் பார்க்க, இக்குறுநாவலை விமர்சனம் செய்த டி.பி.எஸ் ஜெயராஜ் அது பற்றி விளக்கமாக் கூறினார். அத்தோடு முன்னுரை, தன்னுரை என்பவற்றில் டி.பி.எஸ் ஜெயராஜ் படைப்பாளி அதிகப்பிரசங்கித் தனத்தையும், மேதாவித்தனத்தை காட்டாது சொற் சிக்கனத்துடன் படைத்துள்ளார் என்றும், பாண்டித்தியம் நிறைந்த திறனாய்வு கொள்ளும் வித்தகர்கள் இது இலக்கியமா என்று கேள்வி எழுப்பக் கூடும் என்றும் கூறியுள்ளார். இந்தக் கேள்வி விமர்சகருக்கே ஏற்பட்டதா என்ற சந்தேகம் எனக்கு. மிக மேலோட்டமாக ஆழமான ஒரு கருவைப் படைக்கும் படைப்பாளியை தட்டிக்கொடுப்பதிலும் பார்க்க விமரச்சனங்கள் வைத்து அவரின் எழுத்தை ஆழமாக்க விமர்சகர்கள் உதவ வேண்டும்.

படைப்பாளியான நடேசன் நன்றியுரையின் போது மிகவும் அடக்கமாக நான் பெரிய இலக்கியவாதியல்ல என்னுடைய பல மறக்கமுடியாத அனுபவங்களை குறிப்பாக எழுதி வைத்து பல ஆண்டுகளின் பின்னர் நேரம் கிடைத்த போது அதனை ஒரு படைப்பாக்கினேன் இது நிறைவான ஒரு படைப்பு என்று நான் கூறவில்லை என்றும் கூறினார்.

சு10ரியன் எனும் இக்குறுநாவலின் நாயகனை படைப்பாளி வாசகர்கள் மனதில் ஒரு நன்குணம் கொண்ட, முற்போக்குத் தனமான அறிவாளியாகத் தொடக்கத்திலிருந்தே காண்பித்து விட்டுப் பின்னர் சு10ரியன், சித்ரா எனும் சிங்களப்பெண்ணைக் கண்டு காதல் வயப்படும் போது அவனை ஒரு பதினாறு வயது இளைஞன் போல் சித்தரித்துள்ளார். வண்ணாத்துப்பூச்சி போல்க் கண் சிமிட்டும் அவள் அழகில் அவன் மயங்கும் போதே தனது மனதையும் அவளிடம் சு10ரியன் பறிகொடுத்து விடுகின்றான். அ.கந்தசாமி, காலம் செல்வம் போன்றோர் தமது விமர்சனத்தில் குறிப்பிட்டது போல் கதையின் நாயகி சித்ரா வெறும் காதல் பதுமையாக வந்து செல்லாமல்ää சித்ரா மேல் சு10ரியனுக்குக் காதல் வருவது அவளின் அறிவுபூர்வமான, செயலாலோ, பேச்சாலோ என்பது போல் காட்டியிருந்தால் சித்ரா எனும் நங்கை வாசகர்கள் மனதில் ஓரு நல்ல நாயகியாகப் பரிணமித்திருப்பாள்.
இதே வேளை எனக்குள் ஒரு சிறு குழப்பம். சு10ரியனும், சித்ராவும் இருமுறை சந்தித்துக் கொண்ட பின்னர், சேலை வாங்குவதற்கென்று சு10ரியன் வவுனியா செல்ல முடிவெடுத்து சித்ராவையும் வரும்படி கேட்டுக்கொள்கின்றான். இருவரும் பேருந்தில் சந்தித்துக் கொள்கின்றார்கள். வவுனியாவில் கடைத் தெருவில் பிரச்சனை, இதனால் இருவரும் மீண்டும் பேருந்து நிலையத்திற்கு வந்து காத்திருக்கும் போது சிங்கள ஆமி சு10ரியனின் மார்பில் துப்பாக்கியை வைத்துக் கேள்வி கேட்கின்றது, அவனைக் காக்க எண்ணிய சித்ரா சு10ரியனைத் தனது கணவன் என்று கூறுகின்றாள். எனது வாசிப்பின் புரிதலில் இருந்து சு10ரியனும், சித்ராவும் ஒருவருக்கொருவர் வாயால் தமது காதலைக் கூறவில்லையே தவிர, இருவரும் காதலிக்கத் தொடங்கி விட்டார்கள். அது இருவருக்குமே தெரிந்த ஒன்று, இந்த அனர்த்தத்தின் பின்னர் இருவருமாக சு10ரியனின் இடத்திற்கே செல்கின்றார்கள். சித்ராவின் அண்ணன் ருக்மனிடம் தற்செயலாகக் கடைத்தெருவில் சித்ராவைச் சந்தித்ததாக சு10ரியன் பொய் சொல்கின்றான். ஆனால் விமர்சகர்கள் அனைவரும் சித்ரா, சு10ரியனைக் கணவன் என்று கூறிய பின்னர் தான் அவர்களுக்குள் காதல் வந்ததாக விமர்சனம் செய்கின்றார்கள். அத்தோடு டி.பி.எஸ் ஜெயராஜ் அவர்கள் “மிஸ்டர் அண்ட மிஸிஸ் ஐயர்” திரைப்படத்தில் வரும் ஒரு காட்சியை இந்தக் காட்சியுடன் ஒப்பிட்டும் விமர்சித்தார். மிஸ்டர் அண்ட் மிஸிஸ் ஐயரில் ஒரு முஸ்லீம் இளைஞனிடம் தெரியாமல் தண்ணீர் வாங்கிக் குடித்து விட்டேனே என்று முகத்தைச் சுளிக்கும் பிராமணப் பெண், திருமணமானவள். வளர்க்கப்பட்ட முறை வாழ்க்கை முறை எப்படியாயினும் அவளுக்குள்ளும் மனிதநேயம் இருக்கின்றது என்பதை அவள் செய்கை காட்டி நிற்கின்றது. அத்தோடு ஊரின் அனர்த்தங்களில் இருந்து தப்பிச் செல்ல அந்த இளைஞனின் உதவி அவளுக்குத் தேவையும் படுகின்றது. ஆனால் வண்ணாத்திக்குளத்தின் நாயகி தனது காதலனைக் காக்க அவனைக் கணவன் என்கின்றாள். இதைத்தானே அனேக நாயகிகள் செய்வார்கள்.

மேலும் கலப்புத் திருமணம். சிங்களப்பெண், தமிழ் ஆணைக் காதலிக்கின்றாள். பெரும் புயல் ஒன்று வீசப்போவதாக எண்ணி வாசித்தேன். ஒரு வித சலசலப்பும் இன்றி மிகவும் இலகுவாக இரு குடும்பங்களிடமும் இருந்து பச்சைக் கொடி காட்டி விட்டார்கள். அதிலும் சிங்களக்குடும்பத்தில் மிகமிக எளிதாகக் காட்டி விட்டார்கள். அது கொஞ்சம் கொச்சைத் தனமாக இருந்தது போல் பட்டது. ஒரு தமிழ் இளைஞன் வீட்டிற்கு வருகின்றான். சில காலத்தின் பின்னர் மகளைப் பெண் கேட்கின்றான். பெண்ணின் தாயார் சிறிது வெட்கம் கூடப்படுகின்றார். அவன் ஒரு தமிழ் இளைஞன். அவன் குடும்பம், உறவுகள் எப்படியானவை. மகள் எதிர்காலத்தில் எப்படியான சிக்கல்களைச் சந்திக்கப் போகின்றாள் என்ற எந்த வித எண்ணமும் இன்றி பல்கலைக்கழகத்தில் படித்த நல்ல வேலையில் இருக்கும் இளைஞனைக் காதலிக்கும் யாழ்ப்பாணத்துத் தமிழ் பெண்களை “மாப்பிள்ளை பிடித்து விட்டாள்” என்ற பதத்தில் விமர்சிப்பது போல்தான் இதிலும் நல்ல படித்த இளைஞன் என்பதால் எந்த சங்கோஜமுமின்றி பெண்ணின் பெற்றோர் சம்மதம் கூறியது எனக்குச் சங்கோஜமாக இருந்தது. அடுத்து சு10ரியனின் குடும்பம். மகன் காதலிப்பது சிங்களப்பெண் என்று தெரிந்த போது தந்தையின் சில விதண்டாவாத விமர்சனத்தோடு அங்கும் பிரச்சனை முடிகின்றது. காதல், அரசியல் என்று எழுத்து சென்று கொண்டிருக்கும் போது மனதில் நிற்கும், மனதைத் தாக்கும் சம்பவங்கள் வரப்போகின்றது என்ற எதிர்பார்ப்பை எனக்குள் பல முறை எழுப்பிப் பின்னர் ஒன்றுமே இல்லாது போய் விட்டது எனக்குள் பலத்த ஏமாற்றத்தைத் தந்தது.
படைப்பாளி இந்த எழுத்து முறையைத் தான் படைப்பு முழுவதிலும் கொண்டு செல்கின்றார். மனித வாழ்க்கை அனர்த்தங்களால் அடிபட்டுப் போய்க் கொண்டிருக்கும் வேளையில், ஒவ்வொரு சிறிய நகர்வும் வாசகர்களை எந்த விதப் பாதிப்பிற்குள்ளும் கொண்டு செல்லாமல் நழுவி நழுவிச் சென்று கொண்டிருக்கின்றது. அனைத்துச் சம்பவங்களையும் ஒரு தகவல் தரும் வடிவில் இங்கே ஆமி அடித்தது, அங்கே பெடியங்கள் தாக்கினாங்கள் என்பதாயும், விமர்சகர் காலம் செல்வம் குறிப்பட்டிருந்தது போல் புதிதாக ஒரு இடத்திற்கு நாயகன் செல்லும் போது அந்த இடத்திற்கு வாசகர்களையும் அழைத்துச் செல்லக் கதை சொல்லி தவறிவிட்டார். இருந்தும் அரசியல் பிரச்சாரம் செய்யும் பல சந்தர்ப்பங்கள் கதை சொல்லிக்குக் கிடைத்திருந்தும் அதனைச் செய்யாதது வாசகர்களிற்கு படைப்பாளி மேல் ஒரு மதிப்பைக் கொண்டுவந்திருக்கும்.

இப்படைப்பில் வரும் தலைமுடி வெட்டும் ஆறுமுகம் எனும் பாத்திரத்தினூடாக, பலரின் அரசியல் பார்வைகளை படைப்பாளி கொண்டு வந்திருக்க முடியும், தவறி விட்டார். அதே பொல் சுந்தரம், ருக்மன், காமினி போன்றவர்களையும் ஏனோ வீணடித்து விட்டார்.

இனக்கலவரங்கள், மாறுபட்ட அரசியல் கொள்கை கலப்புத் திருமணம் போன்ற காத்திரமான தளங்களையும், தனது சொந்த அனுபவங்களான மிருகப்பரிசோதனை போன்றவற்றையும் இன்னும் கொஞ்சம் சிரத்தை எடுத்து படைப்பாக்கியிருந்தால், அண்மையில் பலராலும் பாராட்டப்பட்ட “புலிநகற்கொன்றை” போன்ற ஒரு காத்திரமான முழு நாவலை நடேசன் அவர்களால் கொடுத்திருக்க முடியும்.

விமர்சகர்கள் அனைவராலும் ஒட்டு மொத்தமாகத் தரப்பட்ட ஒரு விமர்சனம், இப்படைப்பில் பல குறைகள் இருப்பினும் வாசகர்களுக்கு படிக்கும் போது சோர்வைத் தரவில்லை.. படித்து முடிக்கும் ஆவல் இருந்தது என்று. என்னுள்ளும் அப்படியான ஒர் உணர்வு எழுந்தது, அதற்குக் காரணம் நாம் அறியாத மேட்டுப்பாளையம், திருநெல்வேலி, பாண்டிச்சேரி, கொல்லம் என்று இல்லாமல், கொக்குவில், வவுனியா, மதவாச்சி, பதவியா, கொழும்பு என்று எம்மோடு தொடர்புடைய எம்மைப் பழைய நினைவிற்குள் இழுத்துச் செல்லும் ஊர்களிற்கு கதை சொல்லி எம்மை அழைத்துச் சென்றது தான்.
விமர்சகர் ராஜேந்திரா யாழ்ப்பாணத்துப் பெண்களின் கோழைத் தனத்தையும், பிற்போக்குத் தனத்தையும் கடுமையான விமர்சித்தார். மனதிற்கு வேதனையாக இருந்தாலும் அதுதான் உண்மை என்பதனால் மௌனமாக இருந்து விட்டேன். கலப்புத் திருமணம் வேண்டாம் கடைசி சாதி, தராதரம் பார்க்கும் தன்மையையாவது யாழ்ப்பாணமக்கள் விட்டொழிக்க மாட்டார்களா.

Thursday, March 10, 2005

ராஜகுமாரனும் நானும்..



இரவு அடங்கிப் போகும் நேரம். காற்றின் ஒலி மட்டும் கேட்டது. மல்லிகை மணந்தால் எப்படியிருக்கும்?

நான் கிறங்கினேன். ஒன்று இரண்டு வாகன ஒலி மட்டும் கேட்டபோது எனக்குக் கோபம் வந்தது. குளம்பொலி எங்கே? எனக்கு வேண்டியது அதுதான்.

தனிமை.. தனிமையால் வதைபடுகின்றேன்.. எங்கே என் ராஜகுமாரன்? இன்று வரமாட்டானோ.. மனம் வலித்தது.. வருவான். நிச்சயம் வருவான். அவனில் எனக்கு நம்பிக்கை இருந்தது. நேரம் போகப்போக குழப்பத்துடன் கூடிய கோபம் வந்தது.. வருவான் அவன் வருவான்.. நம்பிக்கையுடன் உடைகளைத் தளர்த்தி விட்டேன்.. கண்மூடிச் சிறிது சோகித்து.. கண் திறந்த போது அவன் நின்றுகொண்டிருந்தான்.. என் ராஜகுமாரன். அதே கம்பீரம் கலந்த குறும்புச் சிரிப்பு. நான் சிரிக்கவில்லை.. முகத்தை உம்மென்று தூக்கி வைத்துக் கொண்டேன்.
“கோபமா?”
நான் பேசவில்லை
“என் கண்மணிக்கு என் மேல் கோபமா?” குழைந்தான்.
என் வயிற்றில் புளி கரைந்தது. இருந்தும் நான் மசியவில்லை.
“என் கண்ணம்மா” நெற்றியில் முத்தமிட்டான்.
நான் கரைந்து போனேன். “ம் நேற்று ஏன் வரவில்லை?” கேட்டேன்
தலை குனிந்தான்.
என் கோபம் தலைக்கு ஏறியது. “அப்படியென்றால் நீ வேறு யாருடனாவது?” நான் முடிக்கவில்லை.
“ஐயோ என்ன இது” தன் இரும்புக் கரம் கொண்டு என் இதழ் பொத்தினான். எனக்கு வலித்தது. சுகமாகவும் இருந்தது. நான் அவன் விரல் நனைத்தேன். புன்னகைத்தான். மீண்டும் கேட்டேன்.
“நேற்று ஏன் வரவில்லை?”
அவன் கண்கள் கலங்கிற்று. இறுக்கமாகத் தன் இதழ் கடித்தான். நான் துடிதுடித்துப் போனேன்.
“மன்னித்துவிடு நான் கேட்கவில்லை நீ காரணம் சொல்ல வேண்டாம்”
“நான் வந்திருந்தேன் ஆனால்” அவன் நா பிரண்டது.
“வந்திருந்தாயா? எப்போது? நான் குழம்பிப் போனேன். “வந்திருந்தால் ஏன் என்னிடம் நீ பேசவில்லை?”
“நான் வந்திருந்தேன் ஆனால் நீ பல் கடித்துக் கண்ணீர் விட்டபடியிருந்தாய் என்னால் சகிக்க முடியவில்லை. போய்விட்டேன்”.
நான் விக்கி விக்கி அழத்தொடங்கினேன்.
"என் செல்லக் கண்ணம்மா என் ராசாத்தி எதற்காக வதைபடுகின்றாய் போய் விடு. ஓடிவிடு இங்கிருந்து. என்னால் தாங்கமுடியவில்லை." விம்மினான்
"உன் மாளிகையில் எனக்கு இடமுண்டா?"
"நிச்சயமாக வந்துவிடு என்னுடன்"
"நான் மட்டுமா? இல்லை குழந்தைகளையும் அழைத்து வரவா?"
"இது என்ன கேள்வி. உன் குழந்தைகள் எனக்கும் குழந்தைகள் தானே".
மாளிகை எப்படியிருக்கும்? இது கனடா மாளிகை கற்பனைக்குக் கொஞ்சம் கஷ்டப்பட்டேன்.

"என்ன அதுக்கிடேலை படுத்திட்டியே?" வில்லன் குரல். என் கற்பனை கலைந்தது. நான் அவசரமாக மூச்சை இழுத்துவிட்டேன். சிறிது குறட்டை விட முயன்றேன் முடியவில்லை.
"ஓரு பிசாசு ஒண்டு வந்து வாச்சிருக்கு. எனக்கு ஒண்டுக்கும் லாக்கில்லை. எப்ப பாத்தாலும் மூசி மூசி நித்திரை கொள்ளத்தான் தெரியும்". பியர் வாடை கப்பென்றடித்தது.
ராஜகுமாரன் போயிருப்பான். அவனால் இதையெல்லாம் சகிக்கமுடியாது. எனக்குள் பெருமூச்சு எழுந்தது. இருந்தும் நித்திரை போல் நடிப்பதில் குறியா இருந்தேன். பின்னால் எதுவோ ஊர்ந்தது. எனக்கு அருவருத்தது. சிறிது விலகிக் கொண்டேன்.
"வாடி இஞ்ச" அணைக்க முயன்றான். அவன் முரட்டுக் கரம் பட்டு விழித்தது போல் நடித்தேன்.
"எனக்கு நித்திரை வருகுது நாளைக்கு வேலைக்குப் போகவேணும்".
"ஏன் நானும் தான் வேலைக்குப் போகவேணும். இவ மட்டும்தான் உலகத்திலேயே வேலைக்குப் போறா". நக்கலாய்க் கூறிய படியே இதழ் தேடினான்.
"எனக்கு வயித்துக்க நோகுது என்னால இண்டைக்கு ஏலாது" தள்ளிப்படுத்தேன்.
"உனக்கு எப்பதான் ஏலும்? இதைத்தானே நெடுகலும் சொல்லுறாய்" அவன் கை உடல் அளைந்தது. முழங்கை கொண்டு அவன் நெஞ்சில் இடிக்கத் தோன்றியது. கட்டுப்படுத்திக் கொண்டேன். அவசரப்பட்டால் காயப்படப்போவது நான்தான்.
"என்னால ஏலாது நேற்றைய நோவே இன்னும் போகேலை" விலகிக் கொண்டேன். அவன் ஏளனமாச் சிரித்தான்.
"நேற்றோ! நேற்று என்னடி செய்தனி மரக்கட்டை மாதிரிக் கிடந்து போட்டு. ஏண்டி உனக்கு வேற யாரோடையாவது சினேகிதமே" தொடங்கி விட்டான். இனி அவன் பேசும் பேச்சுக்கள் காது கொண்டு கேட்க முடியாமல் இருக்கும்.
"என்ன கேக்கிறன் பேசாமல் கிடக்கிறாய்? சொல்லு. வேலைக்குப் போறன் எண்டிட்டு யாரிட்டையாவது போய் மேஞ்சு போட்டு வாறாய்?"
"சும்மா இருக்கிறீங்களே ஏன் இப்பிடியெல்லாம் கதைக்கிறீங்கள்?"
"அப்ப என்னோடையும் படுக்க மாட்டன் எண்டுறாய் வேறு ஒருத்தரோடையும் தொடர்பில்லை எண்டால். என்ன நீ...?"
"ஐயோ என்ன இது". நான் காதுகளைப் பொத்திக் கொண்டேன். என் கண்கள் கலங்க மங்கலாக அவன் தெரிந்தான். ராஜகுமாரன் போகவில்லை இங்கேதான் நிற்கிறான்.
"ராஜகுமாரா! ராஜகுமாரா!" நான் புலம்பினேன். ஓடிவந்து என் தலை வருடி விட்டான்.
"கூறிவிடு! என்னைப்பற்றி அவனுக்குக் கூறிவிடு" என்னை அணைத்துக் கொண்டான்.
"இல்லை ராஜகுமாரா, சொன்னால் உன்னையும் என்னிடமிருந்து பிரித்து விடுவான் என் வாழ்வில் எனக்குத் துணையாக இருக்கும் ஒரே ஜீவன் நீதான். உன்னை நான் இழக்க மாட்டேன்".
குறட்டை கேட்டது. அப்பாடா அவன் தூங்கிவிட்டான்.
"என்னுடன் வந்துவிடு" ராஜகுமாரன் கேட்டான்.
"எப்படி?" கண்ணால் வெளியே காட்டினான். எட்டிப்பார்த்தேன். வெள்ளைக் குதிரை வாலை ஆட்டியபடி நின்றது.
"சரி" என்றேன். என்னை வாரி எடுத்துக் குதிரையில் இருத்தினான். அவன் மாளிகை என் வீடு போலவே இருந்தது. பொருட்கள் எல்லாம் அழகாக அடுக்கிவைக்கப்பட்டிருந்தது.
"இன்று ஓவர் ரைம் செய்து வீட்டி வேலை எல்லாம் செய்து களைத்திருப்பாய் இதைக் குடி“ நீட்டினான். ஆவி பறக்கும் தேன் கலந்த பால். குடித்தேன்.
"காலை வேலைக்குச் செல்ல வேண்டும் படுத்துக் கொள்“
"நீ“
"நானும் தான்“ என்னை இழுத்து முத்தமிட்டு "குட்நைட“; என்றான். நான் மனம் நிறைந்து போக நித்திரையானேன்.
"நித்திரை கொண்டது காணும். போ! போய் ஒரு தேத்தண்ணி போட்டுக் கொண்டு வா“ நான் விழித்துக் கொண்டேன். பம்பரமானேன். வழமை போல. வெறுத்தது. வாழ்வு வெறுத்தது. எங்கே என் ராஜகுமாரன். தேனீர் கலக்கும் போது பின்னால் நின்று அணைத்துக் கொண்டான்.
"நான் தேனீர் கலக்கிறன் நீ குழந்தைகளின் வேலையைப் பார்“ என்றான். முரட்டுப்பிடியைத் தளர்த்தாது.
"ச்சீ! என்னடா இது பட்டப்பகலில“ நான் நெகிழ்ந்தேன்.
"என் கண்ணம்மாவை நான் எப்போது வேண்டுமானாலும் அணைத்துக் கொள்வேன்“ பிடி மேலும் இறுகியது.
"ஆ“
"என்னடி தேத்தண்ணி கேட்டாக் குசினிக்க நிண்டு தானாக் கதைக்கிறாய்“
"ச்சீ போ“ நான் ராஜகுமாரனின் பிடி விலக்கி விரைந்தேன். ராஜகுமாரன் போய் விட்டான். வருவான். இன்று இரவு மீண்டும் வருவான். பகல் வேளை ஒரு பிசிறு மாறாமல் ஒவ்வொருநாளும் ஒரே மாதிரி முடிந்து போனது. நான் களைத்துப் போனேன். குழந்தைகளைப் படுக்க வைத்து விட்டு கட்டிலுக்கு வந்தேன். வழமை போல் அவன் இல்லை. வருவான் பாதி இரவில் பாதி போதையில் வருவான். நான் அவனை என் நினைவிலிருந்து அகற்றினேன். இது ராஜகுமாரனின் நேரம். அவனுக்காக நான் காத்திருக்கும் நேரம். நான் உடைகளைத் தளர்த்திக் கொண்டேன். ராஜகுமாரன் வந்தான். நான் அவன் முகம் தேடினேன். போனவாரம் திரையில் பார்த்த ஜாடை கொஞ்சம். மூன்று நாட்கள் முன்பு வீடியோவில் பார்த்த முகம் கொஞ்சம். நண்பி வீட்டிற்கு வந்து போன இளைஞனின் முகம் கொஞ்சம். சரியாக முடிவெடுக்க என்னால் முடியவில்லை. கொஞ்சம் பயமாகவும் இருந்தது. ஆனால் பிடித்திருந்தது.
"என்ன?’ நான் குழைந்தேன்.
"நீ அழகாக இருக்கிறாய்“ என்றான்
"ஆ! நீயும் தான்“ என் உடல் உஷ்ணம் உணர்ந்தேன். அருகே வந்தான். நான் இருகை நீட்டினேன். அவன் முகம் நோக்கி. கதவு திறந்து கொண்டது. தள்ளாடியபடியே அவன் வந்தான். வில்லன். என் உடலின் உஷ்ணம் அடங்கிக் கொண்டது. கண் மூடினேன். அவசரமாக தொம் என்று கட்டிலில் விழுந்தான். இறுக என்னை அணைத்துக் கொண்டான். நான் விலக முயன்றேன். முடியவில்லை. நான் திணறினேன்.
"ராஜகுமாரா! ராஜகுமாரா காப்பாற்று என்னை“ புலம்பினேன். ஓடிவந்து என் தலை வருடியபடியே
"காலால் உதைத்து விடு“ கத்தினான். முயன்றேன் நான். முயன்றேன். முடியவில்லை. செய்வதறியாது தடுமாறினான் ராஜகுமாரன்.
"என் கண்ணே என் ராசாத்தி“ என் நெற்றியில் முத்தமிட்டான். நான் நான் பரிதாபமான அவனைப் பார்த்தேன். என்னை இறுக அணைத்துக் கொண்டான். அவனின் ஸ்பரிசம் சுகமாக இருந்தது. நானும் அவனை அணைத்துக் கொண்டேன். ராஜகுமாரன் தன் இதழ் கொண்டு என் உயிர் குடிக்க நான் கிறங்கிப் போனேன்.

உயிர்நிழல் -2000

Wednesday, March 09, 2005

ஏழாம் உலகம்

தீர்மானிக்கப்பட்ட நிராகரிப்பினால் வாசித்தல் இன்றியே சில இலக்கியவாதிகளின் படைப்புகள் கடுமையான விமர்சனத்திற்குள்ளாவது வழக்கம். படைப்புத் தெரிதல் என்பது படைப்பாளியின் தனிப்பட்ட குணாதிசயங்களைத் தாண்டிது.
அந்த வகையில் இப்படியான reasonable doubt ஐத் தாண்டி நிராகரிக்கப்பட்டு வரும் எழுத்தாளர்களில் தற்போது முன்னணியில் நிற்பவர் ஜெயமோகன்.

ஜெயமோகனின் அனைத்துப் படைப்புக்களையும் படித்தவள் நான். அவரின் எழுத்தோட்டம், சொல்லாடல் என்பவற்றில் எனக்கு நிறம்பவே நாட்டம் இருக்கின்றது. ஞனரஞ்சகப் பாணியில் எழுதப்பட்ட “கன்னியாகுமரி” கூட ஒரு பெண்ணின் காத்திரமாக பக்கத்தைத் தொட்டுச் சென்றுள்ளது. இந்த வகையில் காரணமற்ற நிராகரிப்பு ஜெயமோகன் மேல் எனக்கில்லை.

ஏழாம் உலகம் -

அண்மையில் ஜீவனை உலுக்கும் எழுத்தோட்டம் கொண்ட இரு நாவல்களால் நித்திரை இன்றி உழன்றுள்ளேன். ஒன்று யூமா வாசுகியின் “ரெத்த உறவு” அடுத்தது ஜெயமோகனின் “ஏழாம் உலகம்”

ஏழாம் உலகம் படித்துப் பாதிக்கப்படாத வாசகர் ஒருவர் இருப்பின், அவர் திறந்த பார்வையுடன் வாசிக்கவில்லை, இல்லாவிடின் மனதற்ற மனிதர். ஏழாம் உலகம் என்றால் என்ன? நாம் - அதாவது சாதாரண வாழ்க்கையில் இயந்திரமாகச் சுழன்று கொண்டு தம்மை முழுமையானவர்களாக பிரகடனப்படுத்தியபடி இருக்கும் எம்போன்றோர் அறியாத புதிய உலகம்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு நான் இந்தியா சென்றிருந்தபோது கன்னியாகுமரியில் விவேகானந்தாகேந்திராவில் ஒரு வாரம் தங்கியிருந்தேன். அனேகமாக அங்கு இருந்த காலத்தில் ஒவ்வொரு நாளும் கடற்கரைக்குச் செல்வதுண்டு. கோயில் வீதியில் வழமை போல் பல பிச்சைக்காறர்கள் இருந்தார்கள். அவர்களில் முப்பது வயது மதிக்கத்தக்க பெண் ஒருத்தி காலில் மூன்று மாதக் குழந்தை அளவிற்கு கழலையுடன் இருந்தாள். என்னால் அவளை முகம் கொடுத்துப் பார்க்க முடியவில்லை. எனது பிள்ளைகளிடம் பணத்தைக் கொடுத்து அவளுக்குக் கொடுக்கும் படி சொன்னேன். அடுத்து வந்த நாட்களில் அவளைத் தவிர்ப்பதற்காகவே நான் போகும் பாதையை மாற்றிக் கொண்டேன். அந்தக் கழலையை அவளின் காலில் இருந்து அகற்றுவதற்கு எவ்வளவு பணம் செலவாகப்போகின்றது?. அரசாங்க மருத்துவமனையில் இலவசமாகக் கூடச் சத்திர சிகிச்சை செய்து அகற்றி விடும் வாய்ப்பு இருக்கக் கூடும். இது பற்றி நான் எனது இந்திய நண்பனுடன் கதைத்த போது அந்தப் பெண் வாழ்க்கையை ஓட்டுவதற்கு அந்தக் கழலை முக்கிய மூலதனமாகக் கூட இருக்கலாம். உங்களைப் போல் அவள் மேல் இரக்கங்கொண்டு எத்தனையோ பேர் பணம் கொடுக்கப்போகின்றார்கள். அதனை அகற்றிவிட்டால் அவள் எப்படி வாழ்வது? என்றார். என் நண்பனுக்கு மூளையில் ஏதோ பழுதோ என்று கூட நான் அப்போது எண்ணியதுண்டு.

உலகத்தின் அனைத்து அழுக்குகளும் நிச்சயம் அடையாளப்படுத்தப்படல் வேண்டும். “மாயா” திரைப்படம் ரொறொண்டோ சர்வதேச திரைப்படவிழாவில் காட்டப்பட்ட போது "எம் நாட்டு அழுக்குகளைப் படம் பிடித்து வெளிநாட்டுக்குக் காட்டுகின்றாரே" என்று இயக்குனர் திக்விஜய் மேல் சினம் கொண்ட இந்தியர்கள் அதிகம். மறைத்து மூடுவதனால் என்ன லாபம்? இந்திய அரசு தலையிட்டு இப்படியான பிரச்சனைகளுக்குத் தீர்வு சொல்லப் போகின்றதா? வெளியில் வரும்போது தானே சில ஊடகங்களேனும் தலையிட்டுக் கேள்வி எழுப்புகின்றன.
அதே போன்று தெரியாத ஒரு உலகத்தை மக்களின் பார்வைக்கு வைத்துள்ளார் ஜெயமோகன். தற்போது பிச்சைக்காறர்கள் மேல் எனக்கிருந்த பார்வை நிச்சயமாக மாற்றம் கண்டு விட்டது. உடல் அங்கவீனமுற்றோர், குடும்பத்தினால் நிராகரிக்கப்பட்ட போது, தமது உடலைப் பாவித்து உழைக்க முடியாத பட்சத்திலும் பிச்சை எடுக்க வருகின்றார்கள் என்பதிலிருந்து அங்கவீனமுற்றோரில் பலரை அவர்களை பிச்சை எடுக்க வைத்துப் பணம் பண்ண ஏஜெண்டுகள் உருவாக்குகின்றார்கள் எனும் கசப்பான உண்மை நெஞ்சை நெருட வைக்கின்றது. (இத்தகவல் எந்த அளவிற்கு உண்மை?)
சுனாமி அனர்த்தத்தின் போது கன்யாகுமரியில் நான் கண்ட பிச்சைக்காறர்கள் அழிந்திருந்தால் நல்லது என்று என் மனம் எண்ணுமளவிற்கு ஏழாம் உலகத்தின் பாத்திரங்கள் என்னுள் பாதிப்பை ஏற்படுத்தி விட்டிருக்கின்றன.
மற்றைய ஜெயமோகனின் நாவல்கள் போலில்லாது "ஏழாம் உலகம்" மிகவும் எளிமையான எழுத்து நடையைக் கொண்டது.
குறைப்பிறவிகளை புணர வைத்து அதன் மூலம் உருவாகும் குறைப்பிறவிகளைக் கொண்டு வியாபாரம் செய்யும் பண்டாரமும் அவரது குடும்பமும் இந்தக் குறைப்பிறவிகளை மனிதர்களாகக் கூடக் கணிப்பதில்லை. இவர்கள் “உருப்படி” என்றே அழைக்கப்படுகின்றார்கள். பண்டாரம் தனது குடும்பத்தின் மேல் வைத்திருக்கும் பாசமும் குடும்பத்தில் சிக்கல்கள் ஏற்படும் போது “நான் யாருங்கு என்ன தீங்கு செய்தேன் என்னை ஏன் இறைவன் இப்படிச் சோதிக்கிறான்” என்ற அவரது அறியாமை அலறலும் சினத்தை ஏற்படுத்தினும் பண்டாரத்தை முற்று முழுதாக ஒரு குரூபியாகப் படைப்பாளி சித்தரிக்கவில்லை. குறைப்பிறவிகளும் பண்டாரத்தை தமது முதலாளியாகக் கொண்டு அவர் மேலும், அவர் குடும்பத்தின் மேலும் பாசம் கொண்டவர்களாகவே காட்டப்படுகின்றார்கள்.
ஒரு கூட்டுக்குடும்பம் போல் இந்தக் குறைப்பிறவிகள் ஒன்றாகத் தமக்கான ஒரு உலகத்தை வடிவமைத்து அவர்களுக்குள் நுண்ணிய உணர்வுகளுடன் மோதுவது மிகவும் நகைச்சுiவாயாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. பொலிஸ்காறனின் வேட்கையைத் தீர்க்க இளம் பெண் உருப்படி அனுப்பப்படுவதும், பிறந்த குறைப்பிறவிக் குழந்தையை வெய்யிலுக்குள் கிடத்தி உணவின்றி அழ வைத்துப் பார்வையாளர்களின் இரக்கத்திற்குள்ளாக்கிப் பணம் பெறுவதும், தனக்கு உபயோகப் படாது என்று எண்ணும் உருப்படிகளை வேறு ஏஜென்டிற்கு விற்று அவர்களைப் பிரிப்பதும், படிக்கும் போது ஜீரணிக்க முடியாத உணர்வலைத் தாக்கம் தரவல்ல பக்கங்கள்.
நாவலின் முடிவு தந்த அதிர்வு பல நாட்களாக மனஉளைச்சலை எனக்குள் விட்டுச் சென்றது. தொடர்ந்து குறைஜீவிகளை உருவாக்கித் தரும் முத்தம்மை எனும் பெண் பண்டாரத்தின் முக்கிய சொத்து. குறிப்பிட்ட கால இடைவெளியில் முத்தம்மையை ஒரு குறைப்பிறவியுடன் கட்டாயமாகப் புணர வைத்து குறைப்பிறவிக் குழந்தையை உருவாக்கிக் கொண்டிருக்கும் பண்டாரம், இறுதியில் அடுத்த குழந்தையை உருவாக்க வேண்டி ஒரு பாலத்தின் அடியில் இரவு நேரம் ஒரு குறைப்பிறவி இளைஞனிற்கு மது அருந்தக் கொடுத்து முத்தம்மையை அவன் மேல் போட்டு விட்டுப் போகின்றார். அவன் அவளைத் தழுவும் போது எதிர்க்கத் திராணியற்ற நிலையில் முத்தம்மை கதறுகின்றாள் “ஓற்றை விரல், ஒற்றை விரல்” என்று. தன் பிரசவத்தில் பிறந்து பிரிக்கப்பட்ட ஓற்றை விரல் மகனுடன் இன்னுமொரு குறைப்பிறவியை உருவாக்க முத்தம்மை புணர வேண்டிய கட்டாயம். தாய் என்று அறியாத குறைப்பிறவி இளைஞன் போதையில் தனது தாயுடன் புணருவதாக நாவல் முடிகின்றது.

விமர்சனங்கள் மிகவும் குரூரமான எழுத்து முறை என்பதாயும், இல்லாத ஒரு உலகத்தை எழுத்தாளர் கற்பனையில் கொண்டு வந்துள்ளார் என்றும் வைக்கப்பட்டிருந்தன. "ஏழாம் உலகம்" கற்பனை உலகமல்ல -

நாம் அறிந்திராத, அறிய விரும்பாத, அசட்டையாய் இருந்துவிட்ட உலகம்.

Tuesday, March 08, 2005

“Million dollar baby”



உலக அழகிப் போட்டியைப் போலவே Red Carpet "ஒஸ்கா" விருது வழங்கும் விழாவும் அமெரிக்கத் தலைகளில் ஒரு களியாட்ட நாள். எங்கும் எதிலும் நுழைந்து விட்ட அரசியல் இதற்குள்ளும் நுழைந்து விட்டது. இருந்தும் வடஅமெரிக்கர்களின் மிக முக்கியமான நாட்களில் இந்த "ஒஸ்கா" விருது வழங்கும் நாளும் முன்நிலையில் நிற்கின்றது. முன்னணி நடிகர், நடிகையர் இயக்குனர்களிலிருந்து முன்நாள் கலைஞர்களும் மிகவும் கவர்ச்சியாகக் கலந்து கொள்ளும் இந்நிகழ்வை கண்கள் அகல, வாய் திறந்து பார்க்கும் கூட்டமே உலகில் அதிகம். (கனவுக்கன்னிகளையும், காளைகளையும் அவர்களின் மிக உயர்ந்த உடை அலங்காரத் தெரிவில் பார்ப்பதற்கு யாருக்குத்தான் பிடிக்காது)


“ஒஸ்கா” விருது பெற்ற திரைப்படங்கள் எல்லமே எல்லோருக்கும் பிடிக்கும் என்பதற்கில்லை.. ஒஸ்கா 76 இல் சிறந்த திரைப்படமாகத் தெரிவு செய்யப்பட்ட “Lord of the Ring Return of the King” தொழில்நுட்பம் பிரமாண்டம் போன்றவற்றாலும், 75 இல் சிறந்த திரைப்படமாகத் தெரிவு செய்யப்பட்ட "Chicago” புதிய யுக்தியைப் பாவித்து (மிகச்சாதாரணமான திரைக்கதை) இசைத் திரைப்படமாகத் தந்திருந்ததாலும் பரிசுகளைத் தட்டிச் சென்றுள்ளன. "American Beauty” “Beautiful mind” போன்ற திரைப்படங்கள் தரமான திரைக்கதையைத் தாங்கி வந்து விருதுகளைப் பெற்றுச் சென்றிருக்கின்றன.

இனி இந்த ஆண்டின் சிறந்த திரைப்படத்திற்கான ஒஸ்கா விருதைப் பெற்ற “Million Dollar Baby” எனது பார்வையில் -

நான் Clint Eastwood இன் ரசிகை அல்ல (The Good The Bad and The Ugly பார்த்த பின்பும்) இருந்தும் ஒஸ்கா வென்ற திரைப்படங்களை அனேமாகத் தவற விடுவதில்லை. (“Lord of the Ring Return of the King” ஐத் தவிர)

தனது 74வது வயதில் மிகவும் நுணுக்கமாக பொருட் செலவு பிரமாண்டம் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்காது காட்சியமைப்பு கதை நடிப்பு போன்வற்றை முன்னிறுத்தி இப்படத்தை இயக்கியுள்ளார் Clint Eastwood.


மனிதாபிமானம் கொண்டவர்கள் இந்தக் காலத்தில் பிழைக்க முடியாது என்பதுதான் இப்படத்தின் கரு. அனுபவம் நிறைந்த ஒரு முன்னணி boxing trainer Frankie தனது முன்னாள் மாணவனும் நண்பனுமான eddie ஒரு கடுமையான போட்டியின் போது கண் ஒன்றை இழந்து விட அதற்குக் காரணம் தான் என்ற குற்ற உணர்வில் தொடர்ந்து வரும் அவரது மாணவர்களை பணம் சம்பாதிக்கக் கூடிய கடுமையான போட்டிகளில் பங்கு பற்றுவதற்குத் தடையாக நிற்கின்றார். இதனால் பல தரமான மாணவர்களை அவர் இழக்க நேருகின்றது.
இந்த வேளை அங்கே வந்து சேருகின்றாள் Maggie. காத்திரமான குடும்பப் பின்னணி இல்லாததால் தன் ஒரே பிடிப்பான boxing ஐக் கனவாகக் கொண்டு trainer Frankie யின் பெண்களைச் சேர்த்துக் கொள்ள மாட்டேன் என்ற உதாசீனத்தையும் மீறி அவரின் மனதை மாற்றி அவரின் மாணவியாகித் தனது திறமையால் தொடர்ந்து பல வெற்றிகளைக் கண்கின்றாள். அவளது திறமை அவளை மிக உச்சிக்குக் கொண்டு போகும் என்று நம்பியும் தனது மேற்பார்வையில் அதனைச் செய்யத் தயங்கிய Frankie அவளை வேறு ஒரு மனேஜரிடம் அறிமுகப்படுத்தி வைக்கின்றார். Maggie அதற்குச் சம்மதிக்காமல் அவரின் மேற்பார்வையில் பல போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுகின்றாள். விட்டுச் சென்ற தன் மகளின் நினைவோடு பாசமாய் நெருங்கும் Frankie அவளை Women's Boxing Association நடாத்தும் Million Dollar போட்டிக்காக அழைத்துச் செல்கின்றார், அவளுடன் போட்டி போட்ட உலக சம்பியனின் சதித் தாக்குதலால் கழுத்திற்குக் கீழ் உணர்வற்று கட்டிலில் கிடக்கும் Maggie தனது கனவு நிறைவேறி விட்டதாக Frankie இடம் சொல்லித் தன்னைக் கருணைக் கொலை செய்யுமாறு கேட்கின்றாள். மீண்டும் தன் தவறு என்று தடுமாறிப் போகும் Frankie இடம் அவனது நண்பன் eddie ஒன்றுமில்லாதவளை உலகப் புகழ் பெறச் செய்து அவளின் கனவை நிறைவேற்றியிருக்கின்றாய். ஒரு நிறைவான வாழ்க்கையைக் காட்டியிருக்கின்றாய் என்று அறிவுரை கூற Maggie இன் விருப்பப்படியே அவளைக் கருணைக் கொலை செய்கின்றார் boxing trainer Frankie.

காட்சிகளுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்துப் படமாக்கப்பட்டுள்ளது. நடிகர்களின் உடைகளின் சிறிய கிழிசல்கள் கூட அந்தக் குத்துப் பயிற்சி நிலைத்து முகாமையாளர்களின் வசதியைக் கூறுவதாக அமைத்திருக்கின்றது.
சிறிது மனவளர்ச்சி குறைந்தவன் போல் காணப்படும் மிகவும் ஒல்லியா ஒருவன் தானும் குத்துச் சண்டை பழகி வெற்றி பெற வேண்டும் என்று ஆர்வத்துடன் தவறாமல் உடற் பயிற்சி செய்ய அவனைக் கிண்டலடித்து eddie அங்கு இல்லாத நேரம் பார்த்து அவனை வம்புக்கிழுத்து அடித்து நொருக்கும் ஒரு கறுப்பு இன மாணவன் என்றும், உணவகத்தில் வேலை செய்யும் Maggie வாடிக்ககையாளர்கள் விட்டுச் சென்ற இறைச்சியைத் தனது நாய்க்கு என்று கூறி எடுத்து வந்து சாப்பிடுவது என்றும் வழமையான பாணி காட்சிகள் பலவும் இடம் பெற்றிருக்கின்றன இருந்தும் அண்மைக்கால Hollywood திரைப்படங்களுள் சிறப்பாகப் படமாக்கப்பட்டுள்ளது.


Frankie – Clint Eastwood
Eddie – Morgan Freeman - சிறந்த துணை நடிகன் 2005
Maggie - Hilary Swank – சிறந்த நடிகை 2005

பெண்கள் தினம்

பெண்கள் தினம் என்று மார்ச் மாதம் 8ம் திகதியைப் பிரகடனப்படுத்திப் பெண்களுக்குப் பெருமையைச் சேர்த்திருக்கின்றார்கள் ஆண்கள். “அங்கவீனம் உற்றோர் நாள்” கறுப்பர் நாள், “முதியோர் நாள்”, “தாய் நாள்”, “தந்தை நாள்??” என்பது போல் பெண்களுக்காக ஒருநாள். எல்லா சிறுபான்மை பாதிக்கப்பட்டவர்களுக்கும் விசேடமாக ஒருநாள். தம் வலியை மறந்து அவர்கள் சந்தோஷித்திருக்க. முதியோர் இல்லத்தில் பிள்ளைகளால் விடப்பட்ட முதியோரிற்கும், கை விடப்பட்ட அப்பாவிற்கும், அம்மாவிற்கும், இன்னும் அங்கவீனம் உற்றவர்களுக்கும், பெண்களுக்கும் ஒரு விசேட நாள் இதற்காகப் பெண்ணாப் பிறந்த பலர் பெருமை கொள்கின்றார்கள். இந்த நாளில் மட்டும் பெண்களின் சாதனைகள் நினைவு கூரப்படுகின்றன. (மற்றைய நேரங்களில் மறந்து போனதால்)

ஆண்களுக்காக ஒரு விசேஷ நாள் ஏன் இல்லாமல் போனது? கணவனாக, அரசிலயல்வாதியாக, தொழில்அதிபராக எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் தோல்வியைத் தழுவிக்கொண்டிருக்கும் இந்த ஆண்களை குஷிப்படுத்த ஒரு விசேட நாள் ஏன் வைக்க நாம் மறந்தோம். அழகான இந்த உலகத்தை பாதை விலக்கி, ஆதாள பாளத்திற்குள் கொண்டு செல்லும் இந்த பெரும்பான்மை ஆண்களின் இயலாத்தனத்தை ஒருநாள் அவர்கள் நாளாகப் பிரகடணப்படுத்திக் கொண்டாடுவதன் மூலம் ஆண்கள் கொஞ்சம் மகிழ்ந்து போவார்கள் அல்லவா? ஆண்கள் பலவீனமானவர்கள் உடலால் அல்ல மனதால். திருமணமாகிக் குடும்பம் என்ற கட்டுக்குள் வந்தவுடன் தாயில் சார்ந்திருந்த ஆண் மகன் மனைவியில் சாரத் தொடங்குகின்றான். தான் உட்கொள்ளும் உணவைச் சமைப்பது கூட அவனால் முடியாமல் போகின்றது. அவன் உடைகள், உடமைகள் இருக்கும் இடம் அவனுக்குத் தெரிவதில்லை. குழந்தை வளர்ப்பு? ஊகூம் கேட்க வேண்டியதில்லை. மனைவியை இழந்து போகும் ஆண்களுக்கு ஒரு பெண் துணையின்றிக் குடும்பத்தைக் கட்டிக்காக்க முடிவதில்லை. அவனுக்கு உடனேயே மறுமணம் தேவைப்படுகின்றது. இதுவும் ஒருவகை அங்கவீனம் தானே? இப்படி இருக்கும் போது அவர்களை இந்த உலகம் கண்டு கொள்ளாமல் போகலாமா?

97:3 வீதத்தில் ஆண் பெண் உடல் வலிமையில் 3 சதவீதப் பெண்கள் மட்டுமே ஹோர்மோர்களின் தரத்தில் ஆண்களுக்கு இணையாக இருக்கின்றார்கள். இருந்தும் ஒப்பீட்டளவில் உடல் உழைப்பிலும், மனவலிமையிலும் பெண்கள் மிகவும் உச்சத்தில் இருக்கின்றார்கள். பெண்கள் உலகத்தில் தற்போது ஆண்களின் தேவை மிகவும் மருகி வருகின்றது. ஆண்களின் அசட்டைத்தனம், மிதமிகுந்த தலைக்கனம் கூடிய தன்நம்பிக்கை, அலட்சியம் போன்றவற்றால் பெண்களிடையே ஓரினச்சேர்க்கை அதிகரிக்க வாய்ப்பு இருக்கின்றது. இது பெண்களின் உலகத்தில் ஆண்களின் தேவையை முற்றாக ஒழித்து விடக் கூடும். இனப்பெருக்கம் வேண்டி ஆண்களின் விந்தினை மட்டுமே பெண்கள் செயற்கையாகப் பெற்றுக்கொள்ளும் நிலைக்கும் வரக்கூடும். “ஆண்கள் ஜாக்கிரதை”
ஆண் உலகை துணிவோடு எதிர்நோக்கும் பெண்களுக்கு இந்த “பெண்கள் தினம்” ஒரு பொருட்டல்ல. மதம், கலாச்சாரம், சமூகம் பொன்றவற்றால் தினம் தினம் நசுக்கப்படும் பெண்களுக்காகக் குரல் கொடுக்கும் ஒருநாள் அல்ல பல நாட்கள் தேவை. அந்தக் குரல் கொடுப்பு அவர்களின் இந்த ஒடுக்கப்பட்ட வாழ்க்கை முறையில் ஏதாவது மாற்றத்தைக் கொண்டு வருமெனின். வெறுமனே பொழுது போக்கிற்காக ஒருநாளைப் பெண்களுக்காகப் பிரகடனப்படுத்தி விட்டு தினம் தினம் ஒடுக்குமுறைக்குள் ஆளாகி வரும் பெண்களைக் கண்டு கொள்ளாத அமைப்புக்களின் பெண்கள் தினக் கொண்டாட்டமும் அறிக்கையும் எதற்காக?

Friday, March 04, 2005

குரல்

பாநாட னரப்பமத ளான்பாந,
னபடா பந்யகபொ டன்ன,
காமனா சந்பனத டாபமனட,
காமன பானமாந்க டபாதபட்,

அதிர்கிறது அவன் குரல்;

எலும்புகள் நொருங்க
ஊத்தைத் துணிக் குவியலாய் நான்

வெடிப்புற்ற சுவர்களினூடு ஊடுருவும்.
கதவுகள் பிரமாண்டமாய் உயர
இறுகும் கைபிடிக் குமிழ்கள்.

தண்ணீர் குழாய்களிலும்
தொலைக்காட்சி, தொலைபேசிகளிலும்
அலை அலையாய் கசிந்து வரும்.

இடைவெளியற்று கனவுகளில்
புகைப்போக்கிப் புகையாய் அச்சமூட்டும்.
இரவுகள் இறக்கும்.
பனி மலைகள் உருகி,பதுங்கி
இடம் மாறும்.

செவிப்பறைக்கள் வெறுப்பேறி
கேட்பதை நிறுத்த கைகளால் அழுத்தும்.
விரல்களின் இடைவெளிகள்
அதிர்ந்து, அதிர்ந்து இடம்விடும்

மொழி மறந்து சிலிக்கும் உடலில் நரம்புகள்
வாய்க்கியம் எழுதும்.

கூரைகள் உயர, கதவுகள் வளர
தொடுதலுக்காய் ஓடி, ஓடி
களைத்து நான் நிமிர
நிறுத்துவாய் உன் குரலை ஒருநாள்
அப்போது
அடங்கியிருக்கும் என் உடல்.

Thursday, March 03, 2005

“சே”

2004ம் ஆண்டு ரொறொண்டோ திரைப்படவிழாவின் போது நான் பார்க்க விரும்பும் திரைப்படங்களுக்கா ஒரு பட்டியலைத் தயாரித்தேன். எனக்கான நேரத்திற்குள் “மோட்டசைக்கிள் டையரி” வரவில்லை. மிகவும் கவலையாக இருந்தது. இருந்தும் திரைப்படவிழா வந்த பின்னர் ஏதாவது ஒரு திரையரங்கில் வெளிவரும் அப்போது பார்த்துக் கொள்ளுவோம் என்று என்னை ஆறதல் படுத்திக்கொண்டேன். நான் எதிர் பார்த்தது போலவே இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஒரு திரையரங்கில் வெளிவந்ததை அறிந்து சென்று பார்த்தேன். மிகவும் சந்தோஷமாக இருந்தது. இருந்தும் இத்திரைப்படத்தில் “சே” ஆக நடித்த நடிகர் கயேல் காசியா பெர்னால் மிகவும் மென்மையான தோற்றம் உள்ளவராக இருப்பதால் மிக நன்றாக அவர் நடித்திருந்தும் “சே” போல் புரட்சியாளனான பிரதிபலிப்பை அவர் தரவில்லையோ என்று தோன்றுகின்றது.

மிக இளவயதில் ஒரு புரட்சியாளனாக இருந்து தனது கொள்கைக்காக மரணதண்டனை கொண்ட நாயகன் “சே” (எர்னெஸ்டோ சேகுவாரா) இவரின் வாழ்க்கையின் ஒரு காலப்பகுதியை அதாவது அவர் வட அமெரிக்காவிற்கு தனது நண்பனான அல்பேட்டோ கிறனாடோவுடன் மேற்கொண்ட மோட்டசைக்கிள் பயணத்தின் (பழைய ஒரு மோட்டசைக்கிளில் ஆரம்பித்துப் பின்னர் நடை ஹைக்கின் என்று மாறிப்போனது) அனுபவங்களை “சே” யின் டையரியில் இருந்தும் அல்பெட்டோவின் புத்தகத்திலிருந்தும் பெற்று படமாக்கியுள்ளார்கள். இப்பயணத்தின் போது 7 மாதங்கள் தொடர்ந்து 7500 மைல்களிற்கு பயணித்துள்ளார்கள்.


எர்னெஸ்டோ குவாரா ஆஜன்டீனாவின் ரொசாறியோ எனும் இடத்தில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து அவரது இரண்டாவது வயதில் கடுமையான ஆஸ்மா நோயினால் பாதிக்கப்பட்டு அதற்காகவே கொர்டோபாவிற்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்தவர். குடும்ப பாசம் மிகுந்தவராக இருந்த போதும் “சே” ஒரு நாடோடியைப் போலவே வாழ்க்கையை ஓட்டினார். புரட்சிகரமாக புத்தகங்களையும் தலைவர்களையும் இளவயதிலேயே ஆராயத்தொடங்கிய இவர் ஒரு மருத்துவ மாணவன்.
(“மோட்டசைக்கிள் டையரி” திரைப்படம் பற்றிய விமர்சனத்தை ஏற்கெனவே மாண்டிரீஸர் தனது புளொக்கில் எழுதிவிட்டார்)

இனி –

பெப்ரவரி மாத உயிர்மையில் “திருஉரு” வாக “சே” ஐ எப்படி உலகம் உருமாற்றி விட்டிருக்கின்றது என்பது பற்றி ஒரு கட்டுரை அ.மாக்ஸ் ஆல் எழுதப்பட்டிருந்தது. அப்போது என் மனதில் எதற்காக “மோட்டசைக்கிள் டையரி”யை நான் பார்ப்பதற்கு மிகுந்த ஆவலாக இருந்தேன் என்ற கேள்வி எழுந்தது. அ.மாக்ஸ் கூறியிருந்தது போலவே நெல்சன் மண்டெல்லோவின் சுயசரிதையோ யசீர் அரபாத்தின் வாழ்க்கை வரலாறோ படமாக வந்திருந்தால் இப்படி நான் ஆர்வத்துடன் போய்ப் பாத்திருப்பேனா? கேள்விக்குறிதான். ஒரு நவநாகரீகத் தோற்றத்தில் “சே” இருப்பது அவரது உடை, தொப்பி, தோற்றம் போன்றவை அவரை உலகெங்கும் ஒரு “திருஉரு” வாக மாற்றி விட்டிருக்கின்றது என்பது உண்மை. இருந்தும் “சே” தனது நாட்டு மக்களுக்காக மட்டும் போராடிய மனிதர் இல்லை. முற்றுமுழுதான ஒரு மனிதாபிமானி. பாதிக்கப்பட்ட மக்களுக்காக மட்டுமே குரல் கொடுத்த மனிதர் எனும் போது யசீர் அரபாத்திலும் மண்டெலாவிலும் இருந்து இவர் சற்று வேறுபடுகின்றாரோ என்று எண்ணத் தோன்றுகின்றது. ஒரு நாடோடி பாதிக்கப் பட்ட மக்களை எங்கு காணினும் அவர்களுக்காகக் குரல் கொடுத்தவர். எனவே இவரைத் “திருஉரு” வாக ( அவரின் தோற்றம் ஒரு காரணமாக இருந்த போதும்) உலகமக்கள் கொள்வதில் தவறென்ன? இவர் இறப்புக் கூட இவர் மண் மொழி இனத்துக்கானதல்ல

பொதுமகன், எவனொருவனை விசுவாசிக்கின்றானோ? அவனை தனது தலைவனாக வரிந்து கொள்கின்றான். முற்றுமுழுதாகத் தவறிழைக்காதவர் என்று ஒருவரும் இல்லை. “சே” குற்றவாளிகளுக்கு மரணதண்டனை வழங்கியதை அவரை தலைவனாக் கொள்ளும் மக்கள் ஏற்றுக் கொள்கின்றார்கள். இந்த அடிப்படையில் ஆராய்ந்து பார்க்கையில் கிட்லரும், முசோலினியும் கூட அவர்களது விசுவாசிகளால்
ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களாகவே கொள்ளலாம். எமது சிந்தனைக்கு ஏற்ப நாம் விசுவாசிக்கும் தலைவர்களை நாம் தான் அடையாளப்படுத்தல் வேண்டும். எந்த ஒரு தலைவன் பற்றியும் விசுவாசி பற்றியும் கேள்வி எழத்தான் போகின்றது. இதுபோல்த் தான் அ.மார்க்ஸ் “சே”யின் மீது வைத்த கேள்வியும்.

“Bend it like Beckham"

Cultural conflict இனாலும் Generation Gap இனாலும் பாதிக்கப்படும் புலம்பெயர்ந்த மக்களின் போராட்டத்தை மையமாக வைத்துப் பல திரைப்படங்கள் வந்திருக்கின்றன. அவற்றுள் அதிகம் பேசப்பட்ட திரைப்படம் ““My big fat Greek wedding”. அதே போல் இந்திய மக்களைத் தளமாக வைத்து வெளிவந்த திரைப்படங்களுள் எனக்குப் பிடித்தது “Bend it like Beckham“. இதன் மூலக்கதை எல்லா நாட்டுப் புலம்பெயர்ந்த மக்களுக்கும் பொருந்தக் கூடியதாக இருப்பதால் நகைச்சுவை உணர்வோடு இக்கரு பல இயக்குனர்களால் திரைப்படமாக்கப்பட்டிருக்கின்றது. முக்கியமாக இங்கிலாந்தில் இந்தியர் பாக்கிஸ்தானியர் இக்கருவை மையமாக வைத்துப் பல திரைப்படங்களைத் தந்துள்ளார்கள். “East is East” “My Son the Fanatic” போன்றவை குறிப்பிடத்தக்கவை. தீபா மேத்தாவின் “Bollywood Hollywood “ கூட இப்படியான ஒரு திரைப்படம்தான். ஆனால் அதில் மிகுந்த செயற்கைத்தனம் இருந்தது.

“Bend it like Beckham" கலாச்சார முரண்பாடு, சந்ததி இடைவெளி போன்றவற்றோடு பேச்சுத் திருமணம், கலப்புத் திருமணம், பெண்ணியம், ஓரினச்சேர்க்கை என்று பலவற்றையும் மேலோட்டமாக அலசி வருகின்றது. இருந்தும் இத்திரைப்படத்தில் முக்கியமாக பெண்ணால் எதையும் செய்ய முடியும் என்றும், கலாச்சாரம் ஒருவரின் முக்கியமாகப் பெண்களின் விருப்பத்திற்கு மாறா நிற்கக் கூடாது என்பதை வலியுறுத்துகின்றது.

பேச்சுத் திருமணத்தை விரும்பும் ஒரு இந்தியக் குடும்பம் எப்படித் தனது மகளின் உதைபந்தாட்டத் துறையையும் கலப்புத் திருமணத்தையும் ஏற்றுக் கொள்கின்றது என்பதை மிகுந்த நகைச்சுவை உணர்வோடு படமாக்கியிருக்கின்றார் இயக்குனர் Gurinder Chadha.
Beckham போல் தானும் ஒரு உதை பந்தாட்ட வீராங்கனையாக வர வேண்டும் என்ற கனவில் பெற்றோருக்குத் தெரியாமல் ஜஸ்மிண்டர் பூங்காக்களில் உதைபந்தாட்டம் விளையாட அவளின் திறமையைக் கண்டு தமது அணியில் சேர்த்துக் கொள்கிறது ஒரு உதைபந்தாட்ட அணி. அதன் பின்னர் ஜஸ்மிண்டர் எதிர்கொள்ளும் பிரச்சகைள் நகைச்சுவையாகப் படமாக்கப்பட்டிருக்கின்றது. ஜஸ்மிண்டரின் திறமையால் உதைபந்தாட்ட அணி வெற்றி கொள்வதும் ஜஸ்மிண்டர் தனது Coach க் காதலிப்பதும் என்று நாம் எதிர்பார்க்கும் திரைப்பட Formula வைத்தான் “Bend it like Beckham" உம் கொண்டுள்ளது. ஜஸ்மிண்டர் இங்கிலாந்தில் வாழும் இந்தியப் பெண். மிகவும் நன்றாக அவருக்கு நடிப்பு வருகின்றது.

Gurinder Chadha தீவிர திரைப்பட இயக்குனர் இல்லை என்பது முன்பே தெரிந்ததால் அதனை எதிர்பார்க்காமல் சென்று பார்க்கும் பார்வையாளர்களுக்கு ஏமாற்றமாக இருந்திக்காது. Gurinder Chadha ஐஸ்வர்யா ராயை வைத்து இயக்கியிருக்கும் “Bride and Prejudice” கூட முற்றுமுழுதான பொழுது போக்கிற்கான அழகியல் திரைப்படமாகத்தான் இருக்கப் போகின்றது. இருந்தும் மனதைக் குளிர்மையாக்க திரையரங்கிற்கு சென்று பார்க்கவுள்ளேன்.

Wednesday, March 02, 2005

நனைவிடை “நோ” தல்

கறுப்பி அருவரி தொடக்கம் அஞ்சாம் வகுப்பு வரை அம்மான்ர பள்ளிக்கூடத்தில படிச்சவள். டீச்சரின்ர மகள் எண்டு சொல்லி அவளுக்குப் பள்ளிக்கூடத்தில நல்ல செல்லம். அதால படிப்பிலையும் நல்ல கெட்டிக்காரியாய் முதலாம்,ரெண்டாம் பிள்ளை எண்டு வந்து கொண்டிருந்தாள். (டீச்சரின்ர மகள் எண்டு மற்ற டீச்சர்மார் மாக்ஸ் கூடப்போட்டார்களோ தெரியவில்லை) பள்ளிக்கூடத்தில நடக்கிற பேச்சுப்போட்டி, ஓட்டப்போட்டி, பாட்டுப்போட்டி, நடனப்போட்டி எல்லாத்திலையும் கறுப்பி (டீச்சரின்ர மகள் உதுக்கு முக்கிய காரணம் எண்டு நினைக்கேலை கறுப்பி படிப்பிலும் பாக்க உதுகளில கெட்டிக்காறி) பங்கு பற்றுவாள்.
பள்ளிக்கூட முதலாவது இன்ரவெலுக்கு கறுப்பி டீச்சர்மார் கூடி இருந்து வம்பளக்கிற அறைக்குள்ள போய் பிஸ்கோத்துச் சாப்பிட்டு ரீ குடிச்சு வருவாள். சில வேளைகளில விளையாடிற பிஸியில கறுப்பி போக மறந்து போனால் அவளின்ர அம்மா ஆராவது ஒரு பெட்டையைப் பிடிச்சு கறுப்பிக்கு ரீயும், பிஸ்கோத்தும் குடுத்து விடுவார். கறுப்பி விளையாடுற அவசரத்தில (எல்லாப்பெட்டைகளும் பாத்துக்கொண்டு நிக்க) பிஸ்கோத்தைச் சாப்பிட்டு ரீயைக் குடிச்சுப் போட்டு கப்பை அந்தப் பெட்டையிட்டக் குடுத்து விடுவாள்.
மத்தியானச் சாப்பாட்டை வேலைக்காறன் (கறுப்பியின்ர வயசு) சமைச்சுக் கொண்டு வருவான். கறுப்பியும் அம்மாவும் சுடச்சுடச் சாப்பிடுவீனம்.

Every tide has its ebb

ஆறாம் வகுப்புக்கு கறுப்பி Town பள்ளிக்கூடத்துக்கு பஸ்ஸில போகத் தொடங்கினாள். பள்ளிக்கூடத்தில கன்னம் அப்பிள் பழம் போல மின்ன காரில வந்து இறங்கிற டொக்டர், என்ஜினியர்மாரின்ர பிள்ளைகளும் டீச்சர்மாரால் தூக்கி ஏத்தப்படுகிற டீச்சர்மாரின்ர பிள்ளைகளும் கறுப்பிக்கு மனஉளைச்சலைத் தந்துது. (அப்ப ஆருக்கு உதெல்லாம் தெரியும்) படிக்க விரும்பமில்லாமல் பத்தாம்,பதினஞ்சாம் பிள்ளை எண்டு பின்னால போனாள். எந்த ஒரு போட்டிக்கும் கறுப்பி எடுபடவில்லை. எல்லாத்துக்கும் டீச்சர்மாரின்ர பிள்ளைகளும் டொக்டர், என்ஜினியர்மாரின்ர பிள்ளைகளும்தான் எடுபட்டீச்சினம்.. (கெட்டிக்காரியாய் இருந்தும் சோதித்துப் பார்க்காமலே நிராகரித்து விட்டீனம்) கறுப்பிக்குப் பள்ளிக்கூடம் போகக் கள்ளத்தில அடிக்கடி வயித்துக் குத்து வந்துது. இப்பிடியா ஒருமாதிரி இழுபட்டு கறுப்பி A/L மட்டும் படிச்சு முடிச்சாள். Town பள்ளிக்கூடம் போனதால கறுப்பி செய்த ஒரே உருப்படியான காரியம் Boy Friend பிடிச்சதுதான். பேசாமல் அம்மான்ர பள்ளிக்கூடத்தில படிச்சிருந்தா இப்ப கறுப்பியும் வெங்கட்டு போல கனடாவில ஒரு விஞ்ஞானியா வந்திருக்கக் கூடும்.

இந்த எம்நாட்டுப் பள்ளிக்கூட முறை புலம்பெயர்ந்த பிறகும் எங்கட மக்களிட்ட இருந்து போகுதில்லை. கனேடிய தமிழ் பள்ளிகள் பல இதே நிலையில்தான் இன்னும் இயங்கி வருகின்றன.

Tuesday, March 01, 2005

Osama

Winner of two awards at the 2003 Cannes Film Festival
Osama Directed By: Siddiq Barmak
Afghanistan/Japan/Ireland, 2003


தலிபான் ஆட்சியின் போது ஆப்கானிஸ்தானில் பெண்கள் வேலைக்குச் செல்வது தடைசெய்யப்பட்டது. அப்படியானால் ஆண்கள் இல்லாத குடும்பத்தின் நிலை? இதனை மையமாக வைத்து வெளிவந்திருக்கின்றது “ஒசாமா” எனும் ஆப்கான் திரைப்படம்.
தனது கணவனை கபால் போரிலும் சகோதரனை ரஷ்யப் போரிலும் இழந்து விட்டு பாட்டி, 12 வயது மகள் என்று ஆண் துணையின்றித் தனித்து நிற்கின்றாள் தாய். பெண்கள் வேலைக்குச் செல்லக் கூடாது என்ற தலிபான் ஆட்சியின் கீழ் வீட்டிற்கு உணவிற்காக மகளை ஆண் பிள்ளை போல் மாற்றி வேலைக்கு அனுப்பு என்ற பாட்டி கூற முதலில் மறுத்தாலும் வேறுவழியின்றித் தனது மகளை ஆண் போலாக்கி “ஒசாமா” என்று பெயரிட்டு குடும்ப நண்பர் ஒருவரின் கடைக்கு வேலைக்கு அனுப்புகின்றாள்.

மருண்ட கண்களுடன் வேலைக்குச் செல்லும் ஒசாமா வேலை முடிந்ததும் முதலாளி கொடுக்கும் உணவுப் பொருட்களுடன் வீட்டிற்கு ஓடி வந்து சேர்ந்து விடுவாள். தலிபான்களின் கையில் அகப்பட்டால் மரணதண்டனை நிச்சயம் என்பது அவளுக்குத் தெரியும்.
தலிபான்களால் அனைத்து சிறுவர்களும் இராணுவப்பயிற்சிக்கும், குர்ரான் படிப்பதற்கு அழைக்கபடுகின்றார்கள். வேறு வழியின்றி ஒசாமாவும் செல்கின்றாள். அவளை பெண் என்று தெரிந்த அவள் வீட்டிற்கு அண்மையில் இருக்கும் ஒரு சிறுவனைத் தவிர அனைத்துச் சிறுவர்களும் ஒசாமாவை பெண் போல மென்மையாகவும் அழகாகவும் இருக்கிறான் என்று கேலி செய்கின்றார்கள். அவர்களின் கேலிப்பேச்சிலிருந்து அந்தச் சிறுவன் ஒசாமாவைக் காப்பாற்றுகின்றான். ஆனால் எவ்வளவு காலத்திற்கு?
சிறுவர்களுக்கு குளிக்கும் முறை காட்டிக் கொடுக்கப்படுகின்றது. உடைகளைக் களைந்து விட்டு தண்ணீர்த் தொட்டிக்குள் ஏறியிருந்து ஆண் குறியைக் கழுவும் முறை சொல்லிக் கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது ஒசாமா அவர்கள் கண்களின் படாமல் ஒளித்துக் கொள்கின்றாள். ஆனால் சிறுமிதானே ஆர்வ மிகுதியால் தலையை நீட்டிப்பார்க்க அவளையும் அழைத்துக் குளிக்கும் படி உத்தரவிடுகின்றார்கள். இது இப்படத்தின் ஒரு முக்கிய காட்சி ஆனால் மிகவும் எளிதாக ஒசாமா மேல் சட்டையை மட்டும் களைந்து விட்டுத் தண்ணீருக்குள் போகின்றாள். 12 வயதுச் சிறுமியான அவள் மார்பகங்கள் தட்டையாக ஒரு ஆணைப் போல இருக்கின்றன. இது எப்படிச் சாத்தியம் என்று கேள்வி கேட்காமல் திரைப்படத்தைப் பார்க்க வேண்டிய கட்டாயம்.
சில தினங்களின் பின்னர் அவளை சிறுவர்கள் “நீ உண்மையிலேயே ஒரு ஆண் எனில் துணிவாக மரத்தில் ஏறு” என்று கட்டளை இட அவள் துணிந்து ஏறுகின்றாள். ஆனால் உச்சிக்குப் போன பின்னர் பயந்து தன்னை இறக்கி விடும் படி அழுதவளுக்கு அருகில் தலிபான் மேற்பார்வையாளர்கள் வருகின்றார்கள். அவர்களுக்கு அவள் ஒரு பெண்ணோ என்ற சந்தேகம் எழுந்த போது அங்கிருந்து தப்புவதற்காக அவள் ஓடுகின்றாள். சிறுவர்கள் கூச்சலுடன் ஓடிச்சென்று ஒசாமாவைப் பிடித்து வர அவள் ஒரு கயிற்றில் கட்டப்பட்டு கிணற்றுக்குள் இறக்கப்படுகின்றாள். வாய்விட்டுக் கதறிக் கதறி தாயைக் கூப்பிடும் அவளை வெளியே எடுக்கின்றார்கள் அவள் தொடைகளிலும் கால்களிலும் இரத்த ஓட்டம். இந்த இரத்த வெளியேற்றம் பெண் என்பதை நிச்சயப்படுத்த அவள் சிறையில் அடைக்கப்படுகின்றாள்.


சிறையில் பெண் உரிமைக்காகக் குரல் கொடுத்த பல ஆப்க்கான் பெண்கள் ஏற்கெனவே சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றார்கள்.
தீர்ப்புக்கான நாள் ஒன்றில் பெண்கள் வேலைக்குச் செல்ல உரிமை வேண்டும் என்று போராட்டம் நடாத்திய போது அங்கு சென்ற வெள்ளை இன நிருபர் ஒருவர் அந்தப் போராட்டத்தை ஒளிப்பதிவு செய்ததற்காக முதலில் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுகின்றது. பின்னர் “ஒசாமா”வை அழைக்கின்றார்கள். அவளுக்குத் தீர்ப்பு வழங்கும் முன்பு அவர்களின் குடும்ப நண்பன் ஒருவன் தலைவரிடம் அவளைக் கொல்லாது தாங்கள் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று கேட்ட போது அந்த வயது முதிர்ந்த தலைவர் அதற்கு ஒத்துக் கொள்கின்றார். அதனால் ஒசாமா உயிர் பிழைக்கின்றாள்.
அமெரிக்கா தலையிட்டு தலிபான் ஆட்சியை நீக்கியது இல்லாவிட்டால் ஆப்பானிஸ்தான் நிலை இன்னும் இப்படியேதான் இருந்திருக்கும் என்று ஒரு வெள்ளை இன ஆண் ஒருவர் பெருமை அடித்துக் கொண்டார்.

பெண்அடிமைத் தனத்தின் ஆரம்பம் மதங்களில் இருந்து உருவாகியிருக்கின்றது. இருந்தும் இஸ்லாம் மதத்தைப் போல் பெண்களுக்கான அடிப்படைத் தேவைகள் மறுக்கப்படுவது எந்த ஒரு மதத்திலும் காணப்படவில்லை. மாறாக வேறு எந்த ஒரு மதமும் மதக் கொள்கையில் இருந்து தம்மை நீக்கிக் கொள்ள நினைப்பவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்குவதுமில்லை. இஸ்லாமின மத மக்கள் மட்டுமே வேற்று மதங்களாலும் தம் சொந்த மதத்தினாலும் பாதிக்கப்படும் துர்பாக்கிசாலிகள் ஆகின்றார்கள். இஸ்லாம் மதத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு ஹொலண்ட் நாட்டில் சஞ்சம் புகுந்த சோமாலிய நாட்டுப் பெண்மணி ஹர்ஷி அலிக்கு அவர் தனது மதத்தின் மேல் கேள்வி எழுப்பியதற்காக இஸ்லாமிய மதத் தலைவர்கள் மரணதண்டனை விதித்துள்ளார்கள். மேலும் ஈழப்போராட்டத்தின் போது எம்நாட்டில் வாழும் முஸ்லீம் மக்களுக்கு நடந்த கொடுமை யாவரும் அறிந்ததே.
“எம்மதமும் எனக்குச் சம்மதமில்லை"