Tuesday, June 21, 2005

கு-டிக்டிக்-கதை

நேரம் தாமதித்து வீட்டிற்கு வந்ததால், அடித்துத் துன்புறுத்திய அண்ணனைப் பற்றி, பொலீசாரிடம் புகார் கொடுத்தாள் ஈழத்துத் தமிழ் இளம்பெண் ஒருத்தி. இந்த வழக்கு கோட்டிற்குச் வந்தபோது கனேடிய வாரப்பத்திரிகை ஒன்று, தெற்காசிய பெண்கள் அமைப்பில் ஆலோசகராகப் பணிபுரியும் தமிழ் பெண் ஒருவரிடம், இந்தச் சம்பவம் பற்றி அவர்கள் என்ன நினைக்கின்றார்கள், இவ்வாறான உபாதைக்கு உள்ளாகும் தெற்காசியப் பெண்களுக்கு அவர்கள் எந்த வகையில் உதவப் போகின்றார்கள் என்று கேட்ட போது, அந்த தமிழ் ஆலோசகர் இப்படியான பிரச்சனைகள் அனேகமாக எங்கள் நாட்டுக் கீழ்ச்சாதி மக்களாலேயே வருகின்றன. இதற்காக நான் மிகவும் மனம் வருந்துகின்றேன், வெட்கப்படுகின்றேன் என்று கூற அச்செய்தி ஆங்கிலப்பத்திரிகை ஒன்றில் வெளியானது.
இச் செய்தியைப் படித்த தமிழ் சமூக விரும்பிகள் சிலர் கொதித்தெழுந்து அந்தப் பெண்ணிற்கு எதிராகப் பத்திரிகையில் அறிக்கை விடவேண்டும், அவரைப் பணியில் இருந்து தூக்க வேண்டும் என்று அவசரக் கூட்டம் ஒன்றைக் கூடினார்கள். அக் கூட்டத்தில் எப்படிப் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள், புலம்பெயரும் போது சாதி வெறியையும் தம்முடன் காவி வந்துள்ளார்கள் என்று கலந்துரையாடப்பட்டது.

கூடியிருந்தவர்களில் ஒருவர் எழுந்து தனது ஊரில் தனது அயலவர்கள் எவ்வாறு தாழ்த்தப்பட்டோரை நடாத்துகின்றார்கள் என்றும், தனது பெற்றோர் மிகவும் பெருந்தன்மையாக பாரபட்சம் பார்க்காமல் கீழ்ச்சாதி மக்களை அணுகுகின்றார்கள் என்று கூறி அமர்ந்தார். அடுத்து ஒரு பெண்மணி தனது சொந்தங்கள் தமக்கு மாவிடிக்கும் மனுசிக்கு தம்முத்தத்தில் வைத்து வாழை இலையில் உணவு பாரமாறுவார் என்றும், தான் தனது குசினிக்குள் அவளை இருந்தி அவளுக்கான பிரத்தியேக கோப்பையில் உணவைப் பரிமாறுவேன் என்றும் பெருமையாகக் கூறி அமர்ந்தார். அடுத்தவர் தன் வீட்டிற்கு விளையாடவரும் கீழ்ச்சாதிப் பிள்ளைகளை தான் பாரபட்சம் பார்க்காமல் சேர்த்துக் கொள்ளுவதாகக் கூறினார். இப்படியாக கலந்து கொண்டவர்கள் உரையாற்றி, உரையாற்றி உலர்ந்து விட்ட வாயை ஈரப்படுத்த ஒருவர் அருகில் இருக்கும் ரிம்ஹோட்டன் கடைக்குச் சென்று எல்லோருக்கும் டபுள் டபுள் கோப்பி வாங்கி வந்தார்.

அதன் பின்னரும் பலரின் அநுபவப் பகிர்தலோடு பல மணிநேரங்கள் தொடர்ந்த கூட்டத்திலிருந்து, தெற்காசியப் பெண்கள் அமைப்பில் ஆலோசகராக வேலை பார்க்கும் அந்த தமிழ் பெண்ணிற்கு எதிராக ஒரு கடிதத்தை எழுத முடிவெடுத்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்களின் சிந்தனை சிதறல்களால் உடல்கள் நொந்து நூடில்சாகிப் போக (ஈழநாதனின் சிலாங்) இரவு உணவாகச் சைனீஸ் நூடில்ஸ் ஓடர் பண்ணலாம் என்று ஒருவர் ஆலோசனை கூற, கொஞ்சம் சிக்கின் விங்சும் சொல்லி பியர் போத்திலும் வாங்குவம் நாளைக்கு வேலையில்லைத்தானே என்று இன்னுமொருவரின் ஆலோசனையின் படி கடிதம் தயாராகும் அதே வேளை நூடில்ஸ் பியர் போன்றவையும் வந்து சேர்ந்ததன. கடித்துக், குடித்து கடிதத்தைத் தயார் செய்த மனத்திருப்தியுடன் அந்தக் கூட்டம் நிறைவிற்கு வந்தது.

(இந்தக் கதையில் இடம்பெற்ற சம்பவங்கள் அனைத்தும் கதாசியரியின் கற்பனை என்று சொல்ல மாட்டேன்)

No comments: