Thursday, June 30, 2005

வலைப்பதிவில் ஒரு இலவசசேவை!



கிட்டத்தட்ட ஐநூறு வலைப்பதிவுகளைத் தாண்டிவிட்டிருக்கும் நிலையில், சிலருக்குப் பல வலைப்பதிவுகள் இருந்தாலும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் ஒரு முன்னூறாவது தேறும் என்று வைத்துக்கொண்டு, இந்த வலைப்பதிவாளர்களின் பல சங்கடங்களை அறிந்தவள் என்ற முறையில் ஒருவாரம் நான் விடுமுறைக்காய் செல்ல இருப்பதால் எனது வலைப்பதிவை வலைப்பதிவாளர்களின் நன்மை கருதி அவர்களின் உயயோகத்திற்காய் விட்டுச் செல்ல முடிவெடுத்திருக்கின்றேன். பணம் வசூலிக்கும் கெட்ட எண்ணம் எனக்கில்லை. தமிழ் மக்களுக்காய் உழைப்பதே என் லட்சியம். அந்த வகையில்

பெயரிலி – கதிர்காமாஸ் போன்றவர்கள் உப்புச் சப்பில்லாத எதையாவது கறுப்பியின் தளத்தில் வந்து வாதிடலாம்.

பெயரிலியைக் கெட்ட வார்த்தைகள் சொல்லித் திட்ட நினைக்கும் அனாமதேயர்கள் என் தளத்தை உபயோகிக்கலாம். ஆனால் தங்கள் உண்மையான அல்லது புனை பெயர்களில் மட்டுமே வருகை தரவேண்டும். என் தளத்தில் அனாமதேயர்களுக்கு இடமில்லை.

சக்தி, சினேகிதி போன்ற சின்னப்பிள்ளைகள். யாரையாவது காதலிக்கும் எண்ணமிருந்தால் தங்கள் வீட்டில் அனுமதிக்காத பட்சத்தில் கறுப்பியின் தளத்தை உபயோகித்து ஒருவாரம் காதலிக்கலாம்.

டோண்டு ஐயா V ரோசவசந்த் போன்றோர் சண்டையிட்டுக் கொள்ள என் தளத்தில் இலவச அனுமதியுண்டு.

மாண்டீரீஸர், புரியாமல் ஏதாவது எழுதப்போகின்றீர்களா? எடுத்துக்கொள்ளுங்கள் கறுப்பியின் தளத்தை

தங்கமணி, சுந்தரவடிவேல் படம் போட என் தளத்தில் தங்களுக்கு அனுமதியில்லை. முன்புபோல் ஏதாவது நல்லது எழுத முடிந்தால் எழுதுங்கள்.

முகமூடி, பெடியன்களுக்கும் வேண்டுமா ஒருவாரம் இலவச சலுகை இங்கே உள்ளது.

வசந்தன் சயந்தனா? இல்லை சயந்தன் வசந்தனா? என்ற சந்தேகத்தைத் என் தளத்தில் வலைப்பதிவாளர்கள் தீர்த்துக் கொள்ளலாம்.

ஈழநாதன் யாருக்காவது அட்வைஸ் பண்ண எண்ணினாலும் என் தளத்தில் இடமுண்டு.(*_*).

டீசே, கிஸோ சின்னப்பையன்கள் என்ற முறையில் காதலிக்க என் தளத்தைக் கொடுத்து உதவுகின்றேன்.

காவலனுக்கு யாராவது தமிழ் கற்றுக்கொடுக்க நினைக்கின்றீர்களா? உபயோகியுங்கள் கறுப்பியின் தளத்தை.

மற்றும் அனைத்துப் படம் காட்டும் நண்பர்களுக்கும் என்தளத்தில் இலவச அனுமதியுண்டு.

ஒருவாரம் நான் ஊரில் இல்லாததால் கறுப்பிக்குத் திருமணம் என்று வதந்தியைக் கிளப்பி விடாதீர்கள் மதி. அறுபதாம் கலியாணத்திற்கு வலைப்பதிவாளர்களுக்கு நிச்சயம் அழைப்புண்டு.

வந்து படம் காட்டுறன்.

Byeeeeeeeeeeeeeee

Tuesday, June 28, 2005

நூறு கழிப்பறைகள்!


(Theeranathy)

கறுப்பி யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்து பின்னர் சிறிது காலம் லண்டன், ஹொலண்ட், பெல்ஜியம் என்று வாழ்ந்து தற்போது கனடாவில் வசிக்கின்றேன். யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை அனேகமாக பாடசாலைகள், வைத்தியசாலைகள், திரையரங்குகள், புகையிரதங்கள் போன்றவையே பொதுவாகப் பொதுமக்களால் பாவிக்கப்படும் கழிப்பறைகள். எல்லாமே "குழி" வடிவக் கழிப்பறைகளே. இவை அனைத்தையும் பாவித்த அனுபவம் கறுப்பிக்கும் இருக்கின்றது. இந்தக் கழிப்பறைகளுக்குள் நுழையும் போது மிகவும் அவதானத்துடனும் ஒருவித ஜாக்ரதையுடனுமே உள்ளே நுழைய முடிகின்றது. (எந்த நிலையில் இவைகள் இருக்கப் போகின்றனவோ என்ற பயம்) இருந்தும் அருவருப்பூட்டும் வகையில் இதில் எந்த ஒரு கழிப்பறையையும் கண்டதாக நினைவில்லை. அனேகமாக சிறிதாக ஒரு மூத்திர நெடியோடு நெருப்புத்தண்ணீர் என்ற அழைக்கப்படும் கிருமி நாசினியின் நெடியே தூக்கலாக இருப்பதுண்டு. இந்த இரசாயணப்பதார்த்தத்தின் மணம் சுத்தமாகக் கழிப்பறைகள் இருக்கின்றன என்ற ஒரு நம்பிக்கையைத் தருகின்றது.

அதன் பின்னர் ஐரோப்பிய நாடுகளில் பல இடங்களில் கழிப்பறைகளைப் பாவித்த அனுவமும் உண்டு. லண்டன், ஹொலெண்ட் போன்ற நாடுகளின் கழிப்பறைகளோடு ஒப்பிடும் போது பெல்ஜியத்தில் கழிப்பறைகள் மிகவும் சுத்தமானதாகக் காணப்பட்டது. இதற்கு காரணமாக சனத்தொiயைக் கூறலாம். தற்போது கனடாவில் பல விதமாக கழிப்பறைகளைப் பாவிக்கின்றேன். படுமோசமான நிலையில் இருப்பவை பளிங்குபோல் சிறு குறைகூடக் கூறமுடியாத வகையில் பராமரிக்கப்படுபவை என பலதையும் காணக்கூடியமாக உள்ளது. இதற்குப் பல்கலாச்சார நாடாக கனடா இருப்பது தான் காரணம். பராமரிக்கப்படாத நிலையில் இருக்கும் கழிப்பறைகள் அனேகமாக ஆசிய நாட்டவரின் வியாபாரத்தலங்கள் என்பது என் தனிப்பட்ட கருத்து. இவற்றைத்தான் நான் அதிகம் பாவித்திருக்கின்றேன் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

தீராநதியில் எஸ்.ராவின் "நூறு கழிப்பறைகள்" கதை படித்தபேது இரண்டு வருடங்களுக்கு முன்னர் இந்தியாவிற்கு விடுமுறைக்காகச் சென்று அங்கு நான் பாவித்த பொதுக்கழிப்பறைகள் பற்றிய ஞாபகங்கள் வந்தன.

சென்னையில் சாலிக்கிராமத்தில் எனது சகோதரிக்கு ஒரு பிளாட் இருப்பதால் நான் குடும்பத்துடன் அங்குதான் சில வாரங்கள் தங்கியிருந்தேன். எனது அண்ணா குடும்பம் தி.நகரில் கீதாஞ்சலி ஹோட்டலில் தங்கியிருந்தார்கள் எனவே அனேகமாக சென்னையில் பொதுக்கழிப்பறைகள் பாவிக்க வேண்டிய சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இருந்தும் "தேவதாஸ்" திரைப்படம் பார்ப்பதற்கு ஒரு பழைய பிரமாண்டமான திரையரங்கிற்குச் சென்றிருந்தேன் (பெயர் ஞாபகத்தில் இல்லை). நான் சென்றிருந்த அன்று சிவாஜியின் மூத்தமகன் ராஜ்குமார் குடும்பத்துடன் திரைப்படம் பார்க்க வந்திருந்தார். இன்னும் பல நாகரீக இளைஞர்கள் யுவதிகள் வந்திருந்தார்கள். அந்தத் திரையரங்கில் இடைவெளியின் போது கழிப்பறைக்குச் சென்றேன். கழிப்பறைகளின் தோற்றம் இப்போதும் எனக்கு நினைவில் இருக்கின்றது. மிகமிகப் பழைய முறையில் நான் ஒருநாளும் பார்த்திராத ஒரு வடிவத்தில் கதவுகளற்று நுழைவாசல் தொடக்கம் மிக அசுத்தமாக இருந்த அந்தக் கழிப்பறைக்கு நெருக்கமாகக் கூட என்னால் போக முடியவில்லை. பேசாமல் திரும்பி வந்து விட்டேன். இந்தக் கழிப்பறையைத் தான் தமிழ்நாட்டின் செல்வந்தர்களின் ஒருவரான சிவாஜியின் குடும்பமும் பயன்படுத்துகின்றார்கள் என்பது என்னால் நம்பமுடியாமல் இருந்தது.

அடுத்து கோவா சென்றிருந்த போது கடற்கரை அருகில் ஒரு பொதுக்கழிப்பறைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம். நுழைவாசலே மூத்திர வீச்சத்தால் மூக்கைத் தாக்கியது. இருந்தும் ஒருமுறை மூச்சை இழுத்து விட்டுக் கொண்டு மூச்சை அடக்கியபடியே உள்ளே ஓடிச்சென்று வந்தேன். அதுவரை மூச்சைப் பிடிக்க முடியாமல் உள்ளே காற்றை எடுக்க வேண்டி வந்ததால் ஏற்பட்ட அசௌகரியம் வெளியில் வந்து அன்று சாப்பிட்ட அனைத்தையும் சத்தி (வாந்தி) எடுத்து விட்டேன். கழிப்பறைக்குப் பணம் வசூலிக்கின்றார்கள். இருந்தும் சிறிது கூட சுத்திகரிக்க அவர்களால் ஏன் முடியாமல் போனது. பணம் வசூலிப்பவர் எப்படி நாள் முழுவதும் அந்த வீச்சத்திற்குள் இருக்கின்றார்.

இதே போல் புகையிரதங்களிலும் ஊட்டியிலும் திருவனந்தபுரத்திலும் கட்டாயமாகப் பொதுக்கழிப்பறை உபயோகிக்க வேண்டி வந்து மிகவும் அவஸ்தைப் பட்டுள்ளேன்.

அதே நேரம் நான் கன்யாகுமரியில் ஒருவாரம் தங்கியிருந்த விவேகானந்தா கேந்திராவிலும் இன்னும் பல ஹோட்டல்களிலும் சுத்தம் செய்யப்பட்ட, நெருப்புத் தண்ணீர் மணம் கொண்ட கழிப்பறைகளையும் உபயோகித்திருக்கின்றேன்.

இந்தியா மிகப்பெரிய நாடாகவும் சனத்தொகையில் உச்சத்தில் இருப்பதாலும் பொதுஇடங்களில் அதிகம் சுகாதாரத்தை எதிர்பார்க்க முடியாதுதான். என்றாலும் மிகப்பழைய முறையிலான கழிப்பறைகளை புதுப்பிப்பதும், கிருமி நாசினிகளை நாளாந்தம் உபயோகித்துச் சுத்தப்படுத்துவதும் அத்தனை சிரமமாக இருக்காது என்றே நம்புகின்றேன். இந்தியா என் கனவு நாடு. அங்கு நாம் தவிர்க்க முடியாத இடங்களில் இப்படியான அசௌகரியங்கள் இருப்பது வருத்தத்தைத் தருகின்றது.

மாறுவேடப் போட்டி -007

இவர் ஒரு வலைப்பதிவாளர். இவர் ஆணா, பெண்ணா என்ற தகவல் தரப்படமாட்டாது. இவரது வெள்ளி இரவுகள் இப்படியாகக் கழியுமாம். கண்டு பிடியுங்கள் பார்க்கலாம். பரிசு காத்திருக்கின்றது.

Monday, June 27, 2005

அன்நியன் - கறுப்பியின் பங்கிற்கு



இது அன்நியன் சீசன். வலைப்பதிவில ஒரே அந்த வாசனைதான். கறுப்பியும் தன் பங்கிற்கு ஏதாவது எழுதுவம் எண்டு வெள்ளி இரவு ஒருமாதிரி ticket பெற்று போய் பார்த்தேன். ஹெவுஸ் புல்லா அன்நியன் ரொறொண்டோவில் ஓடிக்கொண்டிருக்கின்றது.

முன்பெல்லாம் கறுப்பி ஒரு தமிழ் படத்திற்குப் போகும் போது மிக இனசென்டாக ஒரு பொழுது போக்கிற்கான மட்டும் பார்ப்பதற்குச் செல்வேன். சங்கரின் படம் என்றால் இப்படியிருக்கும், மணிரத்தினத்தின் படம் என்றால் இப்படியிருக்கும் என்று மனதுக்குள் ஒரு வடிவம் இருப்பதால் அதை எதிர்பார்த்துப் போய் அது கிடைக்கும் பட்சத்தில் சந்தோஷித்து, கிடைக்காவிட்டால் "ப்ச்" கொட்டி அதிகம் வருந்தாமல் கழித்து விடுவேன். ஆனால் எப்போ வலைப்பதிவிற்கு வந்தேனோ அன்றிலிருந்து கறுப்பியின் பார்வை மாறிவிட்டது. இது நல்லதுக்கா கெட்டதுக்கா தெரியவில்லை. கறுப்பு வெள்ளையாய் தமிழ்ப்படங்களைப் பார்த்துக்கொண்டிருந்தவளுக்கு தற்போது மல்டிகலரின் லுக்கு விடும் குணம் வந்து விட்டது. பாவம் கறுப்பி தன்னுடைய இனெசென்ஸை இழந்து விட்டாள். பூந்து, பூந்து பிழை பிடிக்கத் தொடங்கிவிட்டாள்.

சங்கரின் படங்களில் நிறம்ப கிராபிக்ஸ் இருக்கும், பாடல் காட்சிகள் அமர்க்களப்படும்,
நாயக நாயகிகளின் உடைகள் அந்த மாதிரி இருக்கும், காதல் காட்சிகள் ரசிக்கக் கூடியதாக இருக்கும், நகைச்சுவைகள் சலிக்காதவை, இவை நான் ரசிப்பவை. பிடிக்காத பக்கத்தில் சண்டை இருக்கும், ஒரு மசாலாக் கதை இருக்கும், இவை அனைத்தையும் கொண்டதாகத்தான் அன்நியனும் இருந்தது. இருந்தும் பாடல்கள் என் மனதில் பதியவில்லை. ஏ.ஆர் ரகுமான் இல்லை என்பது தெரிகின்றது. போனஷாக விக்கிரம் வியக்கும் வகையில் அழகாகவும், நடிப்பில் சிறப்பாகவும் இருக்கின்றார். சதா வெறும் சாதா.

வலைப்பதிவில் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை நானும் கண்டு கொண்டேன் என்பதோடு இன்னும் சிலவற்றையும் என் பார்வையான இணைக்கலாம். (சமூகநலவிரும்பிப் பார்வை என்று வைத்துக்கொண்டு)

பார்ப்பண்ய இளைஞர்கள் தமிழ் திரைப்படங்களில் அனேகமாக ஒரு “நேட்” போல்தான் சித்தரிக்கப்படுவார்கள். சிறுவயதிருந்து பூஜை, புனஸ்காரங்கள், மந்திரம், தந்திரம் என்று வாழ்வதாலோ என்னவோ வெறும் ஜடமாகப் புத்தப் பூச்சியாகத்தான் பார்பண்யர்களைக் காட்டுவதும், தற்போதைய நாயகிகளுக்கு “ரேமோ” போன்ற cool guyஐதான் பிடிக்கும் என்றும் பார்பண்ய இளைஞர்களை மட்டம தட்டியிருக்கின்றார்கள். அத்தோடு பார்பண்ய குடும்பம் எப்போதும் அட்வைஸ் பண்ணும் வெறும் அறுவை போல் அம்மா, அப்பா, பாட்டி என்று ஒரே பார்பண்ய அட்வைஸ். குழந்தைகள் தங்கள் சுயத்தில் சிந்திப்பது, வாழ்வது, வாழ்வை அமைத்துக் கொள்வது இப்படியான சுதந்திரங்கள் குழந்தைகளிடமிருந்து பறிக்கப்படுகின்றது என்பதையும் காட்டுகின்றார்கள்.
பார்பண்ய பெண்கள் திருந்தவே மாட்டார்கள். வெறும் தலைக்குக் குளித்து. ஈரச்சேலையோடு சாமி. சங்கீதம். சீடை. பட்டு என்று பிராணனை விடும் ஜந்துகளாவே வாழ்ந்து முடிக்கின்றார்கள் என்பதையும் காட்டுகின்றார்கள். இவைகளெல்லாம் பெருமைப்படும் விஷயமா வெறும் வேஸ்ட்.

மொத்தத்தில் பார்ப்பண்ய வாழ்க்கை முறையை நன்றாகவே நக்கலோ நக்கல் அடித்திருக்கின்றார்கள் சங்கர். இடையிடையே வரும் கள்ளச் சாராயமும், சோம்பேறி மனிதனும் சும்மா பார்பண்ய மக்களை திசை திருப்ப ஒரு ஊதல்.

ஒவ்வொரு சீசனுக்கு ஒவ்வொரு வியாதி தமிழ்பட நாயகர்களுக்கு வரும். இப்போதைய சீசன் ஸ்பிளிட் பேர்சனாலிட்டி.. அதைச் சொல்லி கதையை கேள்வி கேட்க முடியாமல் பண்ணி விட்டார்கள்.

தியேட்டரில் நல்ல சுவையான சமோசா கிடைத்தது. சட்ணியோடு சாப்பிட்டு ஒரு ரீயும் குடித்து கலர் புல்லா ஒரு படமும் பார்த்து வெள்ளி இரவு நன்றாகத்தான் கழிந்தது.

Friday, June 24, 2005

வெளிச்சம்



“உண்மைகள் அற்ற உலகில் பொய்கள் நிழலாய் தொடர, பொய்யை பொய் என மறுத்து உண்மையாய் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தில் நானும் பொய் பேசி அதை உண்மை என நம்பி ஏற்று வாழப்பழகிக் கொண்டு..”
இனிமேல் இது வேண்டாம்.

மணம் மூக்கைத் தாக்க நான் மூச்சை இறுக்கிக் கொண்டேன். பஞ்சு முகம் முழுக்க உலாவந்து ஓய்ந்தது. “இஞ்ச பார் எவ்வளவு ஊத்தை. இவ்வளவும் ஒயில். அடிக்கடி துடைக்காட்டி முகத்தில பருவாத்தான் வந்து கொட்டும். அருமந்த வடிவான முகம் பருவாக் கொட்டிக்கிடக்கு. உனக்கு அதைப்பற்றி ஒரு கவலையும் இல்லை என்ன? அம்மா தனக்கான அம்மா பாசம் மேலிட என்னை விட என் முகப்பருவிற்காய் நொந்து பேசி விட்டுப் போனாள். நான் கண்ணாடியில் முகத்தை ஊன்றிப் பார்வையிட்டேன். நெற்றியிலும் கன்னங்களிலும் அள்ளிப்போட்டிருந்தது முகப்பரு. என் வகுப்பில் அனேகமாகப் பலருக்கு முகப்பரு வரத்தொடங்கியிருந்தாலும் என்னுடையது கொஞ்சம் கூடுதலாகவே பட்டது. ஆனால் அது என்னைத் தொந்தரவு செய்யவில்லை. (ஷேரா பாவம் இரண்டு முகப்பரு நெத்தியில் வந்ததால் ஒரு கிழமை பாடசாலைக்கு வரவில்லை).

“இது எங்கட குடும்ப ஜீன்ஸ்” என்று அம்மாவின் காய்ந்து போன முகத்தழும்புகளைப் பார்த்த படியே சொன்னேன். “உண்மைதான் அப்ப எங்க வசதியிருந்தது நாங்கள் பாலாடையும், முட்டை வெள்ளைக்கருவையும் பூசிப் பூசிப் பாப்பம் போனால்தானே. ஆனால் இஞ்ச எவ்வளவு வசதியிருக்கு எத்தின விதமான மருந்திருக்கு பூசிக் கொஞ்சம் குறைக்கலாமே. உனக்குப் பஞ்சி உன்ர முகம் பற்றி எனக்கிருக்கிற அக்கறை உனக்கில்லை.” அம்மா வீட்டு வேலைகளின் நடுவில் புறுபுறுத்த படியே வீடு முழுக்க நடந்து திரிந்தாள். கொஞ்சம் கிட்ட வந்து குரலைத் தாழ்த்தி “டேய் இப்பிடியே கவனிக்காமல் விட்டாயெண்டால் முகம் அசிங்கமாப் போயிடும் பிறகு ஒரு பெட்டையும் உன்னைப் பாக்காது பிறகு கேர்ள் பிரெண்ட் கிடைக்கேலை எண்டு நீதான் கவலைப்படுவாய்” சொல்லி முடித்த பின்னர் தான் கூறிய நகைச்சுவையைத் தானே நினைத்துச் சிரித்துக் கொண்டாள். “உங்கள அப்பா லவ் பண்ணினவர் தானே? அப்பிடி என்னையும் ஆரும் லவ் பண்ணிவீனம்” போனவள் திரும்பி வந்தாள். அவள் கண்கள் கனவுகளில் நிறைந்திருந்தன.

ம்.. பெருமூச்சு எழுந்து அடங்க “அது ஒரு காலம்” என்றாள். பிறகு ஏதோ நினைத்தவளாய் “இஞ்ச வந்து எவ்வளவு காலமாப் போச்சு ஒருக்காப் போய் அம்மா, அப்பாவைப் பாத்திட்டு வரக்கூட வசதியில்லாமல் போயிட்டுது” திரும்பவும் அதே மாதிரியான ஒரு பெருமூச்சு. வேண்டுமென்ற நேரமெல்லாம் நெஞ்சை உயர்த்தி ஒரே பாணியில் அம்மா பெருமூச்சு வி;டக் கற்றுக்கொண்டிருந்தாள். எனக்கு அவளைப் பார்க்கப் பாவமாக இருந்தது. என்ன வயதிருக்கும்? வயதுக்கு மீறிய முதிர்சியுடன் எப்போதும் வாயுக்குள் ஏதோ புறுத்த படியே ஓடியோடி எதையாவது செய்து கொண்டிருந்தாள். அப்பா அதிகார தோறணையில் வலம் வருவதால் நானும், தம்பியும் அம்மாவிடம் தான் ஒட்டிக் கொண்டோம்.
அம்மாவின் கவனிப்பில் என் முகப்பருக்கள் குறைந்திருந்தன. மூக்கின் கீழே கீறலாக மீசை முளைவிட்டிருந்தது. குரல்கள் ஆணினதும், பெண்ணினதுமாக மாறி மாறி வேடிக்கை காட்டியது. தலையைக் கலைத்து வேறு விதமாக இழுத்து விட்டேன். பிடிக்காத உடைகளையெல்லாம் சுருட்டிச் சுருட்டி அம்மாவிற்குத் தெரியாத இடத்தில் தள்ளி விட்டிருந்தேன். நண்பர்களுடன் கடைக்குப் போகப் பழகிக் கொண்டேன். “என்னடா இது உடுப்பு கறுப்பங்கள் மாதிரி தொள தொள எண்டு” கோவம் போல் குரலை உயர்த்திப் பாவனை காட்டியபடியே என்னைச் சுற்றிச் சுற்றிப் பார்வையிட்டு முகத்தில் பெருமை பொங்க “என்னடா இது வடிவாவே இருக்கு?” நான் சிரித்தேன். வடிவோ வடிவில்லையோ எனக்குப் பிடிச்சிருந்துது போட்டுக் கொண்டேன்.

குடும்பத் தலைவனாம் தான் என்ற மிடுக்கோடு என் அப்பாவும், அவருக்கு அடங்கிய மனைவியாம் தான் என்ற பணிவோடு என் அம்மாவும், ஏதோ பாவனைகள் பல வீட்டில் இருந்தாலும் கட்டுப்பாடுகள் அற்ற குடும்பம் எங்களுடையது. எனக்கான முழுச் சுதந்திரம் தரப்பட்டிருந்தது. பதிலாக என்னிடம் அம்மா கேட்டுக் கொண்டது “நல்லாப் படி” நான் படித்தேன். அம்மா கேட்டுக்கொண்டதற்காக இல்லை. படிப்பு எனக்கு இயல்பாகவே வந்ததால்.
அம்மாவின் பெருமூச்சு ஒரு திட்டமாக உருவெடுத்து அப்பாவிடம் ஊருக்குப் போகவேணும் எங்கட சொந்தங்கள், ஊரையெல்லாம் சுத்திப் பாக்க வேணும் கனடாவில் பிறந்த என்ர பிள்ளைகளை பாட்டி, தாத்தாவுக்குக் காட்ட வேணும் என்று அடம் பிடித்து வெற்றி கொண்டது. “தாங்க முடியாத வெக்கை எலெக்ரிசிட்டி இல்லை அதால ரீவி இல்லை அங்க ஒண்டுமே இல்லை.. நல்லாக் கஷ்டப்படப் போறாய்” போய் வந்த என்னுடைய நண்பர்கள் போகு முன்பே எனக்குள் வெறுப்பை ஏற்றினார்கள். நான் அடம் பிடித்து அழுது பார்த்தேன். “நான் இப்ப பெரிய பெடியன் நான் தனிய இருப்பன் குரலையும் உயர்த்திப் பார்த்தேன் ஆனால் என்னுடைய குரல் எடுபடவில்லை. ரீவி இல்லாத உலகம் பயம் காட்டியது. வீடியோ கேம்ஸ், புக்ஸ் என்று பொழுது போக்க கொஞ்சம் சேர்த்துக் கொண்டேன். அப்பாவின் வேலையால் அவரால் வரமுடியவில்லை. எங்களை அனுப்பி வைத்தார்.

மெல்லிய மழைத்தூறல்களினூடே இளம் பச்சை தென்னை ஓலை அசைய கிளிகள் குரல்கள் எழுப்பும் ஒரு பின்னேரப் பொழுதில், புழுதி மண் விரல்கள் புக நிலம் தேய்த்து நான் நடந்தேன். வீட்டுக் கூரை புகை எழுப்ப அம்மம்மா இருமி இருமி சமையல் செய்தாள். வீடு அமைதியாய் இருந்தது. எல்லோருமே பின்னேர நித்திரையில் இருந்தார்கள். அம்மம்மா ஓய்ந்து நான் பார்த்ததில்லை. எனக்கு எல்லாமே பிடித்திருந்தன. அடுப்பிலிருந்து ஆற்றங்கரை வரை ஓடியோடி ஆராய்ந்தேன். வீடியோ கேமும் புத்தகங்களும் தம்பியின் கைகளுக்குள் அடங்கிக் கொண்டன. முதல் முறையாக சாரம் கட்டக் கற்றுக் கொண்டேன். அம்மப்பாவும், மாமாக்களும் சைக்கிளில் ஊரச்சந்தை, விளையாட்டுப் போட்டிகள், கோழிச்சண்டைகள் என்று என் கற்பனைக்கு எட்டாத பல இடங்களுக்குக் கூட்டிச் சென்றார்கள். வெளிநாட்டுப் பெடியன் கொச்சைத் தமிழ் கதைக்கிறான் என்று முதலில் ஒதுங்கி நின்ற சிறுவர்கள் சாரம் கட்டி காலில் செருப்பின்றி ஓடித்திரிந்த என்னைக் கண்டதும் தாமாகவே ஒட்டிக் கொண்டார்கள்.

நாட்கள் நகராமல் ஓட்டம் கண்டன. என் ஆராய்சியில் பல முடிவுறாமல் போய் விடுமோ என்ற ஆதங்கம் எனக்குள். “கனடா வேண்டாமம்மா இஞ்சையே இருப்பமே” அம்மா கண்கள் மிளிர என்னை வினோதமாகப் பார்த்தாள். அம்மப்பா பொக்கை வாயை அசைத்து, அசைத்துச் சிரித்த படியே “அதுக்கென்ன அவனை விட்டிட்டுப் போவன் இஞ்ச இருந்தே படிக்கட்டும்”. அம்மாவின் முகத்தில் பயம் தெரிந்தது “உனக்கென்ன விசரே அங்க பள்ளிக்கூடம், படிப்பு எல்லாம் விட்டிட்டு அப்பா என்னைக் கொண்டு போட்டிடுவார்” என் மனக்கண்ணில் என் பாடசாலை நண்பர்கள், என் அறை, மீன் தொட்டி, மீன் குஞ்சுகள் எல்லாமே ஒருமுறை வந்து வா வா என்று அழைக்க மனதுக்குள் ஒரு ஏக்கம் பிறந்தது. நான் சிரித்தேன். “ஓரு கிழமை கூட இருந்திட்டுப் போவம்” என்றாள் அம்மா என் தலையைத் தடவிய படியே.

அம்மப்பா மெல்ல மெல்ல நடந்து வந்து வழமை போல் விறாந்தையின் ஓரத்தில் இருந்தார். அவர் கையில் “பெற்றோல்மாக்ஸ்” (விளக்கு) இருந்தது. நானும் வழமைபோல் அவர் அருகில் போயிருந்து அம்மப்பா செய்வது ஒவ்வொன்றையும் கண் வெட்டாமல் பார்க்கத் தொடங்கினேன். திரியை இழுத்து நீளத்தைப் பார்த்து விட்டு அருகில் வைத்தார். சிம்னியைக் கைகள் நடுங்க மெல்லக் கழற்றி வாயால் ஊதி ஊதி படிந்திருந்த கரும்புகையை துணியால் துடைத்தார். எண்ணெயை கொஞ்சமாய் விட்டுக் குலுக்கிப் பார்த்து மேலும் கொஞ்சம் விட்டார். சின்னதாக இருந்த பம்ப் ஒன்றை மெல்ல மெல்ல அடித்து பின் மூடியைப் பொருத்தி திரியை இழுத்து நெருப்பைக் கொழுத்தினார். வெளிர் நீலச் சுவாலை இருள் மேவும் அந்த மாலைப் பொழுதை ஊடுருவிச் சென்றது. “அம்மா எனக்கு ஒரு “பெற்றோல்மாக்ஸ்” வாங்கித் தாங்கோ கனடாக்குக் கொண்டு போக” அம்மப்பா பெரிதா ஏதோ ஜோக்கை கேட்டு விட்டது போல் பொக்கை வாயைப் பொத்திப் பொத்திச் சிரித்தார். “ம் உதெல்லாம் காவிக்கொண்டு போகேலாது” அம்மா எழுந்து போய் விட்டாள். அம்மப்பா இருமினார். “பெற்றோல்மாக்ஸ்சை” நிலையில் இருந்த ஒரு கம்பியில் கொழுவி விட்டு “மாட்டுக்கு வைக்கல் போட வேணும்” தனக்குள் சொன்ன படியே படியால் இறங்கிப் போனார். நான் பெற்றோல்மாக்ஸின் திரியை உற்றுப் பார்த்தபடி நின்றேன். வீட்டிற்கும், முற்றத்திற்கும் வெளிச்சம் தந்தபடி இருந்த அந்த விளக்கு எனக்கு வினோதமாகப் பட்டது.

அன்று மழை அதிகமாய் அடித்தது. அம்மப்பா இருமிய படியே முனகிக்கொண்டு பாயில் படுத்திருந்தார். கரு மேகக் கூட்டத்தின் அசைவால் வீடு இருளில் மூழ்கி அமைதியாய் இருக்க, எல்லோரையும் மழைக்குளிர் நித்திரைக்குள் இழுத்து விட்டிருந்தது. குசினிக்குள் மட்டும் சின்னதாக ஒரு தேங்காய் எண்ணெய் விளக்கு மின்னிய வண்ணம் மின்மினி போல் ஆட்டம் காட்டியது. நான் பெற்றோல்மாக்ஸ் உடன் அம்மப்பா வழமையாய் இருக்கும் இடத்தில் வந்து இருந்தேன். சிம்னியை மெல்லக் கழற்றி ஊதி ஊதிக் கரும் புகையைத் துடைத்தேன். திரியை இழுத்து விட்டு அளவு பார்த்தேன். எண்ணெயின் அளவைக் குலுக்கிப் பரிசோதித்தேன். இன்னும் கொஞ்ச எண்ணெய் விட்டேன். பம்பை மெல்ல மெல்ல இழுத்து அம்மப்பா போல் அடித்தேன். நெருப்புப் பெட்டியை எடுத்து திரியைக் கொழுத்தினேன். எங்கே தவறினேன்?

கண் விழித்த போது எழுந்த மணம் மருத்துவமனை என்பதை அடையாளம் காட்டியது. அம்மா பக்கத்தில் இருந்த கதிரையில் நித்திரையாய் இருந்தாள். கண்கள் வீங்கியிருந்தன. என் முகம் முழுவதும் துணியால் கட்டுப் போட்டிருப்பது தெரிந்தது. “அம்மா” என்று மெல்ல முனகினேன். கண் விழித்தவள் என்னைக் கட்டிக் கொண்டு கதறினாள். நான் புரியாமல் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அம்மப்பா, அம்மம்மா, மாமாக்கள், இன்னும் தெரியாத சொந்தங்கள் நண்பர்கள் என்று யார் யாரோ வந்து போனார்கள். எல்லோர் முகத்திலும் சோகம். கண்கலங்க என் தலை தடவி விலகினார்கள். நான் இறக்கவில்லை. ஆனால் வேறு ஏதோ மிகவும் பாரதூரமாக மனம் அடித்துக் கொண்டது. வாயில் வார்த்தைகள் வரமறுக்க, வழிந்த கண்ணீர் பாண்டேஜிக்குள் மறைந்து போனது. நான் பாண்டேஜில் வெட்டப்பட்டிருந்த ஓட்டைகளினால் பார்த்து, மூச்சு விட்டுச், சாப்பிட்டு, தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தேன். அப்பா போனில் “என்னால உடன வடிமுடியேலைத் தம்பி உன்ன இஞ்ச கொண்டுவாறதுக்கான அலுவல்ல ஓடித்திறியிறன் ராசா..” குரல் கம்ம “யோசிக்காதை இஞ்ச நல்ல டொக்ரேஸ் இருக்கினம் எல்லாம் சரியாப் போகும்” அப்பா விம்மினார்.

நண்பர்களுடன் வெளியே சென்ற ஒருநாள் கலைந்திருந்த என் தலைமயிரை ஒதுக்கி கன்னத்தில் மெல்லத் தட்டி “வடிவாய் இருக்கிறாய்” என்றாள் அம்மா. வெளியே கிளம்பிய நான் போக மனமின்றி அறைக்குள் மீண்டும்; புகுந்து கொண்டேன். அம்மா கதவைத் தட்டினாள். கதவைத் திறந்த என் கண்களில் கோபம் இருந்தது. “என்னப்பு” என்றாள். “அம்மா ஏனம்மா பொய் சொல்லுறீங்கள்? நீங்கள் மட்டுமில்லை தம்பி, அப்பா, என்ர ஃபிரெண்ஸ் எல்லாரும் ஏனம்மா பொய் சொல்ல வேணும். என்ர முகத்தைப் பாக்க என்னாலேயே சகிக்க முடியேலை. எல்லாம் கருகி பேய் மாதிரி இருக்கு நான் சாகேலை ஆனால் என்ர முகம் செத்திட்டுது. இனி அது திரும்ப வராது. இதுதான் உண்மை. நீங்கள் எல்லாரும் வடிவா இருக்கிறாய், வடிவாய் இருக்கிறாய் எண்டு சொல்லச் சொல்ல எனக்கு என் மேலையே வெறுப்பா இருக்கு. என்னைச் சந்தோஷப்படுத்திறதா நினைச்சு நீங்கள் ஒருத்தரும் பொய் சொல்ல வேண்டாம். வாழ்க்கை எண்டது ஒரு பாடம். நான் என்ர விபத்துக்குள்ளால இருந்து என்னை மீட்டுத் திரும்பவும் வாழ முயற்சிக்கிறன். ஆனால் என்னைச் சுத்தி எல்லாரும் நடிக்கிறது என்ர முயற்சியைப் பாழாக்கிப் போடுமோ எண்டு பயமா இருக்கம்மா? முகப்பருவுக்கே முகம் வடிவில்லாமல் போயிடும் எண்டு ஓடியோடி வைத்தியம் பாத்த நீங்கள், இப்ப என்ர முகம் வடிவாய் இருக்கிற மாதிரியும் அதுக்கு ஒண்டும் தேவையில்லாத மாதிரியும் ஒண்டுமே பூசி விடுறேலை. ஏனம்மா.? பூசுங்கோ தழும்புகள் மறைய ஏதாவது கிறீம் இருந்தால் வாங்கிப் பூசி விடுங்கோ எனக்கு என்ர அம்மா திரும்ப வேணும் என்ர முகத்தில ஒண்டுமில்லாத மாதிரி நீங்கள் நடக்கிறது என்னால தாங்கேலாமல் இருக்கம்மா” அம்மா என்னைக் கட்டிக் கொண்டு கதறினாள்.

நான் கண்ணாடியில் என் முகத்தை ஊன்றிப் பார்த்தேன். உடை மாற்றிப் பாடசாலைக்கு ஆயத்தமானேன். அம்மா ஓடிவந்து சாப்பாட்டுப் பார்சலைக் கையில் வைத்தாள். சிறிய ஒரு டப்பாவில் இருந்த கிறீமை ஒற்றை விரலால் அள்ளி என் முகத்தில் பூசினாள். நெற்றியில் கொஞ்சி, என் கை விரலை அழுத்தி வழி அனுப்பினாள். இப்போதெல்லாம் அம்மா அதிகம் கதைப்பதில்லை. அவள் கண்களில் ஒரு வித ஒளி படர்ந்திருக்கின்றது. எனக்கு மிக நெருக்கமானாள். என்னுடைய நல்ல நண்பியானாள். பொய்கள் அகன்று, இந்த அழகிய உலகில் என் வாழ்வு சந்தோஷமானது.

Wednesday, June 22, 2005

ரத்த உறவு

தமக்கான பெறுதல்களை நாடிப் போராடும் குணாம்சம் தவிர்க்க முடியாத ஒன்று. உரிமைக்குக் குரல் கொடுத்து மனிதன் மிருகமாகிப் போகும் பல சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. அங்கே சில நியாயப்படுத்தலுக்கும் இடமுண்டு. திருமணம், குடும்பபந்தம், ஆண்பெண் உறவு, குழந்தைகள் பெற்றோரிற்கான உறவு என மிகவும் இதமாக அணைப்புக்களும், பகிர்தல்களும் கொண்டு நகர வேண்டிய இந்த உறவு பல இடங்களில் சிதறிப் போகின்றது. காரணம் உலகின் ஒட்டுமொத்த ஆணாதிக்கத் தன்மை. நிரூபித்தல, அடக்குமுறை, தலைமை, என்று ஆண்கள் தமது குடும்ப அங்கத்தவர்களிடமே ஆளுமையைச் செலுத்தும் போது உறவுகள் உடைகின்றன. நம்பிக்கை இன்மை வளர அதுவே குடும்பத்தின் வெடித்தலுக்குக் காரணியாகின்றது. நாடு, கலாச்சாரம், நிறம்குணம் அற்று ஒட்டு மொத்த உலகும் ஆணாதிக்க வடிவில் தழைத்து நிற்கின்ற தருணத்தில் ஆணாதிக்கத்தின் உச்சக் கட்டமாக சட்டங்களுக்கு அப்பாற்பட்டு அனேக மூன்றாம் உலக நாடுகளில் குடும்பம் எனும் கூட்டினுள்ளும், ஆணாதிக்க வெறி தலை தூக்கி ஆடுவதால் பல பெண்கள் வார்தைகளற்று அடிமைகளாக உளன்று கொண்டிருக்கின்றார்கள்.

இதமான அலங்காரங்களுடனான மனதை வருடிவிடும் வசன அமைப்புக்களின் தேடல்களுக்காய் மனம் ஏங்க, நெஞ்சில் உதைக்கும் சம்பவக்கோர்வைகளால் வாசகர்களைக் கட்டிப்போட்டு எங்கேனும் எங்கேனும் ஒரு பொழுதாவது நிம்மதியாக மூச்சை இழுத்து விசுவாசம் கொள்ளத் துடிக்கும் வாசக நெஞ்சங்களை யாதார்த்தம் இது, உறைந்து போ என்று கட்டிப்போட்டுத் தாக்கி, "ரத்த உறவை" நகர்த்தியுள்ளார் எழுத்தாளர் யூமா வாசுகி.

ஒரு குரூரமான ஆளுமையின் உருவு. தனது தலமையில் உழைப்பில் குடும்பத்தை இயக்கிச் செல்லும் அதீத திமிர். நியாய தர்மங்களுக்கு அப்பாற்பட்ட அதர்மவாதி. அலட்சிய ஆண்மையின் திமிரால் தன் சொந்த மகனையே நோயுக்குக் காவு கொடுக்கும் குரூரம். தனது சகோதரனின் மனைவியுடனான உறவு இருந்தும், சமூக இயக்கத்தில் நிராகரிப்பின்றி வாழும் மனித மிருகம். அப்பா என்ற உருவ அமைப்பின் அசைவில் திடுக்கிடும் குழந்தைகள். மனதில் “அப்பா” என்ற பொருளுக்கான அன்புப் பீறிடல்கள் மதிப்பாய் ஊசலாடல நெருக்கத்தைக் கனவிலில் விரிக்கும் ஆதங்கம். தமக்கு இயமனாக இருந்திருக்கக் கூடிய தந்தையின் சாவு வீட்டில்; “டேய் தம்பி அப்பாவெடா” என்று உடலைக் காட்டிக்கதறும் மகள். தண்டிக்கப்படுவது எதற்கென்று தெரியாத தடுமாற்றத்துடனும், அப்பாவின் பசுமையான ஒரு பார்வை வீச்சுக்காகவும், அப்பாவைக் கோபம் கொள்ளாமல் செய்வதிலேயுமே வாழ்நாளைக் கழிக்கும் சின்னஞ் சிறுசுகள். அப்பாவின் அதீத இம்சைகளால் இறந்தாளோ என்று தாயின் உடலைப் புரட்டிப் போட்டு பார்த்து கண்ணீருடன் நிம்மதி கொள்ளும் அவர்களின் அன்றாட வாழ்க்கை வாசகர்களின் இருதயத்தைப் பலவீனப்படுத்தி எப்படியாவது உதவிடத் துடிக்கின்றது.

திருக்கை வாலுடன் வந்த அப்பா, மெதுவாக அதற்கு எண்ணெய் போட்டு உருவி எடுத்துக் காய வைக்கும் போது அதன் உபயோகத்தை எண்ணி கைகள் நடுங்குகின்றது. நாவலின் எந்த ஒரு பகுதியிலும் நியாயமான தீர்வுக்கான சாயல்கள் காட்டப்படவில்லை. குரூரமான மிருகத்திடம் விடப்பட்ட அபலைக் குஞ்சுகளின் வேதனையை வேடிக்கை பார்க்கும் உறவுகள், சமூகங்களுடன் சேர்ந்து ஒரு குரூரமான இறப்பை காண்பதற்கு வாசகர்களையும் தயார் படுத்தி நாவலை நகர்த்துகின்றார் எழுத்தாளர். அப்பாவின் அந்தக் குடூரமான கைகளுக்குள் அகப்பட்டு இறக்கப் போவது அம்மாவா, அக்காவா, பெரியதம்பியா, தம்பியா என்று மனம் அடித்துக் கொள்கின்றது. "டேய் தம்பி சின்னப்பிள்ளைத் தனமாக அப்பாவுக்குப் பிடிக்காத எதையும் தயவுசெய்து செய்து வைக்காதே" என்று வாசகர்கள் வாயும் புலம்புகின்றது.

அப்பாவின் இறப்பிற்குப் பின்னர் குடும்பத்தில் ஏற்பட்ட மாற்றம் சில பக்கங்களில் மட்டும் காட்டப்பட்ட போதும் வாசகர்கள் ஒவ்வொருவரும் வேண்டி நின்றது அதைத்தான் என்ற நிம்மதியுடன் நாவலை மூட முடிகின்றது. "அக்கா" என்று கதையில் விழிக்கப்படும் அந்தச் சிறுமி பாவாடை தாவணி அணிந்து பாடசாலை போகும் காட்சி ரம்மியமாக மனதை நிறைக்கின்றது. இத்தனை இம்சைகளை தாங்கி வாழப்பழகிய அந்தக் குடும்பம் இனித் தப்பிவிடும் என்ற நிம்மதி. இப்படியான குடும்பங்கள் இயங்கிக்கொண்டுதான் இருக்கின்ற என்ற உண்மையை எச்சில் விழுங்கி ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்.
மனதை உலுக்க வைக்கும் கதைப் பின்னணியை தனது எளிமையான நடையில் வாசகர்களுக்குத் தந்த யூமா வாசுகியின் "ரத்த உறவு" அண்மைக்காலங்களில் வந்த சிறந்த நாவல்களில் ஒன்று என்று வாசகர்கள் எல்லோராலும் வாதங்களின்றி ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

Tuesday, June 21, 2005

கு-டிக்டிக்-கதை

நேரம் தாமதித்து வீட்டிற்கு வந்ததால், அடித்துத் துன்புறுத்திய அண்ணனைப் பற்றி, பொலீசாரிடம் புகார் கொடுத்தாள் ஈழத்துத் தமிழ் இளம்பெண் ஒருத்தி. இந்த வழக்கு கோட்டிற்குச் வந்தபோது கனேடிய வாரப்பத்திரிகை ஒன்று, தெற்காசிய பெண்கள் அமைப்பில் ஆலோசகராகப் பணிபுரியும் தமிழ் பெண் ஒருவரிடம், இந்தச் சம்பவம் பற்றி அவர்கள் என்ன நினைக்கின்றார்கள், இவ்வாறான உபாதைக்கு உள்ளாகும் தெற்காசியப் பெண்களுக்கு அவர்கள் எந்த வகையில் உதவப் போகின்றார்கள் என்று கேட்ட போது, அந்த தமிழ் ஆலோசகர் இப்படியான பிரச்சனைகள் அனேகமாக எங்கள் நாட்டுக் கீழ்ச்சாதி மக்களாலேயே வருகின்றன. இதற்காக நான் மிகவும் மனம் வருந்துகின்றேன், வெட்கப்படுகின்றேன் என்று கூற அச்செய்தி ஆங்கிலப்பத்திரிகை ஒன்றில் வெளியானது.
இச் செய்தியைப் படித்த தமிழ் சமூக விரும்பிகள் சிலர் கொதித்தெழுந்து அந்தப் பெண்ணிற்கு எதிராகப் பத்திரிகையில் அறிக்கை விடவேண்டும், அவரைப் பணியில் இருந்து தூக்க வேண்டும் என்று அவசரக் கூட்டம் ஒன்றைக் கூடினார்கள். அக் கூட்டத்தில் எப்படிப் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள், புலம்பெயரும் போது சாதி வெறியையும் தம்முடன் காவி வந்துள்ளார்கள் என்று கலந்துரையாடப்பட்டது.

கூடியிருந்தவர்களில் ஒருவர் எழுந்து தனது ஊரில் தனது அயலவர்கள் எவ்வாறு தாழ்த்தப்பட்டோரை நடாத்துகின்றார்கள் என்றும், தனது பெற்றோர் மிகவும் பெருந்தன்மையாக பாரபட்சம் பார்க்காமல் கீழ்ச்சாதி மக்களை அணுகுகின்றார்கள் என்று கூறி அமர்ந்தார். அடுத்து ஒரு பெண்மணி தனது சொந்தங்கள் தமக்கு மாவிடிக்கும் மனுசிக்கு தம்முத்தத்தில் வைத்து வாழை இலையில் உணவு பாரமாறுவார் என்றும், தான் தனது குசினிக்குள் அவளை இருந்தி அவளுக்கான பிரத்தியேக கோப்பையில் உணவைப் பரிமாறுவேன் என்றும் பெருமையாகக் கூறி அமர்ந்தார். அடுத்தவர் தன் வீட்டிற்கு விளையாடவரும் கீழ்ச்சாதிப் பிள்ளைகளை தான் பாரபட்சம் பார்க்காமல் சேர்த்துக் கொள்ளுவதாகக் கூறினார். இப்படியாக கலந்து கொண்டவர்கள் உரையாற்றி, உரையாற்றி உலர்ந்து விட்ட வாயை ஈரப்படுத்த ஒருவர் அருகில் இருக்கும் ரிம்ஹோட்டன் கடைக்குச் சென்று எல்லோருக்கும் டபுள் டபுள் கோப்பி வாங்கி வந்தார்.

அதன் பின்னரும் பலரின் அநுபவப் பகிர்தலோடு பல மணிநேரங்கள் தொடர்ந்த கூட்டத்திலிருந்து, தெற்காசியப் பெண்கள் அமைப்பில் ஆலோசகராக வேலை பார்க்கும் அந்த தமிழ் பெண்ணிற்கு எதிராக ஒரு கடிதத்தை எழுத முடிவெடுத்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்களின் சிந்தனை சிதறல்களால் உடல்கள் நொந்து நூடில்சாகிப் போக (ஈழநாதனின் சிலாங்) இரவு உணவாகச் சைனீஸ் நூடில்ஸ் ஓடர் பண்ணலாம் என்று ஒருவர் ஆலோசனை கூற, கொஞ்சம் சிக்கின் விங்சும் சொல்லி பியர் போத்திலும் வாங்குவம் நாளைக்கு வேலையில்லைத்தானே என்று இன்னுமொருவரின் ஆலோசனையின் படி கடிதம் தயாராகும் அதே வேளை நூடில்ஸ் பியர் போன்றவையும் வந்து சேர்ந்ததன. கடித்துக், குடித்து கடிதத்தைத் தயார் செய்த மனத்திருப்தியுடன் அந்தக் கூட்டம் நிறைவிற்கு வந்தது.

(இந்தக் கதையில் இடம்பெற்ற சம்பவங்கள் அனைத்தும் கதாசியரியின் கற்பனை என்று சொல்ல மாட்டேன்)

வலைப்பதிவாளர் மகாநாட்டிற்கான ஆயத்தங்கள்

2006ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் ரொறொண்டோவில் இடம்பெறவிருக்கும் உலக அனைத்து வலைப்பதிவாளர்கள் மகாநாட்டிற்காக ஆயத்தங்கள் இப்போதே தொடங்கி விட்டன என்பதை மகிழ்ச்சியுடன் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.
அதற்கான சாட்சியங்களா மும்மரமாக வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் இலவச ஊழியர்களின் புகைப்படங்களை இங்கே இணைத்துள்ளேன்.



சமையல் வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் - ஜிம்மி



பாதுகாப்பிற்காக – ரெக்ஸ்



ஆலோசகர்கள் - ஜானி, லல்லி, லில்லி, பேபி, ரெக்ஸி



சுகாதாரப்பிரிவில் - ரோசி



திட்டங்களைக் கவனமாகச் செவிமடுக்கும் - பிளாக்கி



ஹொப்பஹட்டிற்குப் பயணம்



கமெரா ரெடி



ஓய்வுப்பகுதி – ப்றொண்ணி


காதல் பிரிவு – லசி, சைறண்

Monday, June 20, 2005

நஷ்ட ஈடு



“வாழாவெட்டி” என்று சமூகத்தால் விழிக்கப்படும் தாயினால் வளர்க்கப்பட்டவன் நான். இரண்டு அறைகளைக் கொண்ட மண்ணாலான கொட்டில் வீட்டின் முன்னே, உச்சி வெய்யில் நேராய் இறங்க, தன்னை ஒடுக்கி கந்தல் சேலையால் தலையை மூடிக் குந்தியிருந்து, கிடுகு பின்னி பாரமாய் சுமந்து சென்று விற்றும், பால் அப்பம், முட்டை அப்பம் என்று வட்ட வட்டமாய் வாயில் நீரூறும் சுவையுடன் அப்பங்களைச் சுட்டு விற்றும், பிள்ளைகளை வளர்த்தவள் என் அம்மா. "அம்மா" என்றால் பல காலமாய் என் மனதில் வர்ணங்கள் அற்ற கந்தல் சேலையுடன் குந்தியிருக்கும் ஒரு கொத்தியாத்தை உருவமே பதிந்திந்தது. அவள் முகத்தில் தீவிரத்தின் கீறல்கள் நிரம்பி வழியும். புன்னகைக் கோடு எங்காவது ஓடுகின்றதா என்று அவள் நித்திரையில் ஆழ்ந்திருக்கும் தருணங்களில் பக்கத்தில் இருந்து பார்த்த நாட்கள் ஏராளம். எனக்கும், என் அக்காவிற்கும் கல்வியின் முக்கியத்துவத்தை உணர வைத்தவள் அவள். என் நான்காவது வயதில் அக்காவின் படிப்பில் பலதையும் நான் தெரிந்து வைத்திருந்தேன். சாப்பாடு, நித்திரைக்கான நேரம் போக என் நேரங்கள் அனேகம் படிப்பிலேயே கரைந்தன. சிறுவயதுக்கான குறும்புகள் அனைத்தையும் இழந்தவன் நான். ஆனால் அதற்காக வருந்தியதாக ஞாபகம் இல்லை.

இரண்டு குழந்தைகளுடன் தனியாக விடப்பட்ட போதுதான் அம்மாவிற்கு கல்வியின் அருமை புரிந்தது என்பாள். தன் பெற்றோர் விட்ட தவறைத் தான் விடக்கூடாது என்பதில் மிகவுமே கவனமாக இருந்தாள். புன்னகை மறைந்த முகமானாலும் அன்பைச் சுரக்க அவள் மறந்ததில்லை. மரத்துத் சுருங்கிய கைகளால் பள்ளியால் வரும் என்னை இழுத்து நெற்றி வியர்வையை அவள் வழிப்பதில் சுகம் காண்பவன் நான். எப்போதும் என் பார்வை அவள் முகத்தில் பதிந்து எதையோ தேடும். எதைத் தேடுகின்றேன் என்பதும் புரிந்ததில்லை. என் அம்மாவை வேறு உருவமாகப் பார்க்க விரும்பினேனோ என்னவோ. பளிச்சென்ற முகத்துடன், பொட்டும், பூவும் கலர் சேலையும், சிரிப்புமாக.

அம்மாவின் பத்து விரல்களை நம்பி எமது குடும்பம் இயங்கியது. பஞ்சத்தில் படுத்தாலும் பாடசாலையை நாங்கள் ஒருநாளும் தவற விடுவதில்லை. பழுப்பேறி, மூலை சுருண்ட பாடப்புத்தக்தை நெஞ்சோடு அணைத்துக் கல்வி கற்றோம். இரவு நேரங்களில் வீட்டு வேலைகள் முடிந்த பின்னர், என்னையும் அக்காவையும் இருபுறங்களாகப் படுக்க வைத்து எங்கள் தலையைக் கைகளால் அழைந்த படியே படிப்பு, சமூகம், வாழ்வு என்று தனக்குத் தெரிந்தவற்றை எமக்குள் புகுத்தி எம்மைச் சிந்திக்க வைக்கும் அம்மா, அப்பாவின் பார்வைக்கு அழகற்றவள். கறுப்பாக, கட்டையாக இருக்கும் அவள் முகத்தில் பற்கள் துருத்திக்கொண்டிருக்கும். அப்பா அழகானவராம் அம்மா சொல்லி நான் அறிந்து கொண்டது. நான் அப்பாவைக் கொண்டிருப்பதாக அடிக்கடி சொல்லுவாள். அதன் பின்னர் அழகு என்பது வெறும் மாயை, அழிந்து போகக் கூடியது, அழகென்று கர்வம் கொள்பவர்கள் கோழைகள், அறிவிலிகள் எல்லாமே பார்ப்பவர் கண்களில்தான் இருக்கிறது என்றும் சேர்த்து சொல்லுவாள். எனக்கு என் நிறத்தில், அழகில் கூச்சம் இருந்தது. இதில் பெருமைகொள்ள என்ன இருக்கிறது என்ற கேள்வியும் இருந்தது.

அப்பா பக்கத்து ஊர் பெண் ஒருத்தியின் அழகில் மயங்க, அவருடனான தன் உறவை துண்டித்துக் கொண்டாள் அம்மா. தொழில் பார்க்கும் தன் உதவியில்லாமல் அம்மாவால் இரண்டு பிள்ளைகளுடன் வாழ முடியாது என்று எண்ணியிருந்த அப்பாவின் முகத்தில் கரி பூசி வாழ்ந்து காட்டினாள். பண உதவியைச் சாட்டாக வைத்து தன் பிள்ளைகளுடனான தொடர்பைத் தொடரலாம் என்று எண்ணியிருந்த அப்பாவிற்கு ஒன்றும் செய்ய முடியவில்லை. அம்மாவின், அம்மா பிள்ளைகளாக வாழ்ந்து, வளர்ந்தோம் நானும் அக்காவும். நான் அப்பாவை வெறுத்தேன். வெறும் உடல் அழகிற்காக என் அம்மாவை மோசம் செய்த மிகப் பாவியாக அவரை நான் என் மனதில் உருவகித்துக் கொண்டேன். நல்ல குணமும், படிப்பும்தான் உலகில் முக்கியம் வெளிப்புற அழகு என்பது அழிந்து போகும் என்பது சின்னவயதிலேயே எனக்குள் ஆழமாகப் புகுந்து கொண்டவை.

என் அக்கா அம்மாவை ஒத்திருந்தாள். அவளிற்குப் பாடசாலையில் பல பட்டப்பெயர்கள் இருந்தன. அவள் காது பட யாராவது படம் தெளித்தால் சுருண்டு போவாள். வீட்டு மூலையில் அம்மா பார்க்காத வண்ணம் ஒளித்திருந்து அழுவாள். ஒன்றுக்கும் மனம் உடைந்து போகக் கூடாது, அழக் கூடாது என்பது அம்மாவின் இன்னுமொரு வேண்டுகோள். என் உலகம், எனது அம்மாவையும் அக்காவையும் மட்டுமே கொண்டிருந்ததால், வக்கிரம் படைத்த வெளி உலகை நான் வெறுத்தேன். முடிந்தவரை அம்மாவையும், அக்காவையும் சந்தோஷப்படுத்துவதிலேயே எனது உலகம் உருண்டு கொண்டிருந்தது. சொந்தங்கள் “அட ஆம்பிளப்பிள்ளை வெள்ளையா வடிவா இருக்கிறான் பெட்டைச்சிதான் இப்பிடிப்போயிட்டாள்” என்று அம்மாவிடம் அங்கலாய்த்துக் கொள்ளுவார்கள். நான் என் சொந்தங்களையும் வெறுத்தேன்.

அக்கா படிப்பில் கெட்டிக்காறி. அவளுக்கு இலக்கியத்தில் ஆர்வம் அதிகமாக இருந்தது. என்னை அழைத்துக் கொண்டு யாழப்பாணத்தின் பெரிய வாசகசாலைக்குப் போவாள். எனக்கு வாசிப்பில் ஆர்வம் இல்லாது போனாலும், சும்மா இருந்து தட்டித்தட்டி அதுவே ஒரு ஆர்வமாகி மிகச் சின்ன வயதிலேயே ஈழத்து இலக்கியங்கள், தமிழ் நாட்டு இலக்கியங்கள் என்று நல்ல பல இலக்கியங்களை அடையாளம் கண்டு கொண்டேன். எனது திறமை விஞ்ஞானத்தில் இருந்தாலும் நானும் ஒரு முழுநேர இலக்கிய விரும்பியாக மாறிப்போயிருந்தேன். என் வாசிப்புக்களைப் பகிர்ந்து கொள்ள என் பாடசாலையில் ஒருவரும் இல்லை. இதனால் நான் வாசிப்பவற்றையெல்லாம் அம்மா பாத்திரங்கள் கழுவும் போதோ, மீன் கழுவும் போதோ, அருகில் குந்தியிருந்து விளக்கத் தொடங்கினேன். அம்மா புரிந்து கொண்டாளா இல்லையா தெரியிவில்லை ஆனால் என்னை ஊக்குவிப்பதற்காக “உம்” கொட்டத் தவறுவதில்லை.

பின்னர் இலக்கியக் கட்டுரைகள், அரசியல் கட்டுரைகள், வேற்றுமொழி படைப்புக்கள் என்று எனது வாசிப்புப் பரவத் தொடங்கியது. சிறு சிறு இலக்கியச் சந்திப்புகள் பற்றி அறிந்து கொண்டு வெறும் பார்வையாளனாக சுவரோரம் நின்று கேட்கத் தொடங்கினேன். தொடக்கத்தில் என்னை ஒருவரும் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை. என் கருத்துக்கள் என் வாய் வரை வந்து மடிந்து கொண்டிருக்கும். பல சந்திப்புக்களின் பின்னர் நான் அடையாளம் காணப்பட்ட போது, நானும் கருத்துக்களைக் கூறத் தொடங்கினேன். என் ஆர்வம் அந்த இளைஞர்களைக் கவர்ந்திருந்தது. எல்லோருமே என்னிலும் விட வயதில் மிகவும் மூத்தவர்கள். இருந்தும் வாழ்வு, அரசியல், இலக்கியம் என்று என்னால் அவர்களுடன் கலந்துரையாட முடிந்தது. நான் அவர்களை நண்பர்களாகக் கொண்டதற்காப் பெருமைப்பட்டுக் கொள்வேன். எல்லாம் அறிந்த, நல்ல மனம் கொண்ட முழுமையான நண்பர்கள் அவர்கள் என்பது என் கணிப்பு. இலக்கியக் கலந்துரையாடல் என் வீட்டிலும் சில வேளைகளில் இடம்பெறுவதுண்டு. எனது நண்பர்கள் என்று வயதில் மூத்த இளைஞர்களை வீட்டிற்கு அழைத்து வந்த போது அம்மா கொஞ்சம் சங்கடப்பட்டாள். வயதுக்கு வந்த அக்கா வீட்டில் இருக்கிறாள், பல ஆண்கள் வீட்டிற்கு வந்து போவது அம்மாவிற்குச் சரியாகப் படவில்லை. இவர்கள் மற்றைய ஆண்கள் போல் நடந்து கொள்ள மாட்டார்கள். இவர்களுக்கு சமூகம் பற்றிய மிதமான அக்கறை இருக்கின்றது என்று அவளுக்கு எடுத்துச் சொல்லி சம்மதம் வாங்கிக் கொண்டேன். தொடக்கத்தில் அக்கா உள்ளே ஒளிந்து கொண்டாலும், போகப் போக அவர்கள் பேச்சு அவளுக்கு சுவாரசியத்தையும் ஆர்வத்தையும் கொடுக்கத் தானாகவே வெளியே வந்து எங்களுடன் கலந்து கொண்டு “அம்மாவந்தாள்” அப்பு “மோகமுள்” ஜானகி “அக்கினிப்பிரவேசம்” கங்கா என்று அலசினாள்.

எனக்கு பாடசாலையில் மாலை நேரங்களில் வாசகசாலையில் பகுதி நேர வேலையும், அக்காவுக்கு பாடசாலை நேரம் போக ஒரு தனியார் கல்விச் சாலையில் பகுதி நேர வேலையும் கிடைத்தன. அம்மா இப்போதெல்லாம் குந்தியிருந்து கிடுகு பின்னுவதில்லை. நாங்கள் கொண்டு வரும் பணத்திலேயே எங்கள் குடும்பம் தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டது. நானும் நண்பர்களும் நாடகங்கள், திரைப்படங்கள் பார்க்கச் செல்லும் போது அக்கா தயங்காமல் எங்களுடன் இணைந்து கொள்வாள். விடுமுறை நாட்களில் கட்டுச் சாப்பாட்டுடன் கடற்கரைக்கோ, பூங்காவிற்கோ சென்று இலக்கிய வாதங்களுடன் நாட்களைக் கழிக்கப் பழகிக் கொண்டோம். என் நண்பர்களில் ஒருவர் எனது அக்காவை விரும்பித் திருமணம் செய்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நான் அவ்வப்போது எண்ணுவதுண்டு. அக்கா சமூகப்பார்வைக்கு அழகற்றவள். சீதணம் என்று கொடுக்க எங்களிடம் ஒன்றுமிருக்கவில்லை. அக்காவிடமிருந்தது அறிவும், குணமும் மட்டுமே. அறிவையும் குணத்தையும் யாசித்து திருமணம் செய்து கொள்ள முன்வரும் ஆண்கள் பரந்த மனம் உடையவர்களாக இருக்க வேண்டும். என் நண்பர்கள் அப்படியானவர்களாக இருந்த போதும், வெறும் நட்பு என்ற ரீதியில் பழகி விடும் மிக நல்லவர்களாக இருப்பது எனக்குக் கொஞ்சம் சங்கடமாகவே இருந்தது.

அக்கா தமிழ் இலக்கியப் பட்டப்படிப்பை முடித்துக் கொண்டு ஆசிரியராக வேலைக்குச் சேர்ந்தாள். நான் பொறியிலல் துறையில் மேற்படிப்பை மேற் கொண்டேன். நண்பர்களில் சிலர் திருமணம் செய்து கொண்டு குடும்பஸ்தர்களாகி விட, சிலர் வேலை நிமித்தம் வேறு ஊருக்குப் போய் விட்டார்கள். நான் என் ஆசையை விழுங்கிக் கொண்டேன். எல்லா அம்மாக்களையும் போல் என் அம்மாவும் ஆசைப்பட்டாள் என் அக்காவின் திருமணத்திற்காக. சாதகத்தை வெளியே எடுத்தாள். மெல்லி படலம் போல் முகத்தை மேவியிருக்கும் சோகத்துடன் அக்கா மறுப்போ, சம்மதமோ எதுவுமின்றி மௌனமானாள். நான் அவளின் விருப்பம் கேட்டுப் பல தடவை கதை தொடக்கிய போது பேச்சை வேறு திசைமாற்றினாள். என் எதிர்ப்பையும் மீறி பெண்பார்க்கும் சடங்கு என் வீட்டிலும் தொடங்கியது. பெண்ணிற்கு அழகு குறைந்திருந்ததால், பெருந்தன்மையுடன் பணத்தைக் கூட்டிக் கேட்டார்கள் மாப்பிள்ளைச் சிங்கங்கள். பல சாதகங்கள் தட்டிப் போய் கடைசியில் தன்னிலும் பதினைந்து வயது மூத்த மாப்பிள்ளைக்குக் கழுத்தை நீட்டி வீட்டை விட்டு வெளியேறினாள் அக்கா. அக்காவைப் பிரிவதற்காய் அம்மா கண் கலங்கினாள். நான் கலங்கிப் போனேன். இந்த உலகம், மனித மனங்கள், சமூகவழக்கங்கள் எல்லாவற்றின் மேலும் எனக்கு வெறுப்பு. மிக நல்லவர்களா இருந்த என் நண்பர்களையும் நான் வெறுத்தேன்.

அக்காவிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது.



அன்புள்ள தம்பிக்கு,

உன் சுகம் எப்படி? நான் இங்கே நல்ல சந்தோஷமாக இருக்கின்றேன். இந்தக் கடிதம் உனக்கு மட்டுமே எழுதுகின்றேன். படித்தவுடன் கிழித்து எறிந்து விடு. அம்மாவிடம் காட்டி விடாதே. தம்பி என் திருமணத்தின் போது நீ கலங்கி நின்றது எனக்கு இன்னும் கண்களுக்குள் நிற்கின்றது. நீ திருமணம் பற்றிய எனது எதிர்பார்ப்புக்களை கேட்ட போதெல்லாம் நான் பேச்சைத் திசை மாற்றினேன் என்பது உனக்குப் புரிந்திருக்கும். புரிந்து நீ குழம்பியதை நான் அறிவேன். தம்பி மனிதர்களில் ஒருவமே நிறைவானவர்கள் இல்லை. பல அறிஞர்களின் புத்தகத்தை வாசித்து விட்டதால் பெருந்தன்மையுடன் எல்லோரும் நடப்பார்கள், இருப்பார்கள் என்று எதிர்பார்ப்பது தவறு. எல்லோருமே சுயநலவாதிகள். நானும் நீயும் கூடத்தான். உன் படித்த நல்ல வேலையில் இருக்கும் நண்பர்களில் ஒருவராவது என்னை விரும்பித் திருமணம் செய்ய மாட்டார்களா என்று நீ மனதுக்குள் ஏங்கியதை நான் அறிவேன். அது உன் சுயநலம். எனக்குள்ளும் அதே சுயநலமிருந்ததால் அழகான உன் நண்பன் ஜெகனை நான் காதலித்தேன். அவனும் காதலித்தான். ஆனால் அது உனக்குத் தெரியாது. பின்னர் அவன் தன் சுயநலமாக பணக்காற அழகி ஒருத்தியைக் கலியாணம் செய்து கொண்டு விட்டான். இங்கே யாரும் யாரையும் குறை சொல்ல முடியாது. எல்லோருமே சுயநலமாகத்தான் காயை நகர்த்துகின்றோம். வெற்றி சிலருக்குக் கிடைக்கிறது. தோற்பவர்கள் இறப்பதில்லை. வாழ்ந்துதான் முடிக்கின்றார்கள். நான் இப்போது சந்தோஷமாக இருக்கின்றேன். இவர் எனக்குப் பொருத்தமான நல்ல நண்பராக இருக்கின்றார். நீ அதிகம் யோசிக்காமல் சந்தோஷமாக இரு. அம்மா எப்படி இருக்கின்றா? பதில் போடு.

இப்படிக்கு உனது அக்கா.

நான் கடிதத்தைத்தோடு, எனக்குள்ளிருந்த பலவற்றைக் கிழித்துப் போட்டேன். எல்லோரும் சுயநலவாதிகள். அக்கா அழகாகச் சொல்லிவிட்டாள். என்னால் ஏற்க முடியாமல் இருந்தது. ஒருவேளை சுயநலவாதிகள் ஒப்பீட்டல் கூடுதலாக இருக்க முடியும். ஆனால் உலகில் எல்லோருமே சுயநலவாதிகள் என்று ஒட்டு மொத்தமாக கூற முடியுமா? என் அப்பா சுயநலவாதி. ஆனால் அம்மா அவளை எப்படி சுயநலவாதியென்பேன். அம்மாவைப்பற்றி எனது மனம் ஆராயத் தொடங்கியது. தனியாக கிடுகு பின்னி என்னையும் அக்காவையும் படிப்பித்தவள். தன் சுகங்களை காவு கொடுத்தவள். இவள் எப்படி சுயநலவாதியெனும் அடைப்புக்குறிக்குள்?.
“அம்மா நானும் அக்கா மாதிரித் தமிழ் இலக்கியம் படிக்கப் போறன். எனக்கு விஞ்ஞானத்தில நாட்மில்லாமல் இருக்குது” நான் மண்டாடியபோது. “அப்பா இல்லாமல் கூனிக்குறுகி நிண்டு கிடுகு பின்னி உன்னைப் படிப்பிச்சனான். சாப்பாட்டுக்கு வழியில்லை, பிள்ளை என்ஜினியரா வர வேணுமெண்டு கனவு காணுறாள், எண்டு என்னைப் பழிச்சாக்களுக்கு நான் வெண்டு காட்ட வேணும்” அம்மாவின் அந்த வார்த்தைகள் என் தலையின் ஒரு மூலையில் ஓடி மறைந்தது.

நான் சுயநலவாதியாக இருக்க விரும்பவில்லை. முடிந்த வரை நான் என் வாழ்க்கையின் ஒவ்வொரு முடிவையும் கண்காணித்து, சுயநலமற்று வாழ முனைய வேண்டும் என்று உறுதி கொண்டேன். அதன் பின்னர் என் ஒவ்வொரு அசைவும் மிக நிதானமாக சுயநலமற்றிருந்தது எனக்குள் பெருமையையும், நிம்மதியையும் தந்தன. கல்வியை முடித்துக் கொண்டு வேலையில் சேர்ந்த போது பணக்காற அழகிகளின் சாதகங்களுடன் அம்மா வந்தாள். எல்லாவற்றையும் ஒதுக்கி விட்டு என் அம்மாவும், அக்காவும் எதற்காக நிராகரிக்கப்பட்டார்களோ அதே காரணமான அழகற்றவள் என்று சமூகத்தால் பட்டம் கூ+ட்டப்பட்ட ஒரு பெண்ணை மணந்து கொண்டேன். மீண்டும் பெருமையும், நிறைவும் எனக்குள். சுயநலமற்ற விட்டுக் கொடுப்போடு என் வாழ்வு நிறைவாக நகர ஒன்று, இரண்டு என்று இரண்டு குழந்தைகளுக்கு நல்ல அப்பாவானேன்.

எனக்கு மலை நாட்டிற்கு மாற்றல் வந்தது. கைக் குழந்தையுடன் கஷ்டம் வேண்டாம் முதலில் தனியே போய் செட்டில் ஆகிப் பின்னர் குடும்பத்தை அழைத்துக் கொள்ளலாம் என்று ஒரு வீட்டில் கிடைத்த சிறிய அறையில் இரண்டு மாதங்கள் போக்கிக் கொண்டேன். புதிய வேலைத்தளம், வேலைப் பழு அதிகமாக இருந்ததால் கிழமைக்கு ஒரு முறை மட்டும் தொலைபேசியில் மனைவி, அம்மாவுடன் கதைக்கும் வாய்ப்புக் கிடைத்தது. வேலை முடிந்து வீட்டிற்கு உடம்பு அலுப்போடு வந்தால், வீட்டு வேலைக்காறி சாப்பாடு கொண்டு வந்து அறையில் பரிமாறுவாள். தொடக்கத்தில் புதிய வேலை, புதிய மனிதர்கள் என்று என் கவனம் எங்கோ இருந்து காலப்போக்கில் வேலைக்காறியின் மேல் திரும்பியது. சின்னப்பெண். கலியாணமானவள். மருண்ட விழிகளுடன் கொள்ளை அழகாக இருந்தாள். வேண்டுமென்றே உடைகளை விலத்துவாளா? இல்லை தற்செயலானதா என்ற கேள்வி எனக்குள் இல்லாமல் அவள் அழகை படிக்கத் தொடங்கினேன். பொன்நிற பூனை மயிர்கள் மார்பில் புரள, மெல்லிய மண்ணிறத்து விம்மல் எனக்குள் இரசாயண மாற்றத்தை உண்டு பண்ணியது. கண்கள் கருகருவென்று காமம் பொங்கிமிதக்க நின்றாள். நான் கால்களை வேகமாக ஆட்டி ஆட்டி என்னைக் கட்டுக்குள் கொண்டு வந்தேன். மெல்லிய உதட்டுக்குள் எப்போதும் இருக்கும் ஒரு சிறு புன்னகை எத்தனை நாளுக்கு பாப்போம் என்று பயம் காட்டியது. வற்றிய என் மனைவியின் உடலில் உருண்டு புரண்டது ஞாபகம் வர மனதுக்குள் ஏக்கம் பற்றிக் கொண்டது. தொடைகள் திரள கால்களை நிலத்தில் ஊன்றி அழுத்தினேன். இப்படி ஒரு உடலை அனுபவிக்கும் சாத்தியமே வாழ்வில் இல்லாமல் போய் விடுமா? துக்கம் மனதுக்குள் மேவத்தொடங்கியது. சாப்பாடு தொண்டைக் குழிக்குள் சிக்கி மூச்சுத் திணற அவள் கையைப் பிடித்து இழுத்து அணைத்து முத்தமிட்டேன். அவளின் விம்மிய மார்புகள் என் நெஞ்சோடு உரசி என் உஷ்ணத்தை உச்சிக்குக் கொண்டு வந்தது. என் பிடியை விலக்கி அவள் நிதானமாக வெளியேறி தூரப் போய் புள்ளியாகி மறைந்து போனாள்.

நண்பா!

இலகுவாகச் சொல்லி விட்டேன்.

நீ முகம் திருப்பி கண்ணீர் தட்டியதை
காணாததுபோல் பாசாங்காய் அமர்ந்திருந்தேன்.

அதன் பின்னர் நான் கதைத்தது எதுவுமே
என் ஞாபகத்தில் இல்லை.
உனக்கு இருக்கிறதா?
இருந்தால் சொல்லு,
உறைந்த பொழுதுகளில்
என் வார்த்தைகளை நான் அடையாளம் காண விரும்புகின்றேன்.

கைகள் நடுங்க புகையாய் நீ இழுத்து விட்டதை
உன் வார்த்தைகளாய் நான் அர்த்தம் கொண்டேன்.
உன்னைப் புதிதுபோல் அதிசயத்துப் பார்த்த
எனைப் பார்த்து நீ புன்னகைத்தாய்,
உன்னால் முடிந்தது அவ்வளவே.

நண்பா! உன்னை நோகாமல் பாதுகாப்பாய்
எங்கோ கொண்டு போக மனம் துடிக்கிறது,
நோவே நானெனும் போது பாதை எனக்குத் தெரியவில்லை.

நான் சொல்ல வருவது ஏதாவது உனக்குப் புரிகிறதா?
எனக்கே புரியாத போது
எப்படி நீ புரிந்து கொள்வாய்?
இருந்தும் கேட்கின்றேன்
தயவுசெய்து எனைப் புரிந்து கொள்.

Friday, June 17, 2005

என் கவலை எனக்கு..



லீலாவின் கணவன் திருந்தி விட்டான்.. மதிக்கு நிம்மதியாக இருந்தது.. திருந்தி விட்டேன், திருந்தி விட்டேன் என்று சாக்குப் போக்குக் காட்டிக்கொண்டிருந்தவன் இப்போது உண்மையிலேயே திருந்தி விட்டான்.. லீலா கூட இப்போது கணவனைப் பார்க்கும் போது வெட்கப்படுகிறாள். லீலா வெட்கப்படும் போது மதிக்கும் மிதமிஞ்சிய வெட்கம் வந்து விடும்.. அவள் முகத்தைத் திருப்பிக்கொள்வாள்.. சில வேளைகளில் ராஜம்மாவின் போக்கு மதிக்கு மிகவும் ஆத்திரத்தைக் கொடுக்கும்.. இப்படியா ஒரு பெண் மருமகளை வைத்துக் கொடுமைப் படுத்துவாள்.. ம்.. அவள் மாமிக்காறி அப்பிடித்தான் செய்வாள் ஆனால் இந்த முட்டைக்கண்ணனுக்கு அறிவு வேண்டாம்.. எப்பபாத்தாலும் சரோவோட வெடுக்கு வெடுக்கு எண்டு.. எதுக்குத் தான் இதுக்கெல்லாம் கலியாணம்.. புரண்டு படுத்தாள் மதி.. கலியாணம் கட்டி முழுசா ஒரு வருஷம் ஆக முதலே தனது கணவனை ஆமிக்காறரின் துப்பாக்கிக்கு தாரை வார்த்துக் குடுத்த தன் தங்கை அண்ணாதான் கதியெண்டு கனடா வந்து சேர்ந்து விட்டால்.. அவளுக்கு செல்வம் போலொரு தங்கமான மாப்பிள்ளை அமைஞ்சால் எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்.. இந்தக் கடவுள் ஏன் தான் இப்பிடி நல்லதுகளுக்கே கஷ்டங்களைக் குடுத்துகொண்டிருக்கிறார்? ஏக்கத்துடனேயே சின்னதாக குறட்டை அவளிடமிருந்து வெளிப்பட்டது..

பக்ரறி வேலை முடித்து காய்ந்து வடிந்து போய் சந்திரன் வேலையால் வீடு திரும்பி வந்துகொண்டிருந்தான்.. இனிச்சாப்பிட்டு சின்னதாக ஒரு நித்திரை கொண்டு விட்டுத் திரும்பவும் வேலைக்கு ஓட வேண்டும்.. என்ன இந்த வாழ்க்கை எண்டு அவனுக்கு அலுப்பு வந்தது.. வயிறு பசியால் ஓலம் போட்டது. வழமையாக வேலை முடிந்ததும் கோப்பிக்கடைக்குப் போய் கூடாக ஒரு கோப்பி குடித்து விட்டுத்தான் வீட்டிற்கு பஸ் பிடிப்பான்.. ஆனால் இன்று நேற்று வாங்கிய பங்கு இறைச்சியை சமைக்கச் சொல்லி மதியிடம் சொல்லியுள்ளான்.. சுடச்சுட ஆட்டுக்கறியுடன் சாப்பிட்டு விட்டு சின்னதாய் ஒரு நித்திரை கொள்ள வேணும்.. அவன் வாயில் நீர் ஊறியது.. இச்.. இறைச்சிக்கறியெண்டு சொல்லி சும்மா விறைத்ததுகளைச் சாப்பிட்டுச் சாப்பிட்டு அவனின் வாயும் விறைத்து விட்டது.. 'அண்ணை உயிர் ஆடடிக்கப் போறம் உங்களுக்கொரு பங்கு வேணுமோ? விலை கொஞ்சம் கூடவரும் ஆனால் ஊரில சாப்பிட்டது மாதிரி இருக்கும்" எண்டு நண்பன் கேட்ட போது 'விலை என்ன விலை.. ஓடியோடி உழைக்கிறம் ஒரு நாளைக்கெண்டாலும் வாய் ருசிக்கச் சாப்பிட வேணும்" அன்றிலிருந்தே சந்திரனின் வாயில் நீர் ஊறத்தொடங்கி விட்டது. ஆட்டு இறைச்சியை நினைக்க, நினைக்க அவனுக்கு ஊர் நினைவு அலைமோதி நெஞ்சை நெகிழ வைத்தது.. அம்மா பிரட்டலாக அள்ளி வைக்க எண்ணெயில் மூழ்கிய உடலுடன் சாராயமும் கையுமாக கண்கள் சிவக்க அப்பா பக்குவமாய் தொட்டுச் சுவைத்துச் சிரித்து...குடுத்த வைச்ச மனுசன்.. சாராயம் ம் நானும் முடிந்தால் ஒரு பியர் அடிப்பம்.. வேலைக்குப் போகமுதல் அது இறங்கீடும்.. பிறகு மதியையும் கணக்குப் பண்ணி.... வர வர அவள் முரண்டு பிடிக்கிறாள்.. கற்பனைகள் பெருகப் பெருக அவன் நடை துரிதமானது..

கதவைத் திறந்து சந்திரன் வீட்டுக்குள் புகுந்தான்.. மதி சோபாவில் விக்கி, விக்கி அழுதுகொண்டிருந்தாள்.. ஆட்டு இறைச்சி மணம் நாசியைத் தாக்கியது.. கறி மணத்துடன் சேர்ந்து கொஞ்சம் கருகிய மணமும் சேர்ந்து கொள்ள சந்திரன் ஓடிப்போய் கறிச்சட்டியின் மூடியைத் தூக்கினான்.. ஆட்டு இறைச்சி கறுத்துப்போய் புகை மூட்டமாய் அவனைப் பார்த்துச் சிரித்தது..

'ஏண்டி இப்பிடி என்ர கழுத்தை அறுக்கிறாய்.." ஓடிச்சென்று மதியின் தலைமயிரைக் கொய்து முகத்தில் ஒரு குத்து விட்டான்.. கையில் அகப்பட்ட டிமோட் கொன்றோலை எடுத்து ரிவியை நோக்கி எறிந்தான். சின்னதான ஒரு சிணுங்கலுடன் அது கறுப்பானது.. மதி முழித்தாள்.. 'என்னடி முழிக்கிறாய். உந்தச் சனியனைப் பாத்துச் சிரிக்கிறது, அழுகிறது. உனக்கெண்டொரு குடும்பம் இருக்கெண்ட நினைவிருக்கே உனக்கு.. வேலைக்குப் போகக் கள்ளம்.. நான் மாடு மாதிரி உழைச்சுப் போட எந்த நேரம் பார் உதுக்கு முன்னாலேயே கிட."

'இப்ப ஏன் கத்துறீங்கள்.. நான் வேலை தேடிக்கொண்டு தானே இருக்கிறன்..கிடைச்சா எல்லோ" அவளும் பதிலுக்குக் கத்தினாள்.. 'செய்யிறதையும் செய்து போட்டுக் கதை வேறை ஆ" மீண்டும் அவளின் முகத்தில் ஒரு குத்து விட்டான்.. அவள் சொண்டு வெடித்து ரத்தம் பிசுபிசுத்தது. 'ஏன் என்னைப் போட்டு இந்த அடிஅடிக்கிறாய்.. வேலை இல்லாட்டியும் உனக்கு எல்லாம் செய்துதானே தாறன்.. மாடு மாதிரி இப்பிடிக் குத்துறியே" மதி ஆவேசத்துடன் கத்தினாள்..

'என்னடி.. புருசனை இப்பிடிச் சொல்லுற அவவுக்கு வந்திட்டாய் ஆ" சந்திரன் எட்டி மதியில் தலைமயிரைப் பிடிக்கப் போக.

'தொட்டாயெண்டாப் பொலிசுக்கு அடிப்பன்.. விட விடத் தலைக்கு மேல ஏறுறாய். ஆ பொம்பிளை எண்டா உங்களுக்கெல்லாம் இளக்கமாப் போச்சு."

'அடியெடி பாப்பம் பொலிசு வரமுதல் உன்னத் துண்டு துண்டா வெட்டிப்போட்டு நான் உள்ளுக்கப் போயிடுவன்.." சொன்ன படியே அவளின் தலைமயிரைக் கொத்தாகப் பிடித்து இழுத்து குசினிக்குள் வந்து கருகிச் சுருங்கிப் போயிருந்த கறிச்சட்டிக்குள் அவளின் முகத்தைப் புகுத்தி 'பாரடி பாரடி நான் நூறு டொலர் குடுத்து வாங்கின பங்கு இறைச்சிக் கறியைப் பாரடி..இதுதாண்டி இண்டைக்கு உனக்குச் சாப்பாடு.. இண்டைக்கு முழுக்கறியையும் சாப்பிட்ட பிறகுதான் நீ குசினியை விட்டு வெளியில வரலாம்.."

குற்ற உணர்வு தலைக்கேற செய்வதறியாது 'ஐயோ ஐயோ இந்த மனுசன் என்னைப் போட்டுக் கொல்லுது ஏன்னெண்டு கேக்க ஆக்களில்லாத அனாதையா நான் போயிட்டனே" பெருங்குரல் எடுத்து மதி கத்தினாள்..

'ஏன்டி உனக்கு ஆளில்ல உன்ர கொம்மா, கொப்பர் எல்லாம் இஞ்சதானே இருக்கீனம் அவையோட போய் இரன்.." தலைமயிரில் பிடித்திருந்த பிடியை விடாமல் அவளை இழுத்து வந்து தொலைபேசியை எடுத்து அவள் கையில் கொடுத்து 'இந்தா கொம்மாக்கு அடி.. பிள்ளை வளத்த விதத்தை அவையளும் அறியட்டும்.. மனுசன் பக்றியால முறிச்சு போட்டு வர மனுசனுக்குச் சமைச்சுப் போடாமல் நாடகத்தில வாற மனுசங்களோட சல்லாபிச்சுக் கொண்டிருக்குது எண்ட கூத்தை அவையளும் அறியட்டும்" அவள் கைக்குள் தொலைபேசியைச் செருகினான் சந்திரன்.

'உனக்கென்ன விசர் பிடிச்சிட்டுதே.. கறி எரிஞ்சு போச்சு அது சரி.. அதுக்காகத் தேவையில்லாத கதையெல்லம் கதைச்சுக்கொண்டு" அவள் தொலைபேசியைத் தூக்கிப் போட்டு விட்டுக் கத்தினாள்..

'போடி என்ர கண்ணுக்கு முன்னால நிக்காதை எனக்கு விசர் பிடிக்குது.." கத்தியபடியே அவளைப் பிடித்துத் தள்ள மதி அறையை நோக்கி ஓடினாள்..

வேலைக் களை.. பசி இழந்து விட்ட இறைச்சி எல்லாம் சேரந்து சந்திரனின் கோபத்தைத் தலைக்குமேல் ஏற்ற பக்கத்தில் இருந்தவற்றை எல்லாம் எடுத்து நிலத்தில் ஓங்கி எறிந்தான்.. வீட்டில் நின்றால் பிரச்சனை கூடும் அவள் பொலிசுக்க அடிச்சாலும் அடிப்பாள் என்ற எண்ணம் எழு இரண்டு முட்டையை அடித்துப் பொரித்து சோற்றுடன் குழைத்துச் சாப்பிட்டு விட்டுச் சந்திரன் புறுபுறுத்த படியே அடுத்த வேலைக்குக் கிழம்பி விட்டான்.

கதவு மூடிச் சத்தம் கேட்தும். சந்திரன் போய் விட்டான் என்று உறுதி செய்து கொண்டு மெல்ல மெல்ல கீழே வந்தாள் மதி. சுற்றும் முற்றும் ஒரு முறை பார்த்து விட்டுக் குசினிக்குள் போனவள் இறைச்சிக்கறியை அள்ளிக் குப்பைக் கூடைக்குள் போட்டு விட்டு.. ப்ரிஜைத் திறந்து ஒரு ஐஸ் கட்டியை எடுத்து ரத்தம் கசியும் வாயோரம் ஒத்திய படியே ஒரு கிண்ணத்திற்குள் கொஞ்சம் மிக்சரை போட்டுக்கொண்டு வந்து ரிமோட் கொன்றோலை எடுத்து இரு முறை தட்டி விட்டு கால்களை சோபாவில் அலாக்காகத் தூக்கி வைத்துக்கொண்டு ரீவியைப் போட்டாள்.. அது இரண்டு முறை மங்கி விட்டு வேலை செய்யத் தொடங்கியது.. நாடகம் தொடங்கியதும் மிக்சரை அள்ளி மென்றபடியே சோகமானாள்.. லீலாவின் மாமியார் நெஞ்சு நோவால் துடிதுடிக்க மதி மீண்டும் விக்கி விக்கி அழத்தொடங்கினாள்.. பாவம் லீலா இப்பதான் புருஷன் திருந்தி ஒரு மாதிரி நிம்மதியாகக் குடும்பம் நடத்துகிறாள் இதுக்குள் மாமியாருக்கு இப்பிடியாகி விட்டதே என்ற கவலை அவளிற்கு..

Thursday, June 16, 2005

ரொறொன்ரோ பல் வைத்தியர் மீதான தடை நீக்கம் - வைகறை.

இவ்வார வைகறை இதழில் 8ம் பக்கத்தில் வெளிவந்திருக்கும் கட்டுரையில் அதிருப்தி அடைந்த சிலர் வைகறை விநியோகிக்கப்படும் நிறுவனங்களுக்கச் சென்று பத்திரகையை அப்புறப்படுத்தி வருகின்றனர். இதனால் இவ்வாரப்பத்திரிகை தங்கள் கைகளுக்குக் கிடைப்பது சிரமமாக உள்ளது என வாசகர்கள் எமக்குத் தொலைபேசியூடாகத் தெரிவித்துள்ளனர். இதனை ஓரளவுக்கு நிவர்த்தி செய்யும் வகையில் அப்பத்திற்கான இணைப்பை இத்துடன் தருகின்றோம்.

http://vaikarai.com

Wednesday, June 15, 2005

உஷ்



Nirvana creation இன் குறும்படங்களில் ஒன்றான "உஷ்" தற்போது பார்வைக்கான இணையத்தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. 2000ஆம் ஆண்டு காலச்சுவட்டில் வெளியான "வடு" எனும் எனது சிறுகதையைத் தழுவியே இந்த "உஷ்" குறும்படம் எடுக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்களிடமிருந்து விமர்சனங்களை எதிர்பார்க்கின்றேன். குறை நிறைகளை மற்றவர்கள் தெரியப்படுத்தும் போதுதான் குறும்பட உலகின் ஆரம்ப நிலையில் இருக்கும் எங்களல் முன்னேற முடியும் என்று நம்புகின்றேன். பார்க்க முடிந்தவர்கள் பார்த்து தயவுசெய்து தங்கள் விமர்சனங்களை தயங்காமல் தாருங்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

www.nirvanacreations.ca

Tuesday, June 14, 2005

கவிதை.



நான் பஸ்ஸிற்காக காத்து கிடக்கின்றேன்.
வார இறுதி நாட்களில்
வழமையிலும் விட பஸ் சேவை குறைவாகவே இருக்கும்.
கைக்குள் 2டொலர் 50 சதங்கள் குளிர்ந்தபடி.
இதயம் புரிந்து கொண்டு வேகமாக அடித்துக் கொள்கின்றது.

கிடைத்த நாட்களைக் கணித்தபடி
கோடையின் உச்சத்தில் திளைக்கும் சிறுவர்கள்
சைக்கிளில் சுத்திச் சுத்தி வட்டமிடுகின்றார்கள்.
அரைகுறை ஆடையில் பெண்களும் சிவந்தபடியே..

வீட்டு வாசல்கள் எல்லா வருடங்களையும் போல்
பூக்களால் நிறைந்திருக்கின்ற.
வீதியின் புழுதி மணம் ஊரை நினைவு படுத்துகின்றது.

எல்லோரும் அவசரமாக எங்கோ பயணித்துக் கொண்டிருக்கின்றார்கள்,
இவர்களில் யாருக்கேனும் தெரியுமா
எனது பயணத்திற்கான காரணம்?.

அவன் சொல்லுவான்;
இப்போதெல்லாம் என் பேச்சில்
மரணம் தட்டுப்படுவதாக.
நிச்சயம் வருந்துவான், தடுத்திருக்கலாம் என்றெண்ணி.

பெண்களின் தற்கொலைக்கு ஆயிரம் காரணமுண்டு,
என்னுடையதற்கானதை
உங்களுக்குத் தகுந்தபடி
நீங்களே பொருத்திக் கொள்ளுங்கள்.

"காலம்" சஞ்சிகை - 24வது இதழ்

கனடாவில் வெளியாகும் "காலம்" சஞ்சிகை குறித்து எனது ஆதங்கத்தை புலம்பெயர் இலக்கிய வளர்ச்சி என்ற தலைப்பில் முன்பு எழுதியிருந்தேன். கனடாவில் பல ஆண்டுகளாக வெளியாகி வரும் ஒரே சஞ்சிகை என்ற பெருமையைக் "காலம்" சஞ்சிகை கொண்டிருப்பினும் தொடக்கத்தில் ஈழத்து புலம்பெயர் தமிழரின் படைப்புக்களை அனேகமாகத் தாங்கி வந்த இந்த சஞ்சிகை கடந்த சில வெளியீடுகளில் இந்திய தமிழ் படைப்பாளிகளிற்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தது. இந்திய தமிழ் படைப்பாளிகள் எனும் போது இந்தியாவில் இலக்கியத்தில் முன்னணியில் பலரால் பேசப்படும் படிக்கப்படும் ஜெயமோகன், சுந்தரராமசாமி, மனுஷபுத்ரன் போன்றோரின் படைப்புக்களைத் தாங்கி வரத்தொடங்கியது. இந்தப் படைப்பாளிகள் தமது படைப்புக்களை வெளிக் கொணருவதற்கு இந்தியாவில் பல தரமான சஞ்சிகைகள் உள்ளன. அனேக சஞ்சிகைகளில் இவர்களின் எழுத்துக்களை நாம் காணக்கூடியதாகவும் இருக்கின்றது. இவ்வேளை "காலம்" சஞ்சிகையும் அவர்களின் படைப்புக்களை வெளியிடுவது அவசியமற்றது என்பதே எனது எண்ணம்.

ஆனால் 24வது இதழான "காலம்" சஞ்சிகையில் பெரிய மாற்றத்தை நான் காண்கின்றேன். இலக்கியத் தோட்டத்தின் விருது விழாச் சிறப்பு இதழாக, பத்மநாபஐயரின் அட்டைப்படத்துடன் பத்மநாபஐயரின் இலக்கியச் சேவைகள் பற்றிய பல இலக்கியவாதிகளின் கட்டுரைகளுடனும், பல புலம்பெயர் ஈழத்துப் படைப்பாளிகளின் படைப்புக்களுடனும், 24வது இதழ் வெளிவந்திருப்பது மீண்டும் "காலம்" சஞ்சிகை ஈழத்து புலம்பெயர் இலக்கியவாதிகளின் படைப்புக்களை வெளிக்கொணரும் ஒரு சஞ்சிகையான தொடர்ந்தும் வரும் என்ற நம்பிக்கையைத் தந்துள்ளது.

Friday, June 10, 2005

எமது கலைஞர்.

96களில் என்று நினைக்கின்றேன். கறுப்பி இல்லத்தரசியாக மட்டும் இருந்த காலத்தில் யாழ் இந்துக் கல்லூரியின் கலையரசி விழாவிற்கு (எனது சகோதர்கள் படித்த பாடசாலை) எனது குடும்பம் சகிதம் சென்றிருந்தேன். (குடும்பம் என்றால் அப்பா, அம்மா, அண்ணாக்கள், அக்காக்கள் என்று) வழமையாக கலைவிழாக்கள் என்றால் இப்படித்தான் இருக்கும் என்ற ஒரு கருத்துக் கணிப்பு எனக்குள் இருந்தது. அதிலிருந்து விலகாமல் முதலில் ஒரு வரேற்பு நடனம், பின்பு ஒரு நாட்டிய நாடகம், ஒரு நகைச்சுவை நாடகம், இடையில் பேச்சுரைகள் இப்படிப் போய்க் கொண்டிருந்த நிகழ்வில் ஒரு நகைச்சுவை நாடகம் என்றால் ஒரு சமூகநாடகமும் அங்கே மேடை ஏற்றப்படுவது வழமை அதற்கேற்ப சமூக நாடகமாக ப.அ.ஜெயகரனின் “பொடிச்சி” நாடகம் என்று அறிவிக்கப்பட்டது. இந்தப் “பொடிச்சி” என்ற பெயரே வழமையான சமூக நாடகங்களின் பெயரில் இருந்து மிகவும் வேறுபட்டிருந்தது எனக்குள் ஆவலை எழுப்பியது. பெண்களைப் பற்றி ஊரில் கதைக்கும் போது முக்கியமாக குறையாகச் சொல்லும் போது பேச்சு வழக்காகப் பாவிக்கப்படும் சொற் பதந்தான் இந்தப் “பொடிச்சி”. (உதாரணமாக உந்தப் பொடிச்சி படு மோசம்). இப்படியான ஒரு சொல்லை நாடகத்தலைப்பாக வைத்திருப்பதே நாடகம் வித்தியாசமாக அமையப் போகின்றது என்ற ஆவலைத் தூண்டியது. ஜெயகரனும் அப்போது எனக்கு அறிமுகமற்றவர்.
மேடைக்கு சில ஆண்கள் வந்தார்கள். எல்லோரும் ஒரே மாதிரியாக கறுப்பு பாண்ஸ்சும், கடும் மஞ்சள் நிற ரீ சேர்ட்டும் அணிந்திருந்தார்கள். வசனங்களாக உரைக்காமல் சில சொற்களை உரத்து சொல்லத் தொடங்கினார்கள். பின்னர் மேடையில் ஒரு பெண் அவளைச் சுற்றிச் சுற்றி ஆண்கள் வார்த்தைகளை எறிந்த வண்ணமிருந்தார்கள்.
நான் நிமிர்ந்து இருந்து கொண்டேன். வழமையை விட மிக வித்தியாசமாக இந்த “பொடிச்சி” நாடகம் அமையப் போகின்றது என்பது தெரிந்தது. பெண் அடிமைத் தனத்தை மையமாக வைத்து எமது சமுதாயம் பெண்களை எப்படிப் பார்க்கின்றது நடாத்துகின்றது என்பவற்றை குறியீடாக இயக்கியிருந்தார் ப.அ.ஜெயகரன். அன்று நான் பார்த்த அந்த “பொடிச்சி” நாடகம்தான் என் வாழ்வில் நான் பார்த்த வித்தியசமான முதல் நாடகம் என்பேன். அதன் பின்னர் அரங்காடல் நிகழ்வொன்றில் ஜெயகரனின் “எல்லாப்பக்கமும் வாசல்” எனும் மற்றுமொரு தரமான நாடகமும் பார்க்கக் கிடைத்தது.

சில வருடங்கள் பின்னர் கறுப்பி மெல்லப் படிதாண்டி இலக்கிய உலகம் என்று செல்லத் தொடங்கிய போது ஜெயகரனைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. 99ல் அரங்காடல் நிகழ்வுக்காய் “இன்னொன்று வெளி” எனும் நாடகத்தின் ஒரு முக்கிய பாத்திரத்தில் என்னை நடிக்கும் படி கேட்டார். அது என் முதல் மேடை நாடகம். அந்த நாடகமும் ஜெயகரனிற்கு பாராட்டைப் பெற்றுக் கொடுத்தது. அதனைத் தொடர்ந்து ஜெயகரனின் ஆக்கத்திலும் இயக்கத்திலும் உருவான “எதிர்காற்றினிலே”, “முதல்வர் வீட்டு நாய்” போன்ற நாடகங்களிலும் கறுப்பிக்கு நடிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.

தொடர்ந்து “நாளை நாடகப்பட்டறை” எனும் பெயரில் “காலப்பயணம்”, “என்னை விசாரணைக்கு உட்படுத்துங்கள்”, “சொல்லின் ஆளத்துள்”, “இரண்டு புள்ளிகள்”, “இரசிகன்” போன்ற நாடகங்களையும் மேடையேற்றி உள்ளார்.

கனேடி நாடகச் சூழல் என்பது புலம்பெயர்ந்த நாடுகளிலேயே முன்னணியில் இருப்பதாக அறிகின்றேன். அதிலும் தரமான தனது சொந்தப்பிரதிகளைத் தானே இயக்கும் ஒரே நாடகக் கலைஞனாக ப.அ. ஜெயகரன் ஒருவதைத்தான் கனேடிய நாடகச் சூழலில் கூற முடியும். இக்கலைஞரின் சிறந்த நாடகங்களில் நடிக்கும் சந்தர்பம் கிடைத்தை நான் எப்போதும் பெருமையாகக் கொள்கின்றேன்.

Thursday, June 09, 2005

கறுப்பியின் வாசகசாலை.

என்னை இந்த விளையாட்டிற்கு அழைத்த பத்மா அரவிந்திற்கு நன்றிகள். என்னுடைய வாசிப்பு அம்புலிமாமாவில் தொடங்கியது. (அனேகருக்கு அப்படித்தான் இருந்திருக்கும்) தொடர்ந்து குமுதம்,ஆனந்தவிகடன், கல்கி, கலைமகள், சாவி, குங்கும் என்று வீட்டில் எல்லா இந்திய சஞ்சிகைகளும் காலுக்குள் இடறுபடும். எமது ஊரில் எங்கள் வீடுதான் வாசகசாலை. அங்கு ஒருவரும் சஞ்சிகைகள் வாங்கிப் படிப்பதில்லை. எனது அப்பாவும், அம்மாவும் தமிழ் ஆசிரியர்களாக இருந்ததால் அவர்களுக்கு வாசிப்பில் ஆர்வம் இருந்தது. பக்கத்து வீட்டுப் பெண்கள் நாங்கள் வாசித்து முடித்த பின்னர் வந்து வாங்கிச் செல்வார்கள். எல்லோருமே எங்கள் குடும்பத்தை விட வசதியானவர்கள் என்பது வேறு கதை. எங்கள் வீட்டில் ஐந்து பெண்கள், அம்மா, ஆச்சியோடு சேர்த்து ஏழு. எல்லோரும் தொடர்கதைகள் வாசிப்பவர்கள். புத்தகம் வீட்டிற்கு வந்து விட்டால் எப்போதும் ஆச்சிக்குத்தான் முதல் உரிமை. கொடுக்காவிட்டால் கோபித்துக் கொண்டு போய் சாப்பிடாமல் மூலையில் இருந்து விடுவார். இரவானால் கைவிளக்கை (லைட் வேலை செய்தாலும்) முகத்திற்கு அருகே பிடித்து அவர் வாசிக்கும் அழகே தனி அழகு. ரேயின் "பதர்பாஞ்சாலி" ஆச்சியைப் பார்த்த போது, எனக்கு அடிக்கடி எனது ஆச்சி நினைவிற்கு வருவார். நானும் அந்த வகையில் அப்போது வெளிவந்த எல்லாத் தொடர்கதைகளையும் படித்திருக்கின்றேன். சுஜாதா, பாலகுமாரன், ஜெயகாந்தன், ஜானகிராமன், சிவசங்கரி, அனுராதாரமணன், இந்துமதி என்றும் ஈழத்து எழுத்தாளரான அ.முத்துலிங்கம் அவர்களும் அப்போது எனக்கு அறிமுகமான எழுத்தாளர்கள்.

புலம்பெயர்ந்த பின்னர் அறிமுகமான எழுத்தாளர்கள் ஏராளம்.

என் வாசகசாலையில் 250+ புத்தகங்கள் இருக்கலாம். கனடாவில் புத்தங்கள் வாங்குவது எனக்குக் கட்டுப்படியாகாத விடையமாக இருந்ததால் தொடக்கத்தில் அதிகம் வாங்குவதில்லை. பின்னர் 2000ஆம் ஆண்டு அளவில் காலச்சுவடு பதிப்பகத்தோடு ஒரு டீல் போட்டேன். அதாவது அவர்களால் வெளியிடப்படும் அனைத்துப் புத்தகங்களையும் எனக்கு அனுப்பி விடுமாறு. கிழமைக்கு ஒரு பார்சல் வரத் தொடங்கியது. ஒன்று வாசித்து முடிக்கு முன்னே என் அலுமாரியில் இருபது சேர்ந்து விடும். எனவே அதையும் நிறுத்தி விட்டேன். தற்போது பெயர்களைத் தெரிந்து எழுதி எடுப்பிக்கின்றேன். அத்தோடு எனது சகோதரிக்கும் எனக்குள்ளும் ஒரு டீல். தொடக்கத்தில் ஒரே புத்தகங்களை நாங்கள் இருவருமாக வாங்கிக்குவித்து விட்டோம். சில புத்தகங்கள், எனக்கு நிச்சயம் வேண்டும் என்று படுபவையை மட்டும், நான் இப்போது வாங்குகின்றேன். நான் வாங்காதவற்றை அக்காவிடம் பெற்று வாசித்து வருகின்றேன்.

அண்மையில் வாசித்தவை (ஞாபகத்தில் இருப்பவை)

காடு – ஜெயமோகன்
ஏழாம் உலகம் - ஜெயமோகன்
உபபாண்டவம் - எஸ். ராமகிஷ்ணன்
நெடுங்குருதி – எஸ்.ராமகிஷ்ணன்
ரத்தஉறவு – யூமா வாசுகி
என் பெயர் ராமசேஷன் - ஆதவன்
சொல்லாத கதைகள் - வாய் மொழி வரலாற்றுப் பயிலரங்கில் பெண்களின் பதிவுகள் - அம்பை எஸ்.சிவசுப்ரமணியம் அ.சிறீனிவாசன்
பயணப்படாத பாதைகள் - காட்சி வடிவ வரலாற்றுப் பயிலரங்கில் பெண் கலைஞர்களின் பதிவுகள் - அம்பை எஸ் சிவசுப்ரமணியம் அ.சிறீனிவாசன்.
வண்ணாத்திக்குளம் - கணேசன்
யாரும் யாரோடும்?? இல்லை – உமாமகேஷ்வரி
சினிமா கோட்பாடு – எம். சிவகுமார்
கதாகாலம் - தேவகாந்தன்
கொறில்லா – சோபாசக்தி
புலிநகற்கொன்றை – பி.கிறிஷ்ணன்.
நத்தையும் ஆமையும் - ஜோர்ஜ் சந்திரசேகர்
Frenzy For Two or More – Eugene Ionesco
Ivan the Fool: A Lost Opportunity and Polikushka – Leo Tolstoy
The House of Bernarda Alba – Federico Garcia Lorca.

படித்தவற்றில் ஏன் படித்தேன் என்று நொந்தவை அதிகம் இல்லை. இருந்தும்

மனதில் பதிந்தவை -

தாய் - மார்க்சீம் கார்க்கி
ஏழாம்உலகம் - ஜெயமோகன்
உபபாண்டவம் - எஸ் ராமகிஷ்ணன்.
மோகமுள் - ஜானகிராமன்
ஜே.ஜேயின் சில குறிப்புக்கள் - சுந்தரராமசாமி.
கருக்கு – பாமா.
சிவரமணி கவிதைகள்.
Anna Karenina – Leo Tolstoy

படிக்காமல் எனது வாசகசாலையில் தூங்குபவை பல. அவை பற்றிப் பின்னர் ஒருநாள்.

நான் இந்த விளையாட்டில் புகுந்து விளையாடப் கூப்பிடுபவர்கள்

சயந்தன்
வசந்தன்
கதிர்காமஸ் (ஹேஹே)
ப.சிறீரங்கன்
முத்து
குழைக்காட்டான்.

Tuesday, June 07, 2005

மாலைப்பொழுதின் மயக்கத்திலே..

சனி மாலையை வலைப்பதிவாளர்களுக்கு என்று ஒதுக்கி வைத்தாலும் கோடை வந்து விட்டாலே தமிழ் நிகழ்வுகளால் நிரம்பிவிடும் ரொறொண்டோவின் வழமையான ஒரு மிகவும் பிஸியான சனிதான் அன்றும். காலை 10 மணி தொடக்கம் மாலை 6 மணி வரை கவிதை மொழிபெயர்புப் பட்டறை, அதே மண்டபத்தின் இன்னுமொரு பகுதியில் வாழும் தமிழின் புத்தகக் காட்சி, அதன் முடிவில் நாடக எழுத்தாளர் ஜெயகரனின் நாடகப்பிரதி வெளியீட்டு விழா, அதே நேரம் வெளியே பூங்காவில் வலைப்பதிவாளர்கள் சந்திப்பு என்றும் மூச்சு விட நேரமற்ற ஒரு நாளாக நான் எண்ணியிருந்தேன். நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்?

குளிர்காலங்களில் யன்னல் கதவுகள் திறக்கப்படாத குடில்களிலெல்லாம் ஸ்பிரங் கிளீனிங் என்று வேண்டாத பொருட்கள் அகற்றுதல் மும்மராக இடம்பெறும். கறுப்பி கொஞ்சம் லேட். காலை சில கழிவுகளை அகற்ற முனைந்து காலில் போட்டு, கால் வீங்க, அழுது, ஐஸ் வைத்து நொண்டி நொண்டிப் படுத்து விட்டேன். ஐயோ எல்லாவற்றையும் கோட்டை விடப்போகின்றேனே என்று திடுக்கிட்டெழுந்து நான் போகப் போறேன் என்று வீட்டில் வாங்கிக்கட்டிக் கொண்டு மாலை ஐந்த மணி அளவில் மொழிபெயர்ப்பு பட்டறைக்குள் முகத்தைக் காட்டி, புத்தக வெளியீட்டிலும் முகத்தைக் காட்டி, ஒரு மாதிரி வலைப்பதிவாளர்களைச் சந்திக்க எனது நண்பரும் பல கால வலைப்பதிவு வாசகரும், எனது படங்களுக்கு கமெரா, எடிட்டிங் செய்பவருமான ரூபனுடன் பூங்காவிற்குப் போய்ச் சேர்ந்தேன்.

இச் சந்திப்பில் வெங்கட், கிஸோ, நக்கீரன், தான்யா, பிரதீபா, வசந்திராஜா (வாசகி), சக்தி, டீசே, சத்யா (வாசகி), ரூபன் (வாசகன்), கறுப்பி போன்ற ரொறொண்டோ வாழ் நபர்களும், வேற்று மாநிலத்தில் இருந்து பாலாஜிபாரி, மதி கந்தசாமியும், சுந்தரவடிவேல், அவரது மனைவி ஜானகி, மகன் மாசிலன் ஆகியோரும் கலந்து கொண்டார்கள். இதில் சக்தி, நக்கீரன், பாலாஜி பாரி, மதிகந்தசாமி, சுந்தரவடிவேல், அவரது மனைவி ஜானகி, மகன் மாசிலன் மட்டுமே எனக்குப் புதியவர்கள் ஏனையோர் ஏற்கெனவே அறிமுகமானவர்கள். இரண்டு பூங்கா இருக்கைகள் அருகருகே இருந்ததால் அமர்ந்து கொண்டோம். கொஞ்சம் நெருக்கமாக இருந்ததால் தாம் வேறு இருக்கைகள் எடுத்து வருவதாக டீசே, கிஸோ, பாலாஜி பாரி(யும் என்று நினைக்கின்றேன்) ஆண்களுக்கே உரிய மிடுக்கோடு எழுந்து சென்று, இருக்கைகளை அசைக்க முடியாமல் வெறும் பூக்கள் சிலவற்றை பேக்காட்டக் கொண்டு வந்தார்கள் (பூ என்றால் புல்லுக்குள் இருக்கும் களையின் பூ)
அவர்களைக் குத்திக் காட்டுதல் தவறென்று உணர்ந்ததால் எல்லோரும் புற்தரையில் இருக்க முடிவெடுத்தோம்.
முதல் ரவுண்டாக எம்மை நாம் அறிமுகம் செய்து கொண்டதோடு, எப்படி வலைப்பதிவின் அறிமுகம் கிடைத்தது என்று எமது திருவாய் திறந்து மொழிந்தோம். (இந்த வேளை வெங்கட் எஸ்கேப்)
இரண்டாவது ரவுண்டாக எமக்குப் பிடித்த, நாம் படிக்கும் வலைப்பதிவுகள் பற்றிக் கூறினோம். (யார் யார் எவருடையதைக் கூறினார்கள் என்று கறுப்பி தகவல் தருவது தவறென்றுணர்ந்து)
ஒட்டு மொத்தமாக எல்லோரையும் கவர்ந்ததாக
நாராயணன்
மாண்டிரீஸர்
தங்கமணி
பெயரிலி
பத்மா அரவிந்த் என்று ஒத்துக் கொண்டோம்.
பெயரிலி தற்போது படங்களைப் போட்டு வாசகர்களில் கண்ணில் பூச் சுத்துவதும், இது ஒரு தொத்து நோயாப் பலரின் வலைப்பதிவுகளில் பரவ முயல்வதால் வன்மையாகக் கண்டிக்கப்பட்டது. காசியின் சேவை பாராட்டப்பட்டது. சக்தி தான் வலைப்பதிவிற்குப் புதிது என்றும் கதைப்பதற்குப் பயமாக இருக்கிறது என்று வெட்கப்பட்டு முகத்தை கைகளால் மூடிக் கதைத்தார். வேறு என்ன புதியவை செய்யலாம் என்று மதி கேள்வியை வைத்தார். பெரிதாகப் பதில் அதற்கு வரவில்லை. (போதும் என்ற மனமே பொன் செய்யும்)

எப்படி வலைப்பதிவுகளை படிப்பதற்கு தேர்ந்தெடுக்கின்றோம் என்ற ரவுண்டில், எமக்குப் பிடித்த வலைப்பதிவாளர்களைத் தவிர்த்து கவர்சியான தலைப்புகளைப் பார்த்தும், பின்னூட்டங்களின் எண்ணிக்கையைப் பார்த்தும் தெரிவு செய்வதாகக் ஒட்டுமொத்தமாகக் கூறினார்கள் என்று நினைக்கின்றேன். (கறுப்பி தலைப்பிடுவதற்காக கவர்ச்சி நடிகைகளின் பெயர்களை சேகரிக்கத் தொடங்கிவிட்டேன்)

அடுத்த ரவுண்டுக் கிடையில் மீண்டும் ஆண் சிங்கங்கள் ரீ வாங்கி வர எழ (கிஸோ டீசே) பாலாஜி பாரி தானும் வருவதாக எழுந்தார். டீசே ஏதோ அதட்டி அவரை இருத்தி விட்டுச் சென்று விட்டார். எனது காதில் பெரிதாக விழவில்லை. (பாவம் பாலாஜி பாரி) சில நிமிடங்களின் பின்னர் உல்லாசப்பயணிகளைத் தன் வசம் இழுத்துக் கொள்ளும் சுவை மணம் மிக்க கனேடிய பேமஸ் "ரிம்ஹோட்டன்" கோப்பி "டோனட்ஸ்" உடன் வந்தார்கள்.
இதற்கிடையில் சக்தி, சத்யா எஸ்கேப் ஆகிவிட்டதால் மீண்டும் நாம் இருக்கைகளில் இருந்து கொண்டோம்.

டீசே கமெராவைத் தூக்க, முகத்தை வெட்டி ஒட்டும் வேலை அறம்புறமாக வலைப்பதிவில் இடம் பெறுவதால், சும்மா கலாம் புலாமாக ஏதாவது எடுத்துப் போடுவதாக முடிவெடுக்கப்பட்டது. பல படங்களை டீசே தட்டினார். கறுப்பிக்கு பெயரிலியில் இருக்கும் நம்பிக்கை டீசேயின் புகைப்பிடிப்பில் இருக்கவில்லை. பல படங்கள் மிஸ்ஸிங். (என்னத்தைத் தட்டினாரோ தெரியவில்லை) இந்த வேளை கிஸோவும் கிளம்பி விட்டார். அவருக்குத் தான் நட்சத்திரம் என்ற திமிர் அப்போதே வந்துவிட்டதை உணரக் கூடியதாக இருந்தது.

சுந்தரவடிவேல் தான் படிக்க விரும்பாத சில வலைப்பதிவாளர்களின் பெயர்களைக் கூறினார். (அதை வெளியிட கொப்பி ரைட் என்னிடம் இல்லை). பின்னர் கலகலப்பாகப் பேசிச் சிரித்து கொண்டிந்தோம். நாம் சிரிக்கும் போது எம்மையும் மீறி மாசிலன் தனக்குப் புரிந்து போல் சிரித்து எல்லோரையும் கலகலப்பாக்கினார். பின்னர் பொதுவாக உரையாடிக் கொண்டிருந்தோம். பாலாஜி பாரியுடன் உரையாடும் சந்தர்ப்பம் கறுப்பிக்குக் கிடைத்தது (பாலாஜிக்குப் பிடிக்கிறதோ என்னவோ அவருடன் உரையாடும் போது ஜெயமோகனை அடிக்கடி நினைவிற்குக் கொண்டு வந்தார்) இப்படியே சும்மா கொஞ்ச நேரம் கடியில் போனது. பின்னர் இரவு உணவிற்காக எங்கு செல்லலாம் என்ற கேள்வி எழு, ஒரு இலங்கை உணவகத்திற்குப் போவோம் என்று பாலாஜி பாரியின் விருப்பமாக "ஹொப்ப கட்" எனும் அப்பத்திற்கு பேர் போன உணவகத்திற்குச் சென்றோம். சந்தோஷமா ஒரு பியர் அடிப்போம் என்றால் நொன்அல்கஹோல் என்றார் உணவகத்து உரிமையாளர். போய் இருந்து விட்டோம் என்ன செய்வது

சாப்பாட்டு ரவுண்டில்

அப்படைஸராக எல்லோருக்கும் ஒரு அப்பம் ஓடர் கொடுத்தோம்.
(எல்லோரும் கையில் மெனுவைத் தூக்க டீசே கொஞ்சம் ரென்சனாவது தெரிந்தது. பில் தன் தலையில் பொறிந்து விடும் என்ற பதட்டம் போலும்)

இரண்டாவது ரவுண்டாக
பலவிதமான உணவுகள் ஓடர் கொடுக்கப்பட்டது. (பகிர்ந்துண்ணல் முறைக்காக)
பாலாஜி பாரி எனக்கு அருகில் இருந்ததால் அவரின் ஓடர் மட்டும் ஞாபகத்தில் இருக்கிறது. முதலில் இட்டலி சட்னி சாம்பார் என்றார், அடுத்த பிளேட்டாக மசாலா தோசை என்று இரண்டு ஓடர்களைக் கொடுத்தார். பல வருடங்களுக்குப் பின்னர் இந்த உணவை உண்ணப் போவதாக மிகுந்த மகிழ்ச்சியோடு கூறினார். ரூபனிடமிருந்து கொஞ்சம் புட்டும் எடுத்துக் கொண்டார். பக்கத்தில் இருந்த இலங்கை வகை சம்பலைப் பார்த்து என்னென்று கேட்க, சத்யா சம்பல் என்றார். அப்படியென்றால்? என்ற அவரின் கேள்விக்கு தான்யா, இந்தியாவில் சட்னிபோல் ஈழத்தில் சம்பல் செய்வார்கள் கொஞ்சம் ரையாக இருக்கும் என்று விளக்கம் கொடுத்தார். அதன் பின்னர் சாம்பல் நன்றாக இருக்கிறது, சாம்பல் அப்படியிருக்கிறது என்ற பாலாஜியை சாம்பல் என்றால் Ash என்று அர்த்தம் என்று சத்யா பாலாஜிக்குக் குட்டு வைத்தார்.
சிக்கின் புரியாணி, புட்டு, பிறைட் ரைஸ், கொத்து ரொட்டி, கணவாய், சிக்கின், மட்டிண்கறி என்று பலவித உணவுகள் மேசைக்கு வந்தன.

இறுதியாக வட்டிலப்பம், பீடா மேசைக்கு வந்தன. வட்டிலப்பம் என்றவுடன் ஏதோ அப்பவகை என்று எண்ணியதாக பாலாஜி பாரி கூறினார். சிறிது எடுத்து வாயில் போட்டு விட்டு நன்றாக இருப்பதாகவும் கூறினார். மாசிலன் ஓடியோடி பல உணவுவகைகளை சுவைபாத்துக் கொண்டிருந்தார்.
மாலை ஆறுமணிக்கு ஆரம்பித்த வலைப்பதிவாளர்கள் சந்திப்பு இரவு 11:30க்கு நிறைவிற்கு வந்தது. அடுத்த வலைப்பதிவாளர் சந்திப்பு அடுத்த வருடம் பாலாஜி பாரி வசிக்கும் நீயூ ப்ரோன்ஸ்விக்கில் நடத்தலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது. (சும்மா)
எல்லாவற்றையும் கவர் பண்ணினேனா தெரியாது. ஏனையோர் அதனைச் செய்யலாம் என்ற நம்பிக்கையுடன்

(நல்ல முறையில் இந்த சந்திப்பு இடம்பெற்றிருந்தாலும் கறுப்பிக்குச் சில மனக்குறைகள் இருக்கத்தான் செய்தன. கறுப்பியுடன் மோதும் ஈழநாதன், கறுப்பியைப் பிடிக்காது என்று மொழிந்த ரோஸாவசந்த், கறுப்பிக்காகப் பிரத்தியேக தளம் போட்ட எல்லாளன், வன்னியன், இன்னும் சும்மா ஜள்ளு விடும் வசந்தன், சயந்தன், அருகில் இருக்கும் தங்கமணி, தூர இருக்கும் நாராயணன் போன்றோரும் கலந்து கொண்டிருந்தால் இன்னும் சந்தோஷமாக இருந்திருக்கும் கறுப்பிக்கு)

Friday, June 03, 2005

குட்டித்தூக்கம்



கோடை காலம் வந்துவிட்டாலே அலுவலக வேலை நேரத்தில் மதிய உணவிற்குப் பிறகு கண்களை இழுத்து இழுத்து நித்திரை வருகின்றது (வலைப்பதிவை வாசிக்க இன்னும் கூடுகின்றது). அதிகம் வேலை இல்லாத போதும் அலுவலகம் கொஞ்சம் அமைதியாகக் காட்சியளித்தால் ஏன் ஓரு குட்டித்தூக்கம் போடக்கூடாது என்று மனம் இழுக்கிறது. ஆனால் துணிவில்லை. நான் பாட்டுக்கு நித்திரையில் ஆழந்து விட பக்கத்தில் அலுவலக முதலாளி வந்து நின்றால் என்ன செய்வது என்ற பயம்தான். இருந்தும் எனது வேலைகளை ஒழுங்காகச் செய்கின்றேன் நேரத்திற்கு முடிக்கின்றேன். ஆனால் வியாபாரம் சோர்ந்து போய் விட்டதால் வேலைகள் அதிகமில்லை. இணையத்தளங்களில்தான் அதிக நேரம் போகின்றது. இந்த நிலையில் சும்மா தேமே என்று இருப்பதை விட குட்டித் தூக்கம் போட அனுமதி தந்தார்களானால் எவ்வளவு நன்னாக இருக்கும். வீட்டிற்குப் போன பின்பு சுறுசுறுப்பாக வேலை செய்ய முடியும். வேலை இருக்கோ இல்லையோ வேலை செய்து கொண்டிருப்பது போல் நடிக்க வேண்டிய கட்டாயம். (வாழ்க்கையில் நடித்து நடித்துச் சலித்து விட்டது)

குமுதம் ஆனந்திவிகடன் போன்றவற்றில் இந்திய அரசாங்க ஊழியர்கள் அலுவலக நேரத்தில் தூங்குவதை வைத்தே எத்தனை நகைச்சுவைகள் வந்திருக்கின்றன. (பேசாமல் இந்தியாவிற்குப் போய் விடலாமா என்று தோன்றுகின்றது? அரசாங்க வேலை கிடைக்கவும் வேணுமே?)
எனது அம்மா ஒரு ஆசிரியை இலங்கையில் பல கிராமங்களில் (நான் சிறுமியாய் இருக்கும் போது) தொழில் பார்த்தவர். அங்கெல்லாம் மதிய நேரச் சாப்பாட்டிற்கு வீட்டிற்கு வந்து சாப்பிட்டு விட்டு ஒரு குட்டித்தூக்கம் போட்டு விட்டுத் திரும்பவும் செல்வார்களாம். கேட்கும் போதே ஆசையாக உள்ளது. அதுமட்டுமல்ல. எங்கள் குடும்பத்தில் எட்டுக் குழந்தைகள். கைக்குழந்தையைப் பார்த்துக் கொள்ள ஒருவரும் இல்லையெனின் அம்மா வகுப்பறையில் ஏணையைக் கட்டி ஆட்டுவாராம், எனக்கு அந்தளவிற்கு வசதியெல்லாம் வேண்டாமப்பா சின்னதா ஒரு அரைமணித்தியாலம் கண் அயர்வதற்கு எனது அலுவலகம் அனுமதி வழங்கினாலே போதும்.
எனக்கு நினைவிருக்கிறது நான் உயர்தரம் படித்துக்கொண்டிருந்த பாடசாலையில் எனது இரசாயண ஆசிரியை யாரையாவது உரத்து வாசிக்கச் சொல்லி எல்லோரையும் கவனமாகக் கேளுங்கள் என்று விட்டு ஒரு குட்டித்தூக்கம் போடுவார். (ஆட்டோகிராப் ஞாபகத்திற்கு வருகிறது) குறட்டையும் வரும். குறட்டை ஒலி கேட்கத் தொடங்கியவுடன் நாங்கள் கதைக்கத் தொடங்குவோம். ஆசிரியை அசைந்தால் கவனமாகக் கேட்பது போல் நடிப்போம். (நடித்து நடித்தே பாழடிக்கப்பட்டு விட்டது வாழ்க்கை)

இப்போது எனக்கு நித்திரை வருகிறது காஞ்சிபிலிம்ஸ் ஏதாவது மாறுவேடப்போட்டி போடுவார், பெயரிலி படம் காட்டுவார், இல்லாவிட்டால் ஈழநாதன் ஏதாவது வம்புக்கு இழுப்பார் அப்படியாவது எனது கண்களுக்கு வேலை கொடுத்து நித்திரையால் மூடுவதைத் தடுக்கலாம் என்று பார்த்தேன். ஒன்றையும் காணோம். எனது இன்றைய நித்திரையை விரட்ட ஒரு குட்டித் தூக்கப் பதிவைப் போடுகின்றேன்.

அதுசரி பகல் நித்திரை வராமலிருக்க ஏதாவது வழியிருந்தா யாரவது சொல்லுங்கப்பா. கண்ணில குளிர் தண்ணியை அடிக்கவும் என்று சொல்ல வேண்டாம்.
(நாளை சனிக்கிழமை நல்லா ஒரு நித்திரையடிக்க வேணும்)

ஆஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹ

Wednesday, June 01, 2005

ராஜினியின் விமர்சனம் பற்றி..

கம்யூனிஸ்ட் கட்சிகளின் முறைமையாலும், சோசலிசத்தின் விரோதப் போக்கினாலும் சோசலிசத்தின் தலமையாயிருந்த ருஷ்யா உடைந்த போது உலகம் முதலாளித்துவத்தின் கைகளுக்குள் விழுந்து விட்டது என்பதை நாம் விரும்பியோ விரும்பாமலோ ஏற்கவேண்டியுள்ளது. ஆங்காங்கே மாக்ஸைப் படித்து விட்டு வாழ, கொள்கை
பரப்ப முற்படுதலும் மிகக் குறைந்த அளவில் இடம்பெறவே செய்கின்றன. இந்நேரம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொய்மையைக் கேள்விக்குறியாக்கி வெளிவந்தது ஜெயமோகனின் "பின் தொடரும் நிழலின் குரல்". இந்நாவலுக்கான பல ஆண் விமரச்சகர்ளின் பார்வையிலிருந்து பெரிதும் வேறுபட்டு பெண்ணியப் பார்வையாக ராஜினியின் விமர்சனம் வந்திருக்கின்றது.

ராஜினின் விமர்சனத்தோடு எனக்கு இருக்கும் சில முரண்பாடுகள் இங்கே வைக்கின்றேன்.

எமது ஒட்டு மொத்த சமுதாயத்தின் வாழ்க்கை முறையிலிருந்துதான் எப்போதுமே இலக்கியங்கள் உருவெடுக்கின்றன. இந்திய கலாச்சார விழுமியத்தில் எத்தனை சதவீதமான பெண்கள் முற்போக்குத் தன்மை பெண்ணியம் பேசுபவர்கள் என்று கணக்கிலிட்டால் விரல் விட்டு எண்ணி விட முடியும். எல்லோராலும் ஒரு "கமலாதாஸ்" ஆகவோ "அம்பை" யாகவோ வாழ்வைப் பார்க்க முடியாது. எத்தனை ஆண்கள் சமத்துவக் கண்ணோட்டத்தோடு பெண்களை நோக்குகின்றார்கள். (பெண்களைச் சமத்துவக் கண்ணோடு பார்க்கும் ஆண்கள் என்று பெயர் சொல்ல ஒருவரையும் தெரியவில்லை) முன்பு ஒருமுறை அம்பையின் “காட்டில் ஒருமான்” சிறுகதைத் தொகுதியை விமர்சித்த ஒரு விமர்சகர் (பெயர் நினைவிலில்லை) அம்பையின் சிறுகதைகளில் வரும் நாய் கூட இன்ரலக்சுவல் ஆக சித்தரிக்கப்படுகின்றது என்று குறிப்பிட்டிருந்தார். அம்பையின் அண்மைக் காலப்படைப்புக்களில் சில அந்த நிலைக்குத் தள்ளப்பட்டுத்தான் இருக்கின்றன. இது படைப்பாளி தன் பார்வையிலிருந்து சமூத்தை நோக்குவதால் ஏற்படும் பிறழ்வு என்பது என் கருத்து.
இதே பார்வையைத்தான் ராஜினியும் பின்தொடரும் நிழலின் குரலில் பார்த்திருக்கின்றார் என்று நான் நம்புகின்றேன். குடும்பம் அதன் கட்டமைப்பு என்பதற்குள் தம்மை முற்றாகப் புகுத்தி வாழும் ஒரு கலாச்சாரத்தில் இருந்து வரும் ஒரு முதியவருக்கு இறக்கும் தருவாயில் தனது வைப்பாட்டியை நாடிச் செல்லதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்? முற்போக்குவாதி, பெண்ணியம் தெரிந்தவர் என்று விட்டு ரோட்டில் நாறிப் போக யாருக்குத்தான் மனம் வரப் போகின்றது. மனித சுயநலத்தைத்தான் படைப்பாளி காட்டியுள்ளார்.

அடுத்து ஒரு சாதாரண நடுத்தர வகுப்பில் பிறந்து எட்டு மணித்தியாலங்கள் அலுவலகவேலையில் இருக்கும் ஒரு ஆணுக்கு மனைவியானவள் வெறும் இந்தியப் பின்னணியை உடைய ஒரு மனைவியாகத்தான் இருக்க முடியும். (இன்றும் கனடாவில் கூட இப்படித்தானே பெண்கள் வாழ்கின்றார்கள். எத்தனை பேர் முற்போக்காகவும் சமத்துவத்திற்காகக் குரல் கொடுப்பவர்களாகவும் இருக்கின்றார்கள்?) அவளின் வாழ்வு கணவனையும் குழந்தைகளையும் அவர்கள் எதிர்காலத்தையும் சுற்றித்தான் இருக்க முடியும். அருணாச்சலத்திற்கு அம்பையோ கமலதாஸோ மனைவியாச் சித்திரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற ராஜினியின் அவா எனக்குப் புரியவில்லை. இனி யூமா வாசுகியின் "ரத்தஉறவில்" வரும் மனைவி ஏன் வீட்டை விட்டுப் போகவில்லை என்றோ கணவனை அடித்துக் கொல்லவில்லை என்றோ கேள்வி எழுப்பாமல் இருந்தால் சரி.

பாலியல் பற்றிய அவர் பார்வையைப் பார்க்கையில்

பெண்ணின் வட்ட யோனிதான் ஆண்களுக்கு உந்து சக்தியாகவும், மாயைப் பொருளாகவும், ஆதரிப்பதாகவும் இருப்பது என்பதுதான் சாத்தியம். பெண்ணியவாதிகளுக்கு இது உவப்பாக இருக்காவிடினும் இதுதான் யதார்த்தம்.
சினிமா நடிகைகளில் இருந்து பெண்ணியவாதிகள்வரை நிலை இதுவாகத்தான் இருக்கின்றது.
காதலி, மனைவி, சினேகிதி என்று வௌவேறு பெயர்களில் தமது குறியைத் தாங்கும் யோனியை உடைய பெண்களுக்கு ஆண்கள் முக்கியத்துவம் கொடுப்பது என்பதுதான் நடைமுறையில் இருக்கின்றது. இதை நான் அன்றாடம் கண்டு வருகின்றேன். ஆண்களை எதிர்பவர்களின் நிலை எப்படியானது என்பது எதிர்காத வரையில் பெண்கள் உணர்ந்திருக்க வாய்பில்லை. அதுவும் வெளி உலகிற்கு வந்து எதையாவது சாதிக்க வேண்டும் என்று ஆவலோடு செயற்படும் பெண்களைத் தமது கால்களுக்குள் போட்டு நசித்து விடும் இந்த உலகம். தமக்கான யோனியை வைத்திருப்பவர்களை தகுதி இருக்கோ இல்லையோ உயர்த்தி விடத்துடிக்கும். தனித்து நிற்று போராடமுடியாமல் இந்த ஆணாதிக்க உலகில் தம்மை இழந்து விடும் பெண்கள்தான் ஏராளம். “முற்போக்கும், அறிவும், இன்ரலக்சுவல்சும் யாருக்கு வேண்டும். யோனி ஒன்றே போதும் என்பதுதான் இங்கே வாசகம். இதுதான் யதார்த்தம். நன்றாக எழுதுகின்றீர்கள், பேசுகின்றீர்கள், உங்களிடம் நல்ல திறமையிருக்கு சொல்வார்கள் பக்கதில் மனைவியோ காதலியோ சினேகிதியோ வந்து கண் ஜாடை காட்டினால் போதும் எல்லாமே அம்பேல்.

அருணாச்சலம் தனது உயர்வை முற்று முழுதாக மனைவி எனும் அடைப்புக் குறிக்குள் அடங்கி விட்ட தனது மனைவியிடம் கண்டான். (ஒரு வேளை வைப்பாட்டி ஒன்றை உருவாக்கி அவளிடம் அதனைக் கண்டான் என்று எழுதியிருக்க வேண்டுமோ என்னவோ)
பின்தொடரும் நிழலின் குரல் கலாச்சாரத்தைக் கேள்வியாக்கும் படைப்பு அல்ல. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் போக்குகளை கேள்வியாக்கும் படைப்பே. அந்த வகையில் அது தனது தரத்தை இழக்கவில்லை என்பது என் கருத்து.

பெண்கள், கேட்கலாம், வாதாடலாம், எழுதலாம் ஏன் பெண்களைப் பெண்மையாகப் பார்க்கின்றீர்கள் என்று? ஆனால் பார்வை மாறவா போகின்றது? படைப்புக்களில் பாத்திரங்கள் எல்லாம் "இன்ரலக்சுவல்ஸ்" ஆக இருந்தால்? ம் கற்பனைக்கு நன்றாகத்தான் இருக்கிறது.