Tuesday, February 05, 2008

Discovering Dominga

by Patricia Flynn with Mary Jo Mchonahay



The Centre for Women’s Studies in Education ஆதரவில் கடந்த செவ்வாய் கிழமை “Discovering Dominga” எனும் விவரணத் திரைப்படம் ரொறொண்டோ பல்கலைக்கழகத்தில் திரையிடப்பட்டு தொடர்ந்து கலந்துரையாடலும் இடம்பெற்றது.

தற்போது ஐஓவாவில; வாழும் டெனீஸ் பெக்கர் இரு குழந்தைகளுக்துத் தாயான 29வயது நிரம்பிய பெண். அமைதியான குடும்ப வாழ்க்கை வாழும் இந்தப் பெண்ணின் இளமைப்பருவம் மறக்கமுடியாத காயங்களைக் கொண்டது. இளமைக்காலக் கொடூரங்களில் இருந்து விடுபட முடியாமல் திணறும் இவர் இறுதியில், தனது வளர்ப்புக் குடும்பத்தால் கிடைத்த உறவினர் ஒருவருக்குத் தனது இளமைக்கால வாழ்வு பற்றிக் கூற அவர் மின்கணனியில் நடத்திய தேடல் டெனீஸ் பெக்கரின் தொலைந்த சில உறவுகள் பற்றிய தகவலை அவருக்கு அறியத்தருகின்றது.

டெனீஸ் குவாட்டமாலாவுக்குப் பயணம் செய்கின்றார். அங்கே அவர் மறந்து போயிருந்த சொந்தங்களின் அறிமுகம் மீண்டும் கிடைக்கின்றது. கண்ணெதிரே பெற்றோர்கள் குவாட்டமாலா இராணுவத்தால் கொலைசெய்யப்படும் போது டொமிங்காவுக்கு ஒன்பது வயது. கைக்குழந்தையான தனது தங்கையுடன் காட்டுப்பாதையூடே பலநாட்கள் ஓடி வழியில் தனது தங்கையையும் பறிகொடுத்து, இறுதியில், ஒரு அகதிமுகாமிற்கு வந்து சேருகின்றார். இரண்டு வருடங்களின் பின்னர் ஒரு அமெரிக்க குடும்பத்தினரால் வளர்ப்பு மகளாக எடுக்கப்பட்டு “டொமிங்கோ”, “டெனீஸ்” ஆக மாறித் தனது 29ஆவது வயது வரை ஐஓவாவில் பழையவற்றை மறக்க முனைந்து வாழ்ந்து வந்தார். காயங்களை மூடினாரே தவிர ஆற்ற முடியவில்லை.

பொன், நிலக்கரி, நிக்கல் போன்றவற்றின் மேல் மோகம் கொண்ட அமெரிக்க, கனேடிய முதலாளிகள் குவாட்டமாலா அரசுடன் இணைந்து 1980 தொடக்கம் 1983ஆம் ஆண்டுவரை ரியோ நெக்ரோ, குவாட்டமாலாவில் மட்டும் 6,000 வரையிலான ஆண்கள் பெண்கள் குழந்தைகள் அழித்திருக்கின்றார்கள். இந்த கொடுமையான அழிவின் நேரடிச் சாட்சியான எஞ்சியிருக்கும் மூவரில் டெனீசும் ஒருவர். 96இல் சமாதானம் அறிவிக்கப்பட்டாலும், இன்றும் இராணுவத்தின் கை மேலோங்கி நிற்பதால் தனது பெற்றோரின் அழிவிற்கு காரணமானவர்களுக்குத் தண்டனை வாங்கிக் கொடுக்க முடியாமல் போராடுகின்றார் டெனீஸ்.
ரொறொண்டோ பல்கலைக்கழக மாணவியான கிறிஸ்டீன் குவாட்டமாலா பற்றி அறிந்து கொண்ட போது எழுந்த ஆர்வம் அவரை அங்கு கொண்டு சென்றுள்ளது. இன்றும் கனேடிய, அமெரிக்கத் தனியார் நிறுவனங்கள் அங்கு சென்று கிராம மக்களை வெளியேற்றம் செய்ய முயல்வது நடைபெற்றுக்கொண்டிருப்பதாகவும் தான் ஒரு கனேடியப் பெண்மணி என்று சொல்வதற்கு வெக்கப்பட்டதாகவும் அந்த மாணவி கலந்துரையாடலின் போது கூறினார்.
பல பெண்களும், சில ஆண்களும் கலந்து கொண்ட இந்தப் பட்டறையின் இறுதியில், மனிதத் தன்மையை இழந்து எவ்வாறு சமூகம் மாறி வருகின்றது என்பது பற்றிக் கலந்துரையாடி பல நாடுகளில் இடம்பெற்ற, இடம்பெறுகின்ற அழிவுகளைச் சுட்டிக்காட்டினார்கள். எப்போதோ நடந்து போன சீன நான்கிங் அழிவுகள் கூடச் சுட்டிக்காட்டப்பட்டது. அழிவுகளைச் சுட்டிக்காட்டக் கால நேரம் தேவையில்லை, எனினும் 2 இலட்சத்திற்கும் மேலாக ஈழத் தமிழர்கள் கனடாவில் வாழ்கின்றார்கள், இந்த நிமிடத்திலும் எமது நாட்;டில் கொலைகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன, இவை எல்லாம் உள்நாட்டுப் போர் என்று ஒதுக்கிவிட முடியுமா? ஒருவர் கூட தமிழ் மக்களின் அழிவு பற்றி அங்கே குறிப்பிடவில்லை. இறுதியாக அது பற்றி நான் கேட்ட போது அதிகமான மாணவர்களுக்கு குவாட்டமாலா, கொலம்பியா பிரச்சனை தெரிந்த அளவிற்கு ஈழத்தமிழரின் பிரச்சனை தெரியவில்லை. அதற்கான காரணம் ஈழத்தமிழர் தமது பிரச்சனை பற்றி கனேடிய மக்களுக்கு அறியத்தருவதில்லை, உங்கள் நாட்டுப்பிரச்சனை பற்றிய விவரணப்படங்ளைப் பொதுமக்களுக்குக் காட்டிக் கலந்துரையாடல் செய்யுங்கள், ஆனால் உங்கள் அரசியல் சிக்கலானது, பலர் அது பற்றித் திறந்த மனதோடு கதைக்கத் தயங்குகின்றார்கள் என்று பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர் கூறினார். இறுதியில் தான் “ ழே ஆழசந வுநயச ளுளைவநச” விவரணப்படம் பார்த்ததாகவும் இப்படியான பட்டறைகளில் அவற்றைக் காண்பித்து உங்கள் நாட்டில் பெண்களுக்கு ஏற்படும் கொடுமைகளை கனேய மாணவர்களுக்கு அறியத் தாருங்கள் என்றவர், அந்த விவரணப்படம் கூட இங்கு வாழும் தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டது என்று அறிந்தேன் என்றும் கூறினார்.

குவாட்டமாலப் பிரச்சனைக்கு மாணவர்கள் ஒன்றாகக் குரல் கொடுக்க வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டு, அங்கு சென்று தளம் பதிக்க முயலும் கனேடியத் தனியார் நிறுவனங்களின் மின்அஞ்சல் வழங்கப்பட்டு, எல்லோரும் கண்டனக்கடிதம் எழுதுவதாகவும் முடிவு செய்யப்பட்டது.
எம்நாட்டுப் பிரச்சனைக்கு எமது மக்களே முட்டுக்கட்டையான நிற்கின்றார்கள்