Tuesday, May 24, 2005

புலம்பெயர்ந்த ஒரு பார்வை



திறந்து விட்ட யன்னல்
உட்புகுந்து எனைப் பார்க்கும் காற்று
விறைத்து நிற்கும் மேப்பிள் மரம்
அதன் மேல் பாதை தவறிய வெண்புறா
தூங்கி வழியும் தபால்பெட்டி.

எல்லாவற்றின் பார்வையும்
என்மேல் என்பதாய் என்பார்வை.

ஆமைபோல் உள்ளிழுத்த தலையுடன் நான்.

பார்வையின் அர்த்தத்தை
சொல்ல மறுக்கும் கண்ணாடி.

விறகடுப்பும்
கிணற்றடியும்
தும்புத்தடியும்
வேற்று மொழியாய்
எனைப் பார்த்துக் கண் சிமிட்ட,
நான்கு சுவரும்
அருவருப்போடு
முகந் தூக்கிக் கொண்டன.

கேட்பதற்கு யாருமின்றி மூச்சு முட்ட
இழுத்து மூடும் அகலத் திறந்த யன்னல்.
மீண்டும்
திறந்து கொள்ளும் இறப்பதற்கு மனமின்றி.

கடந்து செல்லும் அவன் பார்வையும்
பிரிதாபமாய் எனைப் பார்க்கும்.

2001 கணையாழி

No comments: