Friday, September 08, 2006

KABHI ALVIDA NAA KEHNA



அண்மையில் புதிய இயக்குனர் சாமியின் “உயிர்”; திரைப்படம் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அட தமிழில் துணிந்து, திருமணமான பெண் ஒருவர் காதலிக்கும் திரைப்படம், அதுவும் கணவனின் தம்பியைக் காதலிப்பதாக எடுத்திருக்கின்றார்களே என்று நினைத்தபடியே பார்த்துக் கொண்டிருந்தேன், கடைசில்தான் தெரிந்தது அதே தமிழ்ப் பட அகராதிக்குள் விழுந்து அண்ணியை வெறும் வில்லி வேடம் கட்ட வைத்து முடிவில் இறக்கவும் செய்திருக்கின்றார் சாமி என்று. ஐயோ சாமியாகிவிட்டது.

சரி தமிழ் இயக்குனர்கள் துணிந்து வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளைப் படமாக்கப் போவதில்லை. மக்களுக்குப் படிப்பினையை ஊட்டுகின்றோம் என்று சொல்லிக் கொண்டு குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டிக்கொண்டு இருக்கப்போகின்றார்கள். அவர்களை நொந்து கொள்வதிலும் பார்க்க, நானே வேற்று மொழிகளில் எத்தனையோ தரமான திரைப்படங்கள் வருகின்றன அவற்றை பார்க்கலாம் என்று மலையாளம், ஈரானியன், ப்ரெஞ்ச் படங்கள் என்று இந்தக் கிழமையை ஒருவாறு போக்காட்டினேன். அப்போதுதான் சாருகான் நடித்த ஒரு ஹிந்திப்படம் நன்றாக உள்ளது என்று கேள்விப்பட்டுப் போய்ப் பார்த்தேன். அசந்து விட்டார்கள் என்று சொல்வார்களே அப்படியாகி விட்டது என் கதை. ஹிந்தித் திரைப்படங்களும் அனேகமாக வெறுமனே கலர் கலராக உடையணிந்து அழகிய பெண்கள் பொம்மைகளாக வந்து போவார்கள் என்ற என் எண்ணத்தை இந்த வாயில் நுழையாத ஹிந்தித் திரைப்படம் உடைத்துள்ளது.



மனிதர்களின் உணர்வுகளைப் பகுத்தறிந்து பார்த்துப் பாத்திரங்களை அதற்கேற்ப வகைப்படுத்தி வாழ்வில் சில நிகழ்வுகள் ஏன் நடக்கின்றன என்று தெரியாமல் நடந்து போவதை மிக நுணுக்கமாக இயக்குனர் திரைப்படம் முழுக்க கொண்டு சென்றுள்ளார். இயக்கத்தில் எங்காவது கெம்பிறமைஸ் இருக்கும் இந்தியக் கலாச்சாரத்தில் இப்படி ஒரு திரைப்படம் எடுத்து, அதுவும் முன்னணி நடிகர்களை வைத்து எடுத்து வெற்றி காண முடியாது என்று நினைத்திருந்த என்னை இயக்குனர் ஏமாற்றி விட்டார். தவறு பிடிக்க வேண்டும் என்று கூர்ந்து பார்த்தேன். கதை நகரும் முறை, பாத்திரங்கள், அவர்களின் நடிப்பு என்று எங்கும் சிறு தவறைக் கூட காண முடியவில்லை.

அமிதாப்பச்சனின் தயாரிப்பில், ஹரன் ஜோகரின் இயக்கத்தில் சாருகான், ராணிமுகர்ஜி, ப்ரீத்தி ஜிந்தா, அபிஷேக் பச்சன் ஆகியோர் இணைந்து நடித்திருக்கின்றார்கள்.



இயக்குனர் குறிப்பு:

மூன்று வகையான தம்பதிகள் உலகில் இருக்கின்றார்கள்.

முதலாவது, பேச்சுத் திருமணம் செய்தவர்கள். இவர்களை நான் ஒரு போதும் முற்றுமுழுதாகப் புரிந்து கொண்டதில்லை, ஆனால் இவர்களுக்குத் தெரியும் தாங்கள் என்ன செய்கின்றார்கள் என்று, என்பதனை நான் உறுதியாக நம்;புகின்றேன்.
அடுத்து தமது உண்மைக் காதலைக் கண்டறிந்து, அவர்களையே திருமணம் செய்து கொண்டவர்கள். நான் நம்புகின்றேன், இவர்கள் மிகவும் குறைந்த அளவில் இருப்பினும் இவர்களே மிகவும் அதிஷ்டம் செய்தவர்கள். கடைசித் தம்பதிகள், பெற்றோரின் விருப்பத்திற்கிணங்க பணம், அந்தஸ்த்து, போன்ற பல காரணங்களுக்காகத் திருமணம் செய்பவர்கள். இவர்களே மிகவும் துரதிஷ்டசாலிகள், இதனை இவர்களே புரியாதவர்களாக இருக்கின்றார்கள். இயந்திர வாழ்க்கையின் ஓட்டத்தில் ஒருநாள் தற்செயலாக தமது உண்மைக் காதலைச் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைக்கின்றது. இங்கே கேள்வி என்னவென்றால்? “உனது உண்மைக் காதலை ஒருநாள் நீ சந்திக்கும் போது ஏற்கெனவே உனக்குத் திருமணம் ஆகிவிட்டடிருந்தால்… அப்போது நீ என்ன செய்வாய்?, அப்போது நீ என்ன செய்வாய்?


இரண்டு தம்பதிகளுக்கிடையிலான உறவின் சிக்கலை சிக்கித் தவிக்காமல் எந்த வித விட்டுக் கொடுப்பும் இல்லாமல் ஒரு தரமான திரைப்படமாகத் தந்துள்ளார் இயக்குனர். உதைபந்தாட்ட வீரர் சாருகானின் மனைவி ப்ரீத்தி ஒரு புகழ்பெற்ற சஞ்சிகை ஒன்றில் வேலை புரிகின்றார். இவர்களுக்கு ஒரு மகன். சாருகானின் விருப்பங்களும், ப்ரித்தியின் விருப்பங்களும் வேறுவேறாக இருக்கின்றன. இவரும் தமது தொழிலிலும் விருப்பங்களிலும் ஆர்வம் அதிகமுள்ளவர்களாக இருப்பதால் முக்கியமான திருமணநாள் போன்றவற்றைக் கூட மறந்து விடுகின்றார்கள்.

அடுத்து ராணி முகர்ஜி, பெற்றோரை இழந்த பின்னர் அமிதாப் பச்சன் குடும்;பத்துடன் நெருங்கிய உறவு கொண்டிருக்கின்றார். அமிதாபின் மகன் அபிஷேக் பச்சன் அவர் மீது கொண்ட காதலால் அவரைத் திருமணம் செய்யச் சம்மதிக்கின்றார். திருமணத்தின் பின்னர் தனக்கு அபிஷேக்கில் காதல் இல்லை என்பது அவருக்குப் புரிய வருகின்றது. அலைவரிசைகள் ஒன்றாக இருக்கும் சாருகானுக்கும், ராணி முகர்ஜிக்கும் காதல் பிறக்கின்றது. அதேவேளை நாகரீக வாழ்வை விரும்பும் ஒரே அலைவரிசையில் இருக்கும் ப்ரீத்தியும், அபிஷேக்கும் வெறும் நண்பர்களாகவே இருக்கின்றார்கள். தனது மருமகள் சாருகானைக் காதலிக்கின்றாள் என்று தெரியவந்த போது நெஞ்சு வலி வந்து மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் அமிதாப்பச்சன் இறுதியாக ராணி முகர்ஜியை அழைத்து “நீ உன் காதலனுடனேயே போய் விடு, வாழ்க்கை என்பது மிகவும் குறுகியது அதனை நாம் உண்மையாக வாழ்ந்து முடிக்க வேண்டும். நீ என் மகனுடன் இருப்பதால் என் மகன் தனது உண்மையான காதலைச் சந்திப்பதற்கு நீ அவனுக்குத் தடையாக இருக்கின்றாய், அதே வேளை நீயும் உன் காதலை இழக்கின்றாய்” என்று கூறி விட்டு இறந்து போய் விடுகின்றார். அமிதாப்பச்சனின் பாத்திரம் தனித்தன்மையுடன் சிறப்பாக அமைத்துள்ளது.

தமது குடும்ப வாழ்விற்காக காதலைத் துறந்து விடுவோம் என்று முடிவெடுத்த காதலர்கள் உண்மையைக் கூறி மீண்டும் தமது குடும்ப வாழ்விற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுக்க முடிவெடுக்கின்றார்கள். ஆனால் உண்மை தெரிந்த போது இருவருமே தமது துணையினால் ஒதுக்கப்படுகின்றார்கள். சாருகானின் தாயார் ப்ரீதியிடம் “உனக்குக் குழந்தை இருக்கின்றது அதற்காகக் கொஞ்சம் விட்டுக் கொடுத்துப் போய் இருக்கலாம்” என்று புத்திமதி கூறிய போது “குழந்தைக்காக பொய்யான ஒரு உறவில் சேர்ந்து வாழும் கோழையல்ல நான்” என்று கூறுகின்றார். சாருகான் வீட்டை விட்டு வெளியேறுகின்றார். அதே வேளை ராணி முகர்ஜியும் வெளியேறுகின்றார். ஒருவரை ஒருவர் நோகடிக்கக் கூடாது என்ற எண்ணத்தில் தாம் வீட்டை விட்டு வெளியேறியதை அவர்கள் மறைத்து விட்டார்கள்.
இரு ஜோடிகளுக்கும் விவாகரத்து ஆகிவிடுகின்றது. அபிஷேக் வேறு திருமணம் செய்து கொள்கின்றார். ப்ரீத்தி ஒருவருடன் நட்பு வைத்திருக்கின்றார். இறுதியில் அபிஷேக்கும், ப்ரிதியும் சேர்ந்து சாருகானையும், ராணி முகர்ஜியையும் சேர்த்து வைக்கின்றார்கள்.
திரைப்படம் முற்று முழுதாக நியூயோர்க்கில் படமாக்கப்பட்டிருக்கின்றது. காரணம் புரியவில்லை. இத்திரைப்படத்தை இளம் தம்பதிகளைப் பார்க்க வேண்டாம் என்று இந்தியாவில் பெற்றோர் தடைவிதிப்பதாக அறிந்து கொண்டேன். இப்படியாக விமர்சனங்கள் கண்டனங்கள் கிடைக்கும் என்று தெரிந்து கொண்டும் துணிந்து இயக்கிய ஹரனிற்கு மீண்டும் ஒருமுறை வாழ்த்துதான் என்னால் கூற முடியும்.

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டது, ஒருவனுக்கு ஒருத்தி என்ற எமது பழைய பஞ்சாங்கங்களை மூலையில் தூக்கிப் போட்டு விட்டு மனித உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து யதார்த்தத்தை இயக்குனர் திரைப்படமாக்கியிருக்கின்றார். “உயிர்” திரைப்படத்திற்கு வடிவேல் அந்தத் துள்ளு துள்ளியதாக ஒரு சஞ்சிகையில் படித்தேன், இந்தத் திரைப்படம் பார்த்தால் தற்கொலை செய்து கொள்ளக் கூடும். ஹிந்தியில் மனஉணர்வுகளைக் கூறும் பல தரமான திரைப்படங்கள் தற்போது வருகின்றன. தமிழ் திரைப்பட உலகிற்கு எப்போது அந்தப் பாக்கியம் கிடைக்குமோ தெரியவில்லை. இந்தத் திரைப்படத்தின் முக்கிய சிறப்பு என்னவென்றால் இத்திரைப்படத்தில் வரும் அத்தனை பாத்திரங்களும், முற்போக்குச் சிந்தனை கொண்டவர்களாகவும், வாழ்வு பற்றிய ஆழமான அறிவுள்ளவர்களாகவும் இருக்கின்றார்கள். ஆனால் யதார்த்தத்தில் இது எத்தனை வீதம் சாத்தியம்? மனிதர்கள் அனைவரும் இத்தனை விளக்கமுள்ளவர்களாக உலகில் இருந்துவிட்டால்?

Sunday, September 03, 2006

வேட்டையாடு விளையாடு

“சிவகாசி” யும், “புலிகேசி” யும் சக்கை போடு போடும். அதேவேளை “காக்க காக்க” வும் உச்சத்திற்குப் பறக்கும், பார்வையாளர்கள் எல்லாத் திரைப்படத்தையும்தான் பார்த்து வைக்கின்றார்களோ?

“காக்க காக்க” அளவுக்கு படம் எடுபடேலை எண்டது உண்மைதான் அதே நேரம் வன்முறை கூடீற்றுது எண்டதையும் என்னால ஒத்துக் கொள்ளேலாமல் இருக்குது. கௌதமின்ர ஸ்ரைல் என்ன எண்டு பாத்தால் சில மனித நச்சுகளை அழிக்கிறதுக்கு உடனடி நடவடிக்கை தேவை. இந்தியா இருக்கிற நிலமையில கோட், கேஸ் எண்டு போனால் எப்பவும் வில்லன்களுக்குத்தான் சார்பா முடியும். எனவே சமூக விரோதி எந்தப் பெரிய கொம்பனா இருந்தாலும் ஒரு உண்மையான பொலிஸ் அதிகாரி உடனேயே அவனை அழித்து விடுறதுதான் அந்தச் சமூகத்துக்காக அவனால செய்யக்கூடியது நன்மை. இதைத்தான் தனது திரைப்படங்கள் மூலம் சொல்லி வருகின்றார் கௌதம்.


தமிழ் திரைப்படங்கள் ரேட்டிங் செய்யப்படுவதில்லையோ, இல்லாவிட்டால் கனேடியத்தமிழ் திரையரங்குகள் அதில் கவனம் எடுக்கவில்லையோ என்னவோ, தமிழ் திரைப்படங்கள் என்றால் குடும்பமாகச் சென்று பார்க்கும் வழக்கம்தான் எல்லோருக்கும் இருக்கிறது. இதனால் வன்முறை கூடிய பல திரைப்படங்களை குழந்தைகள் பார்க்க நேரிடுகின்றது. பெற்றோர் திரைப்படங்களுக்குச் செல்லும் முன்னர் திரைப்படம் பற்றிய விமர்சனங்ளை அறிந்து கொண்டு போனால் இந்த சங்கடங்களைத் தீர்க்க முடியும்.

கௌதமினால் “காக்க காக்க” திரைப்படத்தின் கருவில் இருந்து விலக முடியில்லை, தமிழ் நாட்டில் முழுமையாகப் படப்பிடிப்பு செய்தால் “காக்ககாக்க” வின் மறுபிரதி போல் “வேட்டையாடு விளையாடு” திரைப்படமும் வந்து விடும் என்று நினைத்தோ என்னவோ பாதிக் காட்சிகளை நியூயோர்க்கில் படப்பிடிப்பு செய்திருக்கின்றார்கள். இது ஒரு வியாபாரத்தந்திரமே தவிர திரைப்படத்திற்கு இதனால் ஒரு நன்மையும் இல்லை. இருந்தாலும் நியூயோர்க் காட்சிகள் குளிர்மையாக இருந்தன.

சின்னச் சின்னப் பிரச்சனைகளைத் தாங்கிக்கொள்ள முடியாமல், தம்மில் அன்பாய் இருக்கும் உறவுகளை மறந்து பல பெண்கள் தற்கொலை செய்து கொள்கின்றார்கள். இது தவறு கொஞ்சம் சிந்தித்தால் வாழ்வை மகிழ்ச்சியாக மாற்றிக்கொள்ள முடியும் என்பதை ஜோதிகாவின் பாத்திரத்தின் மூலம் காட்டியிருக்கின்றார். ஜோதிக்காவின் பாத்திரம் மூலம் கற்பு, கல்யாணம், தாய்மை என்று அலட்டிக் கொள்ளாமல் பெண்களுக்கு நல்ல ஒரு செய்தியைச் சொல்லிச் சென்றிருக்கின்றார்.

ஓரினச்சேர்க்கை என்பது நகைச்சுவைக்குரியது என்பதுபோல்தான் எம்மில் பலரும் பார்க்கின்றார்கள். அதைத்தான் கௌதமும் செய்திருக்கின்றார். கமல் “அடேய் நீயென்ன ஹோமோ செக்சுவலா” என்று கேட்ட போது திரையரங்கு சிரிப்பால் அதிர்ந்தது அதற்கு உதாரணம். இந்த இடத்தில் கமல் மிகவும் தாழ்ந்து போய்விட்டார்.

நடிகர்கள் என்று பார்க்கும் போது எனக்கு இரண்டு விடையங்கள் திருப்தியாக இருந்தன ஒன்று ரஜனிக்காந்தைப் போல தன்னை ஒரு இளைஞனாகக் காட்டி கதாநாயகியை டூயட் பாடிக் காதலிக்கும் ஒருவராகத் தன்னைக் காட்டிக்கொள்ளாமல் திருமணம் செய்து மனைவியை இழந்த ஒரு முதிர்ந்த பொலிஸ் அதிகாரியாக கமல் வந்து போவது, அடுத்தது மேக்கப் அதிகம் இல்லாமல் மிகவும் எளிமையாக ஜோதிகா நடித்திருப்பது. கமலின் முதல் மனைவியாக வந்து இறந்து போகும் கமாலினி, முன்னைய நடிகை சாந்தி கிறிஷ்ணாவை ஞாபகப்படுத்துகின்றார். பாடல்கள், பாடல் காட்சிகளும் பிடித்திருக்கின்றன.

மனநோயாளியான இரு இளைஞர்கள் பல கொலைகளைச் செய்து கொண்டு அதே நேரம் தமது படிப்பிலும் உச்சத்திற்கு வருவது என்பது எவ்வளவு சாத்தியம் என்று தெரியவில்லை. கொலைகள் திட்டமிட்டது போல் காட்டப்பட்டாலும் மிக அவசரமாகவும், காரணங்களும் வலுவானதாக இல்லாததாலும் தடையங்கள் பல வெளிப்படையாக உள்ளன. இருந்தும் கொலையாளிகள் அகப்படாமல் இந்தியா நியூயோர்க் என்று பறந்து அங்கும் இங்கும் கொலைகளைச் செய்து வருகின்றார்கள்.

எனக்கொரு சந்தேகம். இந்தியத்திரைப்படங்கள் பலதில் நேர்மையான பொலீஸ் அதிகாரயாக இருந்தால், சமூகவிரோதிகளால் அவர்கள் குடும்பம் பழிவாங்கப்படும் என்று காட்டப்படுகின்றது. ஆனால் உண்மை நிலையில் பொலிஸ் குடும்பங்கள் அழிக்கப்பட்டன என்று செய்திகளில் நான் படித்ததில்லை. அப்படியாயின் இந்திய மண்ணில் நேர்மையா பொலிஸ் அதிகாரிகளே இல்லையா?

குருதிப்புனல், மகாநதி, அன்பேசிவம் போன்ற தரமான படங்களைத் தந்த கமலும், காக்க காக்க திரைப்படத்தைத் தந்த கௌதமும் இணைந்து வெறுமனே வேட்டையாடி விளையாடி இருக்கின்றார்கள். திரையரங்கு சென்று பார்க்க வேண்டிய திரைப்படம் இது என்று நான் நினைக்கவில்லை. டீவீடியே போதும்.

Saturday, August 26, 2006

"நம்மொழி" சஞ்சிகை

உங்களுடைய படைப்புலகம் பற்றி....

சிறுவயதிலிருந்தே வாசிப்பதில்தான் அதிகம் நாட்டம் இருந்தது. முதல் முதலாக கனடாவிலிருந்து வெளி வந்த “தாயகம்” பத்திரிகையில் எனது சிறுகதை பிரசுரமானது. அதன் பின்னர் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கின்றேன்.

நீங்கள் நாடகம், குறும்படமென செயல்படுகிறீர்கள். இங்கே உங்கள் படைப்புகள் பல பதிவாகியிருக்கிறது. நீங்கள் உருவாக்கிய கதாபாத்திரங்களில் ரசித்த... பாதித்த பாத்திரம் ஏது? அது பற்றி....

ரசித்த என்று கூறுவதிலும் பார்க்க பாதித்த என்று கூறுவதையே நான் விரும்புகின்றேன். “உஷ்” எனும் குறுற்திரைப்படத்தில் வந்த சிறுமியின் பாத்திரம், வீட்டில் வாடகைக்கு இருக்கும் ஒரு ஆணால் பாலியல் வதைக்கு ஆளாவதாக அந்தப் பாத்திரம் அமைக்கப்பட்டிருக்கின்றது. இக் கதாபாத்திரம்தான் என்னை மிகவும் பாதித்தது. அதில் நடித்த ஆரண்யா பாபுவும் நான் எதிர்பார்த்தது போலவே மிகவும் சிறப்பாக அந்தப் பாத்திரத்தை தனது நடிப்பால் வெளிக்கொணர்ந்திருக்கின்றார்.

குறும்படம் நாடகங்களில் நடித்தவர்கள் பற்றியும,; அவர்களின் கதாபாத்திரம், நடிப்பு பற்றியும்...

நடிப்பு உலகத்திற்குள் பெண்களின் பங்களிப்பு மிகவும் குறைவாகவே இருக்கின்றது. அதிலும் மாற்றுக் கருத்துக்களைக் கொண்ட கதா பாத்திரம் எனும் போது நடிப்பில் ஆர்வமுள்ள பெண்கள் கூட நடிப்பதற்குத் தயங்குகின்றார்கள். அவர்களைக் குறை கூற முடியாது, எமது சமூகச் சூழல் அப்படியாக உள்ளது. இருந்தும் என் குறுற்திரைப்படங்கள், நாடகங்கள் என்று கனடாவில் சிறந்த நடிகைகள் என்று பெயர் எடுத்த பெண்கள் இணைந்து என்னுடன் வேலை செய்கின்றார்கள் இது எனது அதிஷ்டம் என்று கூடக் கூறலாம். குறிப்பாக சத்யா தில்லைநாதன் இவர் இருமுறை கனேடியக் குநற்திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான பரிசை வென்றிருக்கின்றார். அடுத்து பவானி சத்யசீலன் இவரும் எனது குறுந்திரைப்படத்தில் நடித்து “விம்பம்” அமைப்பு லண்டனில் நடாத்திய குறுற்திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றிருக்கின்றார். மேலும் தர்சினி வரப்பிரகாசம், யசோதா கந்தையா, ஷாலினி சண்முகநாதன் போன்ற பல மேடை நாடகம் குறுற்திரைப்படங்களில் நடித்த பெண்களும் என்னுடன் சேர்ந்து மேடைநாடகங்களில் நடித்திருக்கின்றார்கள்.

இன்றைய குறும்பட உலகம் அதாவது சர்வதே அளவில் அனைத்து மொழி சார்ந்து வெளிவரும் குறும்படங்கள் மற்றும் புலம்பெயர் தமிழ்ச்சூழலிலும், தாயக மண்ணில் வெளிவரும் குறும்படமோ அல்லது சின்னத்திரைத்திரைப்படம் பற்றி உங்கள் பார்வை?


சின்னத்திரை என்று தாங்கள் கூறுவது இந்திய சீரியல்களை என்று நம்புகின்றேன். எப்போது புலம்பெயர்ந்த மண்ணில் இந்தியச் சீரியல்கள் காண்பிக்கத் தொடங்கினார்களோ அப்போதே புலம்பெயர் இலங்கைத் தமிழருக்கு தீராச் சாபம் கிடைத்து விட்டது என்று நம்புகின்றேன். மக்களைச் சிந்திக்க விடாமல் செய்வதற்கான ஒரு வியாபாரத் தந்திரம் என்பதுதான் என் கருத்து. மற்றும் குறும்படங்கள் என்று பார்க்கும் போது இலங்கையில் இருந்து தரமான பல குறுற்திரைப்படங்கள் வெளிவருகின்றன. போர் சூழல் அதன் பாதிப்பு என்பது குறுந்திரைப்படங்களுக்கு நல்ல ஆழமான கருவாக அமைந்து விடுகின்றன. அத்தோடு புலம்பெயர்ந்த குறுந்திரைப்படங்கள் என்று பார்க்கும் போது மற்றைய நாடுகளை விடவும் கனடாவில் இருந்து தரமான படைப்புக்கள் வருகின்றன என்று கூறலாம். அதை விடவும் மற்றைய மொழிகள் என்றால் கனடாவில் பல குறுந்திரைப்பட விழாக்கள் நடை பெறுகின்றன. அங்கே அனைத்து நாடுகளிலும் இருந்து பல தரமான குறுந்திரைப்படங்கள் காட்சிக்கான வருகின்றன. முக்கியமாக ஈரான் சீனா பிரான்ஸ் போன்ற நாடுகளில் இருந்து காட்சிக்காக வரும் குறுந்திரைப்படங்கள் என்னை மிகவும் கவர்ந்திருக்கின்றன.


நீங்கள் இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்து கனடாவில் வசிக்கிறீர்கள். இவ்விரு தேசங்களிலும் இருக்கும் தமிழ்ச்சமூகம் மற்றும் பெண்கள் பற்றி உங்கள் கருத்து?

நான் 83ஆம் ஆண்டு இலங்கையை விட்டு வெளியேறினேன். அதன் பின்னர் இன்னும் நாட்டிற்குப் போகும் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. போர்ச் சூழல் என்பது நான் வாசித்து கேட்டு அறிந்த ஒன்றாகவே எனக்குப் பரிச்சயப்பட்டிருக்கின்றது. ஆனால் இருபது ஆண்டுகளுக்கு மேலாக புலம்பெயர் சமூதாயத்தின் பரிச்சயம் என்று பார்க்கின். அதனை இருவகையாகப் பார்க்கலாம். ஒன்று பெண்கள் மிகவும் முன்னேறியிருக்கின்றார்கள். அதாவது பலதுறைகளில் அவர்களுக்கான ஈடுபாடு, தமது காலில் நிற்கும் சுதந்திரம், துணிவு என்று கூறலாம், அடுத்து புலம்பெயர்ந்ததால் ஏற்பட்ட பொருளாதாரச் சுதந்திரம் பல பெண்களை இன்னும் பின்நோக்கியும் தள்ளியிருக்கின்றது. அதாவது மூடநம்பிக்கைகளோடு கூடியதான கலாச்சாரம், மதம், சாதீயம், சீதணம் என்று போர் சூழல் காரணமாக இலங்கையில் களையப்பட்ட பல விடையங்கள் புலம்பெயர் நாட்டில் இன்னும் வளர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

நீங்கள் ஒரு படைப்பாளராக இருப்பதால் மக்களின் மனநிலையினை நன்றாக புரியக்கூடியவர். இலங்கையின் வடக்கு கிழக்குப் பிரதேசத்தை தாயகமாகக் கொண்டிருக்கும் தமிழ் மக்கள், தமக்கான தனிநாடு ஒன்றை நிறுவிக்கொள்வதற்காக ஆயுத ரீதியான போராட்டத்தினை மேற்கொண்டு வருகிறார். இப்போராட்டத்தில் ஏற்பட்டுவரும் நிகழ்வுகள் பற்றி அம்மக்களின் மனநிலை பற்றி?

இருபது ஆண்டுகளுக்கு மேலான இந்தரப் போராட்டம் முடிவற்று நீண்டு கொண்டிருக்கின்றது. போரட்டச் சூழல் வாழ்வு என்பது எத்தனை துயரமானது என்பது எல்லோரும் அறிந்ததே. புலம்பெயர்ந்த என்னைப் போன்றோரிற்கு இதனை விமர்சனம் செய்யும் தகுதி இல்லை என்றே நம்புகின்றேன். பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் மக்களில் குரலாய் என்னால் ஒலிக்க முடியாது. அது அவர்களின் குரலாலேயே ஒலிக்க வேண்டும். நான் வெறுமனே பேசியும், எழுதிக்கொண்டும் இருப்பதற்கு மட்டுமே லயக்கானவள்.


இன்று இலங்கையின் வடக்கு கிழக்குத்தமிழ் அரசியலில் பெண்களின் நிலை பற்றி உங்கள் பார்வை?

எதற்குத் தனியாகப் பெண்களின் நிலை என்று கேட்கின்றீர்கள்? அரசியலில் பெண்களின் பங்களிப்பு ஆண்களை விட மிகக் குறைந்த அளவிலேயே உள்ளது. பெண்கள் இதனை வேண்டுமென்றே தவிர்க்கின்றார்களோ என்னவோ. உலகம் முழுவதுமான அரசியலை எடுத்துக் கொண்டாலும் அதே நிலைதான். பெண்கள் சிலர் அரசியல் பதவிகளில் ஆண்களால் அமர்த்தப்படுகின்றார்கள். இவற்றைப் பெண்களின் பங்களிப்பு என்று கணிப்பிட்டுவிட முடியாது. உலக அரசியலே ஆண்களின் கைகளில் இருப்தால்தான் இப்படிச் சீர்கெட்டுப் போய் இருக்கின்றது என்பது எனது தனிப்பட்ட கருத்து.

பெண்கள் சுதந்திரம் பற்றி...?

இந்தக் கேள்விக்குப் பதில் கூறிக் கூறி அலுத்து விட்டது. பெண் சுதந்திரம் என்பதை ஒவ்வொருத்தரும் தமக்கான அளவுகோல் கொண்டு அளவிடுகின்றார்கள். மிகவும் கோழைத்தனமாக வாதாடுகின்றார்கள். பெண் சுதந்திரம் பேசும் பெண்களில் பலர் “அந்த” ஆனால்.. என்று இழுக்கும் நிலையில்தான் இன்னும் இருக்கின்றார்கள். பெண் சுதந்திரம் என்று ஒன்று தனியாக இருப்பதாகக் கூறுவதை விடுத்து, தனிமனித சுதந்திரம் என்றே நான் பார்க்கின்றேன். தனிமனித சுதந்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தால் எல்லாச் சுதந்திரமும் தானாகவே வந்து விடும்.

கடந்து போன காலத்தில் வாழ்ந்த பெண்களில் நீங்கள் குறிப்பிட விரும்பும் பெண் யார்? எதற்காக?

சமூக அக்கறையின் பொருட்டு சிந்தனையுடனான தேடல் கொண்ட எந்த ஒரு பெண்ணும் முக்கியமானவளாகவே எனக்குப் படுகின்றாள். அது எந்த மொழி எந்த நாட்டுப் பெண்ணாக இருப்பினும் அவள் பற்றி அறிந்து கொள்ளவே முயல்வேன். குறிப்பிட்டு ஒருவரைக் கூற நான் விரும்பவில்லை.

கேள்விகள்: நம்மொழி பாஸ்கரன்
பதில்கள்: சுமதி ரூபன்

Friday, August 18, 2006

கண்டக் கூட்டமும் கண்ணீர் அஞ்சலியும்

Wednesday, August 09, 2006

ஓயாத அலைகள்

Thursday, July 27, 2006

படித்த பாதித்த கவிதை - 1

துயில் கொள்ளா இரவு

ஊரின்
கிழக்குப்பக்கம் கடல்
மேற்கில் வயல்வெளி
வயல்வெளிக்கப்பால்
ஆறும் நாணல்க் காடும்

அங்கிருந்து அல்லது
எங்கிருந்தோ
அவர்கள் வருவதாக
கிங்கிலி கத்திப்பறந்த
ஓர் இரவு

அழிஞ்சிப்பொத்தானை
காத்தான்குடிப் பள்ளியில்
படிந்த குரருதியில்
உறைந்த காற்று
அச்சத்தைக் கூட்டியள்ளி
எல்லோர் முகத்திலும்
அறைந்து வீசிற்று.

தெருவோரம்
அறைச்சுவருள்
கட்டிலுக்கடியில்
பயம் சூழ்ந்து ஒடுங்கியது

பூனை பதுங்கி
அடுப்பங்கரை நுழைய
ராக்குரவி மெல்லக்கொடுகி
கூட்டுள்புக
பயம்
தொண்டை அடைக்கும்
திகில்.

பெருவெளியில்
பார்வையெறிந்து
விழித்துக் கிடந்தேன்
எல்லோரையும் போல

பனித்துகள் படிந்து
பூக்களும், இலைகளும்
துவண்டு களைத்து
அயர்ந்து தூங்கிற்று

இருள்விலகி
அதிகாலை அண்மித்தும்
தூக்கம் தொடாது
கண்கள் கனத்துப்பாரிக்க
மங்கிக்கரையும் வெள்ளிகளிடம்
வினவினேன்
அவர்கள் இரவும்
இப்படித்தான் கழியுமா?
ஜீப்வண்டி உருள்கையில்.


அலறி,
தனிமனித உணர்வுகளில் மட்டும்
கரைந்து விடவில்லை
தன் சமூகத்தின் நாவுமாக இருக்கின்றார்.

சட்டப்பட்டதாரி
தற்போது,
பொதுச் சுகாதாரப் பரிசோதகராகப் பணியாற்றுகிறார்.

Saturday, July 22, 2006

இரயாகரனுடன் ஒரு சந்திப்பு

பிரான்ஸிலிருந்து கனடா வந்திருக்கும் இரயாகரனுடனான ஒரு சந்திப்பு நிகழ்ச்சி 23ம் திகதி ஞாயிறு மாலை 6:00 மணியளவில் ஸ்காபுரோ சிவிக் சென்டரில் இடம் பெற உள்ளது.

இந் நிகழ்வு பற்றி இரயாகரனிடம் "வைகறை" பத்திரிகை நிருபர் கேட்ட போது

ஞாயிறு இடம் பெற இருக்கும் உங்களுடனான சந்திப்பு பற்றி சொல்லுங்கள்?

அரசியல் ரீதியான ஒரு நெருக்கமான அறிமுகம். மக்கள் பற்றி உண்மையான அக்கறை கொண்டோரை நோக்கிய கருத்து பரிமற்றத்தை உருவாக்குவதன் மூலம், ஆரோக்கியமான எதிர்கால அரசியல் போக்கை உருவாக்குவது.”

அரசியல் ஆர்வலர்கள் அனைவரும் கலந்து கொள்ள முடியும்.

Friday, July 21, 2006

“புதியதோர் உலகம்”

கோவிந்தன்

"பெப்ரவரி 15 1985 இல் நான் அங்கம் வகித்த தமிழீழ விடுதலை அமைப்பில் இனிமேலும் தொடர்ந்து இருப்பதில் அர்த்தமில்லை என கண்ட பின்பு அதிலிருந்து வெளியேறிய தோழர்களுடன் நானும் சேர்ந்து கொண்டேன். அந்த விடுதலை அமைப்பு சிறிலங்கா அரசுக்கு எதிராக நீண்ட காலமாகப் போராடி வந்த ஒரு பலம் மிக்க அமைப்புத்தான். ஆனால் அந்த அமைப்பில் நிலவிய அராஜகம், ஜனநாயகமின்மை என்பன அவர்கள் நடத்தும் போராட்டம் கூட இன்னொரு அராஜகத்திற்கும் ஒடுக்கு முறைக்கும் காரணமாக அமைந்துவிடும் என்று கருதியதாலேயே நாம் அதிலிருந்து வெளியேறினோம்.
நாம் அந்த அமைப்பிலிருந்து வெளியேறினோமேயன்றி தமிழீழ விடுதலைப் போராட்டத்திலிருந்து வெளியேறவில்லை. தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் தலையெடுக்கும் அராஜகம் அழிக்கப்பட்டு, போராட்டம் வீரியம் கொண்டதாக முன்னெடுக்கப்படுவதற்கு எமது பணியைத் தொடர்ந்து செய்து கொண்டேயிருப்போம்.

எமது வெளியேற்றத்தை அந்த அராஜகவாதிகள் அங்கீகரிக்கவில்லை. நாம் வெளியேறிய பின்பு எம்மைக் கொன்றொழிப்பதற்காக சென்னை நகரம் எங்கும் சல்லடை போட்டுத் தேடினார்கள். நாம் அவர்களிடமிருந்து எம்மைப் பாதுகாத்துக் கொண்டு இரண்டு மாதங்கள் தலைமறைவாக இருந்தோம். அந்தக் காலத்திலேயே “புதியதோர் உலகம்” எழுதப்பட்டது.

இந்நாவல் கூறும் விடையங்களை சிறிலங்கா அரசு தனக்குச் சாதகமாகப்பயன்படுத்தி தமிழீழ விடுதலைப் போராட்டத்தை சிறுமைப்படுத்தும் பிரச்சாரத்தை மேற்கொள்ளலாமே என்ற அச்சம் இந்நாவல் படைக்கப்படும் போது கூடவே எனக்கு இருந்தது. கூடுமானவரை அந்த உணர்வு வாசகர்களுக்கு ஏற்படாதவகையில் நாவல் உருவாக்கப்பட்டது. இந்த விபரீத அபாயத்தையும் எதிர்நோக்கிக் கொண்டு இந்நாவல் படைக்கப்படுவதற்குக் காரணமாக இருந்தது, தமிழீழ விடுதலைப் போராட்டம் குறைகள் களையப்பட்டு அது முறையாக முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும் என்ற அக்கறையினாலேயாகும்.

தமிழீழ விடுதலைப்போராட்டம் வன்முறையில் நம்பிக்கை கொண்ட ஆயுதமேந்திய போராட்டமாயினும் அது ஒருபோதும் அராஜகத் தன்மை கொண்டதாக மாறிவிடுவதை அனுமதிக்க முடியாது. விடுதலைப் போராட்டத்தில் என்றும் மனிதாபிமானமும், மானுட உயிர்ப்பிற்கான ஆவலும் மேலோங்கி இருக்க வேண்டும். தமிழீழ விடுதலைப் போராட்டம் இவற்றை இழந்து செல்லுமாயின் அது இன்னொரு அராஜகத்திற்கும் ஒடுக்குமுறைக்குமான வழியாகவே அமைந்து விடும்.

நாம் அங்கம் வகித்த தமிழீழ விடுதலை அமைப்பின் அராஜகம் தாபனத்திலிருந்து விலகும் உரிமையை மறுத்ததோடு சுதந்திரமாக அரசியல் நடத்தும் உரிமையையும் தடைசெய்தது. அதனால்தான் எம்மைக் கொன்றொழிப்பதற்கு பேயாக அலைந்தார்கள்.

அவர்கள் முயற்சி கைகூடாததால் ஆத்திரமுற்றவர்கள் தமிழீழத்தில் எமது தோழர்களைக் கடத்தியும், சித்திரவதை செய்தும் துன்புறுத்தினார்கள். அந்த அராஜகவாதிகளின் கொலைவெறி இன்னும் அடங்கவில்லை.

அவர்கள் ஒருவேளை எம்மைக் கொல்வதில் வெற்றி பெறலாம். அந்தக் கொலைவெறியர்கள் யார் என்பதை நாம் உங்களுக்குக் கூறவேண்டியதில்லை, ஆனால் அவர்கள் எப்படிப்பட்டவர்கள்? நாம் எப்படி அவர்களுடன் முரண்பட்டு நின்றோம்? என்பதை வெளிப்படுத்துவதற்கு இந் நாவல் பயன்படுத்தியிருக்கின்றோம்.

இந்நாவல் தனியொரு மனிதனின் படைப்பல்ல, பல தோழர்களின் ஆலோசனைகள், ஒத்துழைப்புக்கள் மூலம் உருவாக்கப்பட்ட கூட்டுப் படைப்பே இது.

தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் கடந்த ஒரு வருட காலமாக நடைபெற்ற உண்மைச் சம்பவங்களிலிருந்தே இந்நாவல் உருப்பெற்றுள்ளது.

இக்கதையின் கதாபாத்திரங்களில் இறந்தவர்கள் உண்மையிலேயே இறந்தவர்கள்தான். உயிரோடு இருப்பவர்கள் இப்போதும் உயிரோடுதான் இருக்கின்றார்கள். “புதியதோர் உலகம்” ஒரு இலக்கியமாகக் கருதி மாத்திரம் படைக்கப்படவில்லை. ஒரு அறைகூவலாகவும் கருதியே இது வெளிவந்துள்ளது. வாசகர்கள் இதனைப் புரிந்து கொண்டு ஆதரவு தர வேண்டும்".


----------------------------------------------------------------------------------
“புதியதோர் உலகம்” நூலாசிரியர் கோவிந்தன் பற்றி சில வரிகள்.

1982 இல் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் (புளொட்) இணைந்து கொண்டார்.

1983 இல் முழுநேர உறுப்பினரானதுடன் கழகத்தின் மத்திய குழுவிற்கும் தெரிவானார்.

1985 இல் புளொட் அமைப்பிலிருந்து வெளியேறினார். “தீப்பொறி” ஈழவிடுதலைப் போராட்டக் குழுவை நிறுவிய ஸ்தாபக உறுப்பினர்களில் இவரும் ஒருவர். இக்கால கட்டத்தில் புளொட் இனால் தேடப்பட்டு தலைமறைவாக இருந்து செயற்பட்டார். இக்காலத்தில்தான் “புதியதோர் உலகம்” என்ற நாவல் எழுதப்பட்டது.

1986இல் விடுதலைப்புலிகள் ஏனைய அமைப்புக்களை தடைசெய்தமையால் இவர் தொடர்ந்தும் தலைமறைவாகவே செயற்பட்டார்.

1991 இல் யாழ்ப்பாணத்தில் அமைப்புப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது மே மாதம் 17ம் திகதி விடுதலைப்புலிகள் அமைப்பினால் கைது செய்யப்பட்டார். மேற்கொண்டு அவர் பற்றிய எந்த விபரமும் இன்றுவரை கிடைக்கவில்லை.

அண்மையில்தான் கோவிந்தனின் “புதியதோர் உலகம்” படித்தேன். தமிழ் மக்கள் கோவிந்தனை மறந்து போனார்களா? இலக்கிய வாதிகள் கூட அவரை நினைவு கூர்ந்து நான் கண்டதில்லை. கோவிந்தனின் முன்னுரையே நாவலைப் பற்றிக் கூறி விடுகின்றது. இன்னும் எத்தனை எத்தனை கோவிந்தன்கள் தம் கதை கூறாது மறைந்து போனார்கள்?
1991களின் பின்னர் புளொட் அமைப்பின் எத்தனை அங்கத்தவர்கள் தம்மாலேயே அழிந்து போனார்கள். கோவிந்தனுக்குத் தெரிந்திருக்க நியாயம் இல்லை. நேர்மையான ஒரு போராட்ட கழகம் உருவாகவேண்டும் என்ற கனவைத் தாங்கிய அவர் வார்த்தைகளும் பொய்துப் போய்விட்டன.

கோவிந்தன் பற்றிய மேலதிக தகவல்கள் தெரிந்தால் யாராவது தயவுசெய்து பதிவு செய்து விடுங்கள்.

Tuesday, June 27, 2006

Karumaiyam



கருமையத்தின் 2ம் நாடகநிகழ்வு யூலை முதலாம் இரண்டாம் திகதிகளில் யோர்வூட் லைபிறரி தியெட்டர் மண்டபத்தில் இடம்பெற உள்ளது.

Saturday, April 29, 2006

“ம்” சோபாசக்தி

83ம் ஆண்டு ஜுலைப் படுகொலையை பக்கத்தலைப்பில் காலமாகக் காட்டி நாவலை ஆரம்பிக்கின்றார் சோபாசக்தி. தொடர்ந்து இடம் என்ற பக்கத்தலைப்பில், அதே காலத்தில் அய்ரோப்பாவின் ஒரு சிறுநகரில் இடம்பெற்ற சம்பவம். நேசகுமார், பிறேமினி தம்பதிகளின் செல்லப் புதல்வி நிறமி (என்ன பெயர் தெரிவோ?) என்ற பதின்ம வயதுடைய சிறுமி கர்ப்பமாக இருக்கின்றாள். மகள் கர்ப்பம் என்று தெரிந்து கொண்ட போது தாய் பிறேமினியின் நடந்து கொண்ட விதம் மிகையான செயற்கைத் தனம். தந்தை நேசகுமார் அசையாது விறைத்துப் போய் விட்டார். மகளின் கர்ப்பத்திற்கு யார் காரணம் என்று அறிய முனைந்து தோற்றுப் போகின்றார்கள் பெற்றோர். நிறமியின் முகத்தில் சாந்தம். எனவே இது வன்புணர்வால் ஏற்பட்ட கர்ப்பம் அல்ல. அவள் தனது இந்த நிலையை இன்பமாக அனுபவிக்கின்றாள் என்பதாய்? அப்படியாயின் அவளுக்கான உடல் உறவில் இன்பத்தைக் கண்டிருக்கின்றாள் என்பதாயும்? இருப்பின் ஆழமான காதலால் ஏற்பட்டதா என்றால் கருக்கலைப்பிற்கு அவள் மறுப்புத் தெரிவிக்காமல் மருத்துவமனையில் கருக்கலைப்புப் பிரிவில் நிர்மலமான முகத்துடன் அமர்ந்திருக்கின்றாள். எனவே காதலன் பற்றிய அக்கறையும் அதில் காட்டப்படவில்லை.

அடிக்கடி அப்பாவான நேசகுமார் என் செல்ல மகள் நிறமியின் கதையைச் சொல்லப் போகின்றேன் என்று ஏதோ சாடை சொல்வதால் “இந்தாள்தான் ஏதோ செய்து போட்டுதோ?” என்ற சந்தேகம் வரத்தான் செய்கின்றது. தொடர்ந்து நிறமியோடு பழகிய இரு இளைஞர்கள் மேல் பெற்றோரிற்கு சந்தேகம் வருவது போல் காட்டி வாசகர்களின் பாதையைத் திருப்பி விட்ட சந்தோஷம் சோபாசக்திக்கு.
இவை அனைத்திற்கும் சோபாசக்தியின் “ம்” நாவலின் கருவிற்கும் சத்தியமாய் எந்தச் சம்மந்தமும் கிடையாது. நாவல் மீண்டும் பின்நோக்கிச் செல்கிறது. நேசகுமார்தான் கதையின் நாயகன். முக்கிய காலம் 83ம் ஆண்டு ஜுலை கலவரமும், அதன் பின்னணிகளும், பாதிப்புக்களும், தொடரும் பாதிப்புக்களும் என்று வைத்துக் கொள்ளலாம். நேசகுமாரை எனும் உருவைத் தவிர மற்றைய கதை உருவங்கள், காலம், இடம் அனைத்தும் உண்மையானவை என்றும் நம்புகின்றேன்.

நேசகுமார் எனும் மனித தெரிவு மிகவும் கவனத்துடன் கையாளப்பட்டிருக்கின்றது. சுவாமி என்ற பெயரோடு, நட்பு, இயக்கம், கொள்கை என்பவற்றை மீறி வெறும் சுயநலவாதியாக ஒரு இயக்கத்தைச் சேர்ந்த இளைஞன் காட்டப்பட்டிருப்பது நாயகன் என்ற வடிவமாகிப் போகாமல் மிகவும் யதார்த்தமாக அமைந்திருக்கின்றது.
அதிகம் எமக்கு வாசிக்கக் கிடைக்காத இலங்கைத் தமிழ் உரைநடை. கட்டுரைகளைத் தவிர நாவலாகவோ, சிறுகதையாகவோ வாசிக்கக் கிடைக்காத மிக முக்கியமான காலப்பகுதி, கதைப்புலம், எழுத்தினூடே இழையோடும் எள்ளல், இவையனைத்தையும் கொண்டு எமது நாட்டின் தொடரும் அவலங்களின் முக்கிய பதிப்பாக சோபாசக்தி “ம்”ஐத் தந்துள்ளார். இருபது வருடங்களுக்கு மேலாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் போராட்டத்திற்கு ஈழத்தமிழர்களாகிய நாங்கள் கொடுத்துக் கொண்டிருப்பது வெறும் “ம்” மட்டும்தான் என்பதை தெளிவாகச் சொல்லியிருக்கின்றார்.

தனது புனைவில் எந்த விதமான விட்டுக் கொடுப்பும் இல்லாமல் யார் யாரல்லாம் இந்தப் போராட்ட கால கட்டத்தில மக்களைக் கொன்று குவித்தார்கள் என்பதோடு, சிறைச்சாலை வாழ்க்கை, சித்திரவதைகள், திட்டங்கள், வெலிக்கடை உடைப்பு, கொலைகள், போராட்டங்கள் என்று ஒவ்வொரு வினாடியையும் வாசகர்களும் உணர்ந்து கொண்டு நகரும் வகையில் சம்பவங்கள் செயற்கைத்தனமின்றி முன்னேறிச் செல்வது, வெறுமனே செய்திகளாகக் கேள்விப்பட்ட பல சம்பவங்களை பலரும் தம்முள்ளும் உணர்ந்து கொள்ளச் செய்திருக்கின்றது. வாசிப்பினூடே சிறைக்கைதிகளோடு சேர்ந்து வாசகர்களும் கூச்சல் போடவும், போராடவும், சிதைந்து போகவும், வாய்விட்டழவும், இறுதியில் சாவை எதிர்கொள்ளும் நிலைக்கும் தள்ளப்படுகின்றார்கள்.
மிக முக்கியமான ஒரு ஈழப்படைப்பாகவும், ஆவணமாகவும் சோபாசக்தியின் “ம்” காக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை.

இனி - நாவலின் முடிவு மீண்டும் அய்ரோப்பாவிற்கு வந்து நிறமியின் கர்ப்பத்தில் போய் நிற்கின்றது. நிறமியின் கர்ப்பத்திற்கு காரணம் அவளது தந்தை நேசகுமார். அவர் இப்போது அய்ரோப்பியச் சிறையில். பிறேமினியும், நிறமியும் பிறேமினியின் அண்ணாவோடு வசிக்கின்றார்கள். தண்டணை முடிந்து நேசகுமார் மனைவி, மகளைத் தேடிவருகின்றார். அவமானப்படுத்தப்பட்டு வீதியில் அலைகின்றார். இறுதியில் மகளைப் புணர்ந்தவன் என்ற பெயரோடு ஈழத்து இளைஞர்களால் கொல்லப்படுகின்றார்.

இத்தனை வன்முறைகளையும் வாழ்வில் கண்டு, அனுபவித்து வந்த ஒரு இளைஞன் சாதாரண ஒரு வாழ்க்கை முறையைக் கையாள முடியாது, அவன் மனப் பிறழ்வில் தனது செல்ல மகளைக் கூடப் புணர்ந்து கொள்வான். இல்லவிடின் சாந்தமே உருவான ஒரு பதின்ம வயது மகளுடன் எந்தத் தந்தையும் நல்ல ஒரு (உடல்) உறவை வைத்துக் கொள்ளலாம் (?). இல்லாவிட்டால் இதற்கு மேலால் ஏதாவது? பின்முன் நவீனத்துவம் இருக்கின்றதா?

சின்ன வயதுப் பெண்களைத் தமது பாலியல் வக்கிரத்திற்கு உபயோகப்படுத்துவது என்பது ஒரு தண்டனைக்குரிய விடையம் என்பதோடு, எமது சமுதாயத்தில் பலரால் முக்கியமாக உறவுகளால் மறைக்கப்பட்டு வரும் ஒரு கொடூரச் சம்பவமாகவுமே பலரால் அடையாளம் காணப்பட்டிருக்கின்றது. தம்மைப் பாதுகாக்க முடியாத, தெரியாத, வயதில் தமக்கு வேண்டிய மிக நெருங்கிய ஆண்களால் (அப்பா, அண்ணா, மாமா, சித்தப்பா) அன்பின் மூலமோ, பயம் காட்டியோ உறவு கொள்ளும் போது சிறுமியும் மௌனமாகிப் போகும் சம்பவங்களே இடம்பெற்றிருக்கின்றன. பதின்நான்கு வயதுச் சிறுமி எனும் போது அவளுக்கும் உணர்வுகள் இருக்கலாம். எனவே எட்டு வயது என்பதை விட்டு மெல்ல பதின்மவயதிற்கு சென்றால் சிறுமியை வேறுவிதமாக அடையாளம் காட்ட முடியும் என்பது தற்போது பல ஆண் எழுத்தாளர்களின் (என் நினைவில் இருப்பவவை சாருநிவேதிதாவின் “உன்னத சங்கீரம் ”, ரமேஷ் பிரேமின் “ஆட்ட விதிகளுக்குள் அடைபட்ட கடவுளின் தடம்”, அ.முத்துலிங்கத்தின் ஒரு சிறுகதை பெயரை மறந்து விட்டேன்) படைப்புக்களில் காணக்கூடியதாக இருக்கின்றது. முக்கியமாக அந்தச் சிறுமியும் அனுபவித்தாள் என்ற வகையில் சிறுமி பிரதிபலிக்கப்படுவது. இந்த ஆண் எழுத்தாளர்கள் வரிசையில் தற்போது (என்ன இழவு பிடித்தோ?) சோபாசக்தியும் இணைந்துள்ளார்.

பதின்ம வயதுப் பெண்ணிற்கு உணர்வு இருக்கலாம். அவள் தன் வயது இளைஞனுடன் உறவு வைத்துக் கொள்ளுவாள், ஆனால் தந்தை (அல்லது அதற்குச் சமனான வயதுடைய மூத்தவன் ஒருவன்) எனின் அது நிச்சயமாக வன்புணர்வாக மட்டுமே அமைந்திருக்கும், இல்லாவிடின் சிறுமிக்கு மனப்பிறழ்வு என்று நான் கூறப் போகின், இது உண்மைச் சம்பவத்தைத் தளமாகக் கொண்டு எழுதப்பட்டது, எனக்குத் தெரிந்து இப்படியான சிறுமிகள் இருக்கின்றார்கள் என்று இந்த எழுத்தாளர்கள் கூறிவிடின் நான் வாயைப் பொத்திக் கொண்டு இருக்க நேடிடும். தான் காதல் கொள்ளும் ஆணைத் தவிர வேறு எந்த ஒரு ஆணின் தொடுகையும் பெண்களுக்கு மசுக்குட்டி ஊருவது போல் உணர்வைத்தான் கொடுக்கும். பாலியல் தொழில் ஈடுபடும் பெண்கள் மனதைக் கல்லாக்கிக் கொண்டு மசுக்குட்டியை ஊர விடுகின்றார்கள். ஆனால் சாதாரண குடும்பத்தில் சாதாரண வாழ்க்கை வாழும் ஒரு சிறுமிக்கு இந்தத் தேவை இருக்கப் போவதில்லை. நிச்சயமாக “ம்” இல் வரும் நிறமி போன்ற ஒரு பாத்திரத்திற்கு இப்படி ஒரு தேவை இருந்திருக்காது.
எமது நாட்டுப் போராட்டத்தின் மிக முக்கியமான ஒரு பதிவை எழுதத் தொடங்கிய சோபாசக்திக்குத் தனது எழுத்தின் மேல் நம்பிக்கை இல்லாமலா இப்படி நிறமி என்றொரு சிறுமியைப் புகுத்தி கர்ப்பமாக்கி தன் எழுத்தைக் கேள்விக் குறியாக்கி? நாவலில் முன் பின் சில பக்கங்ளை வெட்டி எறிந்து விட்டால் “ம்” மறக்க முடியாத ஒரு முக்கியமான புனைவு.

Friday, April 14, 2006

சம்சாரா




தனது 29வது வயதில் மனைவி யசோதராவையும், மகன் ராகுலையும் இரவு நேரம் தனியே விட்டுச் செல்லும் போது சித்தார்த கௌதமன் அவர்களின் எதிர்காலம் பற்றியோ யசோதராவின் மனவேதனை, மகன் ராகுலின் ஏக்கம் பற்றியோ ஒரு கணம் சிந்தித்திருக்கவில்லை. சிந்தித்திருந்தால் உலகிற்கு கௌதம புத்தர் கிடைத்திருக்க மாட்டார். துறவு வேண்டிய ஒருவர் எதற்காக லௌகீக வாழ்க்கைக்குள் புகுந்து ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டும்? எதற்காக ஒரு பெண்ணைக் கண்ணீருக்கு ஆளாக்க வேண்டும். இப்படியான வாதமும் இருக்கின்றது. பீஜீ நாட்டில் பட்டிணியால் வாடும் குழந்தைகளை எண்ணிப் பாரதி கண்ணீர் வடித்தான் எனும் போது தன் சொந்தப்பிள்ளைகள் பற்றி சிந்தனையில்லாது என்று “பாரதி” திரைப்படம் வந்த போது விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.
2001ம் ஆண்டு ரொறொண்டோ சர்வதேச திரைப்படவிழாவில் திரையிடப்பட்டு பார்வையாளர்களின் தெரிவில் சிறந்த திரைப்படமாகத் தெரிவு செய்யப்பட்ட “சம்சாரா” இந்திய இயக்குனரான நலீன் பானின் முதல் முழுநீளத் திரைப்படமாகும். வடஇந்தியாவில் லடாக் மலைப்பிரதேசத்தில் முற்றுமுழுதாகப் படப்பிடிப்பு செய்யப்பட்டுள்ளது.

தாஷி தனது ஐந்தாவது வயதிலிருந்து துறவற வாழ்வில் ஈடுபட்டு வருகின்றான். மூன்று வருட கடும் தவத்தை முடித்துக் கொண்டு மீண்டும் மடாலயத்திற்குத் திரும்பும் அவன் வாழ்க்கையில், வாழ்வியல் பற்றிய பல கேள்விகள் எழத் தொடங்குகின்றன. தன்பால் உண்டாகும் பாலியல் உணர்வுகள் அவனைக் குழப்பத்திற்குள்ளாக்குகின்றது. வெளியுலகை நோக்கி அவன் தேடல் அதிகரிக்கின்ற போது, பேமா எனும் வயல் வேலை செய்யும் இளம் பெண் அவனைக் கவர்ந்திழுக்கின்றாள். துறவறமா? இல்லை அறவறமா? குழம்பிப்போகும் தாஷி இறுதியில் மடாலயத்தை விட்டு விலகி பேமாவைத் தேடிச் செல்கின்றான்.

இல்லறத்தில் சுகம் கண்டு மகவொன்றிற்குத் தந்தையாகி, மனித மனங்கள், வியாபார யுக்திகள் என்று சாதாரண வாழ்வையும் அடையாளம் கண்டு அதனுடனும் விளையாடப் பழகிக் கொள்ளும் தாஷியின் கவனம் கூலி வேலை செய்யும் கவர்சிகரமாக பெண்ணொருத்தி மேல் திரும்புகின்றது.

மனைவி வீட்டிலில்லாத ஒரு பொழுதில், அப்பெண்ணுடன் அவன் உறவு கொள்வதும், மனைவி திரும்பி வந்த பின்னர் குற்ற உணர்வால் போராடிப் போவதும் “ச்” இதுதானா வாழ்வு என்று அவன் மனம் குன்றி குற்ற உணர்வில் இருந்து தன்னை மீட்க மனைவி, குழந்தையை விட்டு ஒரு இரவு நேரம் தனது உடைகளைக் கழைந்து மீண்டும் துறவறம் பூண்டு மடாலயத்தை நோக்கிச் செல்லும் கணவனை வழி மறிக்கும் பேமா சொல்கின்றாள்
சித்தார்தா தான் சென்ற பின்னர் யசோதா படப்போகும் அவமானம், வாழ்வதற்கான போராட்டம், மனவேதனை பற்றி சிறிதும் யோசிக்க வில்லை, ஆண்களுக்கு இது மிகவும் இயல்பானது, ஆனால் யசோதாவால் முடியாது தூங்கும் தனது குழந்தையை இரவோடு இரவாக விட்டுச் செல்ல இதுதான் ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள வேறுபாடு.”
தாஷி ஆடிப் போகின்றான். தன்னை மன்னித்துவிடும் படி பேமாவின் கால்களில் விழுகின்றான். பேமா அவனைத் துச்சம் செய்து தனது குழந்தையிடம் செல்கின்றாள். ஆண், பெண் மனதை நன்றாகவே படம்பிடித்துக் காட்டியிருக்கின்றார்கள்.


மலைப்பிரதேசத்தில் கண்களுக்கு இதமான படப்பிடிப்பு, இயல்பான நடிகர்களின் நடிப்பு, கம்பி மேல் நடப்பது போன்ற கவனதுடன் சிறிதும் சறுக்கிவிடாமல் மிக நிதானமாக எழுதப்பட்ட பிரதி, முகத்தைச் சுளிக்க வைக்காத மிக அற்புதமான பள்ளியறைக்காட்சிகள் என்று திரைப்படம் மிகத்தரமான பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கின்றது.

Saturday, April 08, 2006

Rohinton Mistry




மைக்கல் ஒண்டாச்சி, சியாம் செல்லத்துரை இவர்களின் வரிசையில் றொஹின்ரன் மிஸ்ரியும் எம்மோடு நெருக்கமுடைய கலாச்சார வழி வந்த இன்னுமொரு சிறந்த எழுத்தாளராய் கனடாவில் இருந்து தரமான நாவல்களை எழுதித் தடம் பதித்துள்ளார். சியாம் செல்லத்துரையின் நாவல்கள் கொழும்பைத் தளமாகக் கொண்டது போல் றொஹின்ரன் மிஸ்ரியின் சிறுகதைகள் நாவல்கள் அனேகமானவை மும்பையைத் தளமாகக் கொண்டு அமைந்திருக்கின்றன.

றொஹின்ரன் 1957ஆம் ஆண்டு மும்பையில் ஒரு பாசி குடும்பத்தில் பிறந்தவர். அனைத்து இந்தியர்களின் கனவு, இலட்சியம் போல் உயர்தரக் கல்வியின் பின்னர் வெளிநாடு சென்று வேலை எடுத்து தங்கிவிடுவது என்ற அடைப்புக்குறிக்குள் தனது வாழ்க்கையையும் அடைத்து அதன் காரணமாகக் கனடா வந்தவர். (Quoted in Mehfil, November 1996)

1975இல் கனடாவிற்கு குடிபெயர்ந்து ரொறொண்டோ வங்கி ஒன்றில் வர்த்தகத்துறையின் வேலைக்கமர்ந்த றொஹின்ரன் 1983இல் தனது முதலாவது சிறுகதையான ‘One Sunday’ யை வெளியிட்டு Canadian Hart House Literary Contest பரிசையும் பெற்றார். 85இல் மீண்டும் 'Auspicious Occasion' எனும் சிறுகதைக்குப் பரிசைப் பெற்றதோடு மட்டுமல்லாமல் கனேடி அரசாங்கத்திடமிருந்து கிடைத்த பண உதவி றொஹின்ரனை முழு நேர எழுத்தாறராக மாற்றியது. இவரது முதல் சிறுகதைத் தொகுப்பான ‘Tales from Firozsha Baag’ எனும் தொகுதியை பென்குயின் பதிப்பகம் வெளியிட்டது.

றோஹின்ரன் மிஸ்ரியின் மூன்று நாவல்களான ‘Such a Long Journey’ (1991),
‘A Fine Balance’ (1996), ‘Family Matters’ (2002), மிகுந்த வரவேற்பை வாசகர்களிடமிருந்து பெற்று Booker Prize for Fiction, Man Booker Prize for Fiction போன்ற பரிசுகளையும் பெற்றுத்தந்துள்ளன. அண்மையின் வெளியான மிகச்சிறந்த நாவல் என இவரது ‘A Fine Balance’ அடையாளம் காணப்பட்டிருக்கின்றது.

மிஸ்ரியின் சிறுகதைகள் நாவல்கள் அனைத்துமே முக்கியமாக மும்பையில் வசிக்கும் பாசி குடும்பத்தின் துன்பங்கள், மூடநம்பிக்கைகள் போன்றவற்றைத் தளமாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கின்றன.

‘Such a Long Journey’ - இந்நாவல் 1971ஆம் ஆண்டு இந்திராகாந்தியின் ஆட்சிக்குக் கீழ் இந்தியா போர் மூலம் பங்களாதேஸ் ஆகப் பிரிவு கண்ட காலத்தை அடித்தளமாகக் கொண்டு மும்பைபில் வசிக்கும் குப்தா எனும் ஒரு வங்கி ஊழியரின் வாழ்க்கையைத் தாங்கி நகர்கின்றது. ஒரு நடுத்தர வங்கி ஊழியன், அவரது மூடநம்பிக்கைகளைக் கொண்ட மனைவி, திறமை இருந்தும் ஒரு சாதாரண தந்தையின் கனவுகளை நிறைவேற்ற விரும்பாத தனித்துவத்தை விரும்பும் மகன், அடிக்கடி நோயின் விழும் மகள்; என்று குப்தாவின் குடும்பத்தை கருவாகக் கொண்டு நாவல் நகர்ந்தாலும், இந்திராகாந்தியின் ஆட்சியின் அக்கிரமச் செயலால் பாதிக்கபட்டு இறக்கும் ஒரு ஓய்வு பெற்ற இராணவ வீரர், மூளை பாதிக்கப்பட்ட இளைஞன் அவனது உணர்வுகள், குப்தாவோடு பணிபுரியும் நண்பர்கள் என்று பலரது அடையாளங்களைத் காட்டி நிற்கின்றது இந்த நாவல்.

‘A Fine Balance’ - இந்நாவல் அண்மையில் வாசித்த மிகச்சிறந்த நாவல் என்று கூறும் தரத்தோடு இருக்கின்றது. 1975இல் இந்தியாவில் ‘அவசரகால ஆட்சி’ பிரகடனப்படுத்தப்பட்ட போது மும்பையில் வசித்த நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த டயானா எனும் பெண்ணினின் வாழ்வை மையப்படுத்தி அவரது சிறு பிராயத்தில் தொடங்கி முதுமை வரையின் நாவல் நீள்கின்றது. பெண்கள் மேலான ஆண்மையின் அடக்குமுறை அதை எதிர்த்து நிற்கும் டயானாவின் திறமை, பொருளாதார நெருக்கடி, டயானா சந்திக்கும் மனிதர்கள் என்று தன் எழுத்தால் வாசகர்களை பாத்திரங்களுக்குள் கொண்டு சென்றுள்ளார் மிஸ்ரி.
நகர சுத்திகரிப்புத்திட்டம், குடும்பக்கட்டுப்பாடு என்ற பெயரில் வீதியோரப் பிச்சைக்காறர்களையும், பாமர மக்களையும் அரசாங்கம் நடாத்தும் முறை மிகவும் நெகிழ்சி தரும் வகையில் எழுத்தப்பட்டிருக்கின்றது.

இந்திராகாந்தியின் அரசியல் காலகட்டத்தில் இந்திய மக்கள் அவர் மேல் கொண்டிருந்த வெறுப்பை மிகத் துல்லியமாகவும் துணிவோடும் தந்திருக்கின்றார் மிஸ்ரி.
மூன்று வருடங்கள் திருமணத்தின் பின்னர் கணவனை ஒரு விபத்தில் இழந்த டயானா, ஆணாதிக்கவாதியான தனது அண்ணனுடன் தங்க நேர்ந்து விடுமோ என்று அஞ்சி, வாழ்வை ஒரு போராட்டம் நிறைந்த சவாலாக எதிர் கொண்டு முன்னேறும் போது டயானாவின் வீட்டின் அறையில் வாடகைக்கு வந்து சேரும் மொனீக் எனும் பல்கலைக்கழக மாணவன், டயானாவின் தையல் வேலைக்கு என வந்து சேரும் ஐவர், ஓம் எனும் கிராமத்தைச் சேர்ந்த தலித் ஆண்கள் இவர்களுடனான டயானாவின் உறவு என கதை நீண்டு செல்கின்றது.

ராஜ்கௌதமனின் ‘சிலுவைராஜ் சரித்திரம்’, ‘காலச்சுமை’, ஜெயமோகனின் ‘ஏழாம் உலகம்’, எஸ். ராமகிறிஷ்ணனின் ‘நெடுங்குருதி’ போன்ற பல தரமான இந்தியத் தமிழ் நாவல்களின் வரும் சம்பவங்கள் இந்த “A Fine Balance” ஐப் படிக்கும் போது நினைவில் வந்து சென்றது. காரணம் மேற்கூறிய அனைத்து நாவல்களும் இந்திய மக்களின் மூடநம்பிக்கைகள், வாழ்க்கை முறை, போராட்டங்கள், துன்பங்கள் போன்றவற்றை மிக துல்லியமாக எழுத்தில் கொண்டு வந்திருக்கின்றன.


மனித போராட்டத்தை எடுத்துச் செல்லும் படைப்புக்கள் மக்களுக்கு நம்பிக்கை தரும் வகையில் தமது முடிவைக் கொண்டிருக்க வேண்டும் என்று பல வாசகர்கள் சொல்லக் கேட்டிருக்கின்றேன். ஆனல் ஒரு தரமான படைப்பு சமகால சமூகத்தைப் பிரதிபலிப்பதாக இருக்கும் தருணத்தில் மனித போராட்டத்தை அது எடுத்துக்காட்டும், சமகால சமூகம் நம்பிக்கை தருவதாக இருப்பின் முடிவும் அப்படி அமையலாம். ஆனால் படைப்பாளியின் பார்வையில் சமூகம் அதனைப் பிரதிபலிக்கத் தவறும் போது படைப்பின் முடிவும் நம்பிக்கை அற்றதாகவே அமைந்து விடுகின்றது. மிஸ்ரியின் இந்த நாவலில் வாழ்வோடு போராடும் அத்தனை கதாபாத்திரங்களும் தோற்றுப் போகின்றன. பிரமாண்டமாய் வளர்ந்து விட்ட அராஜக உலகின் முன், வெறுமனே மனிதாபிமானத்தோடு, சுதந்திரமாக வாழ முயல்வது எப்படிச் சாத்தியம்? நெஞ்சை நெகிழ வைத்துக் கண்களைப் பனிக்க வைக்கும் காத்திரமாக ஒரு படைப்பு இந்த “A Fine Balance” தரமான ஒரு நாவலை படிக்க ஏங்கும் வாசகர்களுக்கு றொஹின்ரன் மிஸ்ரியின் “A Fine Balance” நிச்சயமாகப் பரிந்துரைப்பேன்.

Thursday, March 02, 2006

Uyirppy