Friday, April 10, 2009

அடுத்தது என்ன?

ஒரு புறம் வேடன், மறுபுறம் நாகம் என்ற நிலையில் இன்று வன்னி மக்கள் படும் வேதனை தமிழ் தொலைக்காட்சிகளிலும், மின்தளங்களிலும் பார்த்து மௌனம் ஒன்றைத் தவிர வேறு வழியில்லா நிலையிலும், ஒருநிலைக்கு மேல் மௌனித்திருக்கவும் முடியா நிலையிலும் புலம்பெயர்ந்த எத்தனையே தமிழ் மக்கள் தங்களுக்குள் புலம்பித்தீர்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.
UN இடமோ இல்லையேல் தாம் புலம்பெயர்ந்து வாழும் நாட்டின் அரசிடமோ வன்னி மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்ற உதவுங்கள் என்று கையேந்த முடியாத நிலையில் உள்ளார்கள் இவர்கள். காரணம் பயங்கரவாத அமைப்பென்று தடை விதித்த பின்னரும் “அரசே உனது தடை எங்களுக்கு ஒரு வடை” என்று கோஷம் போட்டு தம்மை அகதிகளாக ஏற்றுக்கொண்ட அரசாங்கத்திடமே நாம் புலிக்கொடிகளோடுதான் எமது பேரணியை நடாத்துவோம் என்று திமிருடன் மோதுகின்றார்கள். நீங்கள் புலிக்கொடிகளோடு வந்தால் நாம் பேச்சு வார்த்தைக்கு வரமாட்டோம் என்று ஓட்டாவா பாராளுமன்றத்தின் முன்னால் இடம்பெற்ற பேரணியின் போது வெளியில் வந்து உரையாட இருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மறுப்புத் தெரிவித்திருந்த போதிலும் அவர்கள் வராவிட்டால் கிடக்கட்டும் நாங்கள் கொடியோடுதான் போவோம் என்று அறிலித்தனமாக நடந்து கொண்ட இவர்களுக்கு, தாம் இழந்தது எதை என்று புரிந்து கொள்ளும் சிற்றறிவு கூட இல்லாமல் போனதுதான் வேதனை. கனேடிய அரசு இதனால் எதை இழந்தது? இவர்களுடைய வோட்டையா?

விடுதலைப்புலிகள் மேல் விதிக்கப்பட்ட தடையை நீங்கும் முகமாக நாகரீகமான முறையில் கோரிக்கைகளை வைத்துக் கொண்டே, கனேடிய சட்டத்தை மதித்து(அது உங்களுக்குப் பிடிக்கிறதோ இல்லையோ - எமது மக்களுக்காக இதையாவது செய்யாவிட்டால் நீங்கள் தமிழர் என்று சொல்வதில் எந்தப் பெருமையும் இல்லை) எமது மக்களின் அழிவைத் தடுக்க கறுப்புக்கொடிகளோடு இந்தப் பேரணிகளை நடாத்தியிருந்தால் தமிழ் மக்கள் மேல் அரசிற்கு சிறிதளவேனும் கரிசனை வந்திருக்கும். அதை விடுத்து எமது தலைவன் பிரபாகரன், என்று தொண்டை கிழியக் கத்திய வண்ணம் புலிக்கொடிகளை சிறுவர் கைகளில் கொடுத்து ஆட்ட வைத்து கனேடிய அரசை வம்புக்கு இழுப்பதால் தமிழ் மக்களை வன்முறையாளர்கள் என்று மேலும் கணிப்பதைத் தூண்டுவதாகவே அமையும். பயங்கரவாதிகள் என்ற தடை விடுதலைப் புலிகள் மேல் இருக்கும் வரை அதனை ஆதரிக்கும் அனைத்தும் சட்ட விரோதமாகப் பார்க்கப்படும். சட்டத்தை மீறு என்று கனேடிய அரசிடம் வேண்டுகின்றார்களா இவர்கள்?

வன்னி மக்களைப் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றுவதை தற்போது புலம்பெயர் தமிழ் மக்கள் விரும்பவில்லை. ஆரம்பத்தில் மக்களுக்காகக் குரல் கொடுத்தவர்கள், திடீரென மாறி தற்போது பேரணிகளில் போது எமது தலைவர் பிரபாகரன் எமக்கு வேண்டும் தமிழ் ஈழம் என்றே குரல் கொடுக்கின்றார்கள். மக்களும் இயக்கமும் ஒன்றே பொதுமக்களைப் பிரித்தெடுத்து விட்டால் விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு அரசிற்கு சில மணிநேரங்கள் போதும் என்பதால், மக்கள் அழிந்தாலும் பரவாயில்லை தமது இயக்கத்தைக் காக்க வேண்டும் என்பதே புலம்பெயர் மக்களின் ஒரே குறிக்கோள். புலம்பெயர்ந்த மண்ணில் வாழும் வரை இவர்கள் கோஷம் இதுவாகத்தான் இருக்கும்.

அழிவது வன்னி மக்கள், புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் தமது மனச்சாட்சியின் உறுத்தலைத் தணிக்கப் பணத்தை இயக்கத்திற்குக் கொடுத்து விட்டுச் சுகபோகமாக வாழப்பழகிக் கொண்டவர்கள். தற்போதைய அரசியல் சூழல் அவர்களின் சுகபோக வாழ்க்கை முறையில் எந்த வித மாற்றத்தையும் கொண்டு வரப்போவதில்லை.  இச்சூழ்நிலையைப் பயன்படுத்தி பணம் பண்ணும் வியாபாரிகள்தான் அதிகரித்திருக்கின்றார்கள். வீட்டிற்கு இரண்டு மூன்றென்று புலிக்கொடிகளும், ரீசேட்டும், கார் ஒட்டிகளும் வியாபாரிக்களுக்கு பாரிய அளவில் வியாபாரத்தைக் கூட்டியிருக்கின்றன. (இயக்கத்திற்கு அனுப்பப் பணம் சேர்க்கின்றேன் என்று இனிமேலும் காதில் பூ சுத்த முடியாது) அதே வேளை எந்த அடிப்படை சட்ட அறிவும் இல்லாமல், யார் எதைச் சொன்னாலும் நம்பிவிடும் அறிவிலித் தனத்துடன் “வணங்காமண்” என்ற கப்பல் உணவுப் பொருட்களோடு லண்டனில் இருந்து ஈழம் நோக்கிச் செல்கின்றதாம் கனடாவில் இருக்கும் நாங்களும் ஏன் கப்பல் விடக் கூடாது என்று ஏங்குகின்றார்கள் சிலர்.
முப்பது வருட போராட்டத்தில் மிகப் பிரமாண்டமாக பேரணிகளைத் தற்போதுதான் உலகெங்கும் தமிழர்கள் நடாத்துகின்றார்கள். விடுதலைப்புலிகள் மேல் தடை விதிக்கப்பட்ட போது கூட சின்னதாக ஒரு சலசலப்போடு நிறுத்திக் கொண்டவர்கள், தொடர்ந்து சிங்கள இராணுவம் தமிழ் மக்கள் மேல் பிரயோகித்து வரும் வன்முறைகளுக்குப் பெரிதாகக் குரல் கொடுக்கவுமில்லை. அப்போதெல்லாம் கனடாவின் வாழ்க்கையில் இன்புற்றிருந்த இவர்கள் தற்போது விடுதலைப் புலிகள் அழியும் நிலைக்கு வந்த போதுதான் தொண்டை கிழியக் கத்துகின்றார்கள். இத்தனை பெரிய போராட்டங்களை ஏன் இவர்கள் முன்பு நிகழ்த்தாமல் போய் விட்டார்கள்? நிகழ்த்தியிருந்தால் எப்போதே உலக நாடுகளின் உதவியை நாடியிருந்தால் ஏதாவது ஓரு சுமூகமான தீர்வு எமக்குக் கிடைத்திருக்கலாம் அல்லவா? அப்போதெல்லாம் தமது சொந்தங்களைப் பாதுகாப்பாக எப்படி வெளிநாட்டிற்கு எடுக்கலாம் என்பதில்தான் அவர்கள் கவனம் இருந்தது போலும்.

மின்தளங்களில் சிங்களமக்களின் வாசகங்களைப் பார்க்கும் போதுதான் உறைக்கின்றது. இனிமேல் எமக்கென்று சொல்லிக் கொள்ள ஒரு இடமில்லை. புலம்பெயர்ந்த நாட்டில் வாழ்ந்தாலும் ஒட்ட முடியவில்லை. தமிழ் என்று குரல் கொடுத்துக் கொண்டு தமிழ் மக்களின் அழிவிலும், மண்ணின் அழிவிலும் வியாபாரம் செய்து தம்மைச் செழுமைப் படுத்திக் கொள்ளும் சிறுமைத்தனங்களைக் காணும் போது அடக்க முடியாத சினம் எழுகின்றது. அது மட்டும்தான் எம்மால் முடிகின்றது. இத்தனைக்கு அவர்கள்தான் தமிழ் உணர்வாளர்கள் என்ற பெயரோடு உலவுகின்றார்கள்.

இத்தனை வருட கால போராட்டத்தில், இயக்கத்திடம் பாரிய திட்டம் எதுவும் இருக்கவில்லை. ஆயுதங்களின் மிரட்டல்கள் தனிநாட்டைச் சுலபமாகப் பெற்றுத் தந்து விடும் என்று நம்பினார்கள். சிங்கள அரசோ மிக நிதானமாக இனச் சுத்திகரிப்பை திட்டம் போட்டு உலக நாடுகளில் துணையோடு அமுல் படுத்தி வருகின்றது. வடக்கில் பல இடங்களில் இராணுவம் பெரிய பண்ணைகளை ஆரம்பித்து தமிழ் மக்களை வேலைக்கமர்த்தி அவர்களுடன் இணைந்து வேலை செய்கின்றது. வவுனியாவிலும், இனிமேல் கைப்பற்றப்பட்ட வன்னிப் பிரதேங்களிலும் இதே செயல்திட்டத்தை அமுலுக்குக் கொண்டு வர உள்ளது. பாடசாலைகள், மருத்துவமனைகளை இப்பிரதேசங்களில் அமைத்துக் தமிழ் மக்களுடன் சுமூகமான ஒரு நிலையை உருவாக்கிய பின்னர் பாடசாலைகளில் மெல்ல மெல்லத் தனிச்சிங்களச் சட்டத்தைக் கொண்டு வந்து காலப் போக்கில் தமிழை அழித்து இலங்கை எனும் நாடு தனிச் சிங்கள நாடாக மாற்றுவதே சிங்கள அரசின் திட்டம் என்றார் ஒரு தமிழ் அரசியல் ஆய்வாளர்.

தான் சாய்ந்தாலோ தடுமாறிப் போனாலோ துணையாய்ப் பக்க பலமாய் தன்னோடு இணைந்து போராட விடுதலைப்புலிகள் இயக்கம் இன்னொரு வளத்தைத் தயார்படுத்தி வைக்கவில்லை. இன்று தனிக்கல்லில் கட்டப்பட்ட உயர்ந்த கட்டிடமாய் வளர்ந்து நிற்கும் இயக்கத்தின் அஸ்திவாரம் ஆட்டம் காணும் நிலையில், முற்று முழுதாகச் உடைந்து சுக்கு நூறாகப் போகும் நிலை தான் மிஞ்சி உள்ளது. விடுதலைப்புலிகளில் வளர்ச்சியிலும் வீழ்ச்சியிலும் குளிர்காய்ந்த புலம்பெயர் மக்களே அதிகம். வெளிநாடுகளில் இருந்து புலிக்கொடிகளோடு கத்தி ஒன்றும் நிகழப் போவதில்லை என்பது இவர்களுக்கு உறைக்கவும் போவதில்லை. ஓட்டாவா பத்திரிகை ஒன்றில் தமிழ் மக்கள் பாராளுமன்றத்தின் முன்னாள் நாடாத்தும் போராட்டம் பற்றிக் குறிப்பிட்டு விட்டு, வீதிகளில் வாகனங்களுக்கும், பிரயாணிகளுக்கு இவர்கள் இடஞ்சலாக உள்ளார்கள் என்றும் குறிப்பிட்டிருக்கின்றது. அதே வேளை இந்தியாவில் சீமான், வைகோ போன்றோரின் வன்முறையைத் தூண்டும் பேச்சுக்கள் தமிழ்நாட்டு மக்களிடம், பொதுவாகக் குடும்பப் பெண்களிடம் சினத்தைதான் வரவழைக்கின்றது. எந்த நாடும் தனது சீர்நிலை குலைவதை விரும்பவதில்லை. அதனைத் தூண்டும் பேச்சுக்களையும் அது அனுமதிப்பதில்லை. சிங்கள அரசிற்குத் தெரியும் எந்த ஒரு உலகநாடும் தனது இராணுவத்தை விடுதலைப்புலிகளுடன் இணைத்துக் கொண்டு தன்னை அழிக்கப் போராடாது என்று. அத்தோடு புலம்பெயர் நாடுகளில் தமிழ் மக்களின் அழுத்தம், உலக நாடுகள், UN ஆகியவற்றின் மேல் தாக்கத்தை ஏற்படுத்தின் அது வன்னி மக்களைப் பாதுகாப்பாக போர் வலையத்திலிருந்து வெளியேற்றுவதாக மட்டுமே அமைந்திருக்கும். அதைத்தான் சிங்கள அரசும் வேண்டி நிற்கின்றது.

புலம்பெயர்ந்த தமிழ் மக்களால் ஆயுதங்களுக்குப் பணத்தை மட்டும்தான் அனுப்ப முடியும். தாமும் இணைந்து கொண்டு இராணுவத்தைப் பலப்படுத்துவோம் என்று பேச்சுக்காவது இவர்கள் எண்ணினார்களா? கேட்டால் இங்கிருந்து வேலை செய்யவும் ஆட்கள் தேவை என்று முறைத்து விட்டு மறைந்து விடுவார்கள். இன்று புலம்பெயர்ந்த மக்களின் பணத்தில் கொள்வனவு செய்யப்பட்ட அத்தனை ஆயுதங்களும் சிங்கள இராணுவத்தின் கைகளில் அகப்பட்டு தமிழ் மக்களையே அழிக்க உபயோகிக்கப்படப் போகின்றது.

இந்திய இலக்கியவாதி ஒருவரிடம் உரையாடிக்கொண்டிருக்கும் போது அவரின் தகவல்படி சிங்கள அரசு தனது உறுப்பினர்களை இந்தியாவின் அனைத்து மாநிலங்களிற்கும் அனுப்பி, அங்கிருக்கும் அரசியல்வாதிகள், முற்போக்குவாதிகள், பத்திரிகையாளர்களை சந்திக்கும் படி செய்து, விடுதலைப் புலிகள் இயக்கம் முற்றுமுழுதான ஒரு பயங்கரவாத இயக்கம், இதனால் தமிழ் மக்கள், சிங்கள மக்கள் அனைவருக்குமே பாதுகாப்பு இல்லை என்று உரை நிகழ்த்தி அவர்களை தம் சார்ப்பாக்கியிருக்கின்றது. அதே போல் உலக நாடுகள் பலவற்றுடனும் சந்திப்பு நிகழ்த்தியிருக்கினறது, ஆனால் விடுதலைப்புலிகள் இயக்கம் உலக நாடுகளில் ஆதரவைப் பெற்று கொள்வதற்கான எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. தான் ஒரு மலையாள சஞ்சிகையில் தொடர்ந்து ஈழத்தமிழர்களில் நிலை பற்றி விளக்கி எழுதி வந்ததாகவும், கேரள அரசியல்வாதி ஒருவர் தன்னுடன் தொடர்பு கொண்டு தாங்கள் தவறான தகவல்களை மக்களுக்கு கொடுக்கின்றீர்கள் என்று கூறித் தன்னுடன் உரையாடியதாகவும் அந்த வேளையில் சிங்;கள அரசு அனைத்து மாநிலங்களுக்கும் அரசியல் பயணம் நிகழ்த்தியிருக்கும் தகவலைத் தான் அறிந்து கொண்டதாகவும் தெரிவித்தார்.

அடுத்தது என்ன?

11 comments:

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
கறுப்பி said...
This comment has been removed by the author.
King... said...
This comment has been removed by a blog administrator.
கறுப்பி said...
This comment has been removed by the author.
தமிழ் சசி | Tamil SASI said...
This comment has been removed by a blog administrator.
கறுப்பி said...
This comment has been removed by the author.
தமிழ் சசி | Tamil SASI said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.