Monday, February 21, 2005

கனேடிய பெண்கள்

“கருமையம்” எனும் அமைப்பு முதல் முறையாக மூன்று நாடகங்களை மார்ச் மாதம் 19,20ம் திகதிகளில் மேடை ஏற உள்ளன.

கனடாவில் வாழும் பல பெண்கள் ஒன்று சேர்ந்து பெண்களின் பிரச்சனைகளை பட்டறை மூலம் ஆராய்ந்து பாதிக்கப் பட்ட பெண்களுடன் வேலை செய்தும் உதவியும் இருக்கும் பல தகமையாளர்களை அழைத்து வந்து அவர்களது அனுபவங்கள் அவர்கள் எந்த வகையில் பெண்களுக்கு உதவுகின்றார்கள்? போன்ற தகவல்களைத் திரட்டி அத்தகவல்களைக் கொண்டு ஒரு நாடகப் பிரதியை உருவாக்கி பட்டறையில் பங்கு பற்றிய பல இளம் முதிய பெண்களையே வைத்து இந்த நாடகத்தை “கட்டவிழ்ப்பு” எனும் பெயரில் மேடை ஏற்ற உள்ளார்கள்.

இது கனடாவில் இடம் பெறும் முற்று முழுதாக பெண்களின் பங்களிப்பைக் கொண்டு உருவாகும் முதல் நாடகமாகும்.

இந்த பட்டறையை நந்தினி சபேசன் எடுத்து நடாத்துகின்றார். பல வருடங்களாக மனவெளிகலையாற்றுக் குழுவின் அங்கத்தவராக இருந்து தற்போது “கருமையம்” எனும் அமைப்பிலும் இவர் அங்கத்தவராக இருக்கின்றார். ஐரோப்பாவைப் போலல்லாது கனடாவில் பெண்களுக்கான அமைப்பொன்று இல்லாததால் பெண்கள் தாமாக எதையும் செய்யாது எப்போதும் ஆண்களின் உதவியை நாடியும் அவர்கள் இயக்கும் நாடகங்களில் ஒரு பாத்திரத்தை ஏற்று நடிப்பவர்களாகவும் மட்டுமே இருந்து வந்திருக்கின்றார்கள். இந்த நிலமை தங்போது மாறி பெண்கள் கலந்துரையாடல் மூலம் தாமாகவே ஒரு பிரதியை தயாரித்து தாமாகவே ஒன்றாக இணைந்து பெண்கள் எதிர்நோக்கும் ஆறு விடையங்களை முக்கியப்படுத்தி நாடகமாக்கியுள்ளார்கள்.
நாடகம் இலக்கியம் போன்றவற்றில் ஆர்வமுள்ளவர்களை அழைத்து இந்தப் பட்டறை ஆரம்பிக்கப்பட்டது. இதில் ஏற்கெனவே அரங்காடல் நிகழ்வுகளில் நடித்த பல பெண்கள் இணைந்திருக்கின்றார்கள். அது மட்டுமல்ல பல இளம் பாடசாலை மாணவிகள் தாம் நடிக்கவேண்டும் இளம் பெண்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகள் தம் மூலம் வெளியே கொண்டு வரவேண்டும் என்று ஆர்வம் காட்டித் தாமாகவே இந்தப் பட்டறையில் வந்து கலந்தும் கொண்டுள்ளார்கள்.

என் அனுபவம் -
“கருமையம்” மேடையேற்ற இருக்கும் ஒரு முக்கியமான நாடகமான “மௌனத்தின் மொழிபெயர்ப்பு” கவிஞர் சக்கரவர்த்தியின் ஆக்கத்திலும் இயக்கத்திலும் மேடையேற உள்ளது. இந்த நாடகத்தில் நான் ஒரு முக்கிய பாத்திரம் ஏற்று நடிப்பதால் பெண்கள் பட்டறையில் என்றால் முற்று முழுதாகப் பங்களிப்பு செய்ய முடியவில்லை. இருந்தும் அவ்வப்போது சென்று எனது கருத்துக்களைக் கூறி வருகின்றேன்.

கடந்த ஞாயிற்றுகிழமை பெண்கள் அமைப்பின் “கட்டவிழ்ப்பு” நாடகத்தின் முற்று முழுதான ஒத்திகை பார்க்கப்பட்டது ஐந்து வயது தொடக்கம் ஐம்பது வயது வரை இருபதற்கும் மேற்பட்ட பெண்கள் இதில் இணைந்து நடிக்கின்றார்கள். முதல் முறையாக மேடையேறும் பலரும் இருக்கின்றார்கள். இவர்கள் இந்த நாடகம் வெற்றியளிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு மிக ஓற்றுமையாக ஒன்றாக இணைந்து பாடுபடுவதைப் பார்க்க மனதிற்கு நிறைவாக உள்ளது. இந்நாடகப்பிரதி ஒருவரால் தயாரானதல்ல. பலரின் அனுபவங்கள் பகிரப்பட்டு பலரின் எண்ணத் துளிகளைக் கலந்து தயாரிக்கப்பட்டது. இப்பட்டறை பல பெண்களை வாசிப்பதற்கும் எழுதுவதற்கும் தூண்டியிருக்கின்றது. அது மட்டுமல்ல நாடகங்களுக்கான ஒலித் தெரிவினைக் கூட பெண்களே முன்வந்து செய்கின்றார்கள்.
இனி வரப்போகும் காலங்களில் மேடயமைப்பு ஒளி அமைப்பு போன்றவற்றையும் தாமாகவே செய்து முற்று முழதாகப் பெண்களாய் ஒரு முழுநாடகத்தைத் தருவதற்கும் முடிவு செய்துள்ளார்கள்.
இந்த நாடகத்தில் நான் ஒரு சிறிய பாத்திரத்தை ஏற்று நடிக்கவுள்ளேன். அத்தோடு 2006ம் ஆண்டு மார்ச் மாதம் 26ம் திகதி எனது ஆக்கத்திலும் இயக்கத்திலும் மூன்று வித்தியாசமாக மேடை நாடகங்களை இந்தப் பெண்களைக் கொண்டு மேடை ஏற்ற உள்ளேன்.

நாடகங்களுக்கான நுழைவுச் சீட்டுக்கள் விற்பனைக்கு வந்து விட்டன. ரொறெண்டோவில் வாழும் தரமான நாடகங்களைப் பார்க்க விரும்புபவர்கள் கருமையத்தின் இந்த நாடகவிழாவை வந்து பார்த்து மகிழலாம்.

No comments: