Tuesday, October 25, 2005

பெண்கள் சந்திப்பும் விமர்சனங்களும்

பெண்கள் சந்திப்பு என்பது மாற்றுக் கருத்துக்களைத் தாங்கி வரும் பெண்களின் கருத்துப் பரிமாற்றம் என்பதுதான் என் கருத்தாக இருந்தது. ஆனால் லண்டனில் இடம் பெற்ற பெண்கள் சந்திப்பில் படிக்கப்பட்ட கட்டுரைக்கள் அனைத்தும் அப்படியாக இருக்கவில்லை. அத்தோடு நவஜோதி எனும் ஒரு பெண்ணின் கவிதைத் தொகுப்பும் வெளியிட்டார்கள். அந்தக் கவிதைத் தொகுப்பை விமர்சித்த பெண்ணின் விமர்சனம் சிறுபிள்ளைத் தனமாக அமைந்திருந்தது. ஒரு இந்திய பெண் மருத்துவரின் பேச்சும் இடம்பெற்றது. அதுவும் மிகவும் சாதாரணமான ஒரு பேச்சாகத்தான் அமைந்திருந்தது. மருத்துவக் குறிப்பம் குழந்தை வளர்ப்பும் பற்றி அறிந்து கொள்வதற்காக நான் கனடாவிலிருந்து லண்டனில் இடம்பெறும் பெண்கள் சந்திப்பிற்குச் செல்லவில்லை. இப்படியான நிகழ்வுகளை அனுமதித்தவர் ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம்தான். இருந்தும் அதிகமான நிகழ்வுகள் மாற்றுக்கருத்துக்களைக் கொண்ட முற்போக்கான விடையங்களைத் தொட்டுச் சென்றது சந்தோஷமாகவே இருந்தது.

தேனியில் இடம்பெற்ற கட்டுரை வெறும் காழ்ப்புணர்வால் பெண்கள் சந்திப்பிற்கு வந்து சென்ற ஒருவரது பார்வையாகத்தான் எனக்குப் படுகின்றது. அவர் எதிர்பார்க்கும் வெறும் இந்தியமாதர் சங்கம் போன்ற ஒரு சந்திப்பாக இந்தப்பெண்கள் சந்திப்பு அமையாமல் மேலே பல படிகள் சென்று பெண்கள் தயக்கமின்றி சகலதையும் பேசியது அவருக்கு அருவருப்பாகவும் சங்கடமாகவும் இருக்கும் பட்சத்தில் ஒரு மாதர்சங்கத்தை அமைத்து நேரம் போகாமல் ஈயோட்டிக்கொண்டிருக்கும் பெண்களை இணைத்து அழகுக் குறிப்பும் சமையல் கலையும் கலாச்சாரம் காப்பது பற்றியும் கலந்துரையாடலாம்

பெண்கள் சந்திப்பு இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளை இரண்டாம் நாள் ஒரு பெண் உள்ளே நுழைத்து இடம்பெற்றுக்கொண்டிருந்த பேச்சை இடஞ்சல் செய்யும் வகையில் ஆண்களை ஏன் அனுமதிக்கின்றீர்கள் இல்லை என்று காரசாரமாக வாதாடினார். அவருக்கான பதில் வழங்கப்பட்ட போதும் திருப்திப்படாமல் வெளியில் செல்வதும் திரும்ப வந்து மீண்டும் பேச்சை ஆரம்பிப்பதுமாக இருந்தார். அவரின் பேச்சை நிராகரித்து விட்டு நாங்கள் எமது நிகழ்வைத் தொடர்வோம் என்று எல்லோரும் கருத்துக் கூறி நிகழ்வைத் தொடர்ந்தார்கள். அன்று மாலை இளையஅப்துல்லாவின் துப்பாக்கிகளின் காலம் சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டு விழாவிற்குப் பெண்கள் சந்திப்பில் கலந்து கொண்ட சில பெண்கள் சென்றிருந்தோம். அங்கு வந்திருந்த ஒரு ஆண் பெண்கள் சந்திப்பில் கலந்து கொண்ட ஒரு பெண்ணை பேச விடாமல் துரத்திவிட்டீர்களாம் என்று கேட்டார் சம்பவங்கள் எப்படித் திரிபு படுத்தப்படுகின்றன என்பதை நான் நேராகக் கண்டு திகைத்தேன். எடுத்து சொன்னால் அந்த ஆண் கேட்பதாக இல்லை.

சந்திப்பின் போது விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த புத்தகங்கள் மத்தியில் திடீரென்று இரண்டு அனாமதேய அறிக்கைகள் பெண்கள் சந்திப்பிற்கு எதிராக வைக்கப்பட்டிருந்தன. அது நிச்சயமாகப் பெண்கள் சந்திப்பில் கலந்து கொண்ட ஒரு பெண்ணினால்தான் வைக்கப்பட்டிருக்க வேண்டும். சந்திப்பில் கலந்து கொண்டு தேனீர் உணவருந்தி சந்திப்பை நடாத்துபவர்களைத் தூற்றி எப்படி இவ்வாறாக நாகரீகமற்ற முறையில் நடக்க முடிகின்றது புரியவில்லை.

ஒரு பெண் கேட்டார் இங்கே கூடிக்கதைக்கின்றீர்கள் புத்தகம் வெளியிடுகின்றீர்கள். இது உங்களுடன் முடிந்து விடப்போகின்றது. மற்றைய பெண்களுக்க இவை போய்ச் சேர்வதற்கான முயற்சிகள் நீங்கள் எடுப்பதில்லை என்று. சிறு கூட்டமாக ஆரம்பித்த பெண்கள் சந்திப்பில் உலகெங்கிலும் இருந்து பெண்கள் கலந்து கொள்கின்றார்கள். பெண்கள் சந்திப்பு மலரில் பல புதிய பெண்கள் எழுதுகின்றார்கள். இவை எப்படிச் சாத்தியமாயிற்று. வீடு வீடாகச் சென்று பெண்கள் சந்திப்பிற்க வாருங்கள் என்று கேட்பதற்கு பெண்கள் சந்திப்பில் சமையல் குறிப்புக் கொடுக்கப்படவில்லை. தேடல் உள்ள பெண்கள் பெண்கள் சந்திப்புபற்றி அறிந்து கொண்டு கலந்து கொள்வார்கள். மலர் பற்றித் தெரிந்து கொண்டு யாரிடமாவது பெற்றுப் படிப்பார்கள். இது தேடலும் ஆர்வமும் உள்ள பெண்களுக்கான தளம் மட்டுமே. பெண்கள் சந்திப்பில் கலந்து கொள்ளும் பெண்களுக்கான வேலைத் திட்டம் இதுவல்லை.

அடுத்து பெண்கள் சந்திப்பு மலர் தரமற்றதாக இருக்கின்றது என்றும். தணிக்கை முறையில் தரமான படைப்புக்களை மட்டும் பிரசுரிக்க வேண்டும் என்ற அறிக்கையும் விடப்பட்டது. எழுதும் பெண்களின் தொகை மிக மிகக் குறைவாக உள்ளது. தற்போது பல புதிய பெண்கள் எழுத ஆரம்பித்துள்ளார்கள். எழுதும் ஆர்வம் வரும் போது, அவர்கள் வாசிப்பு ஆர்வமும் அதிகரிக்கும். இவர்களை ஊக்குவிக்கு முகமாக இவர்களது படைப்புக்கள் பிரசுரிக்கப்படல் வேண்டும் என்ற பலர் கேட்டுக்கொண்டதன் பேரில் எழுத்தில் ஆர்வம் கொண்டு அரசியல் சார்பற்ற எந்தப் படைப்பும் பிரசுரிக்கப்படல் வேண்டும் என்று தீர்மானம் எடுக்கப்பட்டது.

அவதூறான விமர்சனங்களை அசட்டை செய்து விட்டுப் பெண்கள் சந்திப்பு இன்னும் பல ஆண்டுகள் ஆரோக்கியமாகத் தொடரும் என்பது இயங்கிக் கொண்டிருக்கும் பெண்களைப் பார்த்தபோது நான் புரிந்து கொண்டது.

லண்டனில் ஒரு மாலைப் பொழுது

லண்டனில் இடம் பெற்ற 24வது பெண்கள் சந்திப்பு நிகழ்வில் கலந்து கொள்ளும் சந்தர்ப்பம் இந்த வருடம் எனக்குக் கிடைத்தது. பெண்கள் சந்திப்பு முடிந்த பின்னர் மீதி நாட்களில் பல இலக்கியவாதிகளுடன் கழிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. என்னை ஒரு குறும்பட இயக்குனர் என்ற வகையில் லண்டனில் இயங்கிக்கொண்டிருக்கும் ஈழவர கலைப்பிரிவின் அங்கத்தவர்களான பரிஸ்டர் ஜோசப் விமல் சொக்கநாதன் போன்றோர் ஒரு இரவு விருந்து உபசாரத்திற்கு அழைத்திருந்தார்கள். மாலை ஏழு மணியளவில் ஓவியர் கிருஷ்ணராஜா பத்மநாபஜயர் சகிதம் இலங்கையர் ஒருவரின் உணவகத்தில் சந்திப்பதாக ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்தன.

இந்த விருந்துபசாரத்தில் பரிஸ்டர் ஜோசப், விமல் சொக்கநாதன், கிருஷ்ணராஜா, பத்மநாபஜயர், பிபிசி ஆனந்தி, இளையஅப்துல்ல, போன்றோரும் இன்னும் சில லண்டன் இலக்கியவாதிகளும் கலந்து கொண்டார்கள். குறும்படங்கள் பற்றிய உரையாடல் ஒன்றை உணவருந்தியபடியே நிகழத்;துவோம் என்று ஜோசப் அவர்கள் முன்பே எனக்குக் கூறியிருந்தார்கள். எனக்கும் லண்டன் ஜரோப்பிய நாடுகளில் குறும்படங்களின் நிலை எப்படி இருக்கின்றது என்று அறியும் ஆவல் இருந்தது.

இது ஒரு நிகழ்வாக இல்லாமல் நண்பர்களுடனான குறும்படம் பற்றிய ஒரு உரையாடலாக அமைந்திருக்கும் என்று எண்ணியிருந்தேன், குளிர்பானங்கள் அருந்திய வண்ணம் உரையாடல் ஆரம்பமானது. முதலில் எல்லோரும் தம்மை அறிமுகப்படுத்திய பின்னர் கலந்துரையாட முனைகையில் பிபிசி ஆனந்தி அவர்கள் பெண்கள் சந்திப்பு பற்றியும் அதன் அனுபங்கள் பற்றியும் என்னிடம் கேட்டார். ஜரோப்பாவில் இருந்து பல பெண் இலக்கிய ஆவலர்களும் இந்தியாவிலிருந்து எழுத்தாளர் திலகபாமா இலங்கையில் இருந்து ஓவியை வாசுகி தினக்குரல் நிருபர் தேவகௌரி போன்றோரும் கலந்து கொண்டிருந்தார்கள். இப்படியாக ஒரு கூரையில் கீழ் பல் துறைகளிலும் மிளிரும் பெண்களைச் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது மிகவும் சந்தோஷமாக இருக்கின்றது என்றேன். 24வது பெண்கள் சந்திப்பிற்குப் பொறுப்பாக இருந்த எழுத்தாளர் ராஜேஸ்வரி பாலசுப்பரமணியம் அவர்கள் தன்னையும் அழைத்திருந்ததாகவும் தனக்கு இந்தப் பெண்கள் சந்திப்பில் உடன்பாடு இல்லாததால் கலந்து கொள்ளவில்லை என்று ஆனந்தி கூறினார்.

கனடாவிலிருந்து பெண்கள் சந்திப்பிற்கு விருந்தினராகக் கலந்து கொண்ட நான் குறும்படங்கள் பற்றிய ஒரு உரையாடல் நிகழ்வில் பல ஆண்கள் கலந்து கொண்டிருக்கும் ஒரு விருந்துபசாரத்தில் அதிகம் பெண்கள் சந்திப்புப் பற்றி உரையாட விரும்பாததால் மௌனமாக இருந்தேன். ஆனந்தி தொடர்ந்தார் பெண்கள் சந்திப்பில் கலந்து கொள்ளும் பெண்கள் விடுதலைப்புலிக்கு எதிரானவர்கள் என்றும் அவர்கள் விடுதலைப்புலிகளைத் தாக்கி பெண்கள் சந்திப்பில் உரையாடுகின்றார்கள் என்றும் அதனால்தான் தான் கலந்து கொள்ள விரும்பவில்லை என்றும் கூறினார்.

ஆனந்தியின் இந்த அறிக்கையின் பின்னர் பெண்கள் சந்திப்பில் கலந்து கொண்டிருந்த நான் மௌனமாக இருப்பது தகாது என்றெண்ணி சில கருத்துக்களைக் கூற வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டேன்.
பெண்கள் சந்திப்பில் முக்கியமாக உலகெங்கும் வாழும் தமிழ்ப் பெண்களின் நிலைபற்றியே பேசப்பட்டது. இந்தியப் பெண்களின் பாதிப்பு ஒருமாதிரியாகவும், போர் சு10ழலில் வாழ்ந்து கொண்டிருக்கும் இலங்கைப் பெண்களின் நிலமை ஒருமாதிரியானதாகவும், புலம்பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்களின் நிலமை இவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாகவும் காணப்படுகின்றது. இப்படியாக உலகெங்கும் பரவிக்கிடக்கும் பெண்களின் வாழ்க்கைமுறை, அவர்களுக்கான பாதிப்புக்கள் பற்றிய ஒரு உரையாடலாகத்தான் பெண்கள் சந்திப்பு அமைந்திருந்தது என்றும், தெற்காசியப் பெண்களுக்காய் வேலை செய்யும் ஓவியை வாசுகி தமிழ் பெண்கள் என்று மட்டுமல்லாமல் தெற்காசியப் பெண்களின் நிலை பற்றி விளக்கமாகக் கூறினார் என்றும் ஆனந்தியிடம் நான் கூறினேன். அத்தோடு அரசியல் என்பது பெண்கள் சந்திப்பின் ஒரு பகுதி ஆகாது என்றும், இருந்தும் அரசியலால் ஒரு பெண் அதாவது இலங்கை ராணுவத்தாலோ இல்லாவிட்டால் இயக்கங்களாலோ அது எந்த இயக்கமாக இருந்த போதும் ஒரு பெண் பாதிப்பிற்குட்பட்டால் அதற்கான எதிர் குரலைப் பெண்கள் சந்திப்பில் கலந்து கொள்ளும் பெண்கள் எழுப்புவார்கள் என்றும் கூறினேன்.

ஆனந்திக்கு இந்தப் பதிலும் திருப்தியைத் தரவில்லை. பல நாடுகளிலிருந்தும் பெண்கள் கலந்து கொண்டு வேண்டாத கதை எல்லாம் கதைக்கின்றார்கள் என்று தொடர்ந்தார். இதன் பின்னர் விளக்கம் கூற நான் விரும்பவில்லை. இலங்கையில் நடந்த பல கொலைகளை நியாயப்படுத்துவதாகவும் சிறுவர்கள் போராட்டத்தில் இணைந்து கொள்வது கட்டாயத்தால் அல்ல அவர்கள் விரும்பி தமக்கான ஒரு நல்ல விடிவிற்காய் இணைந்து கொள்கின்றார்கள் என்றும் அந்த விருதுபசாரத்திற்கு முற்றிலும் மாறன விடயங்களை தொடர்ந்தும் பேசிக்கொண்டிருந்தார். பலரும் மௌனமாக இருந்தார்கள். இந்த உரையாடலுக்கு முற்றுப் புள்ளி வைக்க எண்ணி கொலைகளை நான் நிராகரிக்கின்றேன். அதனோடு என்னால் ஒத்துப் போக முடியாது. அது எந்த வகையாக இருப்பினும் சரி. இலங்கை இராணுவம் அதைச் செய்கின்றதா? அதற்கான காரணங்கள் எமக்குத் தேவையில்லை. தமிழ் இயக்கங்கள் செய்கின்றனவா அதற்கான காரணங்களும் எமக்குத் தேவையில்லை. மனிதாபிமானமற்று கொலைகள் மலிந்து விட்டிருப்பது என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது இந்த உரையாடலை இத்தோடு நிறுத்திக் கொள்வோம். தொடர்ந்தால் வீணான வாக்குவாதம் வரும் என்றேன். பரிஸ்டர் ஜோசப் குறும்படங்கள் பற்றி உரையாடுவோம் என்று பேச்சைத் திருப்பினார். இருந்தும் ஆனந்தி தொடர்ந்து எதையோ கூற முயன்று கொண்டிருந்தார்.

அதன் பின்னர் தீபம் தொலைக்காட்சியில் பணி புரியும் எழுத்தாளர் இளையஅப்துல்லா ஈழத்தில் தற்போது சுத்த தமிழில் பேசுகின்றார்கள் ஜஸ் கிரீமை குளிர்க்கழி என்று சிறுவர்கள் எல்லோரும் அழைக்கின்றார்கள் கேட்பதற்குச் சந்தோஷமாக இருக்கிறது என்றார். எனக்கு சிரிப்பு வந்து விட்டது. இப்படியான மொழி மாற்றம் அவசியம் தானா என்று நான் கேட்டேன். ஏன் தமிழை வளர்ப்பதற்கு இப்படியான மொழி மாற்றம் நல்லது தானே என்றார் அந்த எழுத்தாளர். எங்கள் உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த ஆனந்தி லண்டனில் பல சிறுவர்கள் தமிழ் கதைக்கமாட்டார்கள் என்றும் பெற்றோர் அதனைப் பெருமையாகக் கூறுகின்றார்கள் என்றும் கூறினார். புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழ் கல்வி முறை தவறானதான இருக்கின்றது. சிறுவர்கள் பிரெஞ்ச் ஸ்பானிஷ் போன்ற மொழிகளை பலிய விரும்புகின்றார்கள் ஆனால் தமிழ்க் கல்வி முறை மிகவும் கடினமாக உள்ளதால் அவர்களுக்கு அதில் ஈடுபாடில்லாமல் இருக்கின்றது. திருக்குறளையும் ஆறுமுகநாவலரையும் எதற்காக புலம்பெயர்ந்த சிறுவர்களுக்கு புகுத்துகின்றார்கள் என்று புரியவில்லை என்றும் எனது குழந்தைகளுக்கு நான் இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் இருந்து வெளிவந்து கொண்டிருக்கும் ஆங்கிய இலக்கியங்களை படிக்க வலியுறுத்துகின்றேன் இது எமது நாடு வாழ்கை முறை பற்றி போதிய அறிவை அவர்களுக்குக் கொடுக்கும் என்றேன். அதற்கு ஆனந்தி ஏன் திருக்குறளை எமது குழந்தைகள் அறிந்து கொண்டால் என்ன என்றார். திருக்குறளை தமிழ் சரளமாகத் தெரிந்த ஒரு குழந்தை அறிந்து கொள்ளலாம். பேச எழுதப் பயிலு முன்பே திருக்குறளைப் புகுத்த வேண்டுமா என்றதற்கு குழந்தைகளுக்குத் தமிழ் தெரியாது என்று கூறிக்கொண்டு ஆங்கிலத்தில் பேசுவதற்குப் பெருமைப்படுகின்றார்கள். தம்மைப் - பொஷ் - ஆகக் காட்டிக்கொள்ள விரும்பும் பெற்றோர்கள் என்றார் முன்நாள் பிபிசியின் தமிழ் செய்திப் பிரிவைச் சேர்ந்த ஆனந்தி அவர்கள். இந்த விருந்து உபசாரம் கிட்டத்தட்ட 3மணித்தியாலங்களுக்கு நீடித்தது என்று கூறலாம். இந்த மூன்று மணித்தியால நேரத்தில் எத்தனை பேர் எத்தனை தமிழ் வசனங்களைப் பாவித்து உரையாடினார்கள் என்று விரல் விட்டு எண்ணிவிட முடியும். முற்று முழுதாக ஆங்கிலத்தில்தான் உரையாடல்கள் நிகழ்ந்தது. நானும் கூடத்தான். அதிலும் முக்கியமாக முற்று முழதான ஆங்கிலத்தில் உரையாடியவர் முன்நாள் பிபிசி வானொலியின் தமிழ் செய்தி வாசிப்பாளர் ஆனந்தி அவர்கள் எனலாம்.