Monday, July 27, 2009

தேக்கநிலை

   அண்மையில் என் நண்பர் ஒருவர் இந்தப் புத்தகம் வாசித்து  விட்டீர்களா? என்று ஒரு படைப்பைக்  குறிப்பிட்டு மட்டக்களப்பிலிருந்து மின்அஞ்சல் போட்டிருந்தார். எனது shelfari  யில் “I’ve  read” shelf ஐ விட “I plan to read”  shelf இல் படைப்புக்கள் அதிகரித்து விடுமோ என்று பயமாகவுள்ளது.

 என் வாழ்க்கை முறைக்குள் கிடைக்கும் நேரத்திற்குள் முடிந்தவரை வாசித்துக்கொண்டிருந்தாலும் என் நண்பர்களோடு ஒப்பிடும் போது நான் ஒன்றையும் வாசிக்கவில்லையோ என்று பயமாயிருக்கின்றது. நான் என் வாசிப்பு முறையை மீள்ஆய்வு செய்து பார்த்தேன். கடந்த இரண்டு மாதங்களில் ஐந்து நாவல்களை, மூன்று சிறுகதைத் தொகுதிகளையும், மூன்று கவிதைத் தொகுதிகளையும் வாசித்து முடித்திருக்கின்றேன். இத்தனை படைப்புக்களை வாசித்து முடித்திருந்தாலும் வார இறுதிநாட்களில் நண்பர்களைச் சந்தித்து உரையாடும் போது அவர்கள் கலந்துரையாடும் எந்த ஒரு படைப்பையும் நான் வாசிக்காமல் கலந்துரையாடலில் கலந்து கொள்ள முடியாமல் தொலைந்தவளாய் இருக்கின்றேன். அவர்கள் “நீங்கள் வாசிக்கவில்லையா?” என்று கேட்கும் எப்படித் தவறினேன் என்ற தடுமாறுகின்றேன்.. அடுத்த கிழமை அவர்களை மீண்டும் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைக்குமெனின் அதற்கிடையில் அவற்றையெல்லாம் வாசித்து என்னை “அப் டு டேட்” ஆக வைத்திருக்க முயல்வேன். இருந்தாலும் நான் அவர்களை ஒருபோதும் எட்டியது கிடையாது. கையில் தாராளமான நேரத்தை வைத்துக்கொண்டிருக்கும் இளசுகளுடன் நட்பை வைத்திருந்தால் இதுபோல சங்கடங்களுக்கு ஆளாகவேண்டி வரும் என்பதை உணராமல் வயதுக்கு மீறிப் போட்டிபோட்டுக்கொண்டிருக்கின்றோனோ தெரியவில்லை.

 அண்மைக் காலங்களில் விமர்சனத்திற்குட்படுத்தப்பட்ட ஈழத்து எழுத்தாளர்களான அ.முத்துலிங்கம், கருணாகரமூர்த்தி, ஆகியோரின் படைப்புகள் பற்றி எனது நண்பர்கள் விவாதங்களைச் செய்த போது குற்ற உணர்வில் நான் கதவுக்குப் பின்னால் ஒதுங்கிக் கொண்டேன். இவர்களின் படைப்புக்கள் வீட்டிலிருந்தும் நான் இன்னும் வாசிக்கவில்லை. ஏன் வாசிக்கவில்லை என்று எனக்கே தெரியவில்லை. என் தெரிவில் வேறு படைப்புக்கள் முன்னுரிமை பெற்றுக் கொண்டு செல்வதனால் என்னையறியாமல் இவற்றை நான் வாசிக்கத் தவறவிட்டிருக்கின்றேன். ஈழத்து எழுத்தாளர்களின் படைப்புக்களை வாசிக்காமல் ஒரு ஈழத்து இலக்கியவாசகி இருக்க முடியாது என்று என் நண்பன் சொன்னான். (சோபாசக்தியின் எந்தப் படைப்பும் இதுவரை விடுபடவில்லை). இந்த இலட்சணத்தில் என் எழுத்துக்களை வாசகர்கள் வாசிக்க வேண்டும் என்று நான் எப்படி எதிர்பார்க்க முடியும்? அண்மைக்காலங்களின் என் வாசிப்பு என்னை அறியாமலேயே இந்தியப் பெண் எழுத்தாளர்களின் பக்கம் திரும்பியிருக்கின்றது.

எனது வாசிப்பின் சில பகிர்வுகள்:-

For Marimonial Purposes by: Kavita Dashwani

‘Quickly becoming a spinster by her culture’s standards, she is eager to escape the community that views her as a failure. After pleading with her parents for permission, she boards a plane bound for the United States and a dream of a career. And although husband-hunting isn’t any easier in New York City, at least she’s got company’

http://www.kavitadaswani.com/matrimonal.htm

எனக்கு ஒரு கணவன் வேண்டும். பேச்சுத் திருமணம் என்பது ஒரு விரல்சொடுக்கில் நடந்து முடிந்து விடக் கூடியது. கல்வி, பணம், அழகுஅனைத்தும் எனக்கிருக்கின்றது. நான் மாநிறம். கவனிக்க கறுப்பல்லமாநிறம். எனது சித்தி அடிக்கடி என்னை வெள்ளையாக்க மருந்துவகைகளை அனுப்புவாள். திருமணம் தடைப்பட இது ஒரு காரணமில்லை. வேறு எத்தனையோ காரணங்கள் இருந்தன. எண்ணெய் தலையை படிய இழுத்துவிட்ட, கறுப்பு “பாண்ட்ஸ்” இற்கு வெள்ளை “சொக்ஸ்” போட்ட அக்ரா காறனை நான் மறுத்தது என் அப்பாவிற்குக் கோவம். லண்டனில் ஒரு வெள்ளைச்சியுடன் குடியிருப்பவன் பெற்றோருக்குப் பயத்தில் என்னைத் திருமணம் செய்யச் சம்மதித்து என்னோடு இரண்டு முறை வெளியே கோப்பி குடிக்க அழைத்துச் சென்று என் அழகில் மயங்கிப் போனது என்னவோ உண்மைதான். அவன் கதை அம்பலமாகிக் கல்யாணம் தடைப்பட்டதற்கு எனது நிறம் காரணமாகாது. எனது நண்பிகள் அடுத்தடுத்துத் திருமணமாகிக் குழந்தைகள் பெற்றுக்கொள்வதும், என்னிலும் வயது குறைந்த எனது உறவுக்காறர் பெண்கள் திருமணத்திற்கு நான் சென்று எல்லோரின் இரக்கத்திற்கு உள்ளாவதும், என் படித்த அழகான தம்பிகளுக்கு சம்பந்தங்கள் குவிந்த வண்ணமிருக்க அக்காவின் திருமணத்தின் பின்னர்தான் தமது திருமணம் என்று பொறுமையாக இருக்கும் அவர்களை தினம் தினம் குற்ற உணர்வோடு பார்ப்பது என்பதும் இலகுவான விடையமல்ல விரதங்கள், சாமிகள்,

பூசாரிகள் இத்யாதி, இத்யாதி எதுவும் எனக்கு ஒரு கணவனைத் தேடித் தரவில்லை. வயது மட்டும் ஏறிக்கொண்டே போனது. மாற்றம் வேண்டி நியூயோர்க் சென்று சிறுகச் சிறுக உலகை என்னைப் புரிந்து கொண்டேன். இருந்தும் எனக்கு வேண்டியது ஒரு கணவன். இது அஞ்சுவின் கதை.

Animal’s People -by: Indra Sinha
ஒருகாலத்தில் நான் “மனிதர்களைப் போல்” இரண்டு கால்களில் நடப்பேனாம் என்னை சின்னவயதில் அறிந்தவர்கள் கூறுவார்கள். நான் மிகுந்த குறும்புக்காரன் என்பாள் எனது வீட்டுக்காறி. துருதுருவென்று ஒரு இடத்தில் நிற்காமல் ஓடித்திரிவேனாம். “அந்த இரவு” என்னை மாற்றிவிட்டது. தற்போது நான் ஒரு மிருகம். நான் மிருகம் இல்லை மனிதன்தான் என்கின்றார்கள் மனிதர்கள். நான் நாலுகாலில் நடப்பவன். நாலுகாலி;ல் மனிதன் நடப்பானா? மிருகம் தானே நடக்கும் எனவே நான் ஒரு மிருகம். என்னை எந்தச் சட்டமும் ஒன்றும் செய்ய முடியாது. நான் மிருகமாக அனைத்துச் சட்டத்தையும் மீறிக்கொண்டிருந்தேன் நிஷாவைக் காணும்வரை.
நிஷாவைக் கண்ட பின்னர்தான் எனக்கு இரண்டு காலில் நடக்க வேணும் என்ற ஆசையே எழுந்தது. அமெரிக்காவிலிருந்து வந்த டொக்டர் எலி என்னை அமெரிக்கா அழைத்துச் சென்று இரண்டு காலில் நடக்க வைப்பதாகச் சத்தியம் செய்து கொடுத்திருந்தாள். ஆனால் பிறகுதான் தெரிய வந்தது அவள் “அவர்களின்” ஆள் என்பது. “அந்த இரவு” எனது பெற்றோரைக் கொன்று போட்டது. எனது ஊரையே அழித்து நாசம் செய்தது. கம்பனிவாலாக்கள் அமெரிக்காவில் ஐஸ்வர்யமாக வாழ்கின்றார்கள். இந்த உலகில் எமக்காக நியாயம் கேட்க யாருமே இல்லையா?
போபால் நகரை அழித்த யூனியன் கார்பைட் நச்சுவாயுத் தாக்கத்தைத் தளமாக வைத்து இந்நாவல் எழுதப்பட்டிருக்கின்றது. இவரது முதல் நாவலான “ The Death of Mr.Love” மும்பையில் நாவான்டி சமூகத்தில் 1957ஆம் ஆண்டு இடம்பெற்ற பெயர்பெற்ற காதல் கொலையை மையமாகக் கொண்டு எழுதப்பட்டது. “காமசூத்ரா”வை மொழிபெயர்த்த
இந்ரா சிங்ஹா  Animal’s People  நாவல் வெளியான போது அதன் மொழிக்கானப் பல சர்ச்சைக்கு உட்படுத்தப்பட்டது நாவல் நிராகரிக்கப்பட்ட நிலையில் இருந்தது என்றும், சிறிது காலத்தின் பின்னரே இந்நாவல் அடையாம் காணப்பட்டு விருதுகளைப் பெறும் தரத்திற்கு உயர்ந்தது என்றும் குறிப்பிட்டிருக்கின்றார்.

“Some readers and critics have said that the bad language was “unnecessary”. I informed Animal, who said, “have these cunts spent even one day in Khaufpur? They can fuck off all, and you too.”

The Twentieth Wife -by: Indhu Sundaresan

வரலாற்றுப் புனைவு. 17ஆம் நூற்றாண்டின் முகல் அரசாட்சியின் போது தனது ஆளுமைக்காக மிகக் கவனத்திற்கும், விமர்சனத்திற்கும் உள்ளாகும் இளவரசி மேருனிஷாவின்(நுர்ஜகான்). பிறப்பிலிருந்து புனைவு ஆரம்பிக்கின்றது. இளவரசர் சலீமின் முதல் திருமணத்திற்குச் சென்றிருந்த மெருனிஷாவிற்கு எட்டு வயது. அப்போதே இந்த இளவரசரைத்தான் நானும் மணந்து கொள்ளப் போகின்றேன் என்று உறுதிகொள்கின்றாள் அவள். அரச குடும்பத்தில் பிறக்கா அவளுக்கு அது சாத்தியமற்ற ஒன்று என்று புரிந்து கொள்ள முடியவில்லை. இறுதியாக பல பின்னடைவுகள் சிரமங்களைத்தாண்டி மெருனிஷா சலீமின் இருபதாவது மனைவியாகும் வரை புனைவு நீள்கின்றது.
1577ஆம் ஆண்டு கடும் பனிக்காலம் ஒன்றில் ஹண்டகாரில் ஒரு பேர்சியன் தம்பதிகளுக்குப் பிறக்கும் மெருனிஷாவை வறுமை காரணமாக மரத்தடியில் விட்டுச் செல்ல முடிவெடுக்கின்றார்கள் அவளது பெற்றோர். வீதியோரங்களில் யாராவது தமது குழந்தையை எடுத்து நன்றாக வளர்பார்கள் என்ற நம்பிக்கையில் தமது குழந்தைகளை விட்டுச் செல்வது அப்போது வழக்கமாயிருந்தது. கைக்குழந்தையாக மரத்தடியில் விடப்பட்ட மெருனிஷாவை அவளின் பெற்றோரின் நண்பனே கண்டெடுத்து மீண்டும் அவளை பெற்றோருடன் இணைத்து விடுகின்றார். அன்றிலிருந்து மெருனிஷாவை தனித்தன்மை கொண்ட குழந்தையாகப் பார்க்கின்றார் அவளது தந்தை. சாதாரண குழந்தைகளைப் போலில்லாமல் கல்வியிலும், வாசிப்பிலும் அதிகம் ஆர்வம் காட்டும் இதேகுழந்தை, முப்பத்தியேழு வருடங்களின் பின்னர் முகல் மன்னனை மணந்து முகலின் அரசியாகின்றாள்.

“In her debut novel, Indu Sundaresan takes readers deep inside a 17th-century imperial Mughal court to tell the story of Mehrunissa, a woman who emerged from her husband’s harem to rule as the Empress Nur Jahan. Vivid with period detail and palace politics, The Twentieth Wife is a richly imagined portrait of extraordinary power and independence.”

BORDERS RECOMMENDS on Borders.com

The Feast of the Roses – Indhu Sundaresan

 முகல் மன்னன் ஜகங்கீர்(சலீம்)ஐ மணந்து மெருனீஷா முகல் அரசியாகி நுர்ஜகான் என்ற பதவிப் பெயரைப் பெறுவதிலிருந்து, ஆரம்பிக்கின்றது இவ்வரலாற்றுப் புனைவு. நுர்ஜகானின் தனித்தன்னை, ஆளுமை அழகு போன்றவற்றிற்கு அடிமையாகின்றான் மன்னன் ஜகங்கீர். அரசியின் கையைப் பிடித்து அரச சபைக்கு அழைத்துச் செல்லும், அதுவரை முகல் அரசு கண்டிராத, சட்டத்திற்குப் புறம்பான புரட்சியை செய்கின்றான் மன்னன் ஜகங்கீர். முகத்திரைக்குப் பின்னாலிருந்து கொண்டே முகல் ஆட்சியைக் கொண்டு நடத்துகின்றாள் நுர்ஜகான். ஆஸ்துமா நோயினால் அவதிப்படும் மன்னன், தன்னைச் சுற்றியிருப்பவர்களின் மேல் கொண்ட அவநம்பிக்கையால் முற்றுமுழுதாக நுர்ஜகானிடமே சரணடைந்து விடுகின்றான். மன்னன் இறக்கும் வரை அவனுக்குத் துணையாயிருந்து முகல் அரசைத் திறம்பட நாடத்திய அரசி ஒரு சிறந்த பெண்ணியவாதியாக அடையாளப்படுத்தப்படுகின்றாள்.

“…in The Feast of Roses…several passages are nearly sublime.  Whether one wants to see this as an historical romance or a political and feminist statement is up to the reader.  What Sundaresan gives us in these two novels, however, is a fascinating story and a worthwhile examination of this…empire that is practically unknown to most Americans.  I, for one, hope Sundaresan has much more to tell us about India.”

—PopMatters.com

 அச்சுப் பிரதிகளை மட்டும் வாசித்தால் போதாது, மின்தளங்களையும் வாசித்து எம்மை நண்பர்களுடன் கலந்துரையாடுவதற்குத் தயாராக வைத்திருத்தல் வேண்டும். இல்லாவிட்டால் எல்லாப் பக்கங்களிலிருந்தும் “அட்டாக்” இற்கு ஆளாக நேரிடும். அண்மையில் பாரீஸ் சென்று என் நண்பன் ஒருவரில் வீட்டில் தங்கியிருந்தேன். அவன் காலை எழுந்ததும் முதல் வேலையாகப் தினசரிப்பத்திரிகை வாசிப்பது போல் மின்தளங்களை வாசிப்பதைக் கவனித்தேன். காலை எழுந்தவுடன் ஐந்து நிமிடமாவது யோகா செய்துவிட்டு வேலைக்குப் செல்லுங்கள், இந்த வயதில் உற்சாகமாக இருக்க அது நிச்சயம் உதவும் என்று இந்தியாவிலிருந்து வந்திருந்த எனது நண்பி எனது வயதை நினைவு படுத்திவிட்டுச் சென்று விட்டாள். அந்த ஐந்து நிமிடமும் கட்டிலில் படுத்திருந்து உருளுவதை விரும்பும் எனக்கு ஐந்து நிமிடங்கள் யோகா, பத்து நிமிடங்கள் மின்தளங்களைப் பார்வையிடல் என்பது பயங்கரமாயிருந்தது. இருந்தாலும் என்னை இழுத்து வைத்து சில மின்தளங்களை “புக்மார்க்” பண்ணி வைத்து வாசிக்கத் தொடங்கியுள்ளேன். முன்பெல்லாம் நண்பர்கள் குறிப்பிட்ட பின்பே ஓடிவந்து ஒரு விடையத்தை வாசிக்கும் நான் தற்போது காலை எழுந்ததும் மேலோட்டமாகவாவது சில மின்தளங்களை வாசிக்கின்றேன்.

                                  மின்தளங்களை வாசிப்பது என்பது மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது. படைப்புகள் மூலம் தம்மை தரமான எழுத்தாளர்களாய் அடையாளப்படுத்திக் கொண்டிருக்கும் பல எழுத்தாளர்கள் மின்தளங்களில் குடும்பிப் பிடி சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அத்தோடு எந்தவிதமான தணிக்கையும் இல்லாமல் பிரசுரிக்க முடிந்ததால் ஒவ்வொரு படைப்பாளிகளின் உண்மைப் பக்கங்களையும் எம்மால் காணமுடிகின்றது.
அண்மைக் காலங்களில் மின்தளங்களில் ஆதவன்தீட்சண்யா, தமிழ்நதி, சோபாசக்தி போன்றவர்களின் மோதல்களையும், தொடர்ந்து கொண்டிருக்கும் ஜெயமோகன், சாருநிவேதா தாக்குதல்களையும் வாசிக்கும் சந்தர்பங்கள் கிடைத்தன.

தமிழ்நதியின் தளத்தில் வாசிக்கக் கிடைத்த சுவாரஸ்யமான பதிவு ஒன்று இப்படியிருந்தது :-

//…நான் அறிந்தவரை புலிப்போராளிகள் மக்களின் பாதுகாவலர்களாக, மக்கள் நலன்களுக்காகத் தங்களை அர்ப்பணிக்கிறவர்களாகவே இருந்தார்கள். இருபத்தைந்தாயிரத்துக்கும் அதிகமான போராளிகளும் தளபதிகளும் தம்மைக் களப்பலியாக்கியது அதன் பொருட்டே. பிரபாகரன் அவர்களும் அவ்வாறான கட்டுப்பாடுடைய இயக்கத்திற்குத் தலைவராக இருக்கத்தகு தகுதிகளோடுதான் இருந்தார். அத்தகைய தலைமையின் கீழ் தவறேதும் நடக்க வாய்ப்பில்லை என்று நான் கருதினேன். கடைசிநேரத்தில் அந்த நம்பிக்கை வீண்போயிற்றென்பதை (மக்களை அரண்களாகப் பயன்படுத்தியதில்) நானும் அறிகிறேன். அப்படி நிகழ்ந்திருந்தால் அதை எவ்விதமும் நியாயப்படுத்துவதற்கில்லை. மறுவளமாக, அவ்விதம் நிர்ப்பந்திக்கப்படுமளவிற்கு களநிலைமைகள் மோசமாக அமைந்திருந்தன என்பதும் வருத்தத்திற்குரியதே. அதனால் உயிரிழந்த, பாதிக்கப்பட்ட மக்களின் துயருக்கு ஈடாகச் சொல்ல ஒரு வார்த்தைதானும் இல்லை..\\
 
 பிரபாகரன் இன்னும் இறக்கவில்லை ஐந்தாம் படை வருகின்றது என்ற முழங்கிக்கொண்டு சிலரும், மருந்துக்கும், மண்ணுக்கும் என்று கூறிக்கொண்டு மீண்டும் பணம் சேர்க்கும் கலாச்சாரத்தைத் தொடர்பவர்களுக்கிடையில் தமிழ்நதியின் இந்த மாற்றம் எவ்வளவோ பரவாயில்லை.


அடுத்து ஜெயமோகன் தனது தளத்தில் கமலாதாஸ் மரணம் பற்றி எழுதும் போது இப்படிக் குறிப்பிட்டிருந்தார்:-

  //..கமலாவின் பிரச்சினைகளின் ஊற்றுமுகம் ஒன்றுதான். அவர் அழகி அல்ல. கறுப்பான குண்டான கிட்டத்தட்ட அவலட்சணமான பெண். அழகிகளின் குடும்பத்தில் பிறக்கவும் நேரிட்டது. இந்த தாழ்வுணர்ச்சியில் இருந்து உருவான திரிபு பட்ட ஆளுமை அவருடையது. எங்கும் எப்போதும் தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் முனைப்பும் தணியாத விளம்பர வெறியும் கொண்டவர் கமலா. செய்தித்தாள்கள் தன்னைப்பற்றி எழுதுவதற்காக அவர் எதையும் செய்வார். ஆபாசமாகப் பேசுவார். ஒன்றுமே தெரியாத மழலையாக நடிப்பார். உயர்வாகக் கருதப்பட்டவைகளை உடைத்து வீசுவார். கீழ்மைகளைப் போற்றுவார். விபரீதமாகவும் தடாலடியாகவும் எதையாவது செய்வார். ஒரு சிறு சந்திப்பில் கூட அப்படித்தான் நடந்துகொள்வார்..\\

//..அந்த தாழ்வுனர்ச்சியினால் விளைந்த அணையாத காம இச்சை கொண்டிருந்தார் என அவரது சுயசரிதை மற்றும் குறிப்புகள் காட்டுகின்றன. தோற்றம் காரணமாக புறக்கணிக்கப்படும் பெண்ணின் ஏமாற்றப்பட்ட காமம் அது. அந்த இச்சையையே அவர் விதவிதமாக வெளிப்படுத்தினார். அல்லது அது ஒருவகை வன்மம்..\\

  கறுப்பாக இருப்பது சிலருக்குப் பிடிப்பதில்லை, குண்டாக இருப்பதும் சிலருக்குப் பிடிப்பதில்லை, ஆனால் இவற்றை அழகல்  என்று எந்த அளவுகோலை வைத்து ஜயமோகன் அளவிட்டிருக்கின்றார்? “தாழ்வுணர்ச்சியால் விளைந்த அணையாத காம இச்சை கொண்டிருந்தார்” என்ற ஜெயமோகனின் வரிகளைப் படித்த போது அதற்கு மேல் என்னால் படிக்க முடியாமல் போய் விட்டது. ஒரு எழுத்தாளர் மேல் வைத்திருக்கும் மரியாதை தணிக்கையற்ற அவரது மின்தளத்தைப் பார்க்கும் போது உடைந்து போகின்றது. எமது தளம் எமது கட்டுப்பாட்டில் இயங்கிக்கொண்டிருக்கும் போது யாரும் யாரையும் எந்த வகையிலும் மிக இலகுவாக இகழ்ந்து, கொச்சைப்படுத்தி எழுதிவிடலாம் என்பதை ஜெயமோகன் அறியாதவரும் இல்லை .பின்னர் எதற்கா இத்தனை வக்கிர வரிகள்?
மின்தளங்கள் பொழுதைப் போக்க நல்ல இடமாகவிருந்தாலும் நாவல்கள் வாசிக்கும் போது கிடைக்கும் மனத்திருப்தி மின்தளவாசிப்பின் போது ஒரு போதும் எனக்குக் கிடைத்ததில்லை.
              

No comments: