Friday, July 15, 2005

தமிழ்மணத்தில் இறுதி வார்த்தைகள்..



இளமைக் கொலுவிருக்கும்
இனிமை சுவையிருக்கும்
இயற்கை மணமிருக்கும் - பருவத்திலே
பெண் இல்லாமல் சுகமில்லை உலகத்திலே.

கறுப்பியின் அலுவலகம் ஜீலை கடைசி வாரம் ஸ்காபுரோ எனும் நகரத்திலிருந்து பெரி எனும் நகரத்திற்கு (கிட்டத்தட்ட 100 கிலோ மீட்டர் தொலைவிற்கு) இடம் மாறுகின்றது. எனவே கறுப்பி வேலையை விடவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றாள்.

இனி என்ன செய்வது? 5நிமிடக்கார் ஓட்டத்தில் அலுவலகத்திற்கு வேண்டிய நேரம் வந்து வேண்டிய அளவு நேரம் தமிழ்மணத்தில் விளையாடி வேண்டிய நேரம் வீட்டிற்குப் போய்க்கொண்டிருந்த கறுப்பிக்கு இனி ஒரு புதிய அலுவலக்த்திற்குச் சென்று கொஞ்சம் சீரியஸாக வேலை செய்வது என்பது எவ்வளவு சாத்தியம் என்று புரியவில்லை.

கொஞ்சம் கண்களைச் சிமிட்டி, முகத்தை அப்பாவியாக வைத்துக் கொண்டு, நான் பேசாமல் "House wife" ஆக இருந்து விடுகின்றேனே என்றால் (இப்போதெல்லாம் ஆண்கள் நல்ல உசாராக இருக்கின்றார்கள்) கணவர் முறைக்கின்றார். எனக்கு ஒரு அலுவலகத்திற்குச் சென்று வேலை செய்யப் பிடிக்கவில்லை. வீட்டிலும் இருக்க முடியாது. என்ன செய்வது என்று தெரியாமல் முழிக்கின்றேன். திரைப்படத்துறை சம்பந்தமாக ஏதாவது படிக்கும் எண்ணமும் உள்ளது. எவ்வளவு சாத்தியம் என்று தெரியவில்லை.

பூமியில் பிறப்பதும்
வானத்தில் பறப்பதும்
அவரவர் எண்ணங்களே
நெஞ்சினில் துணிவிருந்தால் - ஜிக்கு ஜிக்கு ஜிக்கு
நிலவுக்கும் போய் வரலாம் - ஜிக்கு ஜிக்கு ஜிக்கு

அலுவலகத்தில் இருந்து கொண்டு கிடைக்கும் நேரங்களில் தமிழ்மணத்தில் நினைத்ததை எழுதவும், வம்பளக்க முடிந்தது. ஆனால் வீட்டிற்குப் போனால் மின்கணனிப்பக்கம் போவதில்லை. (முக்கியமாக ஏதாவது செய்ய இருந்தால் தவிர). வீட்டில் இருந்தால் தொலைக்காட்சி பார்ப்பதும் வாசிப்பதுவும் மட்டுமே பிடித்திருக்கின்றது. எனவே இந்தக் காரணங்களால் கறுப்பி இனிமேல் அதிகம் தமிழ்மணப் பக்கம் வலம்வரமாட்டாள்.
எனவே தமிழ்மண நண்பர்களிடமிருந்து விடை பெறும் நேரம் வந்து விட்டது என்று நம்புகின்றேன். முடியும் போது நுனிப்புல் மேய்வது போல் பிடித்த தளங்களை ஒருமுறை மேயும் சந்தர்ப்பங்களில் சில பின்னூட்டங்கள் நிச்சயமாக இடுவேன். (முடிந்தால் அவ்வப்போது ஏதாவது எழுத முயலலாம்)

மறைந்த கலைச்செல்வனின் துணைவியார் லஷ்சுமி மீண்டும் நண்பர்களின் உதவியுடன் “உயிர்நிழல்” சஞ்சிகையைக் கொண்டு வர உள்ளார் என்று தெரிந்து கொண்டேன். கறுப்பியின் பல சிறுகதைகள் உயிர்நிழலில்தான் வெளியானது. எனவே தொடர்ந்தும் நேரம் கிடைக்கும் போது உயிர்நிழலுக்கு எழுத வேண்டும் என்றே விரும்புகின்றேன். செப்ரெம்பர் மாதம் இடம்பெறஉள்ள குறும்படவிழாவிற்கான படப்பிடிப்பு படித்தொகுப்பு என்பனவற்றில் தற்போது ஈடுபட்டுள்ளோம். 2006ம் ஆண்டு மேடை ஏற உள்ள நாடகங்களின் ஒத்திகையும் செப்ரெம்பர் மாதம் தொடங்க உள்ளோம். எனவே அனேகமான கறுப்பியின் நேரங்கள் இவற்றுடன் போய் விடும்.

எனவே தோழர்களே நன்றாக இருங்கள். வாழ்வை நன்றாக அனுபவியுங்கள். நிறம்ப வாசியுங்கள், எழுதுங்கள், படம் காட்டுங்கள் குடியுங்கள் சாப்பிடுங்கள் இத்யாதி இத்யாதி.. அனுபவியுங்கள். கறுப்பி உங்களுடன் சண்டை பிடித்திருந்தால் ஒன்றையும் மனதில் வைத்திருக்காதீர்கள். கறுப்பியின் மனது வெள்ளை(கள்ள) மனது. அட்ரா அட்ரா அட்ரா.

My E-mail. thamilachi2003@yahoo.ca
Web - www.nirvanacreations.ca

எல்லோருக்கும் நல்வாழ்த்துக்கள். Love You All

Thursday, July 14, 2005

ஹோபோ வாழ்வு (The Train-Hoppers)



1. உன் வாழ்வை நீயே தீர்மானி, வேறு ஒருவர் தலையிட விடாதே.

2. நீ செல்லும் ஊர்களின் சட்டங்களையும், மக்களையும் மதிக்கப்பழகிக்கொள்.

3. எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் இலயாமையில் உள்ளவரை உபயோகித்துக் கொள்ளாதே. முக்கியமாக சக ஹோபோவை.

4. எப்போதும் வேலை செய். முக்கியமாக மற்றவர்கள் விரும்பாத வேலையை எடுத்துச் செய்யத் தயங்காதே.

5. வேலை கிடைக்காத பட்சத்தில் உன்னிடம் உள்ள கை வேலைத் திறமைகளை உபயோகப்படுத்து.

6. குடித்து, நிதானம் இழந்து எதிர்மறையான உதாரணமாக மற்றைய ஹோபோக்களுக்கு ஒருநாளும் இருக்காதே.

7. இலவசமாகக் கிடைக்கும் பொருட்களை எறிந்து விடாதே, சக ஹோபோக்களுக்கு அவை உபயோகமானதாக இருக்கலாம்.

8. இயற்கையை மதி, நீ உபயோகித்த சுற்றத்தை பயணத்தின் போது சுத்தமாக வைத்துக்கொள்ளப் பழகு.

9. முடிந்தவரை சுத்தமாக இருக்கப் பழகிக் கொள்.

10. பிரயாணம் செய்யும் போது இரயில் ஊழியர்களுக்குத் தொந்தரவு செய்யாமல், முடிந்தால் உதவி செய்.

11. இரயில் தரிப்பு நிலையங்களில் பிரச்சனை உண்டு பண்ணாதே, வர இருக்கும் மற்றைய ஹோபோக்களுக்கு இதனால் இடைஞ்சல்கள் உண்டாகலாம்.

12. நடைபாதைச் சிறுவர்களுக்கு முடிந்தவரை உதவி செய். அவர்களை அவர்கள் குடும்பத்துடன் இணைப்பதற்கு முயற்சி செய்.

13. சக ஹோபோக்களுக்கு உதவியாகவும் நம்பிக்கையாகவும் எப்போதும் இரு. உனக்கும் அவர்கள் உதவி தேவைப்படலாம்.

14. உன் குரலும் உலகிற்குத் தேவை. மறந்து விடாதே. வேண்டிய நேரங்களில் உனது குரலைக் கொடுப்பது உனது கடமை.



இப்படியான சில சுலோகங்களைத் தம்மகத்தே வைத்து இயங்கி வருகின்றது "ஹோபோ" எனும் நாடோடிச் சமூகம். ஜிப்சிகள் என்று ஒரு நடோடிச் சமூகம் போல், இரயில் இடம் விட்டு இடம் பயணித்து வாழ்பவர்கள் ஹோபோக்கள் என்று தம்மை அடையாளம் காட்டுகின்றார்கள். இந்த வாழ்க்கை முறை எப்போது தண்டவாளம் போட்டார்களோ அப்போதிலிருந்து இருப்பதாகக் கூறுகின்றார்கள்.

கனேடியத் தொலைக்காட்சியில் ஹோபோக்கள் பற்றிய ஒரு விவரணப்படம் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. இது வயது வந்தவர்களுக்கு மட்டுமான நிகழ்சியாக அறிவிக்கப்பட்டது. ஹோபோக்களின் வாழ்க்கை முறை ஒரு தவறான செய்தியை இளைஞர்களுக்குக் கொடுத்து விடக்கூடாது என்பதில் தொலைக்காட்சி மிகவும் கவனமாகவே இருக்கின்றது.
சிலர் விரும்பியே ஹோபோ வாழ்வை அமைத்துக் கொண்டாலும், அனேகமாக வீட்டில் இருந்து ஓடிய சிறுவர்களே ஹோபோ வாழ்க்கை முறையில் ஈடுபடுகின்றார்கள். இயந்திர வாழ்க்கை முறையிலிருந்து தம்மை விடுவித்துக் கொண்டு, வட அமெரிக்கா தென் அமெரிக்கா என்று இவர்கள் பயணம் பல நாட்கள், வாரங்கள், மாதங்கள் இரயில் கழிகின்றன. விரும்பிய போது விரும்பிய இடங்களில் கிடைக்கும் வேலையச் செய்து பயணத்தைத் தொடர்வார்கள். எப்போதும் பொருட்களை ஏற்றிச் செல்லும் இரயிலிலேயே சட்ட விரோதமாக இவர்கள் பயணிப்பதால், பயணங்கள் பல இடங்களில் தடைப்பட்டும் போகின்றன. அத்தோடு திசைகள் அறியாது கிடைக்கும் இரயில் பயணம் செய்வதால் இவர்கள் பயணங்கள் பாதைமாறிப் போவதும் உண்டு. அனேக இரயில் நிலைய ஊழியர்கள் இவர்களுக்கு உதவுபவர்களாக இருப்பினும் சிலர் இவர்களை பொலீசுக்குக் காட்டியும் கொடுக்கின்றார்கள். பதினெட்டு வயதிற்குக் குறைந்தவர்கள் ஹோபோக்களாகக் காணப்படும் பட்சத்தில் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுக் குடும்ப அங்கத்தவர்களிடம் ஒப்படைக்கப்படுகின்றார்கள். இருப்பினும் இவர்கள் மீண்டும் குடும்பத்தை விட்டு விலகி தம்மைக் ஹோபோ வாழ்க்கையில் இணைத்துக் கொள்பவர்களாகவே இருக்கின்றார்கள்.



ஆண் பெண் வேறுபாடற்று இவர்கள் குளங்களைக் காணும் போது நிர்வாணமாகக் குளிப்பதும், ஒருவர் உடையை ஒருவர் அணிந்து கொள்வதும், பலாத்காரம் அற்று விரும்பியவரோடு விரும்பிய நேரம் உறவு கொள்வதும் என்று தமக்கான சுதந்திரத்தை முழுமையான அனுபவிக்கும் இவர்கள் அனேகம் மதுவிற்கும் போதை மருந்துகளுக்கும் அடிமையாகிப் போவதால் பல சமூகங்கள் இவர்களை ஏற்றுக்கொள்ள மறுப்பதாக்கக் கூறுகின்றார்கள். இருந்தும் இவர்கள் சமூக அமைப்பு அதற்குள் உளன்று கொண்டிருக்கும் மனிதர்கள் பற்றிக் கேலியாகவே பேசுகின்றார்கள்.

தமது வாழ்நாள் முழுவதையும் ஹோபோவாகக் கழித்த பலர் இருக்கின்றார்கள். இடையில் இந்த வாழ்வைத் துறந்து மீண்டும் சமூகத்துடன் இணைந்து கொண்டவர்களும் இருக்கின்றார்கள். இவர்களுக்கு என்றொரு விழா ஓகஸ்ட் 11-15 வரை பிறிட் எனும் இடத்தில் லோவா மாநிலத்தில் நடக்கவிருக்கின்றது. இங்கே அனேக ஹோவாக்கள் கூடுவார்கள். ஒரு கொண்டாட்டமாக அன்று அவர்கள் சந்தோஸித்திருப்பார்கள். ஆனால் அதன் பின்னர் சில்லறை கேட்டால் அந்த ஊர் மக்கள் தம்மேல் காறித்துப்புவார்கள் என்று சிரித்த படியே ஹோபோக்கள் கூறுகின்றார்கள்.

ஹோபோக்கள் தம்மேல் வைத்திருக்கும் நம்பிக்கையையும் சமூகத்தின் மேல் வைத்திருக்கும் அவநம்பிக்கையையும் பார்க்கும் போது கொஞ்சம் சிந்திக்க வேண்டியே உள்ளது.

கொஞ்சம் நிற்போம்! சில நிமிடங்களேனும்.



நான் சுவாசித்த காற்று இங்கும் வீசியிருக்கலாம்.
நான் பார்த்த நிலவு இங்கும் காய்ந்திருக்கலாம்.
என்னைச் சுட்ட சூரியன் இங்கும் உதித்திருக்கலாம்.
என்னை நனைத்த மழை இங்கும் பொழிந்திருக்கலாம் - ஆனால்
நான் பார்த்த பறவை இதுவல்லவே!

Wednesday, July 13, 2005

தொடர்கின்றார் தீபா மேத்தா



தீபா மேத்தாவின் திரைப்படமான “Water”, 2000ம் ஆண்டு பெப்ரவரி மாதம் இந்தியாவில் "வாரநாசி" எனும் இடத்தில் படப்பிடிப்புத் தொடங்குவற்கான ஆயத்தங்களில் இருந்தது. 30களில் கணவனை இழந்து “விதவை” என்று அழைக்கப்பட்ட பெண்கள், நிர்பந்தத்தின் பெயரில் “விதவைகள் ஆச்சிரமம்” களுக்கு அனுபப்பட்டிருக்கின்றார்கள். அது இன்றும் தொடர்கின்றது. அன்றும், இன்றுமாக சம்பவங்களைக் கோர்த்து "Water" திரைக்கதையை அமைத்திருக்கின்றார் தீபா மேத்தா. "வாரநாசி" எனும் இடத்தில் இன்றும், "விதவை ஆச்சிரமங்கள்" இயங்கி வருவதால் படப்பிடிப்பை அங்கேயே வைக்க தீர்மானித்து படக்குழுவின் வாரநாசி சென்றபோது, அங்கே பல கண்டன ஊர்வலங்களும், மிரட்டல்களும் மதவாதிகளாலும், அரசியல்வாதிகளாலும் நிகழ்த்தப்பட்டு "Water" படப்பிடிப்புத் தொடங்காமலேயே ஊற்றபட்டு விட்டது.


A mob destroys the set of Deepa Mehta's Water


தீபா மேத்தா மிரட்டலுக்குள்ளாவது இது முதல்தடவையல்ல. அவரின் திரைப்படமான "Fire" 1996இல் வெளியான திரைப்படம். இத்திரைப்படம், கணவரால் பாதிக்கப்பட்ட இரு பெண்களுக்குள் ஏற்படும் காதல் உறவு பற்றிப் பேசுவது. Fire திரைப்படம் படமாக்கபட்ட போதும் மிகப் பெரிய அளவில் கண்ட ஊர்வலங்கள் நாடாத்தப்பட்டு திரைப்பட முதல் காட்சியிலேயே திரையரங்கு தீ மூட்டி திரைப்படச் சுருள் அழிக்கப்பட்டது. தொடர்ந்து 1998இல் "Earth" திரைப்படம் முஸ்லீம், இந்துக்களுக்கான பிரச்சனையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. Fire, Earth போன்ற திரைப்படங்கள் ஆபாசக்காட்சிகளை உள்ளடக்கியுள்ளதா பல இந்திய விமர்சகர்கள் கண்டனம் தெரிவித்திருந்தார்கள்.


Torched by protesters, a piece
of the Water set burns


தற்போது "Water". இந்தியாவின் இன்றும் இருக்கும் பெண்ணடிமைத் தனத்தை, இந்தியாவில் பிறந்து அதன் கலாச்சாரம் பண்பாடோடு ஒன்றி வளர்ந்து, டெல்லி பல்கலைக்கழகத்தில் உளவியல் பட்டம் பெற்ற பெண்ணான தீபா மேத்தாவைத் தவிர யாரால் முழுமையாகத் தரமுடியும்?

தீபா மேத்தாவின் தந்தை, ஒரு திரைப்பட விநியோகிதரும், திரையரங்கு உரிமையாளரும். இதனால் தீபா மேத்தா சிறுவயதிலிருந்தே பல திரைப்படங்களைப் பார்த்து வளர்ந்தவர். இருப்பினும், அவருக்கு திரைப்படத்துறையில் அதிகம் ஈடுபாடு இருக்கவில்லை. படிப்பை முடித்து வேலைக்கு அமர்ந்தவர் ஒரு விவரணத் திரைப்படத்தில் பகுதி நேர உதவியாளராக வேலை செய்யும் சந்தர்ப்பம் வாய்த்த போது, தனக்குள் இருக்கும் திரைப்பட ஆர்வத்தைப் புரிந்து கொண்டதாக தீபா மேத்தா கூறுகின்றார். 1973ல் டெல்லி பல்கலைக்கழகத்தில் ஆய்வை மேற்கொண்டிருந்த கனேடிய திரைப்பட இயக்குனரான Paul Saltzman காதலித்துத் திருமணம் செய்து கனடாவிற்கு இடம்பெயர்ந்தவர்.

திரைப்படத்துறை பற்றிய நேரடியான அறிவு இல்லாதபோதும், தீபா மேத்தா ஆரம்பகாலங்களில் பல விவரணப்படங்களைத் தயாரித்திருக்கின்றார். தொடர்ந்து குழந்தைகளுக்கான திரைப்படப் பிரதியை எழுதத் தொடங்கியவர், 1991இல் தனது முதல் முழுநீளத் திரைப்படம் “Sam & Me” ஐ தயாரித்து, இயக்கினார். இத்திரைப்படம் பலத்த வரவேற்பைப் பெற்று, அவருக்கு முதல் விருதை(Honorable Mention) பெற்றுத்தந்திருக்கின்றது.

2000ம் ஆண்டு நிறுத்தப்பட்ட Water திரைப்படம் நான்கு வருடங்களின் பின்னர், மீண்டும் இலங்கையில் படப்பிடிப்பு செய்யப்பட்டு முழுமை அடைந்திருக்கின்றது. மாற்றங்களாக, ஷாபனா ஆஸ்மிக்குப் பதிலாக சீமா பிஸ்வாவும் (பாண்டிட் குயின் நாயகி), ஆக்ஷேக்குப் பதிலாக ஜோன் ஏப்ரஹாமும், நந்திதாவிற்குப் பதிலாக லீசா ரேயும் (பொலிவூட் கொலிவூட் நாயகி) நடித்திருக்கின்றார்கள். 2005ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் இடம்பெற இருக்கும் ரொறொண்டோ சர்வதேச திரைப்படவிழாவின் தொடக்கத் திரைப்படமாக செப்டெம்பர் 8ம் திகதி "Gala" திரையரங்கில் “Water” திரையிடப்பட இருக்கின்றது. Water இந்தியாவில் திரையிடப்படுமா? என்று தீபா மேத்தாவை நிருபர்கள் கேட்ட போது, திரையிடப்பட வேண்டும் என்பதுதான் என் விருப்பம். எல்லாம் விநியோகர்களையும், திரையரங்கு உரிமையாளர்களையும் பொறுத்தது என்கின்றார்.

பார்த்தவர்கள் தீபாமேத்தாவின் மிகச் சிறந்த திரைப்படமாக "Water"க் கூறினாலும் தனது மூன்று திரைப்படங்களையும் சமனாகவே நேசிக்கின்றேன் என்கின்றார் தீபா மேத்தா. இருந்தும் Water திரைப்படம் தந்த அளவிற்கு பிரச்சனைகளையும், நோவையும் மற்றைய எனது திரைப்படங்கள் தராததால் இத்திரைப்படம் எனது அபிமான திரைப்படமாவதில் வியப்பில்லை என்றும் கூறுகின்றார்.

திரைப்படத்தைப் பார்த்து விட்டு விமர்சனத்தை வைக்கின்றேன்.

Tuesday, July 12, 2005

ஒரு நீண்ட நேர இறப்பு.



மிகமிக நீண்ட தூரத்தில் முகில்களில் சாயையால் அவள் ஒருகால் மடித்து பிருஷ்டம் சரியப்படுத்திருந்தாள். தொப்புள்கொடியின் விடுபடலின் அவஸ்தையாய் இழுபட்டு மிதந்துகொண்டிருந்த அவன் கைகள், கிளைகளாய் நீண்டு அவள் இடுப்பில் மெல்ல நகர்ந்து காயங்களின்றி இறுக்கி, இழுத்தது. முழங்கால் மடித்து குதியினால் அவன் தொடையில் ஓங்கி உதைந்தாள் அவள். அவன் பிடி இறுக நோக்கண்டாள். “போ விடு” சிணுங்கலோடு விம்மினாள். எறிந்த பந்தின் விசையாய் அவள் முதுகோடு ஒட்டி காதோர மூச்சு தலைமயிர் கலைக்க “ஏனம்மா” என்றான். காதோர அவன் சுடு மூச்சு உடல் சிலிக்க அவள் சின்னக்குரலெடுத்து அழுதாள்.
அலையும் மெழுகுதிரியின் சுவாலையில், மென்சிவப்பாய் உருத்திரிய கைவிரல்கள் கொண்டு அவள் முகம் அலசினான் அவன். கோடை வெய்யிலின் வியர்வைப் பீரிடல்களுடன் கலந்த அவள் கண்ணீர் சிதறல்கள், தலைமயிரை ஈரப்படுத்தி முகத்தில் அப்பி பரவிக்கிடந்தது. மென்சிவப்பு முகத்தில் கறுப்புக் கோடுகளாய் நீளும் தலைமயிரை, மெல்ல ஊதி ஊதி ஒவ்வொன்றாக எடுத்துப் பின்னால் போட்டு அவள் கையில் கிடந்த துணி ரப்பரை மெதுவாகக் கழற்றி தலைமயிரைக் கோதிச் சேர்த்துப் போட்டான்.
காற்றின் கணம் சாளரங்களில் நிழலாய் அசையும் கிளைகளால் அடையாளம் காட்டியது. மெல்ல அவள் முகம் திருப்பி இதழில் இதழ் பதித்து விலகிக் கொண்டான்.
சீரான சுவாசத்துடன் கண்இமைகள் மூடி ஓய்ந்து கிடந்தாள் அவள். வியர்வையும், சம்பூவும், சமையலும் கலந்து அவள் தலைமயிரிலிருந்து எழுந்த மணம் அவன் சுவாசத்துடன் கலந்தது சென்றது. அவள் நெஞ்சிலிருந்து வயிறு வரை ஆதரவாக வருடிக்கொடுத்தான் அவன். வியர்வையில் ஊறிக் கசிந்து கலந்து விரலோடு வந்தது ஊத்தை உருண்டை. உடல் அசைக்காது மெல்ல மெல்ல உருட்டி உருட்டித் தூக்கிப் போட்டான் அதை. அவன் ஒற்றை கையை அணையாக வைத்து அவள் நித்திரையாகிப் போனாள்.
அவன் முகடு பார்த்தான். சுத்த வெள்ளையில் பரந்து கிடந்தது அது. ஒற்றைப் புள்ளியில் வரியாகத் தொடங்கிப் பெரிதாய் ஒரே சீராக வளைந்து வளைந்து வட்டம் பெரிதாகி வரி எங்கோ மறைந்தது. மறைந்த புள்ளியிலிருந்து மீண்டும் பார்வையை சிறிதான வட்டத்தில் பதித்து சுத்திச் சுத்தி வந்து புள்ளியில முடித்தான். மேடு பள்ளமற்ற முகட்டில் ஒற்றை நிறத்தில் வளையும் வட்டத்தைப் பிரமிப்புடன் சிறிது நேரம்பார்த்தான். பின்னர் பார்வை யன்னலோரம் சென்றது. பருத்த மரத்தின் கிளையொன்று யன்னலை உரசித் தெரிந்தது. கறுப்பு, கடும்பச்சை, பச்சை, இளம்பச்சை, கடும்மஞ்சள், மஞ்கள், இளமஞ்சள் எனக் கலவையாய் சின்ன இலைகள் கலந்து தெரிந்தன. ஒற்றைக் காம்பில் சின்னநிகம் போன்ற இலைகளை மனதுக்குள் எண்ணினான். வியந்தான். பருத்த மரத்தின் முழுவதுமான இலைகளை எண்ண மனம் அடித்துக் கொண்டது. களைத்து பார்வையை திசை திருப்பினான். சிறிது அசைந்து விட்டு மீண்டும் சீராக சுவாசித்த அவள் வியர்வை அவன் உடலில் ஒட்டி வழிந்தது.
அவன் பார்வை அறையை வேவு பார்த்தது. கடும் பச்சையில் சுவர்கள் வினோதமாய் கிடந்தன. வெளிர் நிறங்களே அறைக்குப் பொருத்தமாவை என்று எண்ணிக் கொண்டான். இருப்பினும் கடும்பச்சை அழகாக இருப்பது போலும் பட்டது. சுவரில் தொங்கும் ஆபிரிக்க ஓவியங்கள் கறுப்பிலும், மஞ்சளிலும் சுவருக்குப் பொருத்தமாய் தீப்பிளம்புபோல் காட்சியளித்தன. மேசையில் கிடந்த பூச்சாடியின் பூக்களை இனம்காண முனைந்து பின் பார்வையை நாலாபக்கமும் அலைய விட்டான். கை விறைத்தது. கால்களைப் பிரித்துப் போட்டான். அவள் பிருஷ்டம் குளிர்ந்துபோய்க் கிடந்தது. வெள்ளை படர்ந்து அவள் முழங்கைகள் பொருக்குக் கண்டிருந்தன. முதுகில் சின்னச் சின்னக் கறுப்புப் புள்ளிகளும், சிறிய கொழுப்புப் பருக்களும் அங்கொன்றும் இங்கொன்றுமாய்க் கிடந்தன. தனது நிகம் கொண்டு மெல்ல பருக்களை நெரித்தான். அவள் உடல் சிறிது உதறி அசைந்து உடல் திருப்பி, அவன் கழுத்தோடு முகம் வைத்துப் படுத்துக் கொண்டாள். மச்ச வாசத்தோடு, வெண்காய மணமும் கலந்த அவள் மூச்சு அவன் முகத்தில் பரவியது. அவன் தள்ளி அவள் முகத்தைப் பார்த்தான். கண்ணீர் கன்னத்தில் கறையாகிக் கிடந்தது. புருவங்கள் அலங்கோலமாய்க் கிடந்தன. மெல்லத் தன் நிகம் கொண்டு அதை ஒழுங்கு படுத்தினான். கண் இமைகள் ஈரலிப்போடு மினுமினுத்தன. சொண்டின் மேற்பகுதியில் பூனை மயிர்கள் சுருண்டு கிடந்தன. “பெண்ணுக்குள் ஒளிந்திருக்கும் ஆண்மை” தன் மீசையை ஒருமுறை வருடி விட்டுக் கொண்டான்.
அவள் உடல் முறித்தாள். கண்கள் சொடுக்கி அவன் முகம் பார்த்தாள். ஒரு கொட்டாவி விட்டாள். சின்னதாகப் புன்னகைத்தாள். பின் எக்கி அவன் இதழ் முத்தி மீண்டும் கழுத்துக்குள் முகம் புதைத்தாள். கலவையாய் வௌவேறு வாசனைகள் அவளிடமிருந்து எழுந்து அடங்கின. அவள் கால்களால் அவனை வளைத்துக் கொண்டாள். அவன் கைகளை உயர்த்திப் போட்டுக் கொண்டு அசையாது கிடந்தான். வியர்வைகள் வற்றிப் போய் விட்டிருந்தன. கொட்டாவி விட்டான். கண்கள் மூட அவனிடமிருந்தும் சீராக சுவாசம் வெளிப்பட்டது. ஒரு சீரான லயத்துடன் இருவரின் மூச்சு ஒலியும் அந்த அறையை ஆட்கொண்டது.

அனல் காற்றின் வீரியம் குறையவில்லை. குழந்தைகளின் கும்மாள ஒலிகள் தூரத்தில் கேட்டன. வாகனங்கள் புழுதியைக் கிளப்பிச் சென்றன. இடம்மாறிப் பறக்கும் பறவைகளின் குரல்கள், காற்றில் கலக்கும் பாடல் வரிகள், நடைபாதைப் பேச்சுக்குரல்கள் இயங்கும் நகரத்தின் அடையாளமாய் வடிந்து சென்றன. சுவரோரக் கடிகாரம் சத்தமிடமறந்து அசைந்துகொண்டிருந்தது.

அவள் இருமினாள். தொடர்ந்து இருமினாள். கால்களை எடுத்துக் கொண்டாள். கட்டிலை அசைக்காது எழுந்து அருகிலிருந்த சாடியில் இருந்து தண்ணீர் எடுத்துக் குடித்தாள். துவாயால் கழுத்து வியர்வையைத் துடைத்தாள். அவன் நெற்றியை ஒருமுறை ஒற்றி விட்டாள். அவனிடமிருந்து வினோதமான ஒலியில் குறட்டை வெளிவந்துகொண்டிருந்தது. சீராகக் கத்தரிக்கப்படாத மீசையில் சிறிய நரை ஓடியது. சொண்டுகள் வறண்டு போய்க் கிடந்தன. கன்னத்தில் நீளமாய் ஒரு காயம் காய்ந்து தெரிந்தது. கண்களின் அடியில் கருவளையம். கன்னத்து மயிரிலும் சிறிய நரை. அவள் குனிந்து விரல் நுனியால் நரை மயிரில் ஒன்றை இடுக்கி மெல்ல இழுத்தாள். அவன் அசைந்தான். அவள் தனக்குள் சிரித்து மெல்லிய குரலில் பாட்டுப் பாடிய படியே சுவரை நோட்டமிட்டாள். பார்வையை சுற்றிச் சுற்றி ஓட விட்டாள். குப்புறப் படுத்து குமுதம் புரட்டினாள். அவன் தலைமயிரை விரல்கள் கொண்டு கலைத்து விட்டாள்.

அவன் மூடி மூடித் இமைகள் திறந்தான். புன்னகைத்தான். அவனுக்கு மூத்திரம் முட்டியது எழுந்து வோஷ்ரூம் சென்றான். குளிக்கும் சத்தம் கேட்டது. அவள் கட்டிலில் புரண்ட படியே பாடல் ஒன்றை ஹம் பண்ணினாள். தண்ணீர் சத்தம் நிற்க அவன் மீண்டும் வந்தான். அவள் எழுந்து கொண்டாள். வோஷ் ரூம் போனாள். குளித்தாள். வெளியே வந்தாள். இருவரும் மௌனமாகத் தொலைக்காட்சி பார்த்தார்கள். அவன் வயிறு புரண்டு குளறியது. “சாப்பிடுவமா?” கேட்டான். அவள் தலையசைத்தாள். பார்சலை உடைக்க குளிர்ந்து போய்க் கிடந்தது சாப்பாடு. கையால் அள்ளி அள்ளிச் சாப்பிட்டார்கள். தண்ணீர் குடித்தார்கள். யாரோ ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தொலைக்காட்சி செய்தி சொல்லிச் சென்றது. அவன் மேசையில் கிடந்த பழங்களை எடுத்து அவளுக்கு நீட்டினான். அவள் வாயுக்குள் கிடந்த சுவிங்கத்தை எடுத்து விரல் நுனியில் பிடித்த படியே ஒரு பழத்தை எடுத்துச் சாப்பிட்டு விட்டு மீண்டும் சுவிங்கத்தை வாயுக்குள் திணித்துக் கொண்டாள். அவன் பழங்களைச் சாப்பிட்ட படியே தொலைக்காட்சி செய்தியில் மூழ்கிப் போனான். அவள் குமுதத்தையும் தொலைக்காட்சியையும் மாறி மாறிப் பார்த்து நேரத்தைப் போக்காட்டினாள். அவன் தொலைக்காட்சியை அணைத்து விட்டு “போவமா?” என்றான். அவள் தலையசைத்தாள். கைப்பையினுள் கார் திறப்பைத் தேடினாள்.
அவன் அருகில் வந்து அவள் இடுப்பைக் கைகளால் வளைத்து “ஏன் அழுதனீ” என்றான். அவள் சொண்டுகள் நடுங்க, கண்கள் பனிக்க மீண்டும் விம்மிய படியே அவன் தோள் சாய்ந்தாள். முகில்களின் நடுவில் பறப்பதாய் ஒரு கனவு அவனுக்குள். நீலமாய், வெள்ளையாய், கறுப்பாய் முகில்களின் நிறங்கள். சாளரத்தைக் கீறிக் கீறி சத்தம் எழுப்பியபடி இருந்தது பருத்த மரத்தின் ஒரு கிளை. காற்று வெப்பம் தணிந்த குளிராய் வீசியது. அவளை இறுக்கினான். மீண்டும் இறுக்கினான். பலம் கொண்ட மட்டும் இறுக்கினான். அவளுக்கு நோகவில்லை. அவள் எப்போதோ இறந்து விட்டிருந்தாள்.

Friday, July 08, 2005

நண்பனின் கை வண்ணத்தில்

விடுமுறைக்குச் சென்றிருந்தபோது எடுத்த சில புகைப்படங்களை இங்கே இணைத்திருக்கின்றேன்.


நெருப்பு விளையாட்டு



இறந்து போன இதயத்துடன் ஒற்றை மரம்


காத்திருப்பு


இரவும் பகலும்


பந்தாட்டம்


அட சமையல் நடக்குது


ஓ முட்டை அவியுது.


கூட்டுக்குள் குஞ்சுகள்



பாட்டுக் கச்சேரி


பிடிபட்ட நத்தைகள்


புழுவாய்ப் பிறக்கினும்


இரவு நேர நெருப்பு (ரொமாண்டிக்காக)

Thursday, July 07, 2005

"ம்"

ஒரு சின்ன விடுமுறைக்குப் பின்னர் மீண்டும் வலைப்பதிவில் வலம் வந்து, நுனிப்புல் மேய்ந்து விட்டு, மீண்டும் உள்ளே நுழைகின்றேன். உருப்படியா ஏதாவது எழுதிக் கனகாலம் ஆகுது. இப்ப எல்லாம் உருப்படி எழுதுறதுக்கே ஒண்டும் இல்லாத மாதிரியும் படுகுது.

காட்டுக்குள்ள கழிச்ச அந்த நாட்கள், மீண்டும் கட்டிடக் காட்டுக்குள் நுழைந்து மின்கணனி, வேலை என்று இயந்திரமாக மறுக்கிறது. உடுப்பில அப்பியிருக்கிற சேறு, இழுக்காத தலைமயிர், வெந்ததும் வேகாததுமான சாப்பாடு, மரங்களுக்கு அடியில், இயற்கையின் எச்சங்களுக்கு மத்தியில் தூங்கி எழுவது, தொழில்நுட்பங்களை மறந்து பூச்சிகளையும், நெருப்பையும், தண்ணியையும், காட்டையும் ஓடியோடி ரசிக்கும் குழந்தைகள். இருந்ததை அழித்து கட்டிடக்காடாக்கி விட்டு இப்போது பணம் கொடுத்து இயற்கையை ரசிக்கின்றோம், ம்..

ரொறொன்டோவிலிருந்து கிட்டத்தட்ட 150 மைல் தொலைவில் மூன்றரை மணித்தியாலங்கள் கார் ஓட்டத்தில் Port Elgin எனும் இடத்தில் New Fairway Family Campground , Lake Huron இற்கு அருகாமையில் இருக்கின்றது. பல குடும்பங்கள் Trailer இல் கழித்தார்கள் நாங்கள் Tent போட்டு இரவைக் கழித்தோம். அனேகமாக எல்லோருமே வெள்ளை இனத்தைச் சேர்ந்தவர்கள்தாம். ஒரு இந்தியக்குடும்பத்தைக் கண்டதாக ஞாபகம்.

அங்கு என்ன செய்தீர்கள் என்று கேட்டீர்களானால் லேக்கில் குளித்தல் (தண்ணீர் பேக்குளிர்) குழந்தைகள் தண்ணீரை அதிகம் அனுபவித்தார்கள் என்று கூறலாம். பெரியவர்கள் மற்றத் தண்ணீரைத்தான் அதிகம் அனுபவித்தார்கள். நன்றாகச் சாப்பிட்டோம். இரவு நேரங்களில் நெருப்பை எரித்து விட்டு சுத்தியிருந்து பாட்டுச்சமா வைத்தோம். ரொறொண்டோவில் சத்தம் போட்டுக் கதைக்க முடியாத அரசியல்கள் விவகாரங்கள் எல்லாம் பலத்த சத்தத்துடன் அலசப்பட்டது. மனஉளைச்சல்கள், தொல்லைகள் எல்லாவற்றையும் ஒரு மூலையில் தூக்கிப் போட்டு விட்டுக் கழித்த நாட்கள் இவை. உண்மையாகப் பார்த்தால் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. போனதே ஒன்றும் செய்யாமல் சில நாட்களைக் கழிகத்தானே. எனவே அதனை நிறைவாகச் செய்தோம். எனது நண்பர் ஒருவர் (வலைப்பதிவின் வாசகர்-ஒன்று இரண்டு கொமெண்ட் மட்டும் போடுவதற்கு நேரம் கொண்டவர்) டிஜிடல் கமெரா மூலம் பல கிளிக்குகள் செய்தார் அவர் ஏதாவது படத்தை எனக்கு அனுப்பி வைத்தால்தான் உண்டு.

இந்தமாதக்கடைசியில் வரும் Canadian Civic holiday ற்கு Algonquin lake site இற்கு மீண்டும் ஒருமுறை மனஉளைச்சல்களைக் கழற்றி வைக்கச் செல்ல உள்ளோம். இதுதான் எனக்கு மிகமிகப் பிடித்த இடம். மிக ஆழமான வாவியின் நடுவே இருக்கும் சின்னச்சின்னத் தீவுகளின் நடுவில் நாம் இருப்போம். எம்மைத் தவிர எவரையும் அங்கே காணமுடியாது. அவசரத்திற்கு வெளியே போக வேண்டும் என்றால்கூட அரைமணித்தியாலங்கள் மோட்டர் போட்டில் ஓடித்தான் கரை செல்ல முடியும். மான், கரடி, பாம்பு (நச்சு அற்ற) போன்றவை இருப்பதாகவும் அவற்றிற்குத் தொந்தரவு கொடுக்காத வகையில் மனித மிருகங்கள் நடந்து கொள்ள வேண்டும் என்பதும் அரசாங்கத்தின் வேண்டுகோள்.